எங்கள் அன்புத் தந்தையின் பிறந்தநாள் பிப்ரவரி 15. இந்நாளில் அன்னாருக்கு எங்கள் நினைவஞ்சலி.
சமூகத்தில் உயரிய இடத்தில் இருந்திருந்தாலும். எங்களுக்கு மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்து காட்டியாவர்.
"அப்பா! நம்ம வீட்டுக்கு ப்ரிட்ஜ் வேணும்." நானும் தங்கையும்.
"அதெல்லாம் லக் ஷூரி ஐட்டம். அதெல்லாம் வேண்டாம்." அப்பா.
அவர் இருந்தவரை வீட்டில் ப்ரிட்ஜ் கிடையாது.
ஆனால் எங்கள் தனிப்பட்ட விருப்பங்களை தட்டாது நிறைவேற்றுவார்.
அந்தக்காலத்தில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையின் கடைசி பக்கங்களில் வரும் விளம்பரங்களைப்பார்த்து எனக்கு வேண்டிய பொருட்களை வி.பி.பியில் ஆர்டர் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுவேன்.
பதினைந்து நாட்கள் கழித்து பார்சல் வரும். 'நீ ஆர்டர் செய்தாயா?' ஆமா!
அவ்வளவுதான் பேசாமல் பணத்தைக்கட்டி வாங்கி பார்சலை என்னிடம் கொடுத்துவிடுவார்.
இப்படித்தான் என வாட்சுக்கு கலர்கலர் ஸ்ட்ராப்கள், நைலான் வலை செருப்பு என்று கண்டதுகழியதெல்லாம் வாங்குவேன்.
ஒவ்வொரு முறையும் ப்ராக்ரஸ் ரிப்போர்டில் கையெழுத்து வாங்கும் போதெல்லாம்...ரிப்போர்டை வாங்கி நேரே கையெழுத்து போடுமிடத்தில் கையெழுத்திட்டுவிட்டு,'ம்ம், அடுத்த முறை இன்னும் அதிக மார்க் வாங்கவேண்டுமென்பார். நான் நூத்துக்கு நூறே வாங்கியிருந்தாலும் இதையே சொல்லியிருப்பார் போலும்.
பின்னாளில் நினைத்துக் கொள்வேன்....படிப்பில் கண்டிப்பாய் இருந்திருந்தால் நானும் பெரிய படிப்பாளி ஆகியிருந்திருப்பேனோ? அப்பாவுக்கு எங்கள் படிப்பு, பட்டப்படிப்பு எல்லாம் கல்யாணத்துக்கான குவாலிபிகேஷன் மட்டும்தான்.
அப்பாவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. பழுத்த காங்கிரஸ்காரரான அப்பாவின் செல்வாக்கைப்பற்றி கேள்விப்பட்டு, திருநெல்வேலியில் அனைத்து, ரோட்டரி, டிஸ்ட்ரீக்ட் க்ளப், நெல்லை சங்கீத சபா ஆகியவற்றில் நிரந்தர பொருளாளர் என்றறிந்து, சிறுசேமிப்புத் துறையின் தலைவரான எம்.ஜி.ஆர். திருநெல்வேலி சிறுசேமிப்புக்கு பொருளாளராக அப்பாவை நியமித்தார். சந்திரகாந்தாவின் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நல்ல தொகை வசூல் செய்து கொடுத்தார்.
அச்சமயம் எடுத்த படம். உடனிருப்பவர் அப்போதைய நெல்லை கலெக்டர் எம்.எம்.ராஜேந்திரன்(பின்னாளில் ஒரிஸ்ஸா மாநில கவர்னராக பணியாற்றியவர்).

புரட்சித்தலைவருடன் மகிழ்ச்சியான தருணம்.

நடுவிலிருப்பவர் அன்றைய எம்.எல்.ஏ. திரு. ஏ.எல். சுப்பிரமணியன், பின்னாளில் நெல்லை மேயராகவும் ஆனவர்.

இப்படம் ஓர் அரிய பொக்கிஷம். பெரிய பெரிய தலைவர்களுடன். சர் சி.பி.ராமசாமி ஐயர், மூதறிஞர் ராஜாஜி. அவருக்குப் பின்னால் அப்பா. நாலாவது வரிசையில் டார்பன் அணிந்திருப்பவர்...சர் சி.வி.ராமனோ? வலது புறம் இரண்டாவது வரிசையில் எங்கள் பெரிய தாத்தா ஏ.ஆர்.சண்முகம் பிள்ளை. இன்னும் பெயர் தெரியா பிரபலங்கள். இப்படம் அப்பாவுக்குப் பிறகுதான் கைக்குக் கிடைத்தது. அதனால் படம் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் போயிற்று.

எனக்கு திருமணம் ஆகுமுன்..அதாவது நிச்சயக்கப்பட்டபின் அப்பாவோடு எங்காவது வெளியூர் கூட்டிச்செல்லும் படி கேட்டோம். காரணம் அப்பாவோடு பிக்னிக் தவிர வேறெங்கும் சென்றதில்லை. என்ன நினைத்தாரோ..சரியென்று என்னையும் கோமாவையும் திருவனந்தபுரம் அழைத்துச் சென்றார். எங்கள் செவர்லே காரில் ஐயம்பெருமாள்பிள்ளை சாரதியாக சந்தோஷாமான பயணம்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், ஆர்ட்கேலரி, கோவளம் பீச், மிருகக்காட்சி சாலை எல்லாம் அப்பாவோடு சுற்றியது மறக்க முடியாத அனுபவம். ஜூவில் ஓட்டகச்சிவிங்கி தலை வணங்கி உணவை னாங்கிக் கொள்கிறது.

அட! எனக்கும் தலை வணங்க்குகிறதே!!!
தங்கை கோமா கொடுக்கும் இலைகளையும் வாங்கிக்கொள்கிறது.

இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன். பிறந்தநாள் பதிவை இன்றே வெளீயிட வேண்டுமென்பதால் இத்துடன் முடிக்கிறேன்.
எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பாக அப்பாவுக்கு இதய பூர்வமான அஞ்சலியை அவரின் பிறந்தநாளன்று செலுத்துகிறேன்.
அப்பா! எங்கள் எல்லோருக்கும் உங்கள் அன்பையும் ஆசியையும் வேண்டுகிறேன்.