Thursday, October 11, 2007

தேவியர் மூவர் நவ ராத்திரிக்கு

செந்திருமாதும் கலைமாதும் சிவகாமியென்றோதும் மலைமாதும்
சொந்தமுடன் நவராத்திரி நாளன்று சேர்ந்திடுவார் ஒன்று கூடிடுவார்


பிள்ளைகளுக்கு விவரம் தெரிந்தவுடன்,'அம்மா! நாம்பளும் கொலு வைக்கலாம்மா...' என்று ஆசைப்பட்டார்கள். என் அம்மா வீட்டில் நவராத்திரி சமயம் ஒன்பது நாளும் கொண்டாட்டமாக இருக்கும். அம்மா இருந்தவரை பிரமாதமாக கொலு வைப்பார்கள். என் பெற்றொருக்கு நாங்கள் ஒன்பது பேர் அப்போது.....(மொத்தம் பத்து. ) ஒன்பது பேரும் ஒன்பது படிகளில் பொம்மைகள் போல் அம்ர்ந்து
கூத்தடித்தது எல்லாம் நவரசம் !!!! அம்மாவுக்குப் பிறகு முப்பெரும் தேவிகளான என் அண்ணிமார் மூவரோடு ஒன்று சேர்த்து கொலு
வைப்பதை விடாமல் நடத்தி வந்தோம் என் திருமணம் வரை. அந்தக்கதைகள் எல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொண்டே எங்கள் வீட்டில் ஒரு குட்டிக் கொலுவைக்கத் தயாரானோம்.



முதலில் அவசியமான பொம்மைகள் மட்டும் வாங்கி மற்றும் அலங்காரப் பொருட்கள்....இத்தியாதி..இத்தியாதி எல்லாம் வாங்கி, சிங்கிள் பெட்ரூம் வீட்டில் ஹாலில் மூன்று படிகள் அமைத்து அடுக்கினோம். குழந்தைகள் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம்!! பார்க் வைக்கவேண்டும் என்று இருவரும் சேர்ந்து மணல் கொண்டுவந்து
பரப்பி தங்களுடைய டாய்ஸ் எல்லாம் இறக்கி.....அட்டையில் தியேட்டர் செய்து அப்போது வெளியான 'அக்னிநட்சத்திரம்' படத்தின் கட்டவுட்
வைத்து மிகவும் உற்சாகமாக செய்து முடித்ததர்கள்.


ஆரம்பித்தாயிற்று இனி வருடாவருடம் வைக்கவேண்டியதுதானே. பின்நாளில் அடையாரில் ரெண்டு பெட்ரூம் வீட்டுக்கு வந்ததும்....
'அரச்ச மாவ அரப்போமா..தொவச்ச துணிய தொவப்போமா..' என்பதுபோல் வைத்தபொமைகளையே தானே திருப்பி திருப்பி வைக்கிறோம்
ஏதாவது வித்தியாசம் காட்டவேண்டும் என்று கொலுபடிகளுக்கு மேற்புரம் back drop வித்தியாசமாக ஒவ்வொருவருடமும் வைக்கவாரம்பித்தேன். கொலுபார்க்க வருவதைவிட 'இந்த வருடம் என்ன back drop என்று பார்க்கவே விரும்பி
வருவார்கள்.

கொலுவுக்கு வரும் குட்டீஸ்களை பாட வைப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஒரு சின்னஞ்சிறுமி வந்தாள்....பார்த்தாள். பாடச்சொன்னேன். faஸினாள். 'நீ பாடினால்தான் இந்த ரூமை விட்டுப் போகமுடியும்' என்று கண்டிஷன் போட்டேன் செல்லமாக.
குழந்தை பயந்து எழுந்து நின்று திங்..திங் என்று குதித்துக்கொண்டு 'பாபா ப்ளக் ஷீப்..' என்று ரைம்ஸ் பாடி குங்குமம் வாங்கிக்கொண்டு
தன் பாட்டியோடு ஓடியேவிட்டது.



இன்னொரு சிறுமி வந்தாள். அவளிடம் 'நீ பாடினால் எங்கள் வீட்டு மீனையும் பாடச்சொல்வேன்'
என்று கொலுவில் தொங்கவிட்டிருந்த மீனைக் காட்டினேன். US-லிருந்து பரிசாக வந்தது. 'எங்கே? பாடச்சொல்லுங்கள்!' என்றாள்,
'எங்கேடா பாடுபார்க்கலாம்?' என்ற தூக்குத்தூக்கி வசனம் மாதிரி. ஸ்விட்ச் ஆன் செய்தவுடன் மீன் ஆங்கிலப்பாடலொன்றைப்
பாடியது தன் தலையையும் வாலையும் ஆட்டிக்கொண்டே. அதை வியந்து பார்த்துவிட்டு அருமையான ஸ்லோகம் ஒன்றை அழகாகப்
பாடி அசத்தினாள்.


சிறுமிகளைச் சொல்லிவிட்டு எங்கள் ப்ளாட்டில் மூன்றாவது மாடியில் குடியிருந்த சிறுவன் ஒருவனை சொல்லாமல் விடலாமா? நான் கொலு வைத்தவுடன், தன் அம்மாவிடம் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவானாம். 'ஆன் டி, எப்போது அழைப்பார்கள்..நான் எப்போது போய் பாடுவது?' என்று.
கேட்கவே சந்தோஷமாகயிருக்கும்..நீ தினமும் வந்து பாடலாம் என்பேன். அழகாக வந்தமர்ந்து கொண்டு கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபுலோடு
வெட்கமாம்..ஆரம்பிப்பான். அவ்வளவுதான்...வண்டி பஸ்ட் கியர்..செகண்ட் கியர் என்று டாப் கியரில் ஜிவ்வென்று பறக்கும். அடுத்து இதைப்பாடவா...இதைப்பாடவா.. என்று ஒரு மினி கச்சேரியே நடத்திவிடுவான். ரொம்ப சந்தோஷத்தோடு குங்குமம் கொடுத்து வாழ்த்தியனுப்புவேன். இந்த வருடம் அவன் குடும்பம் பெங்களூருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டது. அங்கு யார் வீட்டு கொலுவுக்கு
கொடுத்து வைத்திருக்கிறதோ?


பின்நாளில் ப்ளாக்கில் எழுதுவேன் என்று தெரிந்திருந்தால் பக்காவாக படம் எடுத்து வைத்திருப்பேன். கிடைத்த வரை
அந்த நவ நாட்களிலே நான் வைத்த கொலுக்களின் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.





செந்திருமாதும் கலைமாதும் மலைமாதும் வருடத்தில் இந்த ஒன்பது நாடகள் மட்டுமல்லாது வருடம் பூராவும் நம் இல்லங்களில்
எழுந்தருளி எல்லோருக்கும் எல்லா நலன்களும் கலைகளும் அருளுமாறு முத்தேவியரையும் வேண்டி ,வாழ்த்தி ,பாடி (பாடத்தெரிந்தால் )
வணங்குவோம்.

10 comments:

  1. சூப்பருங்க, இதில் இந்த வருடத்திற்கான கொலு போட்டோ எதுங்க?

    - சுதா

    ReplyDelete
  2. வாங்க, சுதா! மஞ்சள்,குங்குமம் எடுத்துக்கங்க. இந்த வருட கொலுவை இன்னும் படம் புடிக்கலை.
    ஆனால் கட்டாயம் போடுவேன்
    நன்றி!

    ReplyDelete
  3. அருமை நானானி... கடைசி படம் அப்படியே எங்க அம்மாவீட்டு கொலு வும் சரஸ்வதியும் மாதிரி இருக்கு.. நீங்க சொன்ன மாதிரி அப்பல்லாம் ப்ளாக் ரைட்டராவோன்னு தெரியாம விதவிதமா டிஜிட்டல்ல போட்டோ எடுத்துவச்சுக்கலையேன்னு வருத்தம் தான் எனக்கும்..
    எங்க வீட்டு கொலு போட்டோவும் போடறேன் அடுத்த வாரம்.

    ReplyDelete
  4. வாங்க, முத்துலெட்சுமி!உங்கள் கொலுபடம் பார்க்க ஆவல்.இப்போ
    குங்குமம் எடுத்துக்கங்க.

    ReplyDelete
  5. ம்ம்ம்ம் கொலு படம் ஒரு வருஷம் கூட எடுத்து வச்சுக்கலை, என்ன, நீங்க சொல்ற அதே காரணம் தான், இவ்வளவு பிரசித்தி பெற்ற எழுத்தாளியாவேன்னு எனக்கே தெரியலை, அதான், சரி, சுண்டல் என்ன சுண்டல்? அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை, முதலில் உங்க கொலுதான், இன்னும் காட்டாறு, துளசி எல்லாம் கூப்பிட்டிருக்காங்க ஏற்கெனவே, அங்கே வேறே போகணும், வரேன்.

    ReplyDelete
  6. உங்கள் வீட்டு கொலுவில் மினி கச்சேரி நடத்திய சிறுவனின் ஆர்வம் திறமை ,அனைத்தையும் அவன் ஊரில் இல்லாத ஏக்கத்தை "பெங்களூரில் யாருக்குக் கொடுத்து வச்சிருக்கோ "என்று வெளியிட்டத்தன் மூலம் புரிந்து கொண்டேன். கொலுவீற்றிருக்கும் சரஸ்வதி, இன்னொரு பாடகனை, உங்கள் இல்லத்து கொலுவில் பாட ,நிச்சயம் அனுப்பி வைப்பாள்

    ReplyDelete
  7. கீதா! எங்கள் வீட்டு கொலுவுக்கு வந்து
    மஞ்சள் குங்குமம் வாங்கிச்சென்றதுக்கு நன்றி!
    சுண்டல் . தாம்பூலக் கவரிலே ziplog கவரிலே வைத்திருந்தேனே! பார்க்கவில்லையா? பூம்பருப்பு சுண்டல்.

    ReplyDelete
  8. ரோகிணி!
    இந்த வருடம் அவன் நினைவுதான்.
    நல்ல பாடகனாக எதிர்காலத்தில் வர சரஸ்வதியை வேண்டிக்கொண்டேன்.

    ReplyDelete
  9. தங்கள் வீட்டுக் கொலு விமர்சனம் - நேரடி வர்ணனை அருமை யாக இருந்தது. மழலையரின் பாடல்கள் அருமையாகத் தானிருக்கும். அதுவும் உங்கள் வீட்டு மீன் கூடப் கொலுவில் பாடுகிறது. சிறுவனை மறக்காமல் நல்ல பாடகனாக வர வாழ்த்தும் நல்ல உள்ளம் புரிகிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  10. சீனா!
    எங்கள் வீட்டு கொலுவுக்கு வந்ததற்கு
    மிக்க நன்றி! பாடும் மீன்தான் குழந்தைகளை மிகவும் கவரும். மேலும் மழலை மொழியிலே பாடல்கள் கேட்க ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...