Tuesday, August 5, 2008

காமிக்ஸ் கதைகள் ஒரு கேள்வி பதில்

லாங் லாங் அகோ நோபடிக் கேன் ஸே ஹௌ லாங் அகோ!!

முன்பு ஒரு காலத்திலே சிந்துபூந்துறை வீட்டுக்குள்ளே....
நாங்க அடித்த லூட்டிகளை சொல்லப்போறேன்.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையில் வரும் படக்கதிகளை விரும்பிப்படிப்போம். அதில் அரைப்பக்கம் காமிக்ஸ் மீதி அரைப்பக்கம் ஃபாண்டம் கதைகள். நடுப்பக்கம் முழுதும் பிரபல
கார்டூனிஸ்ட் மாரியோ வரைந்த படம் இருக்கும். அதை வைத்துக்கொண்டு அண்ணன் கேள்வி கேக்க, நானும் என் தங்கையும் தேடித்தேடிக் கண்டு பிடிக்க...வெகு சுவாரஸ்யமான விளையாட்டு ஒன்று விளையாடுவோம். பக்கம் முழுதும் கொசகொசவென்று இண்டு இடுக்கு விடாமல் விதவிதமான காரக்டர்களால் நிரம்பியிருக்கும்.

அதை விரித்து வைத்துக்கொண்டு, 'கண்டுபிடி' விளையாட்டு விளையாடுவோம். எங்காவது ஒரு மூலையில் பூனை மீனைக் கவ்விக்கொண்டிருப்பதுபோலிருக்கும் அதைச்சொல்லி கண்டுபிடி என்று ஒருவர் சொல்ல மற்றவர் அது எங்கே ர்ன்று தே....டிக் கண்டுபிடிக்கவேண்டும். இதுபோல் தூணில்சாய்ந்து சிகெரட் பிடிப்பவர்,மரத்திலி இருக்கும் காக்கா, குரங்கு பெடல் போட்டு வைக்கிள் ஓட்டும் சிறுமி, சண்டை போடும் சிறுவர்கள்,
இப்படி போய்க் கொண்டேயிருக்கும்.

இதுதெல்லாம் போக ஸ்க்ராபிள்,சீட்டு,தாயக்கட்டம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள்
விளையாடியதெல்லாம் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.

ஃபாண்டம்(தமிழில் மாயாவி) கதைகள் மிகவும் பிடிக்கும். பின்னாளில் அண்ணன் பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து பள்ளி செல்லும் காலத்தில் அவர்களுக்கும் ஃபாண்டம் கதைகள் பிடித்துப்போயின.ஜூனியர்விகடன் சைசில் காமிக் புத்தகங்கள் வர ஆரம்பித்த புதிது. அண்ணன் எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் குழந்தைகள் படிக்க வாங்கி வருவார்.
பள்ளிப் பாடங்களைவிட வெகு வேகமாக...மனப்பாடமாக படித்துவிடுவார்கள்.

நான் தூத்துக்குடியிலிருந்து சிந்துபூந்துறை போகும் போதெல்லாம் பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அவர்களுக்குச் சமமாக எல்லா விளையாட்டுகளும் விளையாடுவென். ஏன் அவர்களோடு கிரிக்கெட் கூட விளையாடியிருக்கிறேன். 'அத்தே! நீங் ரன் எடுக்க ஓடவேண்டாம்.
உங்க பாட்டை வலது கையிலிருந்து பின்புறமாக இடதுகைக்கு உங்களைச் சுற்றி ஒருமுறை எடுத்தால் ஒரு ரன் என்று எனக்கு எக்ஸெப்ஷன் கொடுப்பார்கள்.

இது எப்போது என்று நினைக்கிறீர்கள்? முதல் பிரசவம் முடிந்து மூன்றாம் மாதத்தில்! அதனால்தான் அந்த எக்ஸெப்ஷன்!!குழந்தை தூங்கும்போது அவர்களோடு விளையாட ஓடிவிடுவேன்.மதனி வந்து சத்தம் போட்டதும்தான் உள்ளே வருவேன்.

ஒரு நாள் பிள்ளைகள் எல்லோரும் ஹோம்வொர்க் முடித்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்த போது, 'பிள்ளைகளா! ஒரு புது விளையாட்டு ஆடலாம்.' என்று அழைத்தேன் வெளியே இல்லை ரூமுக்குள்ளேயே ஆடும் ஆட்டம் என்றவுடன் ஆளாளுக்கு வாட்டமான இடமாக
திண்டு தலையணை சகிசதம்....ஒரு காங்கிரஸ் காரியகமிட்டி மீட்டிங் மாதிரி அமர்ந்து கொண்டார்கள்.

உங்களுக்கெல்லாம் ஃபாண்டம் கதை அத்துப்படி...இன்னொரு கதாபாத்திரமான 'மந்திரவாதி
மாண்ட்ரெக்'கும் தலைகீழ் பாடம்! ஆகவே இந்த ரெண்டு கதைகளிலிருந்தும் யார் வேண்டுமானாலும் கேள்வி கேக்கலாம், தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம். ஓகேவா?
ஓஓஓஓஓஓஓக்க்க்க்கே!! என்று ஒரே குரலில் குதுகலமாக கூவினார்கள்.

கேள்விக் கணைகள் ராமர் பாணம் போல் சர்சர் என்று விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டன.
பதில் கணைகள்...? அவைகள் அர்ஜுனன் அம்பு போல் வெச்ச குறி தப்பாது தைத்தன.

ஃபாண்டம் காதலி பேர் என்ன?......டயானா!
அவன் கையில் அணிந்திருக்கும் முத்திரை மோதிரத்தில்என்னகுறி இருக்கும்?..மண்டையோடு!
அவன் வளர்க்கும் செல்லப் பிராணி என்ன மிருகம். சாய்ஸ்...நாய்/ஓநாய்?...ஓநாய்! வாலி!
அவன் குதிரை பேர் என்ன?...கேசரி!
மந்திரவாதி மாண்ட்ரெக் கூட வரும் குள்ளன் பேர் என்ன?...லொதார்!
அவன் மனைவி பேர் என்ன?...நர்மதா!
அடுத்தது என்ன....மறந்து போச்சே!!!

இப்படி கேள்விகளும் பதில்களும் சூடு பறக்கும்.
இப்பவும் பிள்ளைகளோடு கூடி இருக்கும் போது இம்மாதிரியான பழைய நினைவுகளை....
'இனி வராதே....! என்ற ஏக்கத்தோடு மனமெல்லாம் பூரிக்க பகிர்ந்து கொள்ளுவோம்.

4 comments:

  1. டிஸ்ஷ்யூம் .. அடுத்த கட்டத்தில் தாடையில் ஒரு மண்டை ஓட்டு முத்திரையோடு ஒருத்தன் முகம்.. ஆகா காமிக்ஸ் படிச்ச காலமே காலம்..

    ReplyDelete
  2. ஆமா! மூஞ்சியிலே மண்டையோடு முத்திரை வாங்கியவன் அப்புரம் வெளியே தலை காட்டவே முடியாது.
    இப்போ ஏன் இவ்வளவு சுவாரஸ்யங்களே...இல்லை? கயல்விழி முத்துலெட்சுமி!!
    தண்டவாளத்தில் ஏத்திவிட்ட ரயில் போல் ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.

    ReplyDelete
  3. மாண்ரெக்கின் சமையல்காரன் பெயர் என்ன?
    "ஓஜோ"

    மாண்ரெக்குக்கே தெரியாமல் ரகசிய இன்ஸ்ட்ரெக்ஷன் மட்டும் கொடுக்கும் உயர் அதிகாரி யார்..?
    அதுவும் "ஓஜோ"

    ஃபாண்டமுடன் தங்கியிருந்து வெள்ளைக்கார சிறுவன் பெயர் என்ன?
    "ரெக்ஸ்"

    எப்படி இருக்கு நானானி எனது ஞாபக சக்தி? அதெல்லாம் ஒரு அருமையான காலம் இல்லையா:)))?

    ReplyDelete
  4. நான் மறந்து போனதை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்! ராமலஷ்மி!
    உல்லாசமான காலங்கள்!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...