Monday, December 31, 2007

நான் எப்போதும் நானாகவே இருப்பேன்.


யார் வேண்டாமென்றது? நீ எப்போதும் நீயாகத்தானிருக்க வேண்டும் என்கிறீர்களா? சர்தான்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இருபது வயதில் ஒரு சமயம் மனம் குழம்பியிருந்தபோது
என் தந்தை என்னிடம் கூறிய மந்திரம். அப்பன் சொன்ன மந்திரம். 'எப்போதும் போல் நீ நீயாகவே இரு!'

சுருங்கச் சொன்ன இம்மந்திரத்தினுள் எவ்ளோ அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன!!! அப்பொது மேலோட்டமாக புரிந்த எனக்கு வயது ஏற ஏற அதன் ஆழம் புரியவாரம்பித்தது.

நான் யார்..எப்படி இருப்பேன்? யார் என்ன செய்தாலும் சொன்னாலும் தோளில் தூசு மாதிரி தட்டிவிட்டுக்கொண்டு போய்கொண்டேயிருப்பேன். அண்ணன் தனிக்குடித்தனம் போனதும்..கோபித்துகொண்டு அல்ல வீட்டில் இடவசதி இல்லாததால் அங்கு பாதி நேரம் இங்கு பாதி நேரம் என்று இருப்பேன். அப்போது இங்கு நடப்பதை அங்கு சொல்ல மாட்டேன்..அங்கு நடப்பதை இங்கு சொல்லமாட்டேன். அதனால் இருவீடுகளுக்குமிடையே ஒரு பாலமாக இருந்தேன் என்று அப்பாவிடமே பாராட்டும் பெற்றிருக்கிறேன்.

ஆனால் சில குறும்புகள் மட்டும் செய்வேன்.பொங்கலுக்கு மறு நாள் ஆற்றங்கரைக்குப் போவது வழக்கம்..கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு. அப்போது அப்பாவிடம் போய், 'அண்ணாச்சி ஆத்துக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்.' என்பேன். அப்பாவும்,'அவனே வரானா அப்ப போகலாம்.'என்பார்கள். அண்ணாச்சியிடம் போய்,'அப்பாவும் ஆத்துக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்கள்.' என்பேன். அவரும்,'அப்பா வருகிறார்களா? அப்ப கட்டாயம் போலாம்.' என்பார்கள். காரணம் அம்மாவுக்குப் பிறகு அப்பா அவ்வளவு சுலபத்தில் எங்கும் வரமாட்டார்கள். ஆகவே இப்படி தில்லுமுல்லு செய்துதான் எல்லோரையும் கிளப்பி இரண்டு கார்களில் மணிமுத்தாறு, பாபநாசம் என்று போய்வருவோம்.

அதேபோல் திருமணமான உடன் யாரும் சொல்லாமல் நானே என் மனதுக்குள் எடுத்துக்கொண்ட உறுதி மொழி....எக்காரணம் கொண்டும் சகோதர சகோதரி உறவுக்குள் என்னால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பது. இன்று வரை அதைக் கடைப்பிடித்து வருகிறேன். புகுந்த வீட்டு உறவுகள் என் வீட்டிற்கு எந்த தயக்கமும் இல்லாமல் ஆசையோடு வருவார்கள். சிங்கள் பெட்ரூம் வீட்டில் நாங்கள் இருந்த காலத்தில்..செல்விருந்தும்..வருவிருந்துமாக ஜேஜே என்றிருந்த்தை இப்போது நினைத்தாலும் சந்தோஷ மலைப்பாக இருக்கிறது. தேனி போல் சுறுசுறுப்பாக இருந்த காலம்!!!இப்போது அப்படியில்லையா....என்ன..கொஞ்சம் சுறுசுறுப்பு குறைந்த தேனிதான்.

ஆனால் தேனியைப்போல ஒரு கோமாளி ஏமாளி யாரும் கிடையாது. ஓடியாடி பறந்து திரிந்து
சேகரித்ததை ஒரே நாளில் எவனோ நோவாமல் லாவிக்கொண்டு போகும் பரிதாபம்.

யாருக்கும் எந்த உதவி என்றாலும் ரங்கமணியும் நானும் முதலில் நிற்போம். உதவி பெற்றவர்கள் பின்னர் அதை கண்டுக்காமல் போகும்போது...ரங்கமணி,'நாம் எப்போதும் போல் நம்மால் முடிந்ததை மற்றவர்க்கு செய்வோம். அவரவர் மனசு போல் அவரவர்க்கு கிடைக்கும்.' என்பார்.

'அப்பா!!'நீங்கள் சொன்னது போல் இத்தனைக் காலமும் நான் நானாகவே இருந்திருக்கிறேனா?
உங்கள் ஆசியால் அப்படித்தான் இருந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

வெளிநாட்டுக் கடையொன்றில் நான் பார்த்த தேனி மெழுகுவர்த்தியும் அதோடு கிடைத்த ' bee yourself' 'bee happy' என்ற கிரிஸ்டலும் அப்பாவை ஞாபகப்படுத்தியதால் ஆசையோடு வாங்கினேன். அதற்காக ஒரு தட்டும் வாங்கி செட் பண்ணினேன். பெரிதாக்கிப் பார்த்தால் எழுத்துக்கள் தெளிவாகத்தெரியும்.

தேனிபோல் ஏமாளியாக இல்லாமல் சுறுசுறுப்பாகவும் நீ நீயாகவும் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதே என் புது வருட பொன்....ஹூஹும்..தேன்மொழி!!!!

எல்லோரும் சுறுசுறுப்பாக ஹாப்பியாக இருக்க என் வாழ்த்துக்கள்!!!!

12 comments:

  1. //இரண்டு கார்களில் மணிமுத்தாறு, பாபநாசம் என்று போய்வருவோம்//

    உங்களுக்கு எந்த ஊர்னு சொல்லவே இல்லையே. ஆழ்வார்க்குறிச்சியிலதான் என் ஸ்கூல் படிப்பெல்லாம். உங்களுக்கு எந்த ஊரு?

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வருக..வருக..ஆடுமாடு!
    என் பதிவு இப்போதுதான் பச்சைபசேல் என்று இருக்கிறதா?
    என் அம்மாவுக்கு சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சி. எங்களுக்கு பள்ளிவிடுமுறை எல்லாம் அங்கு எங்கள் தாய்மாமா வீட்டில்தான். எங்களுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. சிறுவயதில் ஆழ்வார்குறிச்சி தேரோட்டம் சமயம் தாத்தா கொடுக்கும் ஒத்த ரூபாயில் என்னவெல்லாம் வாங்குவோம்.ஒணப்பத்தட்டு தவிர.
    சுகமான காலங்கள்.திரும்பிவராததும் கூட.

    ReplyDelete
  4. //நம்மால் முடிந்ததை மற்றவர்க்கு செய்வோம். அவரவர் மனசு போல் அவரவர்க்கு கிடைக்கும்.' //


    உண்மைதான்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. துரியோதன்!
    முதல் வருகைக்கு வந்தனம்.
    மனம் நிறைந்த புது வருட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. ஆன்றோர் வாக்கை அகத்தில் இருத்தினால்
    அன்பு, அமைதி, ஆனந்தம் அதுவாகவே வந்திடும்.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. உண்மை..முக்காலும் உண்மை அனானி!
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  8. அருமையான மந்திரச் சொற்கள் நானானி!
    ஆனா பெண்கள் கல்யாணத்துக்குப் பிறகு அப்படியிருந்தால் திமிர் பிடித்தவள் என்பார்கள்.எல்லாம் அவரவர்களுக்கு வாய்க்கும் 'ரங்கமணி'கையில் இருக்கு.

    ReplyDelete
  9. 'எல்லோரையும் அனுசரித்து' என்பதுதான் நான்.
    நிமிர்ந்த நன்னடையில்லாமல்...நிமிர்ந்த திமிர் நடை இருந்தால் நீங்கள் சொல்வது பொருந்தும். சேரிதானே?
    கம்பீரமான நன்னடைதான் என்னோடது.

    ReplyDelete
  10. எல்லாரையும் "அனுசரிக்கும்" போது... நீங்கள் நீங்களா எப்படி இருக்க முடிந்தது?

    ReplyDelete
  11. காட்டாறு!
    அனுசரித்து போவது தான் என் குணம்.
    அப்போது நான் நானாக இருக்க முடியும்தானே?

    ReplyDelete
  12. nalla haasyam good super

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...