“கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்”
அனுபவத்தால் அறிஞர்கள் கூறும் வார்த்தைகள் பொய்யோ மெய்யோ தெரியாது
ஆனால் என்னைப் பொறுத்தவரை ரெண்டாவது வரியில் சகோதரியையும் சேர்த்துக் கொள்வதே
எனக்கு உவப்பானது. ஆம்! “கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரி” என்றே வாழ்கிறேன். அன்பையும் பாசத்தையுமே கொண்டுவந்தால் போதுமானது.
ஆனால் சமீபகாலங்களில் என் கொள்கைக்கு பங்கம் வரும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன்.
எல்லாம் சின்னண்ணன் வீட்டு மாம்பழங்கள் செய்யும் ஜாலங்கள்.
சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது மதினி பச்சை மாங்காய்களாக ஏழெட்டு பையில் போட்டு கொண்டு போங்கள் என்றார்கள். ‘ஐயையோ! வேண்டாம்!” இது என் கொள்கைக்கு புறம்பானது என்று, கைக்குழந்தையோடு வந்த மேனகையைப் பார்த்து விஸ்வாமித்திரர் கொடுத்த போஸை நானும் கொடுத்தேன்.
வற்புறுத்திக் கொடுத்தமையால் அந்தப் பையும் என்னோடு ரயிலில் பயணித்தது.
வீடு வந்து சேர்ந்ததும் அப்பையை காற்றுப் புகாமல் இறுக்கி கட்டி வைத்து விட்டேன். ஒரு வாரம் கழித்து கம்மென்ற மணம் வந்தது பையிலிருந்து.
பிரித்துப் பார்த்தால் எல்லாம் அப்பழுக்கில்லாமல் பழுத்திருந்தது. ஒரு பழத்தை தோலுறித்து துண்டங்களாக நறுக்கி சுவைத்தால்......அப்பப்பா...! என்ன சுவை, என்ன இனிப்பு!!பங்கனப்பள்ளியும் ராஜபாளையம் சப்பட்டையும் தோத்தது போங்கள்!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு மதினி, அண்ணனைத் தவிர யாருக்கும் மாம்பழமே பிடிக்காதாம். வீட்டிலேயே மாங்கனி இருக்க வேறு எந்தக் காயை கவரப் போகிறார்களோ? என்னடா இது மாம்பழத்துக்கு வந்த சோதனை!!!!
எங்கள் வீட்டுக்கு சின்னக்கா பிள்ளைகள் வரும் போது எல்லோருக்கும் மாம்பழம் நறுக்கி கிண்ணங்களில் போட்டுத்தருவேன், அப்போது அக்கா மகள், “சித்தி எனக்கு மாம்பழம் பிடிக்காது.” என்பாள்.
சும்மா டேஸ்ட் பாரு பிடிக்கும் என்பேன். ஆனாலும் நோன்னுடுவாள். மாம்பழம் பிடிக்காத........கூட உண்டா? என்று நினைத்துக் கொள்வேன்.உடனே, “ஐயா...ஜாலி! என்று மற்ற பிள்ளைகள் அதை எடுத்துக் கொள்வார்கள்.
இந்தப் பழத்துக்காகத்தான் முருகன் மயிலேறி உலகத்தை சுற்றி வந்தும் கிடைக்காத்தால் கோபித்துக்கொண்டு குன்றேறினானோ? அதனால்தான் வடிவேலன் வீட்டில் இன்று மயில்கள் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கின்றனவோ? பழத்தை முருகனுக்குக் கொண்டு போய் கொடுக்க? பழம் அவ்வளவு ருசி!!!!!!!!!!!
என் கொள்கை பட்பட்டென்று தெறித்து வீழ்ந்தது. கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரியாக இருந்த நான், இனி மாம்பழம் கொண்டு வந்தால்தான் சகோதரி என்றாகிப் போனேன். எப்படி இருந்த நான் இப்படியாகிப் போனேன்!!!
காரணம் சீசனில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்துக்கு நான் அடிமை. முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன் மே, ஜூன் மாதங்களில் என் மதிய உணவு தயிர் சாதமும் மாம்பழமும் மட்டுமே!!
ஒரு ரகசியம், அடுத்தவருடம் அம்மரத்துக் காய்களை அவர்கள் தேவைக்குப் போக மீதியை நான் குத்தகைக்கு எடுத்திருக்கிறேனாக்கும்! ஹுக்கும்!!!!