'இது ஒரு ஜெர்மன் தயாரிப்பு. சர்ஜிகல்
மெட்டல், அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தாலானது.
விரைவாக சூடேறும். அதே நேரம் சமையல் எண்ணையும் எரிவாயுவும் குறைவாக செலவாகும்.
என்ணையில்லா சமையலுக்கு ஏதுவானது.' இப்படியெல்லாம் வாசல் கதவைத்தட்டி, டைகட்டிய
ஸேல்ஸ் பர்சன் ஒருவர் வந்து விரிவுரை ஆற்றி கவிழாத ரங்கமணியையும் கவிழ்த்துவிட்டார்.
வழக்கமாக இப்படி வருவோரை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓட வைப்பவர். இப்போது 'வாங்கலாமே!' என்று முடிவெடுத்துவிட்டார்.வந்தவரும் கடைசி வரை விலையைச் சொல்லாமல் பயன் பாடுகளை அழகாகச் சொல்லி 'பரவாயில்லை! இந்த விலை கொடுக்கலாம்.' என்று முடிவெடுக்க வைத்துவிட்டார். ரங்கமணியைப் பற்றித் தெரிந்ததனால் ஆரம்பத்தில் ஆர்வமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். வாங்கலாம் என்றதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
வாங்கி உபயோகித்ததும் அவர் சொன்னது எதுவும் பொய்யில்லை என்று உணர்ந்தேன்.
அந்த AMC பாத்திரத்தில் செய்ததுதான் இந்த பால்கோவா!!
தேவையானவைகள்
பால் - இரண்டு லிட்டர்
சர்க்கரை - அரைக் கிலோ
பாம்பே ரவை - 200 கிராம்
குங்குமப்பூ - 2 பிஞ்
நெய் - 50 கிராம்
பச்சைக் கற்பூரம்
கிண்டலாமா
பாலை ஏஎம்சி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும். மூடியிலுள்ள
மீட்டரில் சிவப்பு பாயிண்டுக்கு வந்ததும் மூடியை எடுத்துவிட்டு கொதிக்கவிடவும். இடையிடயே
கிண்டவும். இந்த பாத்திரத்தில் மற்ற பாத்திரங்களைப்போல் அடி பிடிக்காது. ஓரங்களில் பால் சேராமல் கிண்டிக்கொண்டேயிருக்கவும். பச்சைக் கற்பூரத்தை உள்ளங்கையில் வைத்து நசுக்கி உதிர்த்து பாலோடு சேர்க்கவும்.
பால் பாதி சுண்டியதும் குங்குமப்பூவையும் ரவையையும் போட்டு கட்டி விழாமல் கிளரவும்
ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து விடாமல் கிண்டவும்
பாலும் ரவையும் சேர்ந்து சுருள, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
தேவையான பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும். ரவை பால்கோவா தயார்.
இனிப்புகளில் பச்சைக் கற்பூரம் சேர்ப்பது பற்றி சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
அப்பாவிடம் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரசனை போன்ற பொருட்கள்
ஸ்டாக் இருக்கும் எங்களுக்குத்தேவையான போது அப்பாவிடம் போய் வாங்கிக் கொள்வோம்.
குங்குமப்பூ அளந்து தருவதே ஓர் அழகு. சின்ன தராசில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தை
ஒரு பக்கமும் அந்த ஒரு ரூபாய் எடைக்கு குங்குமப்பூவும் நிறுத்து இன்ஜெக்ஷன் பாட்டிலில்
போட்டு தருவார்கள். கடையில் அதன் விலையும் தெரியாது. அப்பா காலத்துக்குப் பிறகுதான் குங்குமப்பூவின் விலையே தெரிந்தது. பச்சைக்கற்பூரமும் ஒரு சிறிய பாட்டிலில் தருவார்கள்.பச்சைக் கற்பூரத்தை சேர்க்கும் காரணமே தெரியாமல் அப்பா சொன்னதால் உபயோகித்துக்கொண்டிருந்தோம். காரணமும் கேட்கத் தெரியாது. அதிக இனிப்பு சாப்பிடுவதால்
ஏற்படும் சர்க்கரை நோயை மட்டுப்படுத்தவே இனிப்பில் பச்சைக் கற்பூரம் சேர்க்கிறோம்.
இந்த ரவை சேர்த்து பால்கோவா செய்யும் முறையை எனக்கு சொல்லித்தந்தவர் என் மதனியின்
சகோதரி திருமதி மணி. அவர் செய்து கொடுத்ததை ருசித்தவுடன் பக்குவம் கேட்டு தெரிந்து கொண்டேன். பால்கோவாவில் பால் தவிர என்ன சேர்ந்திருக்கிறது என்று கேட்ட போது
எங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள்!!!
என்னாத்த கண்டுபிடிக்க..? அதான் அப்பன் குதிருக்குள் என்று தான் சொல்லிட்டயே?