உப்பா...சர்க்கரையா......கடுகா...உளுத்தம்பருப்பா...இல்லை எல்லாமேதானா..?
திருமணத்துக்குமுன் சமையலறையே எட்டிப்பார்க்காத நான் அண்ணி
உதவியோடு play school போவது போல் basic language (உம். சாம்பார், வத்தல்குழம்பு கூட்டு, பொரியல்) மட்டும் கற்றுக்கொண்டு களம் புகுந்தேன்..
புகுந்தவீட்டுக்குள்ளும்தான்.
வெந்தயத்துக்கும் சீரகத்துக்கும் வித்தியாசம் தெரியாது. செய்முறைகள்
எழுதி வைக்கப்பிடிக்காது. கண் பார்ப்பதை கை செய்யவேண்டும். ஆகவே
சின்னச்சின்ன பாகெட்டுகளில் தனியா, க.பருப்பு, உ.பருப்பு, சீரகம், காய்ந்த
மிளகாய் என்று mini-proportion-ல் போட்டு ஸ்ட்ராப்பில் செய்து 'சாம்பார்'
என்று எழுது வைத்துக்கொள்வேன். இதே போல் வத்தல்குழம்பு, ரசம்
முதலியவற்றுக்கும் பாக்கெட்டுகள் தயார் செய்து கொண்டேன். தேவைப்படும்
போது தேவையான பாக்கெட்டைப்பார்த்து தெரிந்து கொள்ளலாமில்லையா?
எப்படி..?ஐடியா..?
தனிக்குடித்தனம் வந்தாச்சு. சமையலில் அறை குறை அறிவோடு தண்ணீரில் தள்ளிவிட்டார்கள்!!! கையை காலை உதைத்து நீந்தி கரையேறியது சுவாரசியமான நிஜம்!
முதல் நாள் சாம்பார், கூட்டு, பொரியல் என்று அட்டகாசமாக சமைத்து
ரங்கமணிக்காக காத்திருந்தேன். வந்தார்...உண்டார்...சென்றார். ஒரு பின்னோட்டமுமில்லை. நான் சாப்பிட்டபோது சாம்பார் ஒரே.....புளிப்பு!
ஏன் சொல்லவில்லை என்றதற்கு 'நீயே இப்போதுதான் கற்றுக்கொள்கிறாய்
எல்லாம் போகப்போக சரியாகிவிடும்.' என்றார். என்ன ஒரு பொறுமை!
போனால் சரி.
அடுத்தநாள் புது குக்கரைப்பிரித்து அதிலுள்ள செய்முறைகளைப் படித்து
புது சாதம் செய்ய-first opening- செய்தேன். அளவாக த்ண்ணீர் ஊற்றி, அரிசி களைந்து பாத்திரத்திலும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வெயிட்டையும் போட்டேன். மூன்று விசிலுக்குப்பிறகு அடுப்பையும் அணைத்தேன். வெந்த சாதத்தை உடனே எடுக்க அவசரம்! மூடியை என் பலம் முழு...க்கப்பிரயோகித்துத் திறந்தேன்!
டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! பாம்ப்ளாஸ்ட்..!! மூடி ஒரு பக்கம் தெறித்து விழுந்தது. வானத்தில் ஓரிரு நட்சத்திரங்களைத்தான் பார்த்திருப்பீர்கள்.
வானம் முழுதும் நட்சத்திரங்களாகப் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்தேன்
அன்று!! அடுப்படி சிம்னியை அண்ணாந்து பார்த்தேன்...கரி படிந்த சிம்னி முழுதும் சோற்றுப்பருக்கைகள் அப்பியிருந்தன!! மீதி நட்சத்திரங்கள் தரையெங்கும் சிதறியிருந்தன. அன்றும் ரங்கமணி மெளன்மாக வெளியேறினார் பாவம்.
இப்படியாகத்தானே......முட்டி மோதி இப்போது ஓரளவு 'தில்லாலங்கடி'
ஆகியிருக்கிறேன்.
சுத்த சைவப்பிள்ளையாகிய.....அதுவும் திருநெல்வேலி சைவப்பிள்ளையாகிய நான் எப்படி அசைவப்பிள்ளையாகினேன்? எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்? ரங்கமணி தாராளமன சிக்கனப்.... சாரி
சிக்கன் பிரியர்(கல்லூரி ஹாஸ்டல் வாசம் காரணம்). இது தெரிந்த பக்கத்து
வீட்டு சகோதரி சிக்கன் செய்யும் போதெல்லாம் இங்கேயும் வரும். ரங்கமணிக்காக. அவரே வாங்கி...அவரே சாப்பிட்டு....அவரே பாத்திரத்தையும்
கழுவி வைத்துவிடுவார்! அந்நாளில் நான் அவ்வளவு மடி!...ஹி..ஹி!
பின்னாளில் இரண்டாவது மகன் பிறந்து அவனுக்கு நாலைந்து வயதாகும்
போது கீழ்வீட்டுத் தோழி அவனை தூக்கி வைத்துக்கொண்டு சிக்கனை ஊட்டி
விட...என்னவென்று தெரியாமலே குழந்தை விரும்பி சாப்பிட.. அவனுக்காகவே அசைவக் களத்திலும் புகுந்து புறப்பட்டேன். முதலில் வேலைக்காரி வாங்கி வந்து அவளே சுத்தம் செய்து தர...நான் கை படாமல்
சமைக்கத் தெரிந்துகொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலும்
தில்லாலங்கடி ஆனது புரட்சிகரமான நிஜம்! ஆம்! எங்கள் குடும்பத்தில்
நான் ஒருவள் தான் அசைவம் சமைப்பவள். தில்லாலங்கடி என்றால்
என் பொண்ணு பாஷையில் expert- என்று அர்த்தம்!
என் அக்கா, தங்கை, அண்ணன், நாத்தனார்..பிள்ளைகள் எல்லோரும் சிக்கன்
விரும்பிகள். chicken get-to-gether ஏற்பாடு செய்து அனைவரையும் அழைத்தேன்.
மொத்தம் பன்னிரெண்டு பேர்.
பெரிய்...ய குண்டான் நிறைய சிக்கன்குழம்பு(கிரேவி), புலாவ், தயிர்சாதம், சிப்ஸ்! சிம்பிள்-கிராண்ட் மெனு! வந்த பிள்ளைகள் முகத்தில்தான் என்ன ஒரு
பிரகாசம்!..சந்தோஷம்..! குண்டான் காலி! தயிர்சாதம் சீந்துவாரில்லை.
'சித்தி! பெரியம்மா! அத்தை!' என்று பலவாறு அழைத்து ,'ஹோட்டலில் நாங்கள் கிள்ளி கிள்ளித்தான் வாங்கி சாப்பிடுவோம். இங்கு அள்ளி அள்ளிப்
போட்டு சாப்பிட்டோம்!' என்ற போது மனம் நிறைந்தது!! இதைவிட வேறென்ன
வேண்டும்?
அடிக்கடி இது போன்ற விருந்துகள் நடக்கும். முக்கியமாக என் மகன் பிறந்த
நாளன்று கண்டிப்பாக இருக்கும். பிள்ளைகளும் ஓடோடி வருவார்கள்.
இன்று...காக்கை கூட்டில் கல்லெறிந்தது போல்.... எல்லோரும் வேலை நிமித்தம் வெவ்வேறு ஊர்களில்!!! விருந்துகளும் குறைந்துவிட்டது.
இவ்வளவு அளந்துவிட்டு recipes ஏதும் தராவிட்டால் என்னை கொத்துபரோட்டா போட்டுவிடமாட்டீர்களா? பொறுமை! அடுத்த பதிவில்
சைவம் ஒன்று அசைவம் ஒன்று ஓகேவா?