என் அமெரிக்க பயணத்தில் சுற்றிப்பார்த்த இடங்களில் மிகவும் மெய்சிலிர்க்கவைத்த இயற்கையின் அற்புதங்களில் ஒன்றுதான்... மிசோரி மாநிலத்தில் stanton என்னுமிடத்தில்
இயற்கையாகவே அமைந்த,.....சுயம்பு என்று சொல்லலாமா?
MERAMEC CAVERNS!


நாங்கள் தங்கியிருந்த strawberry glen-னிலிருந்து 3-4 மணிநேரப் பயணம். அங்கெல்லாம்
தூரத்தை நேரத்தைத்தான் கணக்கிட்டு சொல்கிறார்கள். 4-மணி நேரம், 10-மணிநேரப்பயணம்
என்று. நாம் 50-கி.மீ, 400-கி.மீ என்கிறோம்.ஸ்டீரிங்கை அப்படி ஜென்டிலாகப்
பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.அப்பப்போ லேசாக இடதோ வலதோ திருப்பிக்கொண்டால்
போதும். ஆனால் செம ஸ்பீடு!
மதியம் சாப்பாடு..இட்லி, ரயில் சட்னி(இது பற்றி பிறகு சொல்கிறேன்), எலுமிச்சை சாதம்,
த்யிர்சாதம்,வகை வகையான சிப்ஸ் மற்றும் இடையில் கொறிக்கத்தேவையான 'கொறிக்ஸ்'
எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு சரியாக 12-மணிக்குப் போய் சேர்ந்தோம்.எல்லோருக்கும்
பசி! துள்ளியோடும் மிஸோரி ஆற்றங்கரையில் உள்ளது குகை.வெளியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டையால் ஆன டைனிங் டேபிள்,பெஞ்சு-நாடுமுழுதும்
பிக்னிக் ஸ்பாட்கள் இதே ஸ்டைலில்தான்!-ஒன்றில் அமர்ந்து கொண்டுவந்தவற்றை காலி
செய்தோம்.
குகையினுள் டூர் செல்வத்ற்கு டிக்கெட் வாங்குமிடத்தில் சொன்னார்கள்...மெல்லிய இருட்டில் நிற்காமல்
ஒரு மணிநேர டூர்...முடியுமா? என்றார்கள். முதலில் சிறிது தயங்கினேன். உள்ளிருந்த
adventurous பூதம் சிலிர்த்தேழுந்து, 'சென்று பார்!' என்றது
1935-ல்தான் இது பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல்
முக்கியமான பிக்னிக் ஸ்பாட்டாக திகழ்திறது.ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கு ஒரு குழுவாக ஒரு கைட் தலைமையில் டூர் கிளம்புகிறது. எங்கள் கைட் முதலிலேயே
'செய்-செய்யாதே'- எல்லாம் தெளிவாக சொல்லிவிட்டார். குழுவோடு சேர்ந்துதான் செல்லவேண்டும்...மெய்மறந்து எங்காவது நின்றுவிட்டால்..மந்தையிலிருந்து பிரிந்த
ஆடு மாதிரி முழிக்கவேண்டியதுதான்! முன்னேயும் போகத்தெரியாது,பின்னேயும்
போகமுடியாது.
குகையின் வாசலுக்கு வந்தாச்சு..கோடைகேற்ற மிதமான குளிர்! குகையோடு சம்பந்தப்ப்ட்ட
ஒரு முக்கியமான நபரைப் பற்றி கைட் எங்களுக்கு விவரித்தார். 'JESSI JAMES!'( THE CAVERNS ALSO KNOWN AS JESSI JAMES HIDEOUT),அந்நாளின் பிரபல கொள்ளைக்காரன்!
தன் கூட்டத்தோடு 'அலிபாபாவும் நாற்பது திருடர்கள்' மாதிரி இங்குதான் த்ங்கியிருந்தானாம்.
நம் வீரப்பனுக்கு காடெல்லாம் அத்துப்படி..இவனுக்கு குகையின் ரகசிய வழிகளெல்லாம் அத்துப்படி!அவன் உபயோகித்த, கத்தி, கப்படா, துப்பாக்கி கோடரி போன்ற ஆயுதங்கள்
மற்றும் பாத்திர பண்டங்கள் எல்லாம் காட்சிக்கு வைத்திருக்கிதறார்கள் காத்திருக்கும்
நேரத்தில் அவற்றைப் பார்க்கலாம்.

சரி!..டூர் கிளம்பியாச்சு! ஊ..ஊ..சிக்கு..சிக்கு..என்று ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு உள்ளே செல்லவாரம்பித்தோம். சில இடங்களில் மெல்லிய வெளிச்சம்,
சில இடங்களில் கும்மிருட்டு. கைடின் டார்ச் வெளிச்சத்தில் முன்னேறினோம்.
குறிப்பிட்ட இடம் அதாவது ஸ்டேஷன் வந்ததும் ரயில் நின்றது. கைட் எங்கோ துளாவி
ஸ்விட்சைப் போட்டார்.பளீரென்ற வெளிச்சம்!!வாவ்...!உலக அழகி கிரீடத்தை தலையில் சூட்டினாற் போல அத்தனை பேர் முகத்திலும் ஆச்சரியம்!!அந்த அற்புதத்தைக் காண
கோடிக்கண்கள் வேண்டும்!!!
குகையின் உள்ளே மேலிருந்து சொட்டுச் சொட்டாக வழிந்து இறுகி தோரணம் தொங்குவது போல் கிறிஸ்டல்ஸ் உற்பத்தியாகி வண்ண வண்ணமாக ஜொலித்தது!!கண்கள் இமைப்பது
மறந்தன..பாளம்பாளமாக கண்கள் கொள்ளுமட்டும் அள்ளி விழுங்கின.
இவ்வாறு நாலைந்து இடங்களில் விதவிதமான கிறிஸ்டல் காட்சிகள்!!
சில இடங்களில் அதன் வழியாக நீர் வழிந்தோடியது பார்க்க பரவசம்! மெதுவாக தொட்டுப்பார்க்கப்போனேன்...கைடுக்கு கழுகுக்கண்கள்..'தொடவேண்டாம்! தொட்டால்
அவற்றின் வளர்ச்சி நின்றுவிடும்' என்றார். சுமார் 10,000 வருட வளர்ச்சியாம்!
அம்மாடியோவ்!!!
மற்றொரிடத்தில் இருட்டிலேயே சுமார் ஐம்பது படிகள் மேலேறினோம். ரங்கமணி
சுவாரசியத்தில் என்ஜினுக்கு அடுத்த போகியாக சென்றுவிட்டார். என் மகள் வந்து
என் கையைப் பிடித்துக்கொண்டாள். மூச்சுவாங்க ஏறினேன். சிரமத்தின் பலன்
அங்கு கண்டேன். எங்கு பார்த்தாலும் கிறிஸ்டல் உற்பத்திதான் அதன் அழகு!!
சில இடங்களில் முஸோரி ஆறு சலசலத்து ஓடுகிறது. இயற்கை ஏசி செய்த குகை,
சுத்தமான் குடிநீர்! கொள்ளையடித்து குகைக்குள் வந்து சமைத்து சாப்பிட்டு, தூங்கி
சுகபோக வாழ்கை வாழ்ந்திருக்கிறான் ஜெஸ்ஸி ஜேம்ஸ்! அவன் பிடிபட்டானா?
சுட்டுக்கொன்றார்களா? இயற்கை மரணமா என்பதெல்லாம் விளங்காத புதிராக உள்ளது

பிரமிப்பு மாறாமல் டூரின் இறுதிக் கட்டத்துக்கு வந்தோம். இருட்டில் தடவித் தடவி
தியேட்டர் காலரி இருக்கைகள் அமைந்த இடத்தில் போய் அமர்ந்தோம்(கால் வலிக்கு இதம்).
அந்த இடத்தின் பெயர், "THE GREAT CURTAIN" !!ஓஹோ!தியேட்டரி திரை விலகி காட்சி
தெரியும் போல...என்று காத்திருந்தோம். கைட் லைடைப் போட்டார் பாருங்கள்!!
எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி,
ஆதிபராசக்தியின் பிரம்மாண்டத்தை தரிசித்தேன். மயிர்க்கால்கள் குத்திட மெய்சிலிர்த்து
நின்றேன்!! திரையொன்றும்..விலகவில்லை...காட்சியே திரைதான்.
என்னா...த்த சொல்ல..வார்த்தைகளே இல்லை. தியேட்டரில் படம் போடுமுன்
திரை இறக்கியிருப்பார்களே அது போல் கிரிஸ்டல்கள் கலர்கலராக வழிந்து அற்புதமாகக்
காட்சியளித்தது!!அத்திரையின் மேல் இசையோடு ஒரு லைட் ஷோ காண்பித்தார்கள்.
அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது போல் அற்புதத்துக்கு மேலும் அற்புதம் சேர்த்தது!!
முடிவில் லைட் ஷோவின் நடுவில் இன்னொரு லைட் ஷோவாக அமெரிக்க தேசிய கொடி
பட்டொளி வீசிப்பறந்தது. ஒரே கைதட்டல்..அவ்ளோ தேசபக்தி.
இந்த THE GREAT CURTAIN இடத்தை முக்கியமான விழாக்களுக்கும் திருமணங்களுக்கும்
முன்பதிவு செய்து கொள்வார்களாம். திருமணம்..விழாக்கள்..கற்பனை செய்து பாருங்கள்!
டக்கென்று விளக்குகள் யாவும் அணைந்தன. கைட் டூரின் முடிவை அறிவித்தார். ஏதேனும்
கேட்கவேண்டுமென்றால் கேட்கலாம் என்றார். கண்கள் தான் அள்ளி அள்ளி விழுங்கினவே
தவிர வாயடைத்துப்போயிருதோம்!!பிரமிப்பிலிருந்து மீளாமலே வெளியே வந்தோம்.
வெளியே வந்தால்..கிரிஸ்டல் கிளியராக..கிரிஸ்டல்ஸ் பார்த்து வந்த பாதிப்பு..ஹா..ஹா!
முஸோரி ஆறு ஓடுகிறது.சுற்றுலாப் பயணிகள் அதில் நீந்திக்குளிக்கவும் வாட்டர் ஸ்கூட்டரில் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டுப் பாயவுமாக அனுபவிக்கிறார்கள். வாழ்கையை அனுபவிக்க
அமெரிக்கர்களைப் பார்த்துப் படிக்கவேண்டும்.
முதலில் தயங்கினோமே..போனது எவ்வளவு நல்லதாயிற்று!!அந்த கண் கொள்ளாக் காட்சிகள்
எல்லாம் காண கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன். என்னை அழைத்துப்போன அண்ணன்
மகள்,மருமகன் மற்றும் பயணத்தை சுவாரஸ்யமாககிய அவர்களின் ரெண்டு சுட்டிகளுக்கும்
என் நன்....வேண்டாம்..வேண்டாம்..என் அன்பு.
St.Louis சென்றால் meramec caverns செல்லத் தவறாதீர்கள்.இயற்கையின் அற்புதத்தை
அதன் உள்ளேயே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.