Monday, March 28, 2011

முருககுறிச்சி சிவன் கோயிலும்.....

ச..ரி..க..ம த னி-யும்

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள சிவன் கோவில், திருநெல்வேலிக்காரியான நான் முதன் முதலாக எம்பெருமான் அழைப்புக் கிணங்க தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.

அழைப்பு என் பெரிய மதனி மூலம் வந்தது. அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது, ' பாளையங்கோட்டை சிவன்கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில்தான் நடந்தேறியுள்ளது. நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள் சென்று தரிசனம் செய்தால் நல்லது. கட்டாயம் போய்வா!' என்றார்கள்.

மறுநாள் இரண்டாவது மதனியையும் கூட்டிக்கொண்டு கோயிலுக்குச்சென்றேன்.

என்ன ஆச்சரியம்! அங்கு மூன்றாவது மதனி கோவிலில் விளக்கேற்றிக் கொண்டிருந்தார்கள். செவ்வாய் வெள்ளி தவறாமல் கோயிலிலுள்ள அனைத்து சன்னதிகளிலும் எண்ணை ஊற்றி விளக்கேற்றிவதை ஒரு தவமாகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தரிசனத்தின் மூலம் மூன்று மதினிகளையும் இணைத்து விட்டேன். இதுவும் எம்பெருமானின் திரூவிளையாடலோ? சந்தோஷமாயிருந்தது.

நாலாவது மதனியையும் இணைத்திருக்கலாம். இறைவன் சித்தம் இம்மட்டோ?

கோயிலினுள் நுழைந்ததும் கொடிமரம், நந்தி, சன்னதி வாசல்.


முழுவதும் வெள்ளியால் மூடப்பட்ட சன்னதி வாசல், பளபளக்குது.


இடது புறமாக படியேறி சன்னதிக்குள் செல்லலாம்.


பிரகாரத்தின் சுவற்றில் அணிவகுத்து நிற்கும் யாழிகளின் வரிசை. சுவரும் யாழிகளும் வார்னிஷ் செய்தாற் போல் பளபளக்குது


பிரகாரத்தின் இடப்புறத்தில் மற்றுமொரு சிவலிங்கம், வெள்ளித்தூண்களுக்கிடையில்.


என்ன அழகு!


துண்களில் எல்லாம் அகல் விளக்கேற்ற ஏதுவாக செதுக்கப்பட்ட விளக்குப் பிறை.


முக்கியமான சன்னதிக்கு வந்தாச்சு. அருள்திரு சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனாவுடன். இங்கிருக்கும் ஸ்ரீ சண்முகர் சிலை திருச்செந்தூர் ஆறுமுகநயினார் சன்னதிக்கு ஒப்பானது. காரணம்.....திருச்செந்தூர் ஆறுமுகன் சன்னதியில் இருக்கவேண்டிய இத்திருவுருவச்சிலை, இங்கு குடிகொண்டு வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறது.


கி.பி.1649-ல் டச்சு கொள்ளைக்கூட்டம் திருச்செந்தூர் ஸ்ரீசண்முகர் பஞ்சலோக சிலையை தங்கம் என நினைத்து கொள்ளையடித்து கடத்திச்செல்ல, தெய்வ சிற்றத்தால் பெரும் புயல் மழை தோன்றின. சிலையை கடலில் வீசிவிட்டு தப்பினர். நெல்லை திரு வடமலையப்ப பிள்ளையன்(என்ன எளிமை!!)புதிய பஞ்சலோக சிலை செய்து, செந்தூர் செல்லும் வழியில் பாளை முருகன்குறிச்சியில் இரவு தங்கினார். அன்றிரவு பிள்ளையன் கனவில் கடலில் சிலை கிடக்கும் இடமும், கருடபகவான் அதற்கு மேல் வட்டமிடும் அடையாளமும் கண்டு ஸ்ரீசண்முகரை மீட்டார். புதிதாக செய்த சிலையை பாளை இச்சிவன் கோவிலில் இச்சன்னதியில் எழுந்தருளச்செய்தார் என்பது வரலாறு. முருகன் தங்கிய இப்பகுதி 'முருகன்குறிச்சி' என்று இன்றும் அழைக்கப்படுகிறது. ஆதாரம், டாக்டர் ந,கல்யாணசுந்தரம் எழுதிய 'திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு'



ஆகா....! பிறந்தது முதல் பள்ளிக்கும் கல்லூரிக்கும் பின்னர் பெருமாள்புரம், மகராஜநகருக்கும் எத்தனை ஆயிரம் முறை, லட்சம் முறை இப்பகுதியை கடந்து சென்றிருப்பேன்!!!

முருகன் தங்கியதாலே 'முருகன்குறிச்சி' ஆனது என்பது இக்கல்வெட்டிலிருந்தல்லவோ அறிந்து கொள்ள முடிந்தது!!

கல்லாதது கல்வெட்டளவும் போலும்.

Sunday, March 20, 2011

சாராள் தக்கர் கல்லூரி பழைய மாணவியர் சந்திப்பு

பல வருடங்களுக்குப் பிறகு, நான் படித்த 'சாரள் தக்கர் கல்லூரி'யின் பழைய மணவியர் சந்திப்பு சென்னையில் நடந்தது. என் தோழி திருமதி ரேய்ச்சல் பத்மினி ஆல்ஃபிரட் என்க்கு போன் செய்து, 'வருகிறாயா?' என்று கேட்டார்.

முப்பத்தியிரண்டு வருடங்களுக்கு கழித்து இப்போதுதான் நினைவு வந்ததா என்று செல்லமாக கடிந்து கொண்டேன்.
நான் இந்த வருடம்தான் சென்னையில் கலந்து கொள்கிறேன். அதனால்தான் உன் நினைவு வந்தது என்றார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சி எஸ் ஐ பள்ளியில் நடக்கிறது, மாலை நான்கு மணிக்கு வந்துவிடு.

ரொம்ப சரியாக ஐந்தே முக்காலுக்கு(ஏதோ ஊர்வலம்....டேக் டைவர்ஷன்)ப் போய்ச் சேர்ந்தேன்.

அன்றைய கூட்டத்தில் எங்கள் கல்லூரியின் பழைய முதல்வராக இருந்த
MISS DORA DAVID அவர்களின் நூறாவது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு அன்னாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதில் அவரை அறிந்தவர்கள், அவர் கீழ் பணி புரிந்தவர்கள், அவரிடம் படித்த மாணவிகள் என்று பலர் அவரைப் பற்றி எழுதியிருந்தார்கள்

அன்றைய கூட்டத்திலும் அவர்களில் பல பேர் தாம் அறிந்ததையும் அனுபவித்ததையும் சுவை பட பேசி விழாவை கலகலப்பாக்கினார்கள்.

MISS DORA DAVID THE LEGEND என்ற புத்தகத்தையும் வெளியிட்டு சிறப்பித்தார்கள்.

SARAH TUCKER COLLEGE - SOUTH INDIA'S FIRST WOMEN'S COLLEGE.
சாரா டக்கர் என்ற அன்பு இதயம் (kind hearted) கொண்ட ஓர் ஆங்கிலேயப் பெண்மணியால் 1896-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

மிஸ் டேவிட்....ஆம் அவர் தன்னை இப்படி அழைப்பதேயே விரும்பினார்.....

1944-1949 வரை விரிவுரையாளராகவும் பின்னர் 1950-1969 வரை முதல்வராகவும் பணியாற்றினார். அவர்தம் நினைவுகளை அன்போடு நினைவு கூர்ந்தார்கள், உடன் பணியாற்றியவர்களும் மாணவிகளும்.

"Sit & Study உக்காந்து படி"

மிஸ் டேவிட் முதல்வராக இருந்த காலத்தில் இந்த தமிழிஷ் வார்த்தைகளைக் கேட்காத மாணவிகளே இருக்க முடியாது!!!மாணவிகளை அன்போடு வழி நடத்திய அவர் வாய் வழியே வழிந்தோடும் சொற்றொடர்தான் இது. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக என்னவொரு ரைமிங்கோடு கூடிய சொல்லடுக்கு!!!!!!!



மேடையின் தோற்றம். பழைய ஆசிரியர்கள், மாணவிகளால் நிரம்பியிருக்கிறது


கூட்டத்துக்கு வந்திருந்த பழைய மலர்கள்!


எழுத்துலகில் பிரபலமான திருமதி ரமணி சந்திரனும் ஒரு பழைய மாணவி.


விழா மலரில் கட்டுரை எழுதியவர்களுக்கு அப்புத்தகம் வழங்கப்பட்டது. மிஸ் டேய்சி பால் அவர்களிடமிருந்து ரமணி சந்திரன் விழா மலரைப்பெற்றுக் கொள்கிறார்.


அவரோடு ஒரு சிறிய சந்திப்பு. தான் படித்த காலம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். நானும் இப்போதுதான் ப்ளாக்கில் எழுதுகிறேன் என்றதுக்கு 'உம் எழுதுங்கள்..எழுதுங்கள் என்று உற்சாகப் படுத்தினார்.


என் மதிப்புக்குரிய தமிழாசிரியர் மிஸ் உமா மகேஸ்வரி அவர்களுக்கு விழாமலர் வழங்குகிறார்கள்


மலரைப் பெற்றுக்கொண்ட சிலர். இடமிருந்து இரண்டாவது தோழி பத்மினி.


மை ஃபிரண்ட் பத்மினி பேசும் போது எனக்கு கல்லூரி அட்மிஷன் கிடைத்த விவரத்தையும் தன் பேச்சினூடே போட்டுடைத்தார். கல்லூரி ஆரம்பித்து பத்து நாட்கள் கழிந்த பின் என் மார்க் ஷீட்டோடு மிஸ் டேவிட் முன் போய் நின்றேன். இன்னார் மகள் என்று தெரியுமாதலால், என்னை எதுவுமே கேட்காமல் மார்க் ஷீட்டைப்பார்த்து மேத்ஸ் க்ரூப் ( எஸ்.எஸ்.எல்.சி.யில் நான் சென்டம்)போட்டு கையேழுத்திட்டு 'க்ளாஸுக்குப் போ' என்று விரட்டிவிட்டார்கள். நானும் க்ளாஸைத் தேடிப் போய் உக்காந்தேன். வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அட்டெண்டர் வந்து அப்ளிக்கேஷன் ஃபார்மில் என் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு போனார். மற்ற இடங்களெல்லாம் ஏற்கனவே நிரப்பட்டிருந்தது!

அப்போதெல்லாம் காலை வகுப்புக்குள் நுழையும் போது வகுப்பறை வாசலில் சிறு கூடை நிறைய முளைகட்டிய பயறு இருக்கும். இதுவும் மிஸ் டேவிடின் ஏற்பாடு. மாணவிகளின் ஆரோக்கியத்தில்தான் எவ்வளவு அக்கறை!! இன்று விலாவாரியாகப் பேசப்படும் முளைகட்டிய பயறை சாப்பிட்டதும் அப்போதுதான். கை நிறைய அள்ளிக் கொண்டு அவரவரிடத்தில் அமர்ந்து கொண்டு அசை போட்டுக் கொண்டே பாடத்தையும் கவனிப்போம்.ஒருவரும் ஒன்றும் சொல்லமட்டார்கள்.


1945-ல் படித்த மாணவி ஒருவர் மலர் பெற்றுக் கொள்கிறார். சொல்லப்போனால் அவர்தான் ஆண்டிக் மாணவி! டயாஸில் நிற்கும் திருமதி ஜாஸ்மின் ரிச்சர்ட் பேசும் போது பல சுவாரஸ்யமான தகவல்களைச் சொன்னார்.


அக்காலத்தில் கல்லூரி பற்றி, 'கொழுத்தும் வெயில், கரையும் காக்கை, நெடிதுயர்ந்த பனை மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் முட்புதர்கள், சுற்றுச் சுவரில்லா கல்லூரி, அங்கு சுடர் விடும் கவின் மிகு மலர்கள் கூட்டம்!' , இவ்வளவு பாதுகாப்பின்மையிலும் கல்லூரி மற்றும் மாணவிகளின் கண்ணியத்தையும் கட்டிக்காத்தார் என்று புகழாரம் சூட்டினார். பெற்றோர்கள் இதற்காகவே அவரை நம்பி தம் பெண்களை கல்லூரி விடுதியில் சேர்ப்பார்கள். இரவு ரெண்டு மணிக்கும் விடுதியை சுற்றி வந்து காவல் காக்கும் காவல் தெய்வம் என்றும் வர்ணித்தார். விடுதியில் படித்த மாணவிகளுக்கு இது நன்கு புரியும்.

WILD LIFE DAY அன்று விலங்கியல் மாணவிகளின் வில்லுப் பாட்டில், "காட்டுக்கல்லூரி கோட்டையிலே கதவுகளில்லை- அதை காவல்காக்க பிரின்சிபாலையன்றி ஒருவருமில்லை" என்று பாடி அதிர வைத்தனர்.

கல்லூரி விழாக்களில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடும்போது பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு ஆண் வேடத்தில் ஆடும் போது....மிஸ் டேவிட் மேடையின் எதிரே வந்து நின்று கொண்டு, "Separate Yourself!! Separate Yourself!" கூவுவாராம். இப்போது நினைத்துப் பாருங்கள்!!!!!!! இவ்வாறு கல்லூரியோடு ஒன்றியதால்தான்
"DORA TUCKER SARAH DAVID" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.


வந்திருந்த மொத்த பேரையும் க்ரூப் போட்டோ எடுத்தார்கள். என் சின்ன கேமராவில் அத்தனை பேரையும் அடக்க முடியாதாதலால் அந்த போட்டாகிராபரிடம் என் கேமராவைக் கொடுத்து அதன் கொள்ளளவில் எடுக்கச் சொன்னேன். கொள்ளியமட்டும் வந்தது, நடுவில் நான். தெரியிறேனா?


என்னோடு பொருளதார வகுப்பில் படித்த ராஜேஸ்வரி. அன்போடு கட்டித்தழுவி கொஞ்சி," நீ இன்னும் அப்படியே இருக்கிறாய்! அதே ஹேர்ஸ்டைல்...காதோரம் கட் செய்த முடி!!!" என்று உண்மையான அன்பை வெளிப்படுத்தினார். இன்று அவள் அதே பொருளாதாரத் துறைத் தலைவராக சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறாள். கேட்க சந்தோஷமாயிருந்தது.


பத்மினி ஆல்ஃபிரட் மற்றும் ஆங்கில இலக்கிய வகுப்பு தோழி ரோஹிணியுடன்


வாடிய மலர்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் புத்தம் புதியதாக பூத்தது போன்ற உணர்வுதான் என்று எல்லோர் மனதிலும். கல்லூரி நினைவுகள் என்றுமே வாடா மலர்கள்தான்!!!!!

Tuesday, March 8, 2011

ஹைஜாக் செய்யப் பட்டோம்...!

பயமில்லாமல் ஜாலியாக உற்சாகமாக சந்தோசமாக ஹைஜாக் செய்யப்பட்டோம்.

அதுவும் எப்படி? முன் பதிவு செய்து!! தேவையா இது? என்கிறீர்களா? தேவைதான்.

வாழ்கையில் முதன் முதலாக அனுபவித்தது.

சாதாரண ரெஸ்டொரண்ட் போயிருக்கிறோம், ட்ரைவின் ரெஸ்டொரண்ட் போயிருக்கிறோம். ரிவால்விங் ரெஸ்டொரெண்டும் போயிருக்கிறோம். மூவிங் ரெஸ்டொரெண்ட் போயிருப்போமா?

சென்னையில் ...தென்நாட்டில் முதன்முதலாக அறிமுகமாயிருக்கும் ஒரு ரெஸ்டொரண்ட்தான் “DOUBLE DECKER MOVING BUS RESTAURANT!!!"
WHEN WAS THE LAST TIME YOU DID SOMETHING FOR THE FIRST TIME? னு கேக்குறாங்க. நமக்குத்தான் ‘மீ த ஃப்ர்ஸ்ட்’ பிடிக்குமே! ஆக வடை எங்களுக்குத்தான்!!!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கைலாஷ் ஹோட்டல்தான் இந்த சிறப்பு ஏற்பாட்டை நமக்காக வழங்குகிறார்கள்

ஹோட்டலின் உள்ளே “HIJACKK" நம்மை கடத்திக்கொண்டு போக தயாராய் நிற்கிறது. இரண்டடுக்கு கொண்டது. கீழ் தளம் க்ளோஸ்ட் மூவிங் ரெஸ்டொரெண்ட்.


மேல் தளம் திறந்த வெளியாய் இருக்கிறது.

காற்றாடச் செல்லத்தானே நமக்கு விருப்பம். மேலும் பஸ் நகரும் போது வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே செல்லலாமே!
கிளம்பும் முன் கைலாஷ் ஹோட்டலின் பக்கத்தோற்றம்.

காற்றாட வேடிக்கைப் பார்த்துக் கொண்டே போகலாமென்று நாங்கள் மேல் தளத்தில் ஏறிக்கொண்டோம். ஹோட்டலின் வெளி வாசல் தெரிகிறது.

வண்டி கிளம்பிடுச்சு! பத்து அல்லது பதிநைந்து கிலோமீட்டர் வேகத்தில் நகருகிறது. ஷன்னு நல்லா எஞ்ஜாய் பண்ணினான்...நானும்தான். கேமராவும் கையுமாக அங்கும் இங்கும் ஓடி ஓடி நகரும் பஸ்ஸில் விழுந்துவிடாமல் க்ளிக் செய்தேன். ஓடும் பஸ்ஸில் கூடியவரை ஷேக் ஆகாமல் எடுக்க முயற்சித்தேன். ஆனாலும் கொஞ்சம் ஷேக்கிக்கித்தானிருக்கிறது.


முதலில் வெல்கம் ட்ரிங், அடுத்து வெஜ் க்ளியர் சூப்.
நாம் எதுவும் நமக்கு வேண்டியதை ஆர்டர் செய்ய முடியாது. உள்ளே கிச்சன் இல்லையாதலால் ப்ளைட்டில் தருவது போல் எல்லாம் முன்கூட்டியே தயார் செய்து எடுத்து வருகிறார்கள். இதை முதலிலேயே அறிவித்து விடுகிறார்கள்.


பிறகு சலாட் வந்தது.

பரோட்டா, மூன்று வகை க்ரேவி, டால் மக்கானி.

காய்கறி குருமா, காஷூ பனீர் க்ரேவி.

பஸ் விஜிபி-யை கடக்கிறது.

விஜிபி வாசலில் உள்ள யானைகள் .

வழியில் கண்ட ஒளி மயமான காட்சிகள்.

ரீ-பாக் ஷோரூம்.

குஷல் செயற்கை தாவரங்கள் கடை.

பெப்பர்-சால்ட்.....நான் ஹைஜாக் செய்யவில்லை, அங்கேதான் இருந்தது.

ரைட் வந்த இளஞ்ஜோடிகள் இந்திப்பாடல்க்ள் பாடிக்கொண்டே வந்தார்கள்..அப்பப்ப மேஜைக்கு வந்து சாப்பிடவும் செய்தார்கள். எனக்கும் எதாவது பாட ஆசைதான்...நம்ம குரல்தான் எங்கோ போயிடுச்சே. மருமகனை வற்புறுத்தி பாடச் சொன்னேன். அழகாக பாடினார்கள்.

பஸ் அசைந்தாடிக்கொண்டே நாற்பது நிமிடங்கள் கழித்து சோழிங்கநல்லூர் வரை சென்று, அங்கு உள்ள சத்யபாமா யூனிவர்சிட்டி தாண்டி ‘யூ டர்ன்’ எடுத்து ஹோட்டல் கைலாஷை நோக்கித் திரும்பியது.

திரும்புகிறது. வழியெங்கும் கண்ட காட்சிகள் கண்களுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. சிலுசிலுவென காற்றும் உடலை வருடிச் சென்றது.

மேலிருந்து சாலையின் போக்குவரத்து மிக அழகாக ரசிக்கும்படியிருந்தது.

வாகனங்கள் விர்ர்ர்ர்ரிடுகின்றன.

கைலாஷிலிருந்து திரும்பி கைலாஷுக்கே வந்தடைந்தோம்.

ஹோட்டல் வாசலில் இறக்கிவிடப்பட்டோம். கடந்த ஒன்றரை மணிநேரமும் போனதே தெரியவில்லை. சாப்பாடு சுமார்தான். ஆனால் பயணம் மிகமிக உற்சாகமாயிருந்தது. ஹாங்! சொல்லவில்லையே!

இந்த ஏற்பாடு மகளின் பிறந்தநாள் ட்ரீட்!!!

பயணம் முடியுமுன் ஷன்னுவை “அந்த அங்கிள் மாதிரி நீயும் பாடு. அம்மாவுக்கு ஹாப்பி பர்த்டே பாடு’ என்றதும் அப்பாவைக் கூட்டிகொண்டு போய் அங்கிருந்த மைக்கை வாங்கி அழகாக பிறந்தநாள் வாழ்த்துப்பாடினான். உடனே நேயர் விருப்பமாக ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடு’ அங்கு பாடிய பெண் கேட்கவும் உடனே அதையும் பாடி பயணத்தையும் ட்ரீடையும் அழகாக நிறைவு செய்தான்.


கீழே இறங்கியவுடன். ஹைஜாக்கின் தோற்றம்.
மறக்க முடியாத இந்த உல்லாச பயணத்தை ஏற்பாடு செய்த எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம். நீங்களும் சந்தர்ப்பம் கிடைத்தால்....கிடைத்தால் என்ன, சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு சென்று அனுபவித்து வாருங்கள். தேவை முன் பதிவு, தலைக்கு ஐநூத்தி அறுபது ரூபாய்கள். மாலை ஏழு மணிக்கும் எட்டேமுக்கால் மணிக்கும் மட்டும். என்ன கொஞ்சம் வெளிச்சத்தோடு கிளம்பியிருந்தால் காட்சிகள் இன்னும் ரசிக்குபடியாயிருக்கும்.

இது மகளிர்தினத்துக்குமான ட்ரீட்டும் கூட!

Sunday, March 6, 2011

பிக்னிக் போன கதை.

’அங்கே என்னல்லாம் பாத்தே?’

‘ம்ம்பா வண்டி!’

‘அதிலே போனியா?’

‘ம்ம்!’

’ம்ம்பா வண்டி ட்ரைவர் வண்டியை எப்படி ஸ்டார்ட் பண்ணினார்?’

‘ஒரு குச்சி வெச்சு அடிச்சார்.’

‘ம்ம்பா பாவம் இல்ல? அடிக்கலாமா?’

‘ஆமா அடிக்கக் கூ!’

‘ம்..அப்புரம்?’

‘ம்..பீ-காக் டான்ஸ் பாத்தேன்.’

‘சரி..அப்புரம்?’

‘டான்ஸ் ஆடிட்டே குனிஞ்சு பீ-காக் அஞ்சு பத்து எடுத்துது!’(ரூபா நோட்டு எடுத்துச்சாம்)

‘பிக்னிக் உனக்கு பிடிச்சுதா?’

‘ம்ம்..ஜாலியா இருந்துச்சு!’

‘அப்புரம் பிஸ்கட் சாப்டுட்டு, வேனுக்குள்ளே நா ஃபர்ஸ்ட் ஏறி வீட்டுக்கு வந்துட்டேன்.’

ஷன்னுவின் ஒன்றரை மணி நேர பிக்னிக் பள்ளியிலிருந்து அழைத்துப் போனார்கள். வந்து அவன் கொடுத்த ரிப்போர்ட்தான் இது.

அப்படி எங்கே போனார்கள்?

நான் ரொம்ப காலமாக போகணும் போகணுமின்னு ஆசைப் பட்டுக்கொண்டிருக்கும்

தட்க்ஷின் சித்ரா” வுக்குத்தான்!!! “கீதாம்மா மாதிரி எனக்கு ரெண்டு காதுகளிலிருந்தும் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுன்னு புகை.

’ஆச்சி! நாமரெண்டு பேரும் இன்னொருநாள் தச்சின்சித்ரா போலாம். சேரியா?’

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுன்னு வந்த புகையெல்லாம் திரும்ப காதுக்குள்ளே சர்ர்ர்ர்ருன்னு போயிடுச்சு!!!

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...