Sunday, August 24, 2008

மனம் நிறைந்த பிறந்தநாள்!!


சங்கத்தின் சுவரொட்டி மூலம் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வலையுலக சகோதர சகோதரிகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், (இருந்தால்) கொள்ளுப்பேரப்பிள்ளைகள் கட்டாயம் இருக்கும், இப்போதுதான் பொறந்ததுமே....நண்டு நாழிகள் எல்லாம் ப்ளாக்கில் எழுதுறாங்களே!!
(இங்கு...ஆக்குன்னு). உங்கள் அனைவருக்கும் என் இதயப் பூர்வமான நன்றிகள் உரித்தாகுக.


வாழ்த்து அட்டைகள் காலம் பறந்தே...போச்சு! ஒரு போன் அல்லது ஈ-மெயில் சோலி முடிஞ்சுது!

Thursday, August 21, 2008

எனக்குப் பிடிச்ச சொதி.

நெல்லைச்சீமைக்கு விருந்துக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக ஒன்று கூட்டாஞ்சோறு
அல்லது இந்த சொதியை மணக்க மணக்க பரிமாறி திணறடித்துவிடுவார்கள். குறிப்பாக திருமணம் முடிந்த மறுநாள் மத்தியானச் சாப்பாடு 'சொதி சாப்பாடாகத்தானிருக்கும்'.

இப்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டு, மறுவீட்டு சாப்பாடாக போட்டுவிடுவார்கள். முன்போல் மறுவீடு என்று மாப்பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விரூந்து வைப்பதற்குப் பதில் கல்யாண மண்டபத்திலேயே மறுநாள் மத்தியான சாப்பாடாக
போட்டுகிறார்கள். அதாவது அந்த செலவு அவர்களது. இவர்களுக்கும் அலைச்சல் மிச்சம்.

சரி...சொதி செய்வதை, 'எப்படி...எடுத்துரைப்பேன்?'

இப்படித்தான்!!

சொதிக்குத் தேவையானவைகள்:

தேங்காய்- அரை மூடித் தேங்காய் இரண்டு பேருக்கு என்ற அளவில்
துருவி மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து முதல், இரண்டாம், மூன்றாம் பால்
என்று தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு: இரண்டு கப் வேகவைத்து மசித்தது.

தேவையான காய்கறிகள்: காரட், பீன்ஸ், பட்டாணி, உருளை, பிஞ்சு கத்தரிக்காய்,
முருங்கைக்காய், இவற்றை அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கிக்
கொள்ளவும், பூண்டு பெரிய பல்லாக 10 அல்லது15

அரைக்கத் தேவையானவைகள்: காரத்துக்கேற்ப பச்சைமிளகாய், இஞ்சி விரலளவு ரெண்டு
துண்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

புளிப்புக்கு: எலுமிச்சம் பழம் ரெண்டு அல்லது மூன்று, சாறு எடுத்துக்கொள்ளவும்

உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் மூன்றாவது பாலை விட்டு கொதித்ததும் பீன்ஸ்,காரட்,உருளை இவற்றை முதலில்
போட்டு அவை பாதி வெந்ததும் கத்தரிக்காய்,முருங்கைக்காய்,பட்டாணி,பூண்டு ஆகியவற்றைப் போட்டு வேகவிடவும். காய்கள் வெந்ததும் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். பின் அரைத்த பச்சைமிளகாய் இஞ்சியையும் சேர்க்கவும். பிறகு இரண்டாவதுபாலை ஊற்றவும்.
சொதி..ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு திக்கான முதல் பாலை ஊற்றி பின்
பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் து.....வி இறக்கினால்...அந்த மணம்..

ஹய்..!சொதி..சொதி..என்று குதித்தோடி வருவார்கள். யாரெல்லாம்? பெரியவர்களும் சிறியவர்களும்தான்!!

இதற்கு 'மேட்சான ஜாக்கெட்' ரிப்பன், கண்ணாடி வளையல்கள்: உருளைக்கிழங்கு காரக்கறி மற்றும் உருளக்கிழங்கு சிப்ஸ், இஞ்சிப் பச்சடி(இனிப்பு அல்லது காரம். இல்லேன்னா ரெண்டுமே!)

இவற்றையெல்லாம் பரிமாறி, 'ஊடு கட்டி ஒரு பிடி பிடித்தால்...தயிர்சாதம் பக்கமே வரமாட்டார்கள். அம்புட்டு சொதியும் காலீ.....ஆயிடும். அம்புட்டு ருசில்லா?

தேங்காய் பாலில் செய்வதால் சுலபமாக ஜீரணிக்க இஞ்சிப் பச்சடி உதவும்.

Monday, August 18, 2008

தக்காளியோதரை.....சமையல் குறிப்பு.

அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால், அது
தக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே?

நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன்.
என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று.
ஆஹா! கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று. அதுதான்...தக்காளியோதரை!!

நன்கு பழுத்த தக்காளி....நாட்டுத்தக்காளியும்(புளிப்புக்கு) பெங்களூர் தக்காளியுமாக கால் கிலோ.வேகவைத்து தோலுறித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்

2-ஸ்பூன் விதை தனியா
1 1/2 ஸ்பூன் வெந்தயம் இரண்டும் வெறும் கடாயில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்

காரத்துக்கேற்ப 8 அல்லது 10 காய்ந்த மிளகாய்...2 அல்லது 3-ஆக ஒடித்து வைத்துக்கொள்ளவும்

தாளிக்க - நல்லெண்ணை, வெந்தயம், கடுகு, உளுத்தப்பருப்பு, பெருங்காயம், ஜீரகம், பொட்டுக்கடலை,வேர்கடலை
கறிவேப்பிலை,உப்பு, வெல்லம்

அடுப்பில் கடாய் வைத்து அரைக்கப் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், அரை ஸ்பூன் வெந்தயம்,அரை ஸ்பூன் ஜீகரம், ஒரு ஸ்பூன் கடுகு, ஒன்றரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, வேர்கடலை, காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். நன்கு வறு பட்டதும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாற்றையும் சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும். பொடித்து வைத்துள்ள மல்லி வெந்தயப் பொடியையும் சேர்த்து கொதிக்கவிடவும்.இடையிடையே நல்லெண்ணை விட்டுக்கொள்ளவும். நன்கு கொதித்து நீர் வற்றி எண்ணை வெளிவிடும்போது சிறிது வெல்லம் சேர்த்து இறக்கிவிடவும். தக்காளியோதரை மிக்ஸ் தயார்!!!!

பொலபொலவென வேகவைத்து ஆறவைத்த சாதத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள மிக்ஸை சேர்த்து கிளறி அதோடு மறுபடியும் கடுகு, உளுத்தம்பருப்பு,
பொட்டுக்கடலை வேர்கடலை, சிறிது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் கொட்டி கலந்தபொடியாக அரிந்த பச்சைக் கொத்தமல்லி தூவினால் சுவையான மணமான தக்காளியோதரை தயார்!!

நல்லாருந்துதுங்க.....நிஜம்மா...சும்மா ஒரே ரூட்டில் போகிறோமே என்று, 'நாட்டாமை!!
ரூட்ட மாத்து!' ன்னு சொன்னா மாதிரி நான் மாத்தின ரூட்டில் கிடைத்ததுதான் இந்த
தக்காளியோதரை!!

Friday, August 15, 2008

ஆகஸ்ட் ரெண்டாவது PiT...


கலக்குவேன்...கலக்குவேன்...முக்கோணம் கட்டி கலக்குவேன்.
மில்வாக்கி மியூசியத்தில், மியூசியம் போகும் பாதையின் ஒரு பக்கத்தில் இது மாதிரி அயில் அயிலாக இடையில் அமர்ந்து கொள்ள பெஞ்சுகள்.இங்கிருந்து பார்த்தால் அழகான லேக் வியூ கிடைக்கும். ஒவ்வொரு அயிலின் இடையிலும் நின்று படமெடுத்த்டுக்கொண்டோம். அதில் தூ...ரத்தில் நின்று எடுத்தது.

அதே மியூசியத்தில் சென்டர் ஹால். கீழே தெரிவது பிரதிப்பலிப்புத்தான்.
மியூசியத்தைப் பற்றி பதிவாகப் போட நினைத்திருந்தேன். அதற்குள் 'தலைப்பில்லாப் படம்'
போடலாமென்றார்கள். போட்டுட்டேன்.

இரண்டு பிட்டும் பார்வைக்குத்தான், போட்டிக்கல்ல
காரணம் நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க. சேரியா?

ஆகஸ்ட் முதல் PiT...பிட்..பிட்


ஹலோ!!யாராவது வாருங்களேன்!!என்னை பொறிக்கப் போறீங்களா? வறுக்கப்போறீங்களா?
இல்லை அப்படியே சாப்பிடப் போறீங்களா? நான் ரெடி! அப்ப நீங்க?

பத்தோடு பதினொன்றாக முளைத்திருந்தால் தோப்பாகயிருந்திருப்பேன்
தனியே..தன்னந்தனியே முளைத்ததால் நான் ஒரு தனி மரம்!
ஆம்! என் பேரே 'தனி மரம்!'

Thursday, August 7, 2008

Tuesday, August 5, 2008

காமிக்ஸ் கதைகள் ஒரு கேள்வி பதில்

லாங் லாங் அகோ நோபடிக் கேன் ஸே ஹௌ லாங் அகோ!!

முன்பு ஒரு காலத்திலே சிந்துபூந்துறை வீட்டுக்குள்ளே....
நாங்க அடித்த லூட்டிகளை சொல்லப்போறேன்.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையில் வரும் படக்கதிகளை விரும்பிப்படிப்போம். அதில் அரைப்பக்கம் காமிக்ஸ் மீதி அரைப்பக்கம் ஃபாண்டம் கதைகள். நடுப்பக்கம் முழுதும் பிரபல
கார்டூனிஸ்ட் மாரியோ வரைந்த படம் இருக்கும். அதை வைத்துக்கொண்டு அண்ணன் கேள்வி கேக்க, நானும் என் தங்கையும் தேடித்தேடிக் கண்டு பிடிக்க...வெகு சுவாரஸ்யமான விளையாட்டு ஒன்று விளையாடுவோம். பக்கம் முழுதும் கொசகொசவென்று இண்டு இடுக்கு விடாமல் விதவிதமான காரக்டர்களால் நிரம்பியிருக்கும்.

அதை விரித்து வைத்துக்கொண்டு, 'கண்டுபிடி' விளையாட்டு விளையாடுவோம். எங்காவது ஒரு மூலையில் பூனை மீனைக் கவ்விக்கொண்டிருப்பதுபோலிருக்கும் அதைச்சொல்லி கண்டுபிடி என்று ஒருவர் சொல்ல மற்றவர் அது எங்கே ர்ன்று தே....டிக் கண்டுபிடிக்கவேண்டும். இதுபோல் தூணில்சாய்ந்து சிகெரட் பிடிப்பவர்,மரத்திலி இருக்கும் காக்கா, குரங்கு பெடல் போட்டு வைக்கிள் ஓட்டும் சிறுமி, சண்டை போடும் சிறுவர்கள்,
இப்படி போய்க் கொண்டேயிருக்கும்.

இதுதெல்லாம் போக ஸ்க்ராபிள்,சீட்டு,தாயக்கட்டம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள்
விளையாடியதெல்லாம் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.

ஃபாண்டம்(தமிழில் மாயாவி) கதைகள் மிகவும் பிடிக்கும். பின்னாளில் அண்ணன் பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து பள்ளி செல்லும் காலத்தில் அவர்களுக்கும் ஃபாண்டம் கதைகள் பிடித்துப்போயின.ஜூனியர்விகடன் சைசில் காமிக் புத்தகங்கள் வர ஆரம்பித்த புதிது. அண்ணன் எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் குழந்தைகள் படிக்க வாங்கி வருவார்.
பள்ளிப் பாடங்களைவிட வெகு வேகமாக...மனப்பாடமாக படித்துவிடுவார்கள்.

நான் தூத்துக்குடியிலிருந்து சிந்துபூந்துறை போகும் போதெல்லாம் பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அவர்களுக்குச் சமமாக எல்லா விளையாட்டுகளும் விளையாடுவென். ஏன் அவர்களோடு கிரிக்கெட் கூட விளையாடியிருக்கிறேன். 'அத்தே! நீங் ரன் எடுக்க ஓடவேண்டாம்.
உங்க பாட்டை வலது கையிலிருந்து பின்புறமாக இடதுகைக்கு உங்களைச் சுற்றி ஒருமுறை எடுத்தால் ஒரு ரன் என்று எனக்கு எக்ஸெப்ஷன் கொடுப்பார்கள்.

இது எப்போது என்று நினைக்கிறீர்கள்? முதல் பிரசவம் முடிந்து மூன்றாம் மாதத்தில்! அதனால்தான் அந்த எக்ஸெப்ஷன்!!குழந்தை தூங்கும்போது அவர்களோடு விளையாட ஓடிவிடுவேன்.மதனி வந்து சத்தம் போட்டதும்தான் உள்ளே வருவேன்.

ஒரு நாள் பிள்ளைகள் எல்லோரும் ஹோம்வொர்க் முடித்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்த போது, 'பிள்ளைகளா! ஒரு புது விளையாட்டு ஆடலாம்.' என்று அழைத்தேன் வெளியே இல்லை ரூமுக்குள்ளேயே ஆடும் ஆட்டம் என்றவுடன் ஆளாளுக்கு வாட்டமான இடமாக
திண்டு தலையணை சகிசதம்....ஒரு காங்கிரஸ் காரியகமிட்டி மீட்டிங் மாதிரி அமர்ந்து கொண்டார்கள்.

உங்களுக்கெல்லாம் ஃபாண்டம் கதை அத்துப்படி...இன்னொரு கதாபாத்திரமான 'மந்திரவாதி
மாண்ட்ரெக்'கும் தலைகீழ் பாடம்! ஆகவே இந்த ரெண்டு கதைகளிலிருந்தும் யார் வேண்டுமானாலும் கேள்வி கேக்கலாம், தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம். ஓகேவா?
ஓஓஓஓஓஓஓக்க்க்க்கே!! என்று ஒரே குரலில் குதுகலமாக கூவினார்கள்.

கேள்விக் கணைகள் ராமர் பாணம் போல் சர்சர் என்று விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டன.
பதில் கணைகள்...? அவைகள் அர்ஜுனன் அம்பு போல் வெச்ச குறி தப்பாது தைத்தன.

ஃபாண்டம் காதலி பேர் என்ன?......டயானா!
அவன் கையில் அணிந்திருக்கும் முத்திரை மோதிரத்தில்என்னகுறி இருக்கும்?..மண்டையோடு!
அவன் வளர்க்கும் செல்லப் பிராணி என்ன மிருகம். சாய்ஸ்...நாய்/ஓநாய்?...ஓநாய்! வாலி!
அவன் குதிரை பேர் என்ன?...கேசரி!
மந்திரவாதி மாண்ட்ரெக் கூட வரும் குள்ளன் பேர் என்ன?...லொதார்!
அவன் மனைவி பேர் என்ன?...நர்மதா!
அடுத்தது என்ன....மறந்து போச்சே!!!

இப்படி கேள்விகளும் பதில்களும் சூடு பறக்கும்.
இப்பவும் பிள்ளைகளோடு கூடி இருக்கும் போது இம்மாதிரியான பழைய நினைவுகளை....
'இனி வராதே....! என்ற ஏக்கத்தோடு மனமெல்லாம் பூரிக்க பகிர்ந்து கொள்ளுவோம்.

Sunday, August 3, 2008

சகாதேவன் கேட்ட இன்னொரு பாட்டு!!பிடித்தது நாலாவது

திருவே என் தேவியே வாராய்
தேனார் மொழி மானார் விழி
பாவை என்னைப் பாராய்

மானலைச்சாரலில் கூவும் கோகில
மதுர கானமே உன் குரலே
வானுலாவும்கதிர் போல ஒளி மழை
வாரி வழங்கும் எழிலே
போதை கொள்ளுதே எனது உள்ளமே...ஆஹா!
போதை கொள்ளுதே எனது உள்ளமே
உன்னை எண்ணும் பொழுதே

திருவே என் தேவியே வாராய்



அதே கோகிலவாணி படத்தில் சீர்காழி பாடிய இன்னொரு பாடல்.
ஜிக்கி ஹம்மிங் கொடுத்திருப்பார். அந்த 'ஆஹா!' ஒரு ரசனையோடு ஒலிக்கும் அற்புதமான பாடல்.

மனம் கவர்ந்த பாடல் மூன்றாவது

வருந்தாதே மனமே - நீயே
வருந்தாதே மனமே
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே

இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பார்
இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்
நிலையை எண்ணிப்பார்...

ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே

இன்பம் துன்பம் யாவும் ஈசன் செயலே ஆகுமே
இகழ்ந்த வாயே புகழ்ந்து பேச காலம் மாறுமே
காலம் மாறுமே...

ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே
வருந்தாதே மனமே -நீயே
வருந்தாதே மனமே


சுமைதாங்கி படத்தில் வரும் "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா" என்ற பாடல்
எப்படி மனதை இதமாக வருடிச்செல்லுமோ அதுபோல் இந்தப் பாடலும் கேட்கும் போது மனதுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.

ஹாஸ்யப் பாடல்கள் பாடும் எஸ் சி. கிருஷ்ணன் ரொம்ப மென்மையாக இப்பாடலைப் பாடியிருப்பார். படம்தான் நினைவு இல்லை.

மனம் கவர்ந்த பாடல் வரிசை -2

சரச மோகன் சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பார்
சுவையில் தேனிசை கேட்பவர் யாவரும்
சித்திரமாகும் விசித்திரம் பார்

சரச மோகன சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பார்

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவ லயம்
சுந்தர வான் கவி சுக குரலில் எழும்
சுதந்திர நாதமே சங்கீ...தம்

சரசமோகன சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பார்

மந்தை மேகங்கள் மாமழை பொழியும்
விந்தையாய் மயில் வளைந்தசைந்தாடும்
மந்த மாருதம் மலரிசை பாடும்
அந்த கீதமே அமர சங்கீத.......ம்

சரச மோகன சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பா......ர்!



கோகிலவாணி படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அருமையான தெள்ளுத்தமிழ்
பாட்டு.


அதே படத்தில் வரும் மற்றொரு அருமையான பாடல்...சீர்காழியார் தான் பாடியிருப்பார்.
தமிழ் அகராதியிலிருந்து முத்துமுத்தான சொற்களைக் கோர்த்தெடுத்து கட்டிய பாடல்.
பாட வெகு சுகமாய்யிருக்கும்.

அன்பொழி வீசி உயிர் வழிந்தாடும் விழியில் வான் கண்டேன்

தன்னிதழ் ஓசை இசையினில் வாணியின் வீணையை நான் கேட்டேன் - பசும்
பொன்னுடல் வாரி வீசிய ஜோதியில் வாட்டிய குளிர் உணர்ந்தேன்.

பின்னவள் அருகே புன்னகையோடு வர
பின்னவள் அருகே புன்னகையோடு வர

என்னை நான் மறந்தேன்

அன்பொழி வீசி உயிர் வழிந்தாடும் விழியில் வான் கண்டேன்.

Saturday, August 2, 2008

எனக்குப் பிடித்த பாடல்கள் வரிசையில் முதலாவது

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியிலோடி ஆடுவீரே
ஜில்லெனவே வந்துலாவும் தென்றல் தன்னை பாடுவீரே

இன்பமானதிவ்வுலகம் அன்புள்ளம் கலந்திடிலே
பூங்காவாம் உந்தன் மனம்
உள்ளன்பே தெய்வ மனம்
இவ்வுண்மை நீ மறவேல்

பூலோகம் தனில் நீயே சொர்க்கபோகம் அடைவாயே
புண்ணியத்தில் மானிடப் பிறப்படைந்ததெண்ணுவையே

நெறி தவறி நீ வீழ்ந்தால்
பாழடைந்ததுன் வாழ்நாள்
கை தவறிய கண்ணாடி
தூள் போலாம்
பயனிலை வாடி

கொடிய பாதை நடவாதே
மனவமைதி கிடையாதே
இருள் சூழ்ந்திடும் வாழ்வு
அன்பிலார்க்கு இன்பமில்லை
இவ்வுண்மை நீ மறவேல்

'என் வீடு' ! மறைந்த பழம் பெரும் நடிகர் வி.நாகைய்யா தயாரித்து இசையமைத்த படத்தில்
பாபநாசம் சிவன் எழுதிய இப்பாடல், 'யாதோன் கி பாராத்' மாதிரி அந்தக் காலத்திலேயே பிரிந்த குடும்பம் ஒன்று சேர உதவும் ஒரு குடும்பப்பாட்டு. சின்னச்சின்ன எளிமையான வார்த்தைகளில் பாடல் கூறும் அறிவுரைகள் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது.

பட ஆரம்பத்தில் தந்தை தன் மூன்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் போது மூன்றாவது சிறுவன் நழுவும் தன் ட்ரவுசர் ஸ்ட்ராப்பை தூக்கி தூக்கி விட்டுக்கொண்டே
பாடும் காட்சி ஒரு அருமையான கவிதை!!

க்ளைமாக்ஸில் பிரிந்தவர் கூடும் காட்சியில் இதே பாடலை எம்.எல்.வசந்தகுமாரியும்
டி.ஏ.மோதியும் அருமையாகப் பாடியிருப்பார்கள்.

நான் பேச நினைப்பதெல்லாம் வேறு மாதிரி பேச வேண்டும்

ஏட்டிக்குப் போட்டி!!

மனமொத்த தம்பதியர் எப்படி இருக்க வேண்டும்?

நான் நினைத்ததை நீ செய்ய வேண்டும். நீ நினைப்பதை நான் செய்ய வேண்டும்..

ஆனால் கவிஞன் என்ன சொல்கிறான்?

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ....அப்ப ஒருவர் சுயமாக சிந்திக்கவும் பேசவும் கூடாதா?

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்....ஒருவர் பார்க்குமிடத்தைத்தான் மற்றவர்
பார்க்க வேண்டுமா? அவரவர்க்கு வேறுவேறு கண்ணொட்டங்கள் இருக்கக்கூடாதா?
என்னங்க ஞாயம்?

ஆனாலும் அவர்கள் இருமனம் கலந்து ஈருடல் ஓருயிராகத்தான் வாழ்கிறார்கள்.

இன்னொரு ஜோடியைப் பாருங்கள்!
எது சொன்னாலும் ஏட்டிக்குப்போட்டி!!

நாஞ்சொன்னதுதான் சரி....இல்லையில்லை நாஞ்சொன்னதுதான் சரி!
நாஞ்செஞ்ச பூஜையில் பலந்தான்....அஸ்க்குபுஸ்க்கு ஆசைதோசை! நாஞ்செஞ்ச பூசை பலந்தான். என்று இருவரும் ஒருவர் சொல்வதை மற்றவர் ஒத்துக்கொள்ளாமல்
ஏட்டிக்குப் போட்டியாக வாதாடிக்கொண்டே ஒற்றுமையாக வாழ்கிறார்கள்!!

ஒருவர் சொன்னதை மற்றவர் மறுத்து வேறு எதிர்மறையாக சொல்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அல்லவே அல்ல.

கணவன், 'ராமன் வீட்டுக்கு வந்தான்.' என்று சொன்னால்...மனைவி, 'ராமன் வீட்டுக்கு வரவில்லை.' என்றால் அது ஏட்டிக்குப் போட்டி எனலாம்.

ஆனால் அவளோ என்ன சொல்கிறாள் என்று பாருங்கள், 'வந்தான் வீட்டுக்கு ராமன்.'
இது எப்படியிருக்கு? லொள்ளுதானே!!

இப்ப இந்தப் பாடலைப் பாருங்கள் புரியும்

நான் செய்த பூஜா பலம்
நான் செய்த பூஜா பலம்

நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட

நான் செய்த பூஜா பலம்

இல்லை நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்

அரவிந்த மலரோடு
அனுராக நிலைகாண
ஆதவன் உதயமானான்

இல்லை
ஆதவன் ஒளியோடு
காதலின் நிலை காண
அரவிந்தன் உதயமானான்

நான் செய்த பூஜா பலம்

இல்லை
நான் செய்த பூஜா பலம்

தேன்மலர் மணம் போல
தெய்வீக நிலை காண
தென்றலும் உதயமானான்

இல்லை
தென்றலின் அலையோடு
தெவிட்டாத நிலை காண
தேன்மலர் உதயமானான்

நான் செய்த பூஜா பலம்

இல்லை 'நாம்' செய்த பூஜா பலம்

அப்பாடா! ஒரு வழியா செல்ல யசலல் முடிந்து 'நாம்' ஆகிவிட்டார்கள்.

குணசுந்தரி படத்தில் ஏ.எம்.ராஜா - பி.லீலா பாடிய எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.

இதில் நீங்க எல்லாம் எந்த வகை ஜோடிகள்?
நாங்க ரெண்டாவது வகைங்க!!!அப்ப நீங்க?

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...