Sunday, July 22, 2007

ஸ்டார் ஹோட்டல்களில் கூட கிடைக்காத 'டிஷ்'

பழங்கறி , சுண்டக்கீரை....தண்ணி சாதம்! ருசித்தவர் நாவில் நீரூறும்!!!!

இதைத்தான் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரைவீரன் படத்தில் தேவாமிர்தம் என்றார்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் மெனுவிலும் இருக்காது. மூன்று நட்சத்திர ஹோட்டல் மெனுவிலும் இருக்காது. ஏன்? சரவண
பவன், வசந்தபவன், சங்கீதா ஹோட்டல்கள் மெனுவிலும் கிடையாது. கையெந்திபவனில் கேட்டுப்பாருங்கள் ?ஊஹூம்!!
பின் எங்கே கிடைக்கும்? அன்போடு அம்மா உருட்டிப்போடும் தயிர்சாதத்தில் கிடைக்கும்.

ஆம்! திருநெல்வேலி சமையலில் இதற்கு முக்கியமான இடம் உண்டு. அதுவும் பொங்கலுக்கு மறுநாள் முன்தினம் பொங்கிய சாதத்தில் கட்டித்தயிர் ஊற்றிப்பிசைந்து இந்தக் கறிகள் எல்லாம் கூட வர எதாவது ஆற்றங்கரைக்குப் போய்
சாப்பிட்டால்.......அம்மம்மா!....சொர்க்கம்....அங்கே கிடைக்கும் தேவ அமுதம்!!!

உறுப்பினர்கள் அதிகமாக இருக்கும் குடும்பங்களில் அவியல் ,கடைந்த கீரை, வத்தல்குழம்பு செய்து மதியம் சாப்பிட்டுவிட்டு ,மீதியிருக்கும் அவியலிலும் கீரையிலும் தனித்தனியாக வத்தல்குழம்பு ஊற்றி மண்சட்டியில் சுண்ட
வைப்பார்கள். சுண்டும் மணம் நாவை சுண்டியிழுக்கும்.

இரவு மீந்த சாதத்தில் கட்டித்தயிர் ஊற்றிப் பிசைந்த தயிர்சாதத்து தொட்டுக்கொள்ள பழங்கறிக்கும் சுண்டக்கீரைக்கும்
ஈடு வேறு ஏதாவது உண்டா சொல்லுங்கள் பார்க்கலாம்? அதிலும் சீசனில்

மாம்பழமும் சேர்ந்து கொண்டால் ஷொல்லவே வேண்டாம்.

அதிலும் வெயில் காலத்துக்கு ஏற்ற இன்னொன்று....மண்பானையில் வடித்த புழுங்கலரிசி சாதம்..வடித்த அந்த கஞ்சியை
இரவு பானையில் மீதியுள்ள சாதத்தில் விட்டு, காலையில் ஒரு கிண்ணத்தில் அந்த சாதமும் கஞ்சித்தண்ணியும் விட்டு உப்பும் இட்டு ஒரு தட்டில் பழங்கறி,சுண்டகீரை வைத்து அள்ளி உண்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு குளிர்ச்சி பரவும் பாருங்கள்! அதுதான் சூப்பர் ப்ரேக்ஃபஸ்ட்! ப்ரெடாம்லெட், கெலாக்ஸ், பான்கேக், பேகல் எல்லாம் கிட்ட நிக்கமுடியாமல் காததூரம் ஓடிவிடும். இன்னும் இதோடு ஈராய்ங்கம்!.....அதாங்க சின்ன வெங்காயம் கடித்துக்கொண்டால்
ஜலதோஷத்துக்கே தோஷம் வந்து விலகி விடும்.


அந்த கஞ்சித்தண்ணியை வெறுமே உப்புப்போட்டு பருகினாலும் குளிர்ச்சியே! இதைத்தான் 'தேவாமிர்தம்' என்றார்களோ?

என் பிள்ளைகளுக்கு அவியலும் கீரையும் புதிதாக சாப்பிடப்பிடிக்காது. எனவே பழங்கறியும் சுண்டக்கீரையும் செய்வதற்காகவே அவியலும் கீரையும் செய்து 'புதுப் பழங்கறி, சுண்டக்கீரை' செய்வேன். தயிசாதத்தோடு உருட்டிப்போட்டால் கூட நாலு கவழம் உள்ளே போகும். என் மகன் மும்பையில் விமானம் ஏறு முன், 'அம்மா! தயிர் சாதம் பழங்கறி வேண்டும்.' என்று மொபையிலில் சொல்லிவிடுவான். அவன் வருமுன் ரெடியாயிருக்கும். இரவு பதினொருமணிக்கு உருட்டிப்போடப்போட அவனுக்கு வயிறும் எனக்கு மனமும் நிறையும்!

இவ்வளவும் சொல்லும் போது என் அம்மா பௌர்ணமி இரவில் எங்கள் எல்லோருக்கும் ஒரு பெரிய பாத்திரத்தில் கட்டித்தயிர் விட்டு சாதம் பிசைந்து பழங்கறி சுண்டக்கீரையோடு உருட்டி உருட்டி போட்டெதெல்லாம் மனக்கண்ணில்
ரிவைண்டாகி ஓஓஓஓஓடியது!!!!!

23 comments:

  1. Nostalgia. Your article reminds me of so many things that I miss now.
    Sorry about English.

    ReplyDelete
  2. hello!chinna ammini! welcome!
    why do'nt you share some of your so many things which you miss now,with me. so that me too can enjoy.thank Q

    ReplyDelete
  3. பழைய கறி! சுண்டக்கீரை என்று பழைய நினைவுகளுக்கு செல்ல வைத்து விட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
  4. பழையகறி...என்றால் பழைய நினைவு
    தான் வரவேண்டுமா? வெயிலான்!
    புதிதாக பழங்கறி செய்து சாப்பிடலாமே! இப்பமே! உங்கள் பேருக்கேற்ற காலத்து உணவு.
    முதன்முதலாக என் ப்ளாக்கை எட்டிப்
    பாத்ததுக்கு நன்னி!

    ReplyDelete
  5. Too Yumm.. whether it was CHengalpattu Dst or Tirunelveli, Pazhaya choru and kuzhambhu in mannchatti was staple diet in childhood. That too with the grandmother and other aunts dishing it out in the mornings. We were much more healthier and active..

    Now, how does one cook in Chatti on the Gas? I tried many times but failed.Even Paravai Muniamma seems to cook on Gas! May be one has to take a course in that too..

    Thanks for bringing the nostalgia back.

    ReplyDelete
  6. Hmmm.... You reminded me of the long-forgotten sundakeerai.....
    Recipe in the next post pleeeease.
    And you might want to write a separate post on neethanni..... yummmm

    -RL

    ReplyDelete
  7. வணக்கம்! ஜெயலக்ஷ்மி!
    இப்பவும் நான் மண்சட்டியில் சோறு,குழம்பு கூட்டு,பொரியல் எல்லாம் காஸ் அடுப்பிலேயே செய்வேன். சொல்லப்போனால் மண்சட்டிகள் மைக்ரோவேவ் அவனுக்கும் ஏற்றது. 500,1000 என்று அதற்கான பாத்திரங்கள் வாங்குவதை விட, 30,50 ரூபாயில் அழகாக முடிந்துவிடும். உடைந்தாலும் ம்றுபடி சுலபமாக வாங்கிக்கொள்ளலாம். முயன்றுதான் பாருங்களேன்!

    ReplyDelete
  8. ஹாய்! ஆர்எல்! இத்தனை நாளாய்
    எங்கிருந்தாய்?
    சுண்டக்கீரைக்கு ரெசிப்பியா? வரும் பதிவில் நீத்தண்ணிக்கும் சேத்து தரேன்.
    சேரியா..?

    ReplyDelete
  9. Excellent !! Waiting for neethanni and sundakeerai .... :-P

    -RL

    ReplyDelete
  10. you are doing a wonder job by making aware of good old healthy food to us.i am sure that the present generation who is fond of pizzas and burgers will turn to wards your sundaik keerai and pazhangari.good show.anony-mousingly yours

    ReplyDelete
  11. வெயில் காலத்தில் மண் பானை எனும் fridge-ல் குளிர்ந்த நீத்தண்ணியும, அதில் ஊறிய சாதமும், கடிச்சுக்க சின்ன வெங்காயமும்தான் சிறு வயதில் எங்கள் favorite dinner. "உள்ளம் கேட்குமே MORE" என்றால் அதுதான்!

    ReplyDelete
  12. நானானி,
    பழசை மறக்காதென்னு சொல்றீங்க.
    கல்சட்டியில் தோய்த்த தயிருக்கும் பழய சாதத்தில் விட்ட நல்ல எண்ணைக்கும் மாவடுவுக்கும் இப்பவே சாப்பிடணும்னு இருக்கு.

    ஆத்தங்கரைக்கு எங்க போவேன்.

    ReplyDelete
  13. பழங்கறி சுண்டக்கீரையை எல்லோருக்கும் நீங்கள் சொன்ன விதம் அருமை.ரெஸிபி விரைவில் கொடுங்கள்.
    சகாதேவன்

    ReplyDelete
  14. ராமலக்ஷ்மி!,RL!,சகாதேவன்!, மௌசானி! உங்கள் எல்லொருடைய குளிரும் நினைவுகளை கிளறி விட்டதில் எனக்கும் குளிர்ந்தது மனம்.

    ReplyDelete
  15. வல்லி! ஆத்தங்கரை கிடைக்காவிட்டால் என்ன? நிலா அது வானத்து மேலே.. எல்லா ஊரிலும் உண்டே? அந்த குளிர் நிலவின் கீழ்
    அமர்ந்து சாப்பிடலாமே? சரியா?

    ReplyDelete
  16. அடாh எல்லாச்சுவையும் உடம்பில் (நாவில்) வந்த சோஇந்த மாதிரி இருக்கு. கிராமத்தில் இருக்கும் போது எங்கள் பாட்டி இNது போல செய்வார்.

    ReplyDelete
  17. சமையல் பாகத்துக்கு பேர் போனவரின்
    பெயரை உடையவரிடமிருந்து கிடைத்த பாராட்டுக்கு நன்றி!!
    இதை செய்வதற்கு பாட்டி காலத்துக்கோ அல்லது கிராமத்துக்கோ போகவேண்டாம். இன்றே,இங்கே,இப்போதே செய்யலாம்.
    ஏன் அமெரிக்காவில் கூட செய்யலாம்.
    செய்தேன்.

    ReplyDelete
  18. ha, I will try out my thought, your post bring me some good ideas, it's truly amazing, thanks.

    - Norman

    ReplyDelete
  19. After a long time I got a comment for this post. Thank Q Norman

    ReplyDelete
  20. You made some good points there. I did a search on the subject and almost not got any specific details on other websites, but then happy to be here, really, thanks.

    - Lucas

    ReplyDelete
  21. Thank Q Lucas,

    You could have mention what are the good points, which might've made me happy. Thanks again for visiting my blog.
    Hope You'll go thro' my other posts too.

    ReplyDelete
  22. I always motivated by you, your opinion and attitude, again, thanks for this nice post.

    - Joe

    ReplyDelete
  23. Thank you Joe,
    hope you enjoyed. பழைய கறி பழைய சாதம்..அதை இவ்வளவு பழசானாலும் படித்து பதில் எழுதுவது சந்தோஷமாயிருக்கிறது.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...