இப்போல்லாம் இந்த மாதிரி அழைப்பெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை. கல்யாணமா? விருந்தா? சாப்பாடு முடிந்ததும் வெளியே வரும் போதே தட்டில் பீடாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆளுக்கொன்று (நான் ரெண்டு) எடுத்துக்கொண்டு கொதப்பிக்கொண்டே 'டாட்டா..பைபை..'சொல்லிக்கொண்டே தாம்பூலக் கவர் வாங்கிக்கொண்டு வெளியே வந்து விடுவோம். அத்தோடு சரி!
எங்கள் வீட்டில் கல்யாணங்கள் கூட வீட்டிலேயே நடக்கும். பந்தி முடிந்து ஹாலில் வந்து அமர்ந்துகொண்டு வெற்றிலை போடும் சுவாரஸ்யமிருக்கே...அட அட அட!
ஹால், மற்ற அறைகளிலும் ஜமக்காளங்கள் விரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஜமக்காளத்தின் நடுவிலும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு நிறைந்த தாம்பாளங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
அதுவும் கருவலநல்லூர் வெற்றிலையும் ரசிகலால் பாக்கும் வாசனைச் சுண்ணாம்பும் என்ன ஒரு அற்புதமான காம்பினேஷன்!!!
அது என்ன கருவலநல்லூர்?
திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோயிலுக்கு சிறிது தூரத்தில் அமைந்ததுதான் "கரிவலம்வந்தநல்லூர்"
அங்கு காட்டில் ஒரு சிவலிங்கம்! தினமும் யானை ஒன்று அந்த சிவலிங்கத்தை சுற்றி சுற்றி வலம் வந்து வழிபடுவதைக் கண்ட ஊரார் சிவலிங்கத்துக்கு ஆலயம் எழுப்பி வழிபடவாரம்பித்தனர்.
யானை வலம் வந்து வழிபட்டதால் ஊரின் பேரே 'கரிவலம்வந்தநல்லூர்!' என்று வழங்கப்பட்டது.
வெற்றிலையை குதப்பி குதப்பி ஊரின் பேர் 'கருவநல்லூர்' என்று சொதப்பிவிடது.
தமிழில் பெயர்...தமிழில் பெயர்..தேடிக்கொண்டிருக்கிறோம். அக்காலத்தில் இடப்பட்ட அழகிய தமிழ் பெயர்களெல்லாம் எப்படியெல்லாம் உருமாரி கருமாரி சிதைந்து சின்னாபின்னமாகியிருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
இந்த ஊர் வெற்றிலைக்குப் பெயர் பெற்றது. முற்றிய வெற்றிலையும் சரி, கொழுந்து..தளிர் வெற்றிலையும் சரி பிஞ்சு வெண்டக்கா மாதிரி ஒடியும்.
வீட்டில் ஒரு கட்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு வாசலிலும் ஒரு கட்டு பூஜையறையிலும் இருக்கும்.
வாசலில் அப்பாவோடு சமமாக அமர்ந்து வெற்றிலை போடுபவர்கள், கையில் எடுத்துக்கொண்டு ஓடுபவர்கள் அப்பா அலுவலகம் சென்ற பின் சாவகாசமாக போடுபவர்கள் என்று பலவகையான பேர் இந்த வெற்றிலைக்காகவே வருவார்கள். சொல்ல மறந்தேனே அப்பாவுக்கு இப்பழக்கம் கிடையாது.
நான் அக்காலத்தில் இந்த வெற்றிலைக்கு அடிக்ட்...அடிமை என்பதை இப்படியும் சொல்லலாமல்லவா?
விசேஷ நாட்களில்...அக்காக்கள் வந்திருப்பாக...மதனிமார்கள் வந்திருப்பாக...அத்தைகள் வந்திருப்பாக...சித்திகள் வந்திருப்பாக...மற்றுமுள்ள உறவினரெல்லாம் வந்திருப்பாக...!
யாரும் சாப்பாடு முடிந்து கிளம்பிவிடமாட்டார்கள், வெற்றிலை செஷன் முடிக்காமல். அவரவர்க்கு தோதான சிறுசிறு குழுக்களாக ஜமக்காளங்களில் வட்டமாக அமர்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டு ஈர வெற்றிலையை அப்படி ரெண்டு எடுத்து தொடையில் தடவி காம்பு கிள்ளி சுண்ணாம்பையும் ரெண்டு இழுப்பு இழுத்து ரசிகலால் பாக்கு சிறிது வைத்து மடக்கி வாயில் அடக்கினால்....கிக் ஏறுமே!
சில பேர் வெற்றிலைக் காம்பை சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று மேலிருந்து நுனிவரை கிழித்து இலையை ரெண்டு பாகமாக்கி மடித்துப் போடுவார்கள். அது தனி...கலை.
ரெண்டு வெற்றிலையோடு முடியாது. சுண்ணாம்பு தடவி மடக்கி போய்க் கொண்டேயிருக்கும்.
இதற்குள் அடுத்த ஜமக்காளத்திலிருந்து அழைப்பு வரும்..'ஏட்டி! இங்கன வாயேன்!' என்று.
இங்கே ஒரு ஷார்ட் ப்ரேக் விட்டுவிட்டு அடுத்த ஜமக்காளத்தில் தொடரும். இப்படி சாப்பிட்ட விருந்தின் அளவை விட ஒரு படி மேலேயே போய்க்கொண்டிருக்கும். ஒரு அண்ணன், 'என்னடி இது? ஆடு தளை மேய்ஞ்சாமாதிரி!' என்று சொல்லிலக் கொண்டே
போவார். இன்னொரு அண்ணன், 'பாத்து! காக்கா கொத்திரப்போகுது!' என்பார். கழுத்து வரை இருக்குமாம், வாயைத்திறந்தால் காக்கா வந்து கொத்திவிடுமாம்.
எங்கள் தாத்தா, மாமா எல்லாம் வெற்றிலை போடுவதைப் பார்ப்பதே...சுதா ரகுநாதன் கச்சேரி பார்ப்பதைப்போல் அழகாகயிருக்கும். மெத்தைமேல் ரெண்டு தலையணை போட்டு அதில் சாய்ந்து கொண்டு வெற்றிலைச் செல்லத்தை செல்லமாய் திறந்து வெற்றிலையைத் துடைத்து சுண்ணாம்பு தடவி பாக்கு வெட்டியால் கொட்டைப்பாக்கை வெட்டி வைத்து மடக்கி வாயில் அடக்குவதே ஓர் அழகு!
வெற்றிலை எப்படியெல்லாம் உறவுகளை கட்டிப்போட்டிருந்தது!!
திருமணத்துக்குப் பிறகு ஊருக்குப்போகும் போதெல்லாம் கொஞ்சம் வெற்றிலை எடுத்து வருவேன். இங்கு வந்ததும் சிறிது வாடியிருக்கும். அந்த வாட வெத்தல..வதங்கன வெத்தலையும்
அம்புட்டு ருசியாயிருக்கும்.
இரண்டாவது மகன் பிறந்த உடன் ஒரு முறை ஊருக்குச் சென்ற போது, அண்ணன் மகன், 'அத்தை! ஜர்தா பீடா போடுகிறீர்களா? வாங்கிவரவா?' என்றான். தூக்குத்தூக்கி படத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அழகாக மடித்துக்கொடுக்கும் பீடாவாக்கும் என்று,என்ன ஏது என்று தெரியாமல் வாங்கி வரச் சொன்னேன்.
அரைநொடியில் ஓடிப்போய் வாங்கி வந்தான். வாயில் போட்டு மென்று ஒரு துளி சாறு தான் உள்ளேயிரங்கியிருக்கும்.........கீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று தலை சுற்றியது. சம்திங் ராங் உள்ளே மணியடிக்க ஓடிப்போய் வாஷ் பேசினில் துப்பி, உள்ளேயிரங்கிய துளிச் சாற்றையும் வெளியே தள்ளி, வாயை நன்றாக கழுவிய பின்தான் ஆசுவாசமாகியது. 'என்னத்தைடா கொடுத்தே?' என்றபோது 'உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன்' என்றான் சாவகாசமாக!!!!!!
இப்போதெல்லாம் கருவநல்லூர் வெற்றிலையுமில்லை, ரிப்பேரான பற்களால் பாக்கு போடவும் முடியவில்லை. இனிப்பு பீடா என்றால் போடுவேன்.
வேண்டியமட்டும் வெற்றிலையை இளவயதில் மேய்ஞ்சாச்சு...இப்போது பழைய நினைவுகளை அசை போடத்தான் முடியும். கண்கள் மூடி சுகமாக அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.