Monday, December 22, 2008

இசை வெள்ளம் நதியாக ஓடும்

சென்ற மாதம் மழை வெள்ளம் சென்னையில் பெருகி ஓடி ஒரு வழியாக வழிந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அதற்குள் இன்னொரு இன்ப வெள்ளம் நகரையே மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது.....இசை விழா என்ற பேரில்.

எண்பதுகளில் ஆதம்பாக்கத்திலிருக்கும் போது டிசம்பர் முதல் தேதி ஹிண்டு பேப்பரில் பிரசுரமாகியிருக்கும் ஒவ்வொரு சபாக்களிலும் நடக்கப் போகும் நிகழ்ச்சி நிரலில் எனக்கு வேண்டியதை மட்டும் பள்ளிப் பிள்ளைகளைப்போல் டைம்டேபிள் மாதிரி குறித்து வைத்துக்கொள்வேன்.

ரங்கமணி ஆபீசிலிருந்து வர எட்டரை மணி ஆகிவிடுமென்பதால் நான் மட்டுமே போவேன்.
ஆனால் ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு. ஆகா!
என்று கிளம்பி விடுவேன். இரவு உணவு தயார் செய்து வைத்துவிட்டு பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிண்டி வரை மின்சார ரயில்...அங்கிருந்து பஸ்ஸில் மைலாப்பூர், அல்லது மாம்பலம் வரை ரயில் அங்கிருந்து ஆட்டோவில் சபாக்கள் என்று ஓடி ஓடி ரசிப்பேன்.

இதில் பெரும் சோகம் என்னவென்றால் ஒன்பது மணிக்கு வீட்டிலிருக்க வேண்டுமென்றால் நான் எட்டு மணிக்கே சபாவை விட்டு எந்திரிக்க வேண்டும். எட்டு மணிக்குத்தான் கச்சேரியே களை கட்ட ஆரம்பிக்கும். பாதியில் எழுவதும் மரியாதையில்லை. தர்...மசங்கடம்தான்.

அதுவும் பாதி கீர்த்தனையில் எழாமல் ஒன்று முடிந்து அடுத்தது ஆரம்பிக்குமுன் எழுந்து வெளியேறி விடுவேன்....மனமில்லாமல். இதில் வேடிக்கை என்னவென்றால்....வித்வான்கள் தங்கள் பேட்டியில், தங்கள் வெளிநாட்டு கச்சேரிகளை மிகவும் சிலாகித்து பேசுவார்கள். "வெளிநாட்டில் கச்சேரி முடியும் வரை அமைதியாக ஒக்காந்து ரசிப்பார்கள்." எங்களைப் போன்றவர்களது சங்கடங்களை அறியாமல்.
'என்ன கொடுமையிது தியாகராஜா!!'
சொல்லப் போனால் இம்மாதிரி ரசிகர்களால்தானே அவர்கள் ஆகாயத்தில் பறக்க முடிந்தது?

பின்னர் அடையாறு வந்து சேர்ந்தவுடன், மகனும் சென்னையில் முதலில் வேலைக்குச் சேர்ந்தவுடன், அம்மாவின் ஆர்வம் அறிந்து, 'அம்மா! இன்று எந்த சபா? எத்தனை மணிக்கு?' என்று கேட்டு மாலை என்னை ஸ்கூட்டரில் சபாவில் ட்ராப் செய்துவிட்டு ஒன்பதரை மணிக்கு சரியாக வந்து பிக்கப் செய்து கொள்வான். அவன் சென்னையிலிருக்கும் வரை சுகமாக, முழு கச்சேரிகளையும் கேட்க முடிந்தது. மறக்க முடியாத ரெண்டு வருடங்கள்.

ரங்கமணி வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் அவரும் சபாவில் ட்ராப் செய்து பிக்கப் செய்ய ஆரம்பித்தார். ஒரு முறை கச்சேரி முடியு முன்பே வந்து காத்திருந்தவரை கேட்டிலிருந்தவர், சும்மா உள்ளே போய் உக்காருங்க, என்றிருக்கிறார். தயங்கியபடியே கடைசி வரிசையில் அமர்ந்தவர்....கடைசியில் பாடப்படும் துக்கடாக்களைக் கேட்டு மிகவும் ரசித்துவிட்டு, நான் வந்ததும், 'நீ வீட்டில் போட்டு கேக்கும் பாடல்களாகப் பாடினாரே! நல்லாருந்துது!' என்றவர்.
அது முதல் என்னோடு கச்சேரிகளுக்கும் வர ஆரம்பித்தார். எனக்கு ரொம்ப நல்லதாப் போச்சு!! எங்காத்துக்காரரும் என்னோடு கச்சேரிக்கு வந்தாரே!!!

இந்த வருடம் நான் போன முதல் கச்சேரி....அடுத்த பதிவில்.

11 comments:

  1. மழை வெள்ளம், இசை வெள்ளம், ஒரே நாளில் மூன்று பதிவுகள் என பதிவு வெள்ளமா இருக்கே இன்னைக்கு... :)

    ReplyDelete
  2. ஒன்று துன்ப வெள்ளமானால்...மற்றொன்று இன்ப வெள்ளம்!!!உங்களுக்கு எதில் நீந்தப் பிடிக்கும்?

    ReplyDelete
  3. 'தலைய ஆட்டும் புரியாத கூட்டம்' ...
    வடிவேலு ஷ்டைல்ல படிங்க ... "நான் என்னச் சொன்னேன்"

    புரியாமலே இருந்தாலும், நானும் ஆர்வத்துடன் சென்ற காலங்கள் தொன்னூறுகளில். கே.ஜே.ஒய் அவர்களின் கச்சேரி எல்லாம் கேட்டிருக்கேனாக்கும் ...

    கடைசி கடைசினு, தங்க்ஸ் உங்க ஸைடுல இழுத்திட்டீங்க :)))

    ReplyDelete
  4. தட்டச்சுப் பிழை. 'ரங்ஸ்' உங்க பக்கம் இழுத்துட்டீங்க ... :)))

    ReplyDelete
  5. நானும் பெரிய ரசிகை இல்லை சதங்கா! எனக்குத் தெரிந்த ராகங்கள், கீர்த்தனைகள், தமிழ்பாடல்கள் பாடினால் மட்டுமே ரசிக்கமுடியும். மேலும் இசை புரியணும்ன்னு இல்லை.
    மனதை அமைதிப்படுத்தினால்...லேசாக்கினால்...நம்மை மறக்கச் செய்தால் மட்டும் போதுமானது.

    ReplyDelete
  6. அருமையான தலைப்பு எப்போதும் போல.

    //மேலும் இசை புரியணும்ன்னு இல்லை.
    மனதை அமைதிப்படுத்தினால்...லேசாக்கினால்...நம்மை மறக்கச் செய்தால் மட்டும் போதுமானது.//

    உண்மை உண்மை. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். [ஏன்னா எனக்கு கர்நாடக சங்கீதம் புரியாது:(]

    ReplyDelete
  7. ஒரு முறை உணர்ந்து விட்டீர்களானால், ரங்ஸ் மாதிரி நீங்களும் போக ஆரம்பித்து விடுவீர்கள்.

    ReplyDelete
  8. :) ஓ வரப்போகும் இசைப்பதிவுக்கு இது வெள்ளோட்டமா?

    ReplyDelete
  9. அதென்ன சென்னையில் மட்டும் டிசம்பரில் இசை வெள்ளம்? இங்கு பெய்த மழையால் தாமிரபரணியில் வெள்ளம். இசைமழைத் தூறல் கூட கிடையாது. எனக்கு பொறமையாக இருக்கிறது
    சகாதேவன்

    ReplyDelete
  10. அப்படியும் வெச்சுக்கலாம்..கயல்!

    ReplyDelete
  11. புல்லுக்கும் ஆங்கே பொசிய வேண்டுமெனபதே என்னோட ஆவாவும். சகாதேவன்!
    ஆங்காங்கேயிருக்கும் பெரும் புள்ளிகள் முயன்றால் இசைத்தூறல் என்ன...இசைமழையே பெய்யலாம்.
    சேரிதானே?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...