Sunday, April 18, 2010

ஆவாரம்பூவு ஆரேழுநாளாய்........சமையல் குறிப்பு

மங்கலமான மஞ்சள் நிறத்தில் தகதகவென தங்கம் போல் பளபளத்து கண்ணைப்பறித்து ,”என்னைப் பறித்து எப்போ சமைக்கப்போகிறாய்?” என்று என் கவனத்தையும் பறித்துக்கொண்டேயிருந்தது.
ஏப்ரல் மாசம் இம்மரத்தில் ஆவாரம்பூ பூத்து குலுங்கிக்கொண்டிருக்கு. எங்க வாட்ச்மேனிடம் ஒரு கூடையைக் கொடுத்து எங்க ப்ளாட்டுக்கு வெளியே நிற்கும் மரத்திலிருந்து பறித்துத் தருமாறு சொன்னேன். அவரும் நான் கொடுத்த கூடை நிறைய மஞ்சள் பூக்களை நிரப்பித் தந்தார்.

முதன்முறையாக செய்வதால் தனி ஆவாரம்பூ மட்டுமில்லாமல் அதோடு பாலக்கீரையும் வழக்கம் போல் நம்மோட தோஸ்த் மாங்காயிஞ்சியும் சேர்த்துக் கொண்டேன்.

பொடியாக அரிந்து கழுவிய பாலக்கீரை, தண்ணீரில் நன்கு அலசி எடுத்த ஆவாரம்பூ, பொடியாக அரிந்த மாங்காயிஞ்சி.

பாத்திரத்தை அடிப்பிலேற்றி, சிறிது எண்ணையூற்றி, அரிந்த வெங்காயம், இஞ்சி, பூண்டு வதக்கி, அதோடு பாலக் கீரை, ஆவாரம்பூ, மாங்காயிஞ்சியும் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றிவேகவிடவும். தேவைக்கேற்ப காரம் உப்பு சேர்த்துக்கொண்டு நன்கு வேகவிடவும்.

வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் தேங்காய், ஜீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த விழுதை கூட்டில் விட்டு நன்கு கலக்கி சிறிது கொதிக்கவிட்டு தாளிதம் சேர்த்து இறக்கினால் ஆவாரம்பூ கூட்டு ஆரவாரமாய் மணக்கும்.

நான் தேங்காய் சேர்ப்பதில்லை, அதற்கு பதிலாக, பொட்டுகடலை, வேர்கடலை, முந்திரிப் பருப்பு, பாதாம்பருப்பு இவற்றை 2:1:1:1 என்ற விகிதத்தில் மிக்ஸியில் பொடி பண்ணி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்வேன். தேங்காய் வேணுமென்ற இடங்களில் இப்பொடியை தண்ணீரிலோ அல்லது பாலிலோ கரைத்து கூட்டில் கலந்து கொள்வேன். தேங்காய் இடத்தை அழகாக சுவையாக பிடித்துக்கொள்ளும்.உலர்ந்த ஆவாரம்பூவை குளிக்க உபயோகிக்கும் பயத்தமாவில் சேர்க்க வேண்டிய வாசனைப் பொருட்களோடு சேர்த்து மிஷினில் அரைத்து உபயோகித்துத்தான் பழக்கம். இப்பூவை சமைக்கலாமென்பதை, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் ஒருமணிக்கு மக்கள் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கை மணம்’ நிகழ்ச்சியிலிருந்து தெரிந்து கொண்டேன். புழக்கத்திலில்லாத தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்களிலிருந்து சுவையான சமயற்குறிப்புகளை வழங்குகிறார்கள்.

Friday, April 16, 2010

என் தலையில் கிரீடம்.



//நானானி. இவங்க ப்ளாக் பக்கம் ஒரு ரவுண்ட் அடிச்சா
எப்படியெல்லாம் சுவாரசியமா பதிவு போடலாம்னு
ஐடியா கிடைக்கும். தான் நனையாமல் கார் மட்டும்
குளிச்ச போஸ்ட் படிச்சிருக்கீங்களா?? இல்லையா.
சீக்கிரம் போய் படிங்க. நானானிக்கு இந்த விருது.//


இப்படி சொல்லி என்னைப் பெருமைப் படுத்தியிருக்காங்க,புதுகைத்தென்றல்.
அவரது அன்புக்கு நன்றி.

தென்றல்..! கிரீடம் கொஞ்சம் கனக்குது. அது தலைக்குள் இறங்கிடாமல் பாத்துக்கணும்.
சேரிதானே?
“ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!”
எனக்கு தமிழ் புத்தாண்டுதான்.

Friday, April 9, 2010

மாங்காய் + இஞ்சி = மாங்காயிஞ்சி

மாங்கா இஞ்சி! அதை உடைத்து முகர்ந்தால் என்ன ஒரு மணம்!!!!
அவள் இடுப்பழகியோ....கண்ணழகியோ....காலழகியோ.....கையழகியோ மட்டுமல்ல, மொத்தத்தில் அவள் எல்லாம் கலந்த பேரழகி!!!
மஞ்சள் புடவைக்கு பச்சை ரவிக்கை மேட்ச் என்பது போல மாங்கா இஞ்சி, பச்சைமிளகு, எலுமிச்சை ஜூஸ், உப்பு. இதுதான் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த காம்பினேஷன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவள் எல்லோரோடும் சகஜமாக கலந்து கள்ளமில்லாமல் உறவாடும் ஒரு மார்டன் கேர்ள்.

எந்த காய் கூட்டோடும் இயல்பாக சேர்ந்து கொள்வாள். வாயில் கடிபடும்போது தனி ருசி காட்டுவாள்.

எந்த பொரியலோடும் போய் ஒட்டிக்கொள்வாள். பொரியலில் இஞ்சியின் சுவையே மிகையாக தெரிய வைப்பாள்.

தயிர்சாதத்தில் தாளித்து விட்டால் மணத்து ஊரையே கூட்டுவாள். கூட ரெண்டு வாய் வயிற்றுக்குள் போகச் செய்வாள்.

உப்புமாவில் அரிந்து போட்டால் உப்புமாவுக்கே எடுப்பாக தெரிந்து, சப்புக் கொட்டி சாப்பிட வைப்பாள்.

அவியலில் சேர்க்கும் காய் சைசில் நறுக்கி செய்தால் மற்ற காய்களோடு இணைந்து உறவாடி சுவை கூட்டுவாள்.

இவள் இடுப்பழகி மட்டுமல்லதானே? சாமுத்திரிகா லட்ஷணமும் ஒருங்கே பொருந்திய, மிஸ் யூனிவர்ஸ், மிஸ் வர்ல்ட்-க்கு இணையான மகாப் பேரழகி.
ஒத்துக்கிறீங்களா?

Tuesday, April 6, 2010

I for வவ்வவ் மம்மம்

I FOR வவ்வவ் மம்மம்!!!
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான.......ங்கிற இக்கால ரேஞ்சிலும் இல்லாமல்,

அந்தக்காலத்தில், சாயங்காலம் ஆறரை மணிவாக்கில் எங்கள் தெருவில் டண்டனக்கடி..டண்டனக்கடி என்று கொட்டடிக்கும் சத்தம் கேட்டு ஹோம்வொர்க்கை பாதியில் விட்டு விட்டு வாசலுக்கு ஓடுவோம்.
அங்கே மாட்டு வண்டியில் ஒருவர் ஒக்காந்துகொண்டு நோட்டீஸ்களை விசிறிக்கொண்டே வருவார். மற்றவர், நெத தியேட்டரில் என்ன படம் என்பதை ஃபனல் மாதிரி வாயில் வைத்துக்கொண்டு, “பாலஸ்-டி-வேல்ஸில்..மாயாபஜார், பாலஸ்-டி-வேல்ஸில் மாயாபஜார்!!” என்று அப்போதைய படத்தை பானர் கட்டி பாலாபிஷேகம் செய்யாத குறையாக கூவிக்கொண்டே போவார். சிறுவர்கள் எல்லாம் பின்னாலேயே ஓடி நோட்டீஸ்களை வாங்கிவருவார்கள்.

இப்படி அக்கால ரேஞ்சிலும் இல்லாமல் நான் கொடுத்த விளம்பரம்தான், “I for வவ்வவ் மம்மம்”
,முந்தய பதிவு.
சேரி..சேரி...இன்னும் மேட்டருக்கு வராவிட்டால் மேலே பாஞ்சு குதறிவிடுவீர்கள்.

முதன் முதலாக பள்ளித்தலத்துக்குள் அடியெடுத்து வைக்கும் சின்னஞ்சிறு சிறார்களுக்கு பள்ளியில் ஒரு நேர்காணல் வைப்பார்கள். ஸோ கால்ட் இண்டர்வியூ!!

அதில் கிடைத்த சுவாரஸ்யங்கள்தான் பதிவுக்கான மேட்டர். சப்பை மேட்டர் இல்லீங்க...நல்ல கொழுத்த மேட்டர்!!!

செயிண்ட் லூயிஸில் இருக்கும் அண்ணன் பேரன் ஷிவ். பத்மா ஷேஷாத்திரி பள்ளிக்கு எல்கேஜி இண்டர்வியூக்கு அம்மாவோடு போனான்.
டீச்சர், முகத்திலுள்ள உறுப்புகளைக் காட்டிக் காட்டி குழந்தையிடம் கேட்க,
இயர்
நோஸ்
மவுத். இப்படியே சொல்லிக்கொண்டு வர கண்ணைக்காட்டிக் கேட்டதும்
ஐஸ்! என்று சொல்லிவிட்டு உடனே,”ஐஸ் சாப்பிட்டால் கோல்ட் பிடிக்கும்.” என்ற கூடுதல் தகவலையும் சொல்ல டீச்சர் சிரித்துவிட்டார்கள். அம்மாவின் கண்டிப்பை அங்கே தெரிவித்து விட்டான்.

அதேபோல் மிருகங்களின் படங்களைக் காட்டி கேட்டுக்கொண்டே வர அனைத்தையும் சரியாக சொன்ன ஷிவ் பசுமாட்டின் படத்தப் பார்த்து,”ம்பா!” என்றதும் கொல்லென்ற சிரிப்பு. அம்மாவிடம் விளக்கம் கேட்டதும் சொந்த ஊருக்குப் போனபோது அங்கு மாட்டு கொட்டாயில் பசுமாட்டை “ம்பா” என்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்!!!
எப்படி யோசிக்கிறார்கள் பாருங்கள்!!!

இது தொண்ணூறுகளில் நடந்தது.

போன மாதம் இண்டர்வியூவில் ‘கலக்க போனது யாரு?’ தெரியுமா?
எங்க வீட்டு வாண்டு ஷன்னுதான்.

முதல் ஸ்கூலில் அப்பா அம்மாவிடம் ஃபார்மலாக பேசிக்கொண்டிருந்தபோது குழந்தை அந்த அறையில் இருந்த பொருட்களையும் விளையாட்டு சாதனங்களையும் ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தான். தடுக்கப் போன அம்மாவை நிறுத்திய டீச்சர். ‘தடுக்கவேண்டாம்.’என்றுவிட்டு பேசிக்கொண்டே அவனையும் கவனித்து கொண்டேயிருந்திருக்கிறார்.
பின் சிறுவனிடம் மிருகங்கள் பறவைகள் படங்களைக் காட்டி கேட்டுக் கொண்டே வந்திருக்கிறார். கிளி படம் வந்தவுடன்,
’What is this?
'Parret.'
'What color is parret?'
'Geen color.' (கீன் கலர்)
'What is this?
'Monkey.'
'Where do you see monkey?
'மத்து மேலே.’ (மரத்து மேலே)

குழந்தைக்கு இன்னும் மழலையே போகலையே? பின்ன மூணு வயசு குழந்தை செந்தமிழ் மாநாட்டில் கவிதையா பாடப்போகிறது? நல்ல கேள்வி.
அதன் மழலையே ஒரு செந்தமிழ் கவிதையல்லவா!!

ரெண்டாவது ஸ்கூல் நேர்காணல். ஒரு சேஸிங், ஒரு மலை உச்சி, ஒரு நீண்ட வசனம் எதுவுமில்லாமல் வந்தது க்ளைமாக்ஸ்!!!!

டீச்சர், A FOR, B FOR, C FOR, D FOR என்று கேட்டுக்கொண்டே வந்து I FOR ? என்று கேட்கவும் வழக்கமாக ICE, அல்லது ICE-CREAM என்று சொல்பவன் அன்று சிலவினாடிகள் நிதானித்து விட்டு சொன்னான்........ ” I FOR வவ்வவ் மம்மம்!!!!!!!!!! ”
டீச்சர் புரியாமல் விழித்தார். ‘என்ன சொல்கிறான்?’ அம்மாவுக்கு சட்டென்று புரிந்துவிட்டது.

முன்தினம் நீல்கிரீஸ் ஸ்டோரில் சுத்தி வந்தபோது செல்லப்பிராணிகளுக்கான ஷெல்பில் அவன் ஒரு பொருளைக் காட்டி அம்மாவிடம்,’அது என்னது?’ என்று கேட்டிருக்கிறான். அம்மா அவனுக்குப் புரியும் வகையில்,’அது வவ்வவ் மம்மம்.’ என்று விளக்கியிருக்கிறாள். அதன் வடிவம் ஆங்கில எழுத்து ’I’ மாதிரி உள்ளதால் என்ன அழகாக 'I'யையும் நாய்க்குப் போடும் எலும்பையும் சிங்ரனைஸ் பண்ணியிருக்கிறான்!!!அவனுக்கு ”மாத்தி யோசி” அப்டீன்னு மணியடிச்சிருக்குமோ?

வவ்வவ்! உன்னோட மம்மம் எதுன்னு உனக்குத்தெரியுமா?
அடடே.....!இது இல்லை...இது இல்லை!
ஹாங்! இதுதான் உன்னோட மம்மம்!!!!!!!!!! இது டோட்டோ லைனில் இருக்கிறது. (ஸ்லீப்பிங் லைன்)
இது நிக்க லைனில் உள்ளது.(ஸ்டண்டிங் லைன்) இதுதான் அவனை அப்படி மாத்தி யோசிக்க வைத்தது.
குழந்தைகளின் கற்பனைக்கு வானமே எல்லை. அவர்கள் ரூம் போட்டெல்லாம் யோசிப்பதில்லை. ஸ்பாண்டேனியஸ் என்பார்களே அது போல் விரல் சொடுக்கும் நேரத்தில் வந்து விழுபவை. இதுபோல் நீங்களும் சுட்டிகளின் நேர்காணல் சுவாரஸ்யங்களை பதியலாமே!












பி.கு.:
சே..ரி...பிகு பண்ணாமல் சொல்லிக்கிறேன். போன பதிவில் தலைப்பை மட்டும் அடித்துவிட்டு வழக்கம்போல் பிறகு வந்து எழுதலாமென்று. ‘SAVE' அடிப்பதற்குப் பதில் தவறி 'PUBLISH' அடித்துவிட்டேன். ஹி..ஹி..!! ஆனாலும் சமாளிச்சுடேனே!!!

Monday, April 5, 2010

என்னிடமுள்ள எல்லாத் தண்ணீரையும் கொட்டிவிட்டேன் ஏப்ரல் PiT-க்காக

எல்லாத் தண்ணீரையும் கொட்டிவிட்டால் பின் உனக்கென்ன செய்வாய்?
போட்டியில் வென்று கொட்டிய நீரை கொழா போட்டு உறிஞ்சிட மாட்டேன்?


இங்கிருந்து அங்கு அங்கிருந்து இங்கு. இப்படி காவிரி நீரையும் தெலுங்கு கங்காவையும் பாலாற்று நீரையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டால்
எவ்வளவு நல்லாயிருக்கும்!!!!!



பொங்கிவரும் நீர் தாகம் தீர்க்குமா?




வாய்வழியே வழிந்தோடும் குளியலுக்கான தண்ணீர், மனிதனின் கற்பனை வளத்தோடு.



ஆகாய கங்கையோ.....ஆரம்கேவியின் எழுநூறடிச் சேலையோ?


இரு கோடுகள் போல் ஒரு சிற்றருவி ஒரு பேரருவி. உடன் தெள்ளிய நீர் தேங்கிய குளம்.


வெள்ளியையே உருக்கிவிட்டானோ அந்த அந்தி சூரியன்?


அந்த வெள்ளியை வார்த்தெடுக்க விரையும் ஓடம்.


இருக்கமான அமைதியோடு ஓடி பொங்குமாங்கடலென வழிந்தோடும் நயாகராவின் வீழ்ச்சி.
இயற்கையின் வண்ண ஓவியமென வானவில்.


ஆரவாரத்தோடு வழிந்து ஆவியாய் மேலெழும்பி வானவில்லின் வண்ணம் காட்டும் நயாகரா.



அதன் அருகே செல்லச்செல்ல ஆற்பரித்து இழையிழையாய் கோலமிடும் நீரலைகள்.


அம்மாடீ....! இங்கே கையை விட்டால் நறுக்கிவிடும் அளவுக்கு கூர்மையாக சென்று வழியும் அதே நயாகரா.


ஆஹா!!!என்னனொரு கம்பீரம்!!!


சலசலவென அமைதியாய் ஓடும் நதி.



அன்பர்களே! கொட்டியதில் உங்கள் மனதை தட்டியது எதுவோ?
சொல்லுங்களேன்.

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...