அதன் ருசிக்கு அவ்வளவு டிமாண்ட்!!
பல சமயம் நினைப்பேன் செய்யும் இடத்துக்குப் போய் வத்தல் இடும் பெண்மணியைப் பார்த்து வரவேண்டுமென்று. நேரமின்மையால் அது நடக்கவில்லை.
இம்முறை நேரமிருந்ததால் ஜெயராமையும் கூட்டிக் கொண்டு.....அவனுக்குத்தானே வீடு தெரியும்! அங்கு சென்றேன். “அம்மா! நீங்கெல்லாம் அங்கு வரமுடியாதம்மா. படி ஏறணும்.” என்று பயமுறுத்தினான்.
ஏழுமலை, ஏழு கடல் தாண்டியாவது போய்த்தானாகணும் என்று பிடிவாதமாக அங்கு சென்றேன். சிறிய வளவு வீடு எதிரெதிரே ரெண்டு வீடுகள். மாடிப் போர்ஷனில் வத்தலிடும் குடும்பம் வசிக்கிறது.
அப்பாடீ.....!!உண்மையிலேயே ஏழுகடல், ஏழுமலைதான். ஒடுக்கமான மாடிப்படிகள். நான்கு சுற்றுகள் சுற்றி...சுற்றி...சுற்றி...சுற்றி முசுமுசு என்று ஏறினேன். சிறிது ஆசுவாசப் படுத்திக்கொண்டு. “வத்தல் வாங்க வந்தேன். அதோடு உங்களையும் பார்க்க வந்தேன்.”என்றேன். அவர் முகத்தில் பளிச்சென்று ஒரு சந்தோஷம்!
வத்தல் போடும் தட்டட்டியும் மிகவும் சிறியதுதான். எப்படி சமாளிக்கிறீர்கள்? என்றதுக்கு, ’காலையில் போட்டால் சாயங்காலம் காய்ந்துவிடும். வெயில் காலத்தில் விடாமல் போட்டால்தான் சரியாயிருக்கும். இப்போது மழையும் வெயிலும் மாரிமாரி அடிப்பதால் நிறுத்தியிருக்கிறோம். நீங்க வழக்கமாக வாங்கும் வத்தல் ஸ்டாக் இல்லை. வெயில் காலம் வரை காத்திருக்கணும்.’ என்றார்.
’இப்ப இருப்பது முறுக்கு வத்தல்தான்...அதுவும் கொஞ்சம்தானிருக்கு, பரவாயில்லையா?’
என்றார். சரி இருப்பதைக் கொடுங்கள் என்று முறுக்கு வத்தல் ஒரு கிலோ பாக்கெட்டாக ரெண்டு வாங்கி வந்தேன்.
நான் வாங்கிய முறுக்கு வத்தல் கோடவுனிலிருந்து....அதாவது பெரிய ப்ளாஸ்டிக் பக்கெட்டிலிருந்து எடுத்து வருகிறார்.
அந்த வத்தல் பொறிச்சது
அதை அழகாக அளந்து நிறுத்து ஒரு கிலோ பாக்கெட்டாக போட்டு ஒட்டி தருகிறார் அவரது கணவர்.
வழக்கமாக வாங்கும் வெங்காய வத்தல், பச்சையாகவும் பொறித்ததும். வத்தலைப் பொறித்தால் அழகாக ரோஜாப்பூ மாதிரி பொறிந்துவரும்!!!
தொழில் ரகசியமாயிற்றே!!
என்ன....இடம் சிறியதாகையால் விஸ்தரிக்க முடியவில்லை. எங்களுக்கு இது போதும் என்று திருப்தியாயிருக்கிறது அக்குடும்பம்.
எனக்குத்தான் ஓர் ஆசை. நெல் காயப்போடுவார்களே, அது மாதிரி பெரிய சிமிண்ட் தளம் அமைத்து, அருகிலேயே ஷெட் போட்டு பெரிய அடுப்புகள், அண்டா குண்டாக்கள், மற்ற சப்பு சவருகள் எல்லாம் வாங்கி கொடுத்து, தேவையான பணவுதவியும் செய்து அவரையும் பார்ட்னராக்கிக்கொண்டால்....ஆஹா!! வத்தல் உலகின் பெரிய ஆண்ட்ரப்ரனர்ஸ் ஆகிவிடுவோம்.
’ஏய்..ஏய்...தூக்கத்திலே வத்தல் போட வைத்திருந்த கூழை கொட்டிக் கவிழ்த்துவிட்டாயே!!!’ ஓஹோ! கனவா? ஏன் நடக்காதா என்ன?
சின்ன கிராமத்தில் அல்லது எங்க ஊரிலேயே இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்கும்.
'மகளிர் சுய உதவிக் குழு' என்ற பெயரில்.
ஆனால் நாந்தான் இங்கே கான்கிரீட் காட்டுக்குள் மாட்டிக் கொண்டேனே!!!!!