


மறைந்த நமது பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி தன் வீட்டு சமையல்காரருக்கு தரும் ஒரு குறிப்பு...முடிந்தவரை காய்கறி, பழங்களின் தோலோடு உபயோகிக்க வேண்டும் என்பதுதான்.
உடனே பலாப்பழத்தோல், அன்னாசிப்பழத்தோல்,முருங்கக்காய்த்தோல், சேனைக்கிழங்குத்தோல்
எல்லாம் உபயோகிக்கலாமா? என்று லொள்ளு கேள்விகள் வேண்டாமே!
முதலில் வாழைக்காயை எதையும் வீணாக்காமல் சமைக்கும் முறையைப் பார்க்கலாம்.
என் பேரிக்கா(பெரிய அக்கா) சொல்லிக்கொடுத்தது.
வாழைக்காயை இரு ஓரங்களையும் நறுக்கி விட்டு, முழுசாக தண்ணீரில் வேகவிடவும்.
வெந்ததும் தோலை உறித்து வைத்துக்கொள்ளவும். தோல் உறித்த வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்புக்காரம் போட்டு தளித்து பொறியலாகவும் செய்துகொள்ளலாம்.
அல்லது துருவி சிறியதாக நறுக்கிய சின்னசெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளித்து வாழக்காய் புட்டாகவும் செஞ்சிக்கலாம்.
இப்போ தனியாக எடுத்து வைத்த வாழைக்காய் தோலை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து தோல் துண்டுகளையும் போட்டு புரட்டி எடுத்தால் சுவையான வாழைக்காய்த் தோல் கறி ரெடி! இதை பெரியவர்கள் மட்டும்தான் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடுவார்கள். காரணம் பொருளை வீணாக்காமல் செய்தது, தோலிலும் சத்துக்கள் நிரம்பியுள்ளன என்ற உண்மையையும் உணர்ந்தது. சரிதானே?
இதே போல் தேங்காய் சேர்க்கக்கூடாது என்ற நிலைமை வந்ததும். வேறு எதையெல்லாம் துவையல் செய்து சாப்பிடலாம் என்று தேடிய போது கிடைத்தவை...கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, பீர்க்ங்காய், தோசைக்காய் ஆகியவற்றைக் கொண்டு துகையல் செய்யலாம் என்று தெரிந்தது. வேறு காய்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள்! எல்லாவற்றையும் சேர்த்து அல்ல...தனித்தனியாக ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு காய் கொண்டு துகையல் செய்யலாம்.
மேற்சொன்ன காய்களில் ஏதாவது ஒன்று......பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் காய்ந்தமிளகாய்...காரத்துக்கேற்ப, கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கி வைத்துள்ள காயும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் விரும்பும்படி ஒன்றிரண்டாகவோ அல்லது மையாகவோ அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தியுடனோ அல்லது சூடான சாதத்தில் போட்டு பிசைந்தோ ச்சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பிக்கேட்டால் கொடுக்கலாம்!!!!!!!!!!!
ஆப்பிளை முடிந்தவரை தோலோடுதான் சாப்பிடவேண்டும். தோல் சீவித்தான் ஆகவேண்டுமென்றால் அந்தத்தோலை தூரப்போடாமல் சட்னி அரைக்கும் போது உடன் சேர்த்துக்கொள்ளலாம்.
மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து எடுத்தவுடன் முத்துக்களைக் கவ்விக்கொண்டிருந்த இளம் மஞ்சள் பகுதியை அப்படியே சாப்பிடலாம். அதன் துவர்ப்பு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல மருந்துபோன்றது.
இனிமேல் எல்லோரும், ....'தோலோடுதான் நான் சாப்பிடுவேன்...!' என்று பாடலாம்தானே?!