ஐந்து பாகங்களையும் படித்து பின்னூட்டமிட்ட பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!
இந்த பாகத்தில் மிகவும் சுவாரஸ்யமான களி வகைகள் பற்றிப் பார்ப்போமா?
அதற்குள், ஆர்டர்கள் வந்துவிட்டன. மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
‘அம்மா!! எனக்கு ஓமக்களியும் சுக்குக்களியும் வேண்டும். செய்து வை. நான் வீக்கெண்ட் வரும் போது “அப்படியேச்சாப்பிடுவேன்!” ‘ என்றாள். நான் வெள்ளிக்கிழமை பத்தியக் குழம்பு செய்யப் போகிறேனே என்றேன்.
சரி..களிக்கு வருவோம், களிப்போடு.
இரண்டு பச்சைகளுக்குப் பிறகு களி கொடுக்க ஆரம்பிக்கலாம். அதாவது எட்டாவது நாளிலிருந்து.
சுக்குக்களி:சுக்கு - 100 கிராம்
சாரணவேர் - -50 கிராம்
இரண்டியும் இடித்து சலித்து பின் 100 கிராம் பொடிக்கு 200 கிராம் கருப்பட்டி பொடி அளந்து, பொடி முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் 200 கிராம் பால் விட்டு சுக்குப் பொடியை கரைத்து வடிகட்டிய கருப்பட்டியுடன் கலந்து அடுப்பில் வைத்து கிண்டவும். இறுகி வரும் போது...முக்கால் பதம் வந்ததும் 50 கிராம் தேன் ஊற்றி கிண்டி இறக்கவும்.
இதை நெல்லிக்காய் அளவு உருட்டி, இரண்டு நாட்கள் இரவு சாப்பாட்டுக்குப் பின் கொடுக்கவும்.
சுக்குக்களி சாப்பிட்ட மறுநாள் காலை இஞ்சி, மேல்பொடி,தேன் கொடுக்கவும்.பூண்டு லேகியம்:பூண்டு - அரைக் கப் உறித்தது
பால் விட்டு வேக வைத்து அத்துடன் இஞ்சிச்சாறு, வடிகட்டிய கருப்பட்டிசாறு சேர்த்து அடுப்பில் வைத்து கடைந்து, இறக்கி வைத்து உருட்டி கொடுக்கவும்.
மறுநாள்காலை இஞ்சி, மேல்பொடி, தேன் கொடுக்கவும்.மல்லி லேகியம்:மல்லிப் பொடி - 4 தே.க.
கருப்பட்டிபொடி - 8 தே.க.
இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். முக்கால் பதம் வந்ததும் தேன் விட்டு களியை கிண்டி இறக்கவும்.
மறுநாள் காலை இஞ்சி, மேல் பொடி, தேன் கலந்து கொடுக்கவும்சீரக லேகியம்:
சீரகப் பொடி - 4 தே.க,
கருப்பட்டி - 8 தே.க.
சீரகப்பொடியை பால் விட்டு கலந்து வடிகட்டிய கருப்பட்டியுடன் சேர்த்து கிண்டி முக்கல் பதம் வந்ததும் தேன், நெய் விட்டு கிளறி இறக்கவும்.நெல்லிக்காயளவு சாப்பிடக் கொடுக்கவும்.
மறுநாள் காலை இஞ்சி, மேல்பொடி,கருப்பட்டி, தேன் கலந்து கொடுக்கவும்.
சட்டிக்காயம்:
பச்சை மருந்துப் பொடி - 4 தே.க.
பெருங்காயப் பொடி -கால் தே.க.
பூண்டு - 2 பல்
மூன்றையும் அரைத்து ஒன்றுக்கு ரெண்டு பங்கு கருப்பட்டி போட்டு மற்ற லேகியங்கள் மாதிரி கடைசியில் தேன், நல்லெண்ணை ஊற்றி கிண்டி இறக்கி ஆறியதும் உருட்டி கொடுக்கவும்.
வழக்கம்போல் மறுநாள்காலை இஞ்சி, மேல்பொடி, கருப்பட்டி, தேன் சேர்த்து குடிக்கக் கொடுக்கவும்.
வெந்தயக்களி:
பச்சரிசி - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
மூன்றையும் ஊற வைத்து அரைத்து, அரைத்த விழுதுக்கு ரெண்டு பங்கு கருப்பட்டி பாகு காய்ச்சி, வடிகட்டி அடுப்பில் வைத்து கிண்டி, இடையிடையே நல்லெண்ணை ஊற்றி கிண்டி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி ஆறியதும் உருட்டி வைத்துக்கொண்டு இரவு உணவுக்குப் பின் சாப்பிடக் கொடுக்கவும்.
மறுநாள் இஞ்சி, மேல்பொடி, கருப்பட்டி, தேன் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.
ஓமக்களி:
ஓமம் - 4 தே.க.
கருப்பட்டி பொடி - 8 தே.க.
பால் - 1/2 கப்
தேன் -தேவைக்கேற்ப
பசு நெய் - 4-5 தே.க.
ஓமத்தை தண்ணீர் விட்டு அரைத்து அல்லது மிக்ஸியில் பொடி செய்து கொண்டு, பாலில் காரைத்து, வடிகட்டிய கருப்ப்பட்டி பாகில் கல்ந்து அடுப்பிலேற்றி கிண்டி முக்கால் பதம் வந்ததும், தேன், பசு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இரவு உணவுக்குப் பின் உருட்டி 2-3 உருண்டைகள் கொடுக்க.வும்.
மறுநாள் காலை வழக்கம் போல் இஞ்சி,மேல்பொடி, கருப்பட்டி, தேன் கலந்து கொடுக்கவும்.
இஞ்சிச்சாறு தலையில் தேய்த்து குளிக்க வைக்கவும்.
இந்த களிகள் சாப்பிடும் போது, மதிய பத்திய சாப்பட்டுக்குப் பின் வெற்றிலை, சுண்ணாம்பு, வாசனைப்பாக்கு, விரும்பினால் ரோஜா குல்கந்து சேர்த்து தாம்பூலமாக சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணம் ஆகும்.
இந்த வகைக்களிகளோடு மிளகுக் களியும் உண்டு. மிளகுப்பொடியுடன் ரெண்டு அல்லது மூன்று பங்கு வடிகட்டிய கருப்பட்டி சேர்த்து கிண்டி தேன், பசுநெய் விட்டு கிளறி கொடுப்பார்கள். அதை சாப்பிட்டவுடன் உடம்பெல்லாம் ‘தகதக’ என எரியும். கேட்டால் நல்லதுதான் உடம்பிலுள்ள கெட்ட நீரெல்லாம் வற்றும் என்பார்கள். நான் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் தற்காலப் பெண்களுக்குத் தாங்காது. ஆகவே மிளகுக்களியை விட்டுவிடலாம். யாரும் முயற்சி பண்ணவேண்டாம்.
களிகள் எல்லாம் சுபமாக முடிந்தவுடன் பிரசவலேகியம் என்று கொடுப்பார்காள்.
அக்காலத்தில் ஒரு வீட்டில் பெண் கருவுற்றிருக்கிறாள் என்று கேள்விப் பட்டதுமே ஊரிலுள்ள பெண்களெல்லாம் ஓரிடத்தில் குழுமி, பிரசவ லேகியம் தயாரிக்க நாட்டுமருந்து சாமான்கள் லிஸ்ட் போட்டு வாங்கி, இடித்து, பொடித்து, சலித்து, அரைத்து இன்னும் என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்து கருப்பட்டிப்பாகில் கிண்டோகிண்டென்று கிண்டி தயார்செய்வார்கள். மனித நேயம்........இல்லை...கர்ப்பிணிப்பெண் நேயம் மிகுந்திருந்த காலம் அது.
பிரசவ லேகியம் செய்தத் தேவையான பொருட்கள் எல்லாம் கடைகளில் கிடைத்தாலும் அதைச் செய்வது என்பது பெரி.....ய ப்ராசஸ். சாமான்கள் லிஸ்டே நீ....ளமாக இரூக்கும்.
இப்போதெல்லாம் அப்படி கூட்டாகக் கிண்டுவதெல்லாம் நடக்கிற காரியமில்லையாதலால் நல்ல நாட்டுமருந்துக் கடைகளில் ரெடிமேடாகவே கிடைக்கிறது.
அதைவாங்கி தினமூம் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு எலுமிச்சை அளவு சாப்பிடலாம். உடம்பு பழைய நிலைமைக்குத் திரும்பவும் நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கவும் குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கவும் இவ்வகை பத்தியங்கள் மிகவும் அவசியம். ஆறு மாதம் வரை சாப்பிடலாம். தாய் சாப்பிடும் உணவுதான் பாலாக குழந்தைக்குப் போகிறது. ஆகவேதான் அவள் உண்ணும் உணவில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பச்சிளம் குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற வியாதிகள் வராமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும்தான்.
அக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் பத்திய சாப்பாடு, களி, லேகியம் எல்லாம் மற்றவர்க்குத் தெரியாமல் மறைத்து மறைத்து கொண்டு போய் கொடுப்பார்கள். கண்பட்டுவிடுமாம்!!!!
"அக்கா என்ன சாப்பிடுகிறாள்?, அத்தை என்னா சாப்டுறாள்?, சித்திக்கு என்னா கொண்டு போறே? எனக்கும் வேணும்!" என்று குழந்தைகள் கேட்பதை தவிர்க்கத்தான்.
கரு சுமந்த கண்மணிகளுக்கான பத்திய வைத்தியம் இத்துடன் முடிவடைகிறது.
ரசித்துப் படித்தவர்கள் இவற்றைப் பயன் படுத்தி பலனும் பெற்றால் அதைவிட பெரும் மகிழ்ச்சி எனக்கு வேறேதுமில்லை. பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நோட்டில் எழுதியதை நெட்டில் பதிய வைத்த என் சோம்பேறி மனசுக்கும் நன்றி!!!!
இவ்வளவு வரைவாக எந்தப் பதிவும் எழுதியதில்லை. இத்தகவல்களை என் மகளுக்காக தந்து உதவிய சாந்தா மதினிக்கும் என் நன்றிகள்!!!!!