கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பருப்பு வகைகளெல்லாம் ஊறப்போட்டு அதில் காஞ்ச மெளகா, பச்ச மெளகா, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் எல்லாம் சேத்து அரைத்து தோசைக்கல்லை காய வைத்து அடைமாவை ஊத்தி எண்ணை விட்டு சுட்டு எடுத்தால் அதுதான் அடை!!
ஆனா நாஞ் சொல்ல வந்ததே வேற.
இங்கே நாம் எண்ணி எண்ணி, கிள்ளி கிள்ளி, பாயசத்துக்கும் இனிப்புக்கும் நெய்யில் வறுத்துப் போடும் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு சேத்து செய்யும் அடை பத்தி!!
அமெரிக்கா போன போது அங்கு ஒண்ணு வாங்குனால் ஒண்ணு ப்ரீ என்று காஸ்கோ,ஸம்ஸ் போன்ற ஹோல்சேல் கடைகளில் (இங்கு மெம்பராக இருந்தால்தான் உள்ளேயே போக முடியும்)எது வாங்கினாலும் 'நானும் வருவேன்'ன்னு இன்னொண்ணும் கூட வரும். ஒரு பாக்கெட் முந்திரிப் பருப்பு வாங்கினால் இன்னொருபாக்கெட்டும்சேர்ந்து கிடைக்கும். அதே போல் பாதாம், பிஸ்தா, வால்னட், பீநட், பைன்நட் போன்றவைகளும். பாக்கெட்டென்றால் சின்ன மூட்டை சைசில் இருக்கும்.
அங்கு மாதந்திர சாமான்கள் வாங்குவதே சுலபமாயிருக்கும். எல்லோரும் ட்ராலி ட்ராலியாக அள்ளிக்கொண்டு போவார்கள். பார்க்கவே மனசெல்லாம் பொங்கும்!!
இப்படி மகள் வீட்டில் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பீநட், பைன்நட் எல்லாம் பாக்கெட்டுகளாக அடுக்கியிருந்தது.
ஒரு நாள் அடைக்குப் போடலாமென்று ஷெல்பைத் திறந்து மேய்ந்த போது திடீரெனத் தோன்றியது. நம் ஊரில் நாம் கிள்ளிக் கிள்ளி உபயோகிக்கும் பாதாம் முந்திரியை அள்ளி அள்ளிப் போட்டு அடை செய்தாலென்ன? நினைத்ததை முடிப்பவள் அல்லவோ நாம்!
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு(சிறிது) கூட பாதாம்பருப்பும் முந்திரிப்பருப்பும் அள்ளிப் போட்டுத்தான், சேர்த்து ஊற வைத்தேன். அதோடு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தெடுத்தேன். அதில் கறிவேப்பிலை கொத்தமல்லி அரிந்து, பெருங்காயம் தூளும் சேர்த்துத் தூவினேன்.
இரவில் அனைவரும் சாப்பிட வந்ததும் தோசைக்கல்லை நல்லாக் காய வைத்து...வெயிலில் இல்லை..எரியும் அடுப்பில். முறுகலாக தோசை வார்த்து மேலே சிறிது வெண்ணெய் வைத்து கெட்டிச்சட்னியோடு(விவேக்குக்கு ரொம்பப் பிடித்தது)பரிமாறினேன். அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு காலியாயிற்று.
அடுத்த முறை முழுவதும் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், பீநட், பைன்நட் மட்டுமே சேர்த்து
அடை செய்யலாமென்றிருக்கிறேன். எனக்கு ரொம்பத்தான் இது இல்ல? இப்ப முடியாது...முடிந்தவர்கள் செய்து பாத்து சொல்லுங்கள்!!!