Thursday, February 21, 2008

விடுபட்ட இரு விளையாட்டுகள்...பல்லாங்குழி, கழச்சிக் கல்!

பல்லாங்குழியும் கழச்சிக் கல்லும் விடுபட்டுவிட்டதே...என்று சொன்னார்கள். மறக்கவில்லை. அதைத் தனி பதிவாக போடலாமென்றிருந்தேன்.

பல்லாங்குழியில் அப்போதெல்லாம் வட்டம் பார்த்ததில்லை...குழியின் உள்ளே கிடக்கும் முத்துக்கள்..அதாவது சோழிகள், புளியங்கொட்டைகள், காக்காமுத்து (செந்தில் இதை தரையில் சூடு பரக்க உரசி கவுண்டமணியின் தொடையில் வைப்பாரே அதேதான்) இவைகளைத்தான் பார்த்திருக்கிறோம்.

எல்லாக்குழியிலும் ஐந்தைந்து முத்துக்களாக நிரப்பி ஆட்டையை ஆரம்பிக்கலாம். இதற்கு தேவை கொஞ்சம் மனக்கணக்கு. எந்தக் குழியில் ஆரம்பித்து முடித்தால் மேலும் கீழுமாக இரு குழியிலும் உள்ள முத்துக்களை அள்ளலாம் என்று கண்டுபிடிக்க வேண்டும். இரு குழியிலும் அள்ளிவிட்டால் அது குமுக்கு குமுக்குதான்!! இல்லாவிட்டால் வெறும் குழியைத்தடவினால் அது தக்கம் தக்கம்தான்.

இந்த விளையாட்டை அம்மா முதல் அக்கா,தங்கை,அண்ணன் வரையும் விளையாடியிருக்கிறேன்.
அப்புரம் இரண்டு தலைமுறை கழித்து அண்ணன் பேரன்...8வயது, அவனோடும் விளையாடியிருக்கிறேன். அவன் வாயிலிருந்து LBW, runout, noball என்றெல்லாம் வரவேண்டிய வயதில்...காலகட்டத்தில், 'குமுக்கு..தக்கம்' என்று வருவது கேட்க நன்றாகயிருந்தது.
தலைமுறை இடைவெளி குறுகிவிட்டது பற்றி மகிழ்ச்சி.

கழச்சிக் கல்!! மலச்சிக்கல் போன்று ஒலிக்கக்கூடாது என்பதால் கல்லை தனியாக பிரித்துக் காட்டியிருக்கிறேன். கண்ணுக்கும் கவனத்துக்கும் கைக்கும் கைவிரல்களுக்கும் ஏற்ற பயிற்சி!
பாபநாசம் போகும் போது அருவியில் விழுந்து ஆற்றில் வழுவழு..மொழுமொழுவென்று உருண்டு வரும் ஒரே சைசிலான கற்கள் எடுத்துவருவோம். இப்போது கடைகளிலேயே அம்மாதிரி கற்கள் pebbles என்ற பெயரில் கிடைக்கிறது.

அம்மா கற்றுக்கொடுத்த விளையாட்டு இது. ஏழு கற்கள்தேவை. ஆறு கற்களை தரையில் பரத்திவிட்டு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதை மேலே....மேலே என்றால் சும்மா ரெண்டு மூன்றடி உயரத்துக்கு வீசி அது கீழே வருமும் ஒரு கல்லை கையில் எடுத்து மேலிருந்து கீழே வரும் கல்லையும் பிடிக்கவேண்டும். இதுபோல் ஒவ்வொரு கல்லாக எடுக்கவேண்டும்.

இது முதல் ரவுண்ட். இரண்டாவது ரவுண்டில் ஒன்றை மேலே வீசி ரெண்டுரெண்டாக எடுக்கவேண்டும். அடுத்தது முன்று மூன்றாக...அடுத்தது ஒன்று ஐந்தாக... கடைசியாக ஆறையும் மொத்தமாக எடுக்கவேண்டும். இப்படி...போகும் ஆட்டம். மேலே வீசிய கல்லை தவறவிட்டால் ஆட்டம் க்ளோஸ்!

ஒவ்வொரு ரவுண்டுக்கும் ஒருஒரு பாட்டு உண்டு. நல்லாருக்கும். எனக்கு மறந்துவிட்டது.
அக்காலத்தில் பின்வீட்டுப் பெண்ணோடு விளையாடுவேன். அவள் நன்றாகப் பாடுவாள். நமக்கு எப்பவுமே கொஞ்சம் ரவுசு ஜாஸ்தில்ல!! நான் விளையாடும் போது எனக்காகப் பாடச்சொல்வேன்.
நான் ஆட...நடனம் இல்லீங்க...அவள் எனக்காக பின்னணிப்பாட ஆட்டை நன்றாகவே களை கட்டும்.

எப்போதும் இப்படித்தான். பிள்ளைகளோடு சீட்டு விளையாடினால் என் முறைக்கு அவர்களில் யாராவதுதான் சீட்டை கலைத்துப் போடவேண்டும். கேரம் ஆடினால் யாராவதுதான் காய்களை அடுக்கவேண்டும். அவர்களும் செல்லமாக சிணுங்கிக்கொண்டே செய்வார்கள்.

இப்போது கடைகளில் பல்லாங்குழி, கழச்சிக் கல், பம்பரம் போன்ற பழங்கால விளையாட்டுகள் அழகான துணிப்பைகளில் போட்டு சுருக்கிட்டு அநியாயவிலையில் ஓடிசி, லேண்ட்மார்க் போன்ற பந்தா கடைகளில் விற்கிறார்கள்!!

ஒரு ரூபாய் பம்பரம்+கயிறு வெல்வெட் பையில் போட்டதால் நாற்பது ரூபாயாயிற்று.

56 comments:

  1. எங்கமாமியார் சூப்பரா விளையாடுவாங்க கழச்சிக் கல். .
    அதுக்கு என்ன பேருன்னு நீங்க சொல்லி தெரியுது.. அவங்களும் பாடுவாங்க ஆனா சில பாட்டு மறந்துடுச்சுன்னு சொன்னாங்க..
    கேட்டு பதிவு போடனும் ஒரு தடவைன்னு தோணுது.. நாமளும் தெரிஞ்சிக்கலாம், இல்ல.. ஊரு பக்கம் போனா பதிவு செய்து போடுங்க நீங்களும்...

    ReplyDelete
  2. பல்லாங்குழி நம்ம நாட்டு விளையாட்டுன்னு நெனச்சிட்டு இருக்கோமா? இது ஆப்பிரிக்க விளையாட்டுன்னு கேள்வி பட்டபோது ஆச்சர்யமாபோச்சி. இதற்கு பெயர் மங்க்காலா (mankala). இங்கே போய் பாருங்க.
    http://www.elf.org/mankala/Mankala.html

    ReplyDelete
  3. இந்தியாவைவிட்டு வெளியே வரும்போது கையோடு கொண்டுவந்த இன் டோர் கேம் என்னன்னா..... பித்தளை தாயக்கட்டை, பரமபதம் & கொஞ்சம் சோழிகள்.

    வர்ற வழியில் ஹாங்காங்கில் மீன் தொட்டிக்குன்னு வச்சுருந்த உருண்டைக்கூழாங்கல் (60 ஒரு பையில்) வாங்கிக்கிட்டேன். மகள் வாழ்க்கையில் வரும்வரை இதுதான் துணை.

    அப்புறம் ஒருமுறை மதுரையில் எவர்சில்வர் பல்லாங்குழி. அதை வாங்கவிடாம என்னா கூத்து அடிச்சார் இவர்! கனம் கூடிப்போயிருமாம். ஒரு கிலோ இருக்குமாம். கடைசியில் எங்களுக்குள் ஒரு போட்டி வச்சுக்கிட்டுக் கடைக்காரர்கிட்டே அதை எடை போடச் சொன்னால்.......... வெறும் 200 கிராம்:-)))) போட்டியில் ஜெயிச்சுப் புடவை வாங்கிக்கிட்டேன்:-)

    இப்ப மகளும் பல்லாங்குழியில் வெளுத்து வாங்குறாள்.

    கொசுவத்தி ஏத்தினதுக்கு நன்றிப்பா நானானி.

    ReplyDelete
  4. கழச்சிக் .....கல் சொன்னவிதம் அருமை:-))))))

    ReplyDelete
  5. முத்துலெட்சுமி!
    முயற்சிசெய்றேன். பாட்டு கண்டுபிடிக்க..பதிவில்போட. அதென்ன? திடீருன்னு பேருக்கு முன்னால் 'கயல்விழி'?
    கனிமொழி,தேன்மொழி போல பேரெல்லாம் வெளிச்சத்துக்கு வருவதாலா?

    ReplyDelete
  6. காட்டாறு!
    நானும் பல்லாங்குழி படம் போட கூகுளில் தேடியபோது நானும் பார்த்தேன். நன்றி!

    ReplyDelete
  7. துள்சி! போட்டியில் ஜெயிச்சா...200கிராம் எடையில் வெள்ளியிலோ தங்கத்திலோ பல்லாங்குழி வாங்கியிருந்தால் அது சாமர்த்தியம்!
    பிஸ்சாத்து புடவை...? அது எப்போதும் வாங்க வேண்டிய ஒன்றல்லவா! எங்கள் குடும்பத்தில் ஒரு அத்தை தன் மகள் கல்யாணத்துக்கு நலங்கில் விளையாட வெள்ளி பல்லாங்குழியும் வெள்ளி சோழிகளும் செய்திருந்தார்!!

    ReplyDelete
  8. துள்சி! பாராட்டுக்கு நன்றி!
    எனக்கே எழுதும்போது ஒருமாதிரியாயிருந்தது. ஆகவேதான் பிரித்தேன்.

    ReplyDelete
  9. பலபேரோட மனக் கிணறின் ஆழத்தை தூர் வாரியிருக்கிறேன் என்று நினைத்தாலே இனிக்குது!!!

    ReplyDelete
  10. நானானி,

    கழச்சிக் கல் - எங்க ஊர்ல காய் ஆடுதல் ன்னு சொல்லுவாங்க. எங்க அக்கா பக்கத்து வீட்டு சொந்தங்கள் கூட விளையாடி நாங்கள் 'பார்வையாளர்களாக' இருந்திருக்கோம்!

    பல்லாங்குழி - நானும் விளையாடி இருக்கேன்! 'மங்காலா' - காட்டாறு சொன்னது போல், அதுக்கு இங்கே பேரு.

    ReplyDelete
  11. வருகைக்கு வந்தனம்! தஞ்சாவூரான்!
    ஐந்தாறு பேராக விளையாடும் போது அதன் சுவாரஸ்யமே தனிதான். ஏழு கல்,ஐந்து கல் என்று இதிலும் பலவகை உண்டு.

    ReplyDelete
  12. ayyo nanaani madam nalla vaelai maranthae pona ontai gnapakapaduthiviteenga. name kooda maranthuthaan pochee.

    Intha 5 kallai thavira, mothamaga kallai ennee parappee at a time 5 or 6 mudintha alavil edukka mudiyatha kallil kai padathavaaru, alliya kallum naluvathavaaru, maela ulla kallaiyum pidikkonum..

    ReplyDelete
  13. நானானி, உங்க மண்டையில நச்சுனு ஒரு கொட்டு வைக்கலாம்னு இருக்கு. பிறகு ஊர் ஞாபகத்தை வரவச்சுட்டீங்களே... நானும் அக்காவும் கழச்சிக் கல் ஆடுவோம்.

    //ஒவ்வொரு ரவுண்டுக்கும் ஒருஒரு பாட்டு உண்டு. நல்லாருக்கும். எனக்கு மறந்துவிட்டது//

    இந்தாங்க அந்த பாட்டு:

    1. முதல் கல் போடும்போது:

    ஓரி உலகெல்லாம்
    உலகெல்லாம் சூரியன்
    சூரியன் தங்கைக்கும்
    சுந்தரவல்லிக்கும்
    நாளை கல்யாணம்.

    2. இரண்டாவது :

    ஈரிரெண்டு எடுக்கவே
    எலந்தம் பழுக்கவே
    குழந்தை சமையவே
    கொட்டுச்சத்தம் கேக்கவே.

    இப்படி ஏழு பாட்டு இருக்கு. ஏழு தடவை கல்லை தூக்கிப் போடும்போது ஒவ்வொரு தடவையும் பாடறது. உங்களுக்கு அதெல்லாம் வேணும்னா தனியா ஒரு பதிவு போடறேன்.
    கயல்விழி முத்துலட்சுமி முந்திடக்கூடாது.
    நன்றி.
    ரொம்ம்ம்ம்ப சந்தோஷங்க.

    ReplyDelete
  14. கயல்விழி!
    இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
    இதுவரை காணோமே என்பதால் கேட்டேன். சேரியா? கயல்விழி முத்துலெட்சுமி?

    ReplyDelete
  15. சரியாகச் சொன்னீர்கள் அனானி!
    மேலே ஒரு கல்லை எறிந்துவிட்டு ஒற்றைக் கல்லை எடுப்பதானால் மற்ற கல் அசையாமல் எடுக்கவேண்டும். சிதறியிருக்கும் கற்களை கூட்டி குமிச்சு எடுப்பதும் ஒர் சாமர்த்தியம்.

    ReplyDelete
  16. ஆடும் மாடும் முட்டும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். கொட்டும் என்று இப்போதுதான் தெரிகிறது.
    யாராவது ஒரு ஹெல்மெட் கொண்டுவந்து என் தலையில் மாட்டுங்களேன்!!!!
    ஆனாலும் நாங்கள் மறந்த பாடல்களை நன்றாகவே கொட்டிவிட்டீர்கள்!
    'ஒண்ணாம் படியெடுத்து...'என்ற விஜயலஷ்மி நவநீதகிருஷ்ணன் மாதிரி கூட பாடலாம்போலிருக்குது. நன்றி! ஆடுமாடு! அடுத்த முறை முட்டாமல் கொட்டாமல் வர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  17. கயல்விழி முத்துலெட்சுமியே என்னைத்தேடச் சொல்லியிருக்கிறார்கள்!
    கவலை வேண்டாம். ஆடுமாடு!

    ReplyDelete
  18. நானானி, அருமையான விளையாட்டு.
    புறங்கையில் நாலு கல்லு போட்டுப் பிடிக்கணுமே!
    பாதங்களில் வைத்து விளையாடுவதும் உண்டு. உடலுக்கான பயிற்சிகளில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.
    [புளியங்கொட்டை ஊதி ஒத்தையா ரெட்டையா விளையாடி இருக்கிறீர்களா.:))

    ReplyDelete
  19. நானானி,
    படித்ததும் நான் எழுத நினைத்தேன். துளசி கோபால் முந்திக் கொண்டார்.
    சகாதேவன்

    ReplyDelete
  20. வல்லி!
    எல்லாத்தையும் நானே எழுதிட்டால் எப்படி? பின்னோட்டங்களில் மீதியெல்லாம் வரட்டுமே என்றுதான் விட்டுவைத்தேன். நீங்கள் சொன்னவிளையாட்டு, எங்க பாஷையில்
    'ஊதிப் பொறுக்கி'. சுவையான ஆட்டம்! தம்பிடித்து ஊதி சிதறடிக்கும் போது உற்சாகமாயிருக்கும்.

    ReplyDelete
  21. சகாதேவன்!துளசி சொன்ன எதைச் சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  22. ஆகா!, இப்படி பழசெல்லாம் ஞாபகபடுத்துங்க....நானும் என் பாட்டியும் பல்லாங்குழி, மற்றும் 5 கட்டம், 7 கட்டம் எல்லாம் விளையாடியது ஞயாபகம் வந்தது.

    ReplyDelete
  23. ஊர்லே, கிராமத்துலே இருந்து நெல்லு மூட்டையும் புளியம் பழமும் வந்து வூடே கொள்ளாது. காய வைச்சு, ஓடு ஒடைச்சு, அருவா மமனையிலே நறுக்கி - கொட்டை எடுத்தௌ - அதெ அளந்து - சண்டெ போட்டு பங்கு பிரிச்சி - ஒளிச்சி வைச்சி - கானோமுன்னு சந்தேகப் பட்டு = கொறையுதேன்னு அடிச்சிக்கிட்டு - அடடா அடடா - உள்ளக்கிணறின் அடி வரை போய் தூர் வாரியாச்சு .

    பல்லாங்குழி வெளையாடாத பசங்களே ( அப்பல்லாம் பொம்பளப் புள்ளைங்க கூட ஆடுறதே பசங்க தானே)

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - ரசிச்சேன்

    அப்புறம் அதென்ன மல்ச்சிக்கலா - இல்ல சுழச்சிக்கல் - நானும் வெளெயாடி இருக்கேன் - நான் பாண்டி, பல்லாங்குழி, இந்தக் கல்லு , ரைட்டா ரைட்டா ன்னு கண்னே மேல பாத்துக்கிட்டி ஒரு ஆட்டம் ஆடுவோமே - பேரு தெரில - ம்ம்ம்ம்ம்ம்


    அப்புறம் அந்த சுழச்சிக்கல்லுக்கு நாங்க சொல்ற பேரு சொட்டாங்காய்

    ReplyDelete
  24. சீனா...சீனா..!
    ரைட்டா..?ரைட்டடு! விளையாட்டின் பேரை முதலிலேயே சொல்லிட்டு பேரு தெரிலங்குறீங்களே!! அதும் பேரு "பாண்டி"!

    ReplyDelete
  25. இந்த கழச்சிக் கல் விளையாடின விதத்த நினச்சிப்பார்த்தா..ஹ்ம்ம்ம்
    அழகான கற்கள் கிடைக்க பட்ட பாடு
    வீதியல யாராவது வீடு கட்டறாங்களானு பார்த்துட்டே இருக்குறது..அப்ப மணல் சலிச்சு போடும் போது அழகழகான கற்கள் கிடைக்கும்...கோவைல 'ஒட்டி'னும் ஒரு விளையாட்டு விளையாடுவோம்.. அதுக்கு நிறைய கற்கள் வேண்டும்
    ஒரு கல்லை மேல வீசி கற்களை எடுக்க வேண்டும்..ஒரு ஒட்டிக்கு நான்கு கற்கள் கல்லை எடுக்கும் போது அருகில் இருக்கும் கல் அசைந்துவிட்டால் அவுட். எத்தனை கற்களை வேண்டுமானாலும் அள்ளலாம்..ஆனால் எடுத்த கையில் இருந்து அடுத்த கைக்கு நான்கு கற்களை மட்டும் மாற்ற வேண்டும்.. அது ஒரு கலை..யாரிடம் கம்மியான ஒட்டிகள் இருக்கிறதோ அத்தனை ஒட்டிகள் மற்றவரும் போட்டு அடுத்த ஆட்டத்தை துவங்குவோம்
    ஜெயீகறவங்ககிட்ட ஒட்டிகள் சேர்ந்துட்டே இருக்கும்..
    ஆஹா..கொசுவத்தி கொசுவத்தி..ம்ம்ம் இப்பவே விளையாடனும் போல இருக்கே..

    இதில் கிடைக்கும் மகிழ்ச்சி, குதூகலம் எந்த கம்யூட்டர் கேமாலும் கொண்டு வரமுடியாது..

    மனசுக்கு நல்லா இருக்கு இப்போ, நன்றி நானானி..:-))

    (ஒட்டி..to be pronounced as Oddi)

    ReplyDelete
  26. அதிலேயும் சாதாப் பாண்டி , ஏரோப்ளேன் பாண்டி ரெண்டு உண்டு;)
    ஒரு கால் மடித்து நொண்டி ஆட்டம்!!

    ReplyDelete
  27. //இதில் கிடைக்கும் மகிழ்ச்சி குதூகலம்
    எந்த கம்ப்யூட்டர் கேமிலும் கொண்டுவரமுடியாது//
    மெத்த சரியாகச் சொன்னீர்கள்! மங்கை!
    கம்ப்யூட்டரும் நாமும் உம்முன்னு விளையாடுவது எப்படி...கும்மாளமும் கொண்டாட்டமுமாக அப்போது விளையாடியது எப்படி!!!
    நன்றாகவே 'ஓட்டியிருக்கிறீர்கள்...இல்லையில்லை விளையாடியிருக்கிறீர்கள்!
    எப்படியோ! எல்லோரையும் சந்தோஷப் படுத்தியிருக்கிறேன் இப்பதிவால். அதில் எனக்கும் பெருமகிழ்ச்சி!!!

    ReplyDelete
  28. வல்லி...! எல்லாப் பாண்டியும் சொன்னீர்கள்! 'லொடுக்கு பாண்டியை' விட்டுவிட்டீர்களே?

    ReplyDelete
  29. நானும் பல்லாங்குழி விளையாண்டிருக்கேன்.

    இப்ப மறந்து போச்சு.
    என் மகள் கேட்டுகிட்டு இருக்கா?

    குழியும், சோழியும் இருக்கு. எனக்காக தனியா பல்லாங்குழி விளையாடுவது எப்படின்னு பதிவு போடுங்களேன்.

    ReplyDelete
  30. சீனா,

    //ரைட்டா ரைட்டா ன்னு கண்னே மேல பாத்துக்கிட்டி ஒரு ஆட்டம் ஆடுவோமே - பேரு தெரில - ம்ம்ம்ம்ம்ம்//

    அதுக்கு எங்கூருல பேரு - சில்லு. பாண்டின்னு சொல்றதில்ல. ஒடஞ்ச 'ஒட்டாஞ்சல்லிய' (பானை ஓடு) வச்சு ஆடறது!

    ReplyDelete
  31. ரைட்டா ரைட்டான்னுட்டு, தப்பான இடத்தில் அதாவது கோட்டு மேலே காலு வச்சுட்டா அதைக் கொய்ட்டுன்னு சொல்லணும்:-))))

    ReplyDelete
  32. அக்கா,

    //ரைட்டா ரைட்டான்னுட்டு, தப்பான இடத்தில் அதாவது கோட்டு மேலே காலு வச்சுட்டா அதைக் கொய்ட்டுன்னு சொல்லணும்:-))))//

    நாங்க 'சப்பை' இல்ல 'நடு சப்பை' ன்னு சொல்லுவோம், காலிருக்கும் இடத்தைப் பொறுத்து :)

    ReplyDelete
  33. நாங்க அதை 'சப்பைன்னு' சொல்லுவோம். துள்சி!

    ReplyDelete
  34. அதோ..அதோ..தஞ்சாவூரிலிருந்து தகவல் வருகிறது!!!
    நாட்டில் ஏன் கொசு குறைந்துவிட்டது என்று பார்த்தேன். இப்படி வீட்டுக்குவீடு
    கொசுபத்தி ஏத்தினால்..? ஏன் குறையாது?

    ReplyDelete
  35. பல்லாங்குழி வெளையாடாத பசங்களே ( அப்பல்லாம் பொம்பளப் புள்ளைங்க கூட ஆடுறதே பசங்க தானே)

    yes..yes.. in our village also there was no discrimination .. boys also participated along with girls ..the play like pondi..pallanguli..kalachee...etc. etc. intha machine life world la palasai kilari..konjam childhood paruvathai ninaivu paduthiviteenga
    nanti... pokkisam... kidaikaatha paruvam..
    சப்பை' ன்னு சொல்லுவோம்,

    `sappai' entu sonnal asingama irukku entu //ரைட்டா ரைட்டா ன்னு கண்னே மேல பாத்துக்கிட்டி ஒரு ஆட்டம் ஆடுவோமே -
    நானும் பல்லாங்குழி விளையாண்டிருக்கேன்.

    இப்ப மறந்து போச்சு.

    niraiya `MUTHU' saernthirutha..PASU entu sonna maathiri gnapakam.i am not sure..
    maranthu pochee

    ReplyDelete
  36. நன்றி! அனானி! வருகைக்கு.
    எத்தனை எத்தனை விதமான விளையாடும் வகைகள் இருக்கின்றன என்று கொஞ்சம்கொஞ்சமாக தெரியவருகிறது...!

    ReplyDelete
  37. நடுக்குழிலதான் முத்து நிறைய சேரும். அதுக்குப் பேர் "காசி". இரண்டு பேரு கூட்டா காசி தட்டலாம். பங்கு பிரிக்கப்படும்.



    பசு 5 முத்து அல்லது 6 முத்து .

    ReplyDelete
  38. புதுகைத்தென்றல்! நான் 'தக்கம்,குமுக்கு' மட்டும்தான் சொன்னேன். மிச்சம் மீதி டெக்னிக்கல் வார்த்தைகளெல்லாம் குபுகுபு என்று வந்து விழுகிறதே!!
    ஆனந்தம்..ஆனந்தம்..பரமானந்தம்!!!

    ReplyDelete
  39. ஆஹா, மங்கை!
    ஒட்டுக்கல் தான் நானும் சொன்னென்.

    அதுக்காகவே குட்டியூண்டு கல்லுகளைப் பொறுக்குவோம்:)
    நானானி,
    அந்தப் பாண்டி தெரியாதுப்பா.

    நாங்களும் காசீஇனு கத்திதான் முடிப்போம்:)

    ReplyDelete
  40. வல்லி!
    அந்தப் பாண்டி..'நந்தா' என்ற படத்தில் வரும் ஒரு கேரக்டர் பெயர்.
    ச்சும்மா..வெளாட்டுக்கு...சொன்னேன்.
    சேரியாப்பா?

    ReplyDelete
  41. மக்கள்ஸ்!
    பல்லாங்குழி ஆட்டத்துக்கு தனியாக
    விதி,முறைகளோடு தனிப்பதிவே போடவேண்டும் போலிருக்கே?
    ஊருக்குப்போய் கேட்டு வாரேன்!

    ReplyDelete
  42. மேடம், இந்த விளையாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கா பாருங்க;

    எல்லா பிள்ளைங்களும் கண்ணை மூட்டிட்டு உக்காந்திருக்கும். ஒருத்தர் எதுத்தாப்ல நின்னு கண்ணை மூடிக்கிட்டிருக்கணும். மேஸ்திரி மாதிரி ஒருத்தர் இப்படி பாடுவாங்க:

    மல்லிப் பூவே மல்லிப்பூவே
    மெல்ல வந்து கிள்ளிப்போ...

    உடனே கண்ணை கட்டியிருக்கவங்க, உக்கார்ந்திருக்கிறவங்கள்ல யாரையாவது கிள்ளணும். இப்ப கிள்ளப்பட்டவங்க கண்ணை கட்டி நிற்கணும்.

    ஞாபகம் இருக்கா?
    எனக்கு மறந்து போச்சு.

    ReplyDelete
  43. பல்லாங்குழியில் காலியான குழிகளில் நம்ம பக்கம் நாலு முத்து சேர்ந்ததும் அதை நாம் எடுத்துக்கலாம். அதுக்குப்பேர் பசு.

    சில்லு போட்டு விளையாடுவதை நாங்க பாண்டின்னு சொல்வோம். இதுலே ஏரோப்ளேன் பாண்டின்னு ஒரு வகை இருக்கு:-))))

    சரி. யாருக்காவது கிளித்தட்டு நினைவிருக்கா?

    ReplyDelete
  44. ஆடுமாடு,

    //உடனே கண்ணை கட்டியிருக்கவங்க, உக்கார்ந்திருக்கிறவங்கள்ல யாரையாவது கிள்ளணும். இப்ப கிள்ளப்பட்டவங்க கண்ணை கட்டி நிற்கணும்.//

    இதே மாதிரி ஒரு விளையாட்டு சின்னப் புள்ளையிலே வெளையாண்டு இருக்கோம். ஆனா, மறந்துடுச்சு (வலிக்கக் கிள்ளிட்டான்(ள்)ன்னு புகாரெல்லாம் வரும்) :)

    அக்கா,

    //சரி. யாருக்காவது கிளித்தட்டு நினைவிருக்கா?//

    ஹ்ம்ம்ம்... கிளிக்கோடு/தட்டுக்கோடு :)
    நாலு இல்ல ஆறு பொட்டி காலால எல்லை போட்டு, குறுக்குக் கோட்டுக்கு ஒரு ஆள், நெடுக்குக் கோட்டுக்கு ஒரே ஆள், 'தண்ணீர்'ன்னு சொல்லி வரணும். எதிரணிய அடுத்த பொட்டிக்கு விடாம தடுக்கனும். எதிரணி 'காவலர்களை' ஏமாத்திட்டு, அவங்க கை படாம அடுத்த் பொட்டிக்கு ஓடனும். எல்லாரும், வெற்றிகரமா எல்லா பொட்டியையும் தாண்டிட்டா அவங்க வெற்றி பெற்றவர்கள். சரியா? :)

    இதே மாதிரி, 'கல்லு வச்சு கல்லு'ம் அப்போ பிரபலம்.

    ஹ்ம்ம்ம்... இனிமே ஒரு மாசத்துக்குக் கொசுத்தொல்லை இருக்காது :)

    ReplyDelete
  45. //ஹ்ம்ம்ம்... இனிமே ஒரு மாசத்துக்குக் கொசுத்தொல்லை இருக்காது :) //

    அதெப்படி? இந்தக் கொசு இல்லைன்னா வேற கொசு இருக்காதா? :-)))))

    ReplyDelete
  46. //ஹ்ம்ம்ம்... இனிமே ஒரு மாசத்துக்குக் கொசுத்தொல்லை இருக்காது :) //

    அதெப்படி? இந்தக் கொசு இல்லைன்னா
    வேற கொசு(வே) இருக்காதா? :-))))))

    ReplyDelete
  47. This is not an ONLINE Game.You can Copy\Save this HTML file in your Machine and Play it OFFLINE.

    http://www.freehomepages.com/flames/pallaanguzhi.html

    ReplyDelete
  48. ஆடுமாடு!
    கிள்ளினவங்க யாருன்னு கிள்ளப்பட்டவங்க சொல்லோணும்.அப்பத்தான் அவர் மற்றவரை கிள்ளலாம்.
    ய்ப்பா.........! இன்னும் 'கைவீசம்மா கைவீசு' 'கீரை கடை..கீரைக்கடை..' என்று மழலைகள் ரேஞ்சுக்குப் போய்விடுவோம் போலிருக்கே!!!!!!!!

    ReplyDelete
  49. துள்சி!...தஞ்சாவூரான்!
    கிளித்தட்டு நாங்கள்...வீட்டில் விசேஷம் என்றால் பந்தல் போடுவாங்கல்ல..அந்த நாலு பந்தல்கால்களையே வெச்சு சுத்திசுத்தி விளையாடுவோம்.
    மற்ற நேரம் வீட்டு முற்றத்தில் உள்ள நான்கு வாசல்படிகளையும் வைத்து தரையில் நின்று பிடிபட்டால் அவுட்..படியில் ஏறிவிட்டால் நாட்-அவுட்..இதான் பேர் 'கல்லா மண்ணா'.
    கல்=படி...மண்=தரை

    ReplyDelete
  50. துள்சி!!
    இருங்க..இருங்க..வேற கொசுவுக்கும்
    கொசுபத்தி ஏத்தறேன்.

    ReplyDelete
  51. லதா! ஆன்லைன் கேம் எல்லாம் ஆடினதில்லை. நீங்கள் சொன்ன சைட்டுக்குப்போய் முயன்று பார்க்கிறேன்.நல்லது.

    ReplyDelete
  52. நானானி, எல் ஓ என் டி ஒ என்
    லண்டன் ஞாபகம் இருக்கா;)

    ReplyDelete
  53. ஹையோ!ஹையோ! வல்லி!
    லண்டன் விளையாட்டு சுவாரஸ்யம்.
    ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்கும் போது குழந்தைகள் கண்களில் தெரியும் குறும்பு....அழகு!

    நா கூட வெள்ளாடிருக்கேன்!!

    ReplyDelete
  54. !!kollikundu விளையாட்டு

    ReplyDelete
  55. ராஜேஸ்வரி,

    இத்தனை வரிடம் கழித்து வந்ததுக்கு ம்கிழ்ச்சி!
    கோலிகுண்டு ஆட்டம் நானும் விளையாடியிருக்கேன். அதுக்காக கலர்கலரா கோலிகுண்டுகள் சேகரிப்போம். ம்ம்ம்..அது ஒரு காலம். இப்போ கொலிகுண்டுகளை கண்ணாடி ஜாடிகளில் அழகுக்காக போட்டு வைக்கிறோம்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...