உறவுகளோடு உறவாட...உரையாட உதவியாயிருக்கிறாய்--சேரி!
தவறான அழைப்பால் இல்லாத உறவுகளோடும் ஏன் உரையாட வைக்கிறாய்?

கண் அசந்த மதியத் தூக்கம்...அலறுகிறாய் கொஞ்சமும் நாகரிகமில்லாமல்
என்னவோ ஏதோ என்று காது கொடுத்தால், 'மேடம்! நாங்க ----பேங்கிலிருந்து பேசுகிறோம்.'
'சரி! பேசு! சிங்காரப் பைங்கிளியே!' என்றால்...'எங்க பாங்கிலிருந்து லோன் கொடுக்க எங்க தேர்வாயிருக்கிறீங்க. சம்மதமா?' வருமே எரிச்சல் அப்போது!
'சம்மதம்! ஆனால் கடனைத் திருப்பி அடைக்கமாட்டேன். இது உங்களுக்கு சம்மதமா?'
எதிர் முனையில் ம்ம்மூச்!!

மறு முறையும் இதே போலொரு அழைப்பு. இப்போது, 'லோன் வாங்கிக்கிறேன்.
ஆனால் மாதாமாதம் EMI நீங்கதான் கட்டணும். சம்மதமா?' என்றால், 'என்ன மேடம்! இப்படி சொல்றீங்க?'

பின்ன என்ன உங்களுக்கு பொழுது போகாத மதிய நேரத்தில்,
பாலையா நாகேஷிடம் கதை கேட்ட மாதிரி, உங்களுக்கு லோன் வேணுமா...கிரேடிட் கார்ட் வேணுமா...வீடு வேணுமா...கார் வேணுமா...இன்னும் ஓப்படையா வேணுமா...கொழுந்தியா வேணுமா?'ன்னு தயவு செய்து தொந்திரவு பண்ணாதீர்கள். ஈதெல்லாம் வேணுமுன்னா நாங்களே உங்களைத்தேடி வருவோம். என்றதும் 'சாரி மேடம்!' மறுமுனை கட்!!!

இதெல்லாம் வேண்டுமென்று நாமே அவர்களைத்தேடிப் போனால், நம்மை அவர்கள் படுத்தும்பாடு தனீ...க்கதை!!! இது 'நிலவரிசை'(LANDLINE)தொ(ல்)லைபேசியின் தொல்லை!

கைபேசியின் கைவரிசையைப் பார்ப்போம்.
காலமில்லாத காலத்திலே நேரமில்லாத நேரத்திலே...இவரும் அழைப்பார். தேவையில்லாமல் அழைக்காதே....! என்று பாடத்தான் வேண்டும்.

அவராவது கூப்பிட்டு கூப்பிட்டு வேணுமா...வேணுமா? என்பார். இவாளோ...அதனையும் SMS கள். கொஞ்சம் கண்டுக்காமலிருந்தால்...'உன் உள்பெட்டி' நிரம்பிவிட்டது என்று இன்னொரு தகவல் வரும். யார் கேட்டது இத்தனை எஸெமெஸ்கள்!!!!

அவற்றையெல்லாம் திறந்துபார்த்தால்....'உனக்கு புதுப்படத்திலிருந்து காலர் ட்யூன் வேணுமா? மாதம் 25 ரூபாய்தான். இன்னொரு விதம், 'கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலளித்துக்கொண்டே வந்தால் யார் அதிக ஸ்கோர் வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஒரு மாருதி கார் பரிசு!!!, ஹோண்டா சிட்டி கார் பரிசு!!!என்று
பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி ,
'டோயோட்டா கார்!!!!!!!!என்று கார் சாவியை கண் முன் ஆட்டிக்கொண்டேஆசை காட்டும்.
மயங்கி பதிலளித்துக்கொண்டே வந்தால் குறிப்பிட்ட இடத்தில் வந்து, 'நீங்கள் தப்பான 'சாவி வார்த்தையை' அமுக்கிவிட்டீர்கள் என்று நம்மை குமுக்கி எடுத்துவிடுவார்கள்.
பில் தொகை எகிறியதுதான் மிச்சம்!!(என்னதான் நடக்கும் என்று ஒரு முறை முயற்சி செய்த அனுபவம்)

ஓய்வாக அமர்ந்து உள்பெட்டியை திறந்து அத்தனையையும் அழிப்பேன். மறுபடி அதே கதை!!
சில சமயம் நேரடியாக பேசுவார்கள். 'உங்களுக்கு புதுப்பட காலர் ட்யூன்கள் வேணுமா? மாதம் இத்தனை ரூபாய்தான். மாதம் 100 SMS களுக்கு 90ரூபாய்தான். வந்ததே கோபம் தள்ளாத வயதிலும் பொல்லாத புலியெனப் பாய்ந்தேன்.
'அம்மாடி!!!எனக்கு சாதாரண ரிங் டோனே போதும் நான் கைபேசி வைத்திருப்பது பிறரோடு பேச மட்டும்தான். அதற்கு வெறும் மணியடித்தாலே போதுமானது. அதோடு நான் SMS உபயோகிப்பதே இல்லை. உங்களால்தான் என் இன்பாக்ஸ் நிறைகிறது!" என்று வள்ளென்று....இல்லையில்லை புலியெனவல்லவா பாய்ந்திருக்கிறேன்....உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று உறுமினேன். 'சாரி மேடம் சாரி மேடம்!!' என்று
ஓடியேவிட்டாள்!!

இதெற்கெல்லாம் எப்படி முடிவு கட்டுவது என்று பில் தொகை வசூலிக்க வந்தவரிடம் கேட்டேன். 'நீங்க சேவை பிரிவுக்கு தகவல் சொன்னால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.' என்று என்னை ஆற்றுப் படுத்தினார். சேவை பிரிவுக்கு சொல்லவேண்டும்.
அதற்குள் சமையலறையிலிருந்து தாளிக்கும் வாசம்!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம். மகள் சேவை செய்திருக்கிறாள்.
எலுமிச்சைசேவை தேங்காய் சர்க்கரை ஏலக்காய் சேர்த்த இனிப்பு சேவை!!!
முதலில் இந்த சேவையை முழுதாக செய்துவிட்டு, அந்த சேவைக்கு சொல்லலாம்...சேரியா?