Wednesday, February 11, 2009

"உன்னால் எனக்கு தொல்லை...ஏதும் இனிமேல் இல்லை!" ன்னு நான் சொல்லணும், சேரியா? தொ(ல்)லை பேசியே? கைபேசியே?

உறவுகளோடு உறவாட...உரையாட உதவியாயிருக்கிறாய்--சேரி!
தவறான அழைப்பால் இல்லாத உறவுகளோடும் ஏன் உரையாட வைக்கிறாய்?

கண் அசந்த மதியத் தூக்கம்...அலறுகிறாய் கொஞ்சமும் நாகரிகமில்லாமல்
என்னவோ ஏதோ என்று காது கொடுத்தால், 'மேடம்! நாங்க ----பேங்கிலிருந்து பேசுகிறோம்.'
'சரி! பேசு! சிங்காரப் பைங்கிளியே!' என்றால்...'எங்க பாங்கிலிருந்து லோன் கொடுக்க எங்க தேர்வாயிருக்கிறீங்க. சம்மதமா?' வருமே எரிச்சல் அப்போது!
'சம்மதம்! ஆனால் கடனைத் திருப்பி அடைக்கமாட்டேன். இது உங்களுக்கு சம்மதமா?'
எதிர் முனையில் ம்ம்மூச்!!

மறு முறையும் இதே போலொரு அழைப்பு. இப்போது, 'லோன் வாங்கிக்கிறேன். ஆனால் மாதாமாதம் EMI நீங்கதான் கட்டணும். சம்மதமா?' என்றால், 'என்ன மேடம்! இப்படி சொல்றீங்க?'

பின்ன என்ன உங்களுக்கு பொழுது போகாத மதிய நேரத்தில், பாலையா நாகேஷிடம் கதை கேட்ட மாதிரி, உங்களுக்கு லோன் வேணுமா...கிரேடிட் கார்ட் வேணுமா...வீடு வேணுமா...கார் வேணுமா...இன்னும் ஓப்படையா வேணுமா...கொழுந்தியா வேணுமா?'ன்னு தயவு செய்து தொந்திரவு பண்ணாதீர்கள். ஈதெல்லாம் வேணுமுன்னா நாங்களே உங்களைத்தேடி வருவோம். என்றதும் 'சாரி மேடம்!' மறுமுனை கட்!!!

இதெல்லாம் வேண்டுமென்று நாமே அவர்களைத்தேடிப் போனால், நம்மை அவர்கள் படுத்தும்பாடு தனீ...க்கதை!!! இது 'நிலவரிசை'(LANDLINE)தொ(ல்)லைபேசியின் தொல்லை!

கைபேசியின் கைவரிசையைப் பார்ப்போம்.
காலமில்லாத காலத்திலே நேரமில்லாத நேரத்திலே...இவரும் அழைப்பார். தேவையில்லாமல் அழைக்காதே....! என்று பாடத்தான் வேண்டும்.

அவராவது கூப்பிட்டு கூப்பிட்டு வேணுமா...வேணுமா? என்பார். இவாளோ...அதனையும் SMS கள். கொஞ்சம் கண்டுக்காமலிருந்தால்...'உன் உள்பெட்டி' நிரம்பிவிட்டது என்று இன்னொரு தகவல் வரும். யார் கேட்டது இத்தனை எஸெமெஸ்கள்!!!!

அவற்றையெல்லாம் திறந்துபார்த்தால்....'உனக்கு புதுப்படத்திலிருந்து காலர் ட்யூன் வேணுமா? மாதம் 25 ரூபாய்தான். இன்னொரு விதம், 'கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலளித்துக்கொண்டே வந்தால் யார் அதிக ஸ்கோர் வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஒரு மாருதி கார் பரிசு!!!, ஹோண்டா சிட்டி கார் பரிசு!!!என்று பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி , 'டோயோட்டா கார்!!!!!!!!என்று கார் சாவியை கண் முன் ஆட்டிக்கொண்டேஆசை காட்டும்.
மயங்கி பதிலளித்துக்கொண்டே வந்தால் குறிப்பிட்ட இடத்தில் வந்து, 'நீங்கள் தப்பான 'சாவி வார்த்தையை' அமுக்கிவிட்டீர்கள் என்று நம்மை குமுக்கி எடுத்துவிடுவார்கள்.
பில் தொகை எகிறியதுதான் மிச்சம்!!(என்னதான் நடக்கும் என்று ஒரு முறை முயற்சி செய்த அனுபவம்)

ஓய்வாக அமர்ந்து உள்பெட்டியை திறந்து அத்தனையையும் அழிப்பேன். மறுபடி அதே கதை!!

சில சமயம் நேரடியாக பேசுவார்கள். 'உங்களுக்கு புதுப்பட காலர் ட்யூன்கள் வேணுமா? மாதம் இத்தனை ரூபாய்தான். மாதம் 100 SMS களுக்கு 90ரூபாய்தான். வந்ததே கோபம் தள்ளாத வயதிலும் பொல்லாத புலியெனப் பாய்ந்தேன். 'அம்மாடி!!!எனக்கு சாதாரண ரிங் டோனே போதும் நான் கைபேசி வைத்திருப்பது பிறரோடு பேச மட்டும்தான். அதற்கு வெறும் மணியடித்தாலே போதுமானது. அதோடு நான் SMS உபயோகிப்பதே இல்லை. உங்களால்தான் என் இன்பாக்ஸ் நிறைகிறது!" என்று வள்ளென்று....இல்லையில்லை புலியெனவல்லவா பாய்ந்திருக்கிறேன்....உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று உறுமினேன். 'சாரி மேடம் சாரி மேடம்!!' என்று
ஓடியேவிட்டாள்!!

இதெற்கெல்லாம் எப்படி முடிவு கட்டுவது என்று பில் தொகை வசூலிக்க வந்தவரிடம் கேட்டேன். 'நீங்க சேவை பிரிவுக்கு தகவல் சொன்னால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.' என்று என்னை ஆற்றுப் படுத்தினார். சேவை பிரிவுக்கு சொல்லவேண்டும்.
அதற்குள் சமையலறையிலிருந்து தாளிக்கும் வாசம்!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம். மகள் சேவை செய்திருக்கிறாள். எலுமிச்சைசேவை தேங்காய் சர்க்கரை ஏலக்காய் சேர்த்த இனிப்பு சேவை!!!

முதலில் இந்த சேவையை முழுதாக செய்துவிட்டு, அந்த சேவைக்கு சொல்லலாம்...சேரியா?

33 comments:

  1. எலுமிச்சைசேவை தேங்காய் சர்க்கரை ஏலக்காய் சேர்த்த இனிப்பு சேவை!!!

    முதலில் இந்த சேவையை முழுதாக செய்துவிட்டு, அந்த சேவைக்கு சொல்லலாம்...சேரியா?//

    நானும் ரெடி. எங்கம்மா சேவை நாழியில் போட்டு கஷ்டப்பட்டு பிழிஞ்சு செய்வாங்க. பருப்புசிலி சேத்த வகையும் இருக்கும். அது ஞாபகம் வந்திருச்சு

    ReplyDelete
  2. எனக்கும் இப்படி கால்ஸ் வரும்.

    சாம, பேத தண்ட முறைகளை கையாள்வேன்.

    ( சில இடங்களில் சிரித்து பேசினால் சரி வராது எனும் பட்சத்தில் விசுவாமித்திரரின் வாரிசாகி விடுவேன்)

    :)))))

    ReplyDelete
  3. :)

    அன்புடன்
    சிங்கை நாதன்

    ReplyDelete
  4. போட்டோ போட்டிக்கு படம் போட்டுவிட்டு ஆளைக் காணுமே என்று பார்த்தேன்.
    ஹலோ ஹலோ சுகமா
    என்று கேட்கலாமா என நினைத்தேன்.
    நல்ல வேளை. சே. வை என்று சொல்லியிருப்பீர்கள் போலிருக்கிறதே?
    சகாதேவன்

    ReplyDelete
  5. இப்படித்தான் ஒரு நாள்,தொலை பேசி அழைக்க ,ஓடிப் போ எடுத்தால்,”டாக்டர் இருக்காரா?”சாதாரணமாக விஜயா புக் ஹவ்ஸா?,என்றுதான் ராங் கால் வரும்.அன்று என் வீட்டில் ஒரு டாக்டரைத் தேடி கால் வந்தது.”யாரு டாக்டரா?உங்களுக்கு யார் வேணும்?என்று பதில் உரைத்ததும் “அட நீயா ????உன் நம்பர் எப்படி அடிச்சுது?!!!என்று எதிர் கேள்வி கேட்டவாறு என் அக்கா என்னை,குசலம் விசாரித்தாள்.சில சமயம் ராங் நம்பர் கூட ரைட் நம்பர் ஆகி இனிய தொல்லை பேசியாகிவிடும்.
    நானானிக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்படவில்லையா?

    ReplyDelete
  6. ’உன்னால் எனக்குத் தொல்லை ஏதும் இனிமேல் இல்லை’ என தொல்லை இலா பேசி வர வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. கேட்பது அவர்கள் தொழில் ஆகையால் என்ன பதில் கொடுத்தாலும் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். வேண்டாம் என எழுதிக் கொடுத்த பின்னும் தொடர்கிறது தொல்லை:(!

    goma said...
    //“அட நீயா ????உன் நம்பர் எப்படி அடிச்சுது?!!!//

    ஹிஹி. இது ரிடயல் பட்டனை அமுக்குவதால் வரும் தவறு. என்ன செய்வது, இப்போதெல்லாம் ஒரு நம்பருக்கே 2,3 ஹாண்ட் செட்கள்.

    //சில சமயம் ராங் நம்பர் கூட ரைட் நம்பர் ஆகி இனிய தொல்லை பேசியாகிவிடும்.//

    இனிய தொல்லையானால் பரவாயில்லை:)!

    ReplyDelete
  7. ஹை நானானி. மாட்டிக்கிட்டீங்களா.
    என்னைப் போல கஷ்டப்படறவங்க யாரும் இல்லன்னு நினைச்சேன்.
    இப்ப எல்லாம் போனை ம்யுட்ல போட்டுடறேன். அதாவது 12 மணி டு ரெண்டு மணி.
    உறவில யாரும் என்னைக் கூப்பிட மாட்டாங்க. தூங்கற சிங்கியை எழுப்புவானேன்னு:)
    @ கோமா,

    எங்களுக்கு டாக்டர் சுண்தரராஜனைத் தேடியும், தோட்டங்களா அப்படீன்னும் போன் வரும். ஒருத்தர் இறைவனடி சேர்த்டுட்டார். இன்னோருத்தவங்க நம்பரை மாத்திக்கிட்டாங்க:)

    ReplyDelete
  8. மேலாக படிச்சிருக்கேன். பிறகு வருகிறேன். கைபேசியில் யாரோ அழைக்கிறார்கள் !!!! :)))))

    ReplyDelete
  9. ;)
    இவங்க தொல்லைக்கு அளவே இல்லை..

    ReplyDelete
  10. நாழியில் போட்டு பிழியும் சேவையெல்லாம் பழசாச்சு. ஒரு பாக்கெட் வாங்கி வென்னீரில் போட்டு வடிகட்டி எடுத்தால் பொலபொல சேவை ரெடி! இதுதான் இப்போது முடிகிறது. ஆனால் மகள் புழுங்கல் அரிசி உறப்போட்டு அரைத்து, நாழியில் பிழிந்து சேவை செய்வாள்.
    சேவையிலேயே சிறந்த சேவை அதுதான்!!! 'டுக் டைவர்ஷன்'
    பேசிகளின் தொல்லையில் ஆரம்பித்து
    சேவையில் வந்து நிக்கிறேன்.

    ReplyDelete
  11. சிங்கை நாதனினின் சிரிப்புக்கு என்ன அர்த்தமோ?
    முதல் முறையாக சிங்க நாதம் கேட்கிறது. வந்தனம்!!!

    ReplyDelete
  12. அது எரிச்சலூட்டும் அனாவசிய மதிய அழைப்புகளுக்கு மட்டும்தான்...சகாதேவன்! உங்களுக்கு சே!என்றும் சொல்லமாட்டேன், வை! என்றும் சொல்லமாட்டேன்.
    போற போக்கைப் பார்த்தால் என்ன அழைக்கவே எல்லோரும் பயப்படுவார்கள் போலிருக்கிறதே!!!!

    ReplyDelete
  13. எனக்கும் இப்படி எதையோ தட்ட யாரோ 'ஹலோ!' சொல்லியிருக்கிறார்கள்!!கோமா?
    பேரன் விளையாட்டில் கைபேசியில் எதையாவது அழுத்த கடைசியாக பேசியவர்கள் திரும்ப அழைத்து, 'மறுபடி கூப்பிட்டாயா?' என்பார்கள். நல்ல கூத்துதான்.

    ReplyDelete
  14. ஆமாம் ராமலக்ஷ்மி! எனக்கும் அந்த இனிய தொல்லை நேர்ந்திருக்கிறது.
    நானும், 'அட! நீயா?' என்றும் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  15. கேட்பது அவர்கள் தொழில்தான், ஒத்துக்கிறேன். அதுக்கு நமது ஓய்வான மதிய நேரம்தான் கிடைத்ததா? அதுதான் என் ஆதங்கம்.

    ReplyDelete
  16. ஆக....என்னைப் போல் மாட்டியவர்கள் நிறைய உண்டு என்று இதனால் அறியப்படுகிறது. ஆஹா! என்னவொரு சந்தோஷமப்பா!!!!

    ReplyDelete
  17. உங்கள் கைபேசியின் அழைப்பு உருப்படியான அழைப்பாக இருக்கட்டும்..சதங்கா!

    நீங்க மாட்டிய விபரமறிய காத்திருக்கேன்.

    ReplyDelete
  18. அப்படிப் போடுங்க!!!கயல்!!

    ReplyDelete
  19. //சிங்கை நாதனினின் சிரிப்புக்கு என்ன அர்த்தமோ?//
    முதல் முறையாக
    //'சிங்க நாதம்'//கேட்கிறது. வந்தனம்!!!

    :)

    எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லன்னு சொன்னேனே பார்க்கலியா நீங்க

    http://sandanamullai.blogspot.com/2009/02/blog-post.html

    ReplyDelete
  20. நானானியக்கா! இங்க பாருங்க கண்மணி டீச்சர் கிட்ட தட்ட உங்களை "நானா நீ"ன்னு கேக்குற மாதிரி இருக்கு. ஆனா அது வங்கி தொல்லை! அதன்ன கொடுமை, இந்த போன் எல்லாரையும் பாடா படுத்துது! வல்லிம்மா கூட மாட்டிகிட்டாங்களா? சந்தோஷம் மகிழ்ச்சி!

    ReplyDelete
  21. ஆனா ஒண்ணு! என் கிட்ட போன்ல மாட்டினவன் தான் இதுவரை போனை தூக்கி கடாசிட்டு காசிக்கு ஓடியிருக்கான் என்பதை என் இரண்டு பதிவிலே இருந்து மேற்க்கோள் காட்டி தாழ்மையுடன் செப்பிக்கிறேன்:-))

    ReplyDelete
  22. ஒரே ஒரு ராங் நம்பருக்கு மட்டும் கிட்டத் தட்ட,அவர்கள் தட்டத் தட்ட நான் பொறுமையாக ,பதில் கூறி வருகிறேன்.அதுதான் “விஜயா புக் ஸ்டோருங்களா?” குழந்தைகளின் புத்தகத்துக்காக அலையும் பெற்றோரின் சிரத்தையும் சிரமும் புரிந்ததால் அந்த பவ்யமான ,”ராங் நம்பர்,”சொல்லி வருகிறேன்.[விஜயா கடையும் என் நம்பரும் அதே எட்டு எண்கள்தான் ஆனால் ஏதோ இரண்டு நம்பர்கள் இடம் மாறி இருக்கும்].

    ReplyDelete
  23. நல்ல ஹாஸ்யமா எழுதுறீங்க >>>

    மென்மேலும் தங்களுக்கு இடர்கள் வரவேண்டும்

    அவற்றை உங்களது ஸ்பெஷல் பாணியில் தருவீர்கள் என்னும் எதிர்பார்ப்புடன் நிற்கும்

    எனது சுயநலத்தை மன்னிக்க வேண்டுகின்றேன்

    ReplyDelete
  24. [[[ 'pretty to walk with- witty to talk with - என் தலைமையாசிரியர் சொன்னது ]]]

    அதெப்படி உங்களது WIT நிரம்பிய எழுதும் கொடையை கவனிக்காது
    போனார் ஹெட் டீச்சர் ?

    ReplyDelete
  25. ஹஹ்ஹா..தலைப்பு நல்லா இருக்கே! சேவை முடிஞ்சுதா? காமெடியா சொல்லியிருக்கீங்க!! :-)

    //லோன் வாங்கிக்கிறேன். ஆனால் மாதாமாதம் EMI நீங்கதான் கட்டணும். சம்மதமா?' என்றால், '//

    LOL!

    ReplyDelete
  26. நானானி

    நான் காச்சு மூச்சுன்னு கத்தித் தீத்துடுவேன் - வேணாம்மான்னு சொன்னா - ஏன் சார் வேணாம் - இது நல்ல ஆபஃர் சார் - வேணானு சொன்னா காரணம் சொல்லுங்க சார்னு வுடமாட்டாங்க .

    I dont think i owe u an explanation -னு கத்தினா - அப்படியா சரி இருங்க எங்க பாஸ் பேசுவார்னு - அவரு வந்து தமிழும் தெரியாது இங்கிலீபீசும் தெரியாது - இந்திலே பேசுவாரு - நானும் ........ வேனாம் - இதோட நிறுத்திக்கறேன்

    ReplyDelete
  27. போனிலே மாட்டினவன் எல்லாம் காசிக்கு ஓடினால்...அவன் கருமம்தானே தொலையும்? நம்மளோடது? அபி அப்பா!!

    ReplyDelete
  28. நல்ல சேவைதான் கோமா!!

    ReplyDelete
  29. benzaloy!!
    எனக்கு இடர்கள் வந்தால் உங்களுக்கு சிரிப்பா?
    எனக்கு இடுக்கண் வருங்கால்
    நீங்க நகுக!!!

    ReplyDelete
  30. அப்போதெல்லாம் நான் எழுவதே இல்லயே! பென்ஸோலி!!

    ReplyDelete
  31. திருவிளையாடல் தருமி மாதிரி உங்களையும் புலம்ப வச்சிட்டானா அந்த போன்காரன்? சீனா!!

    ReplyDelete
  32. இங்க அந்த தொல்லை எல்லாம் இல்ல... ஊரில் இருந்த போது போன் செஞ்சே அறுப்பானுக...:(

    ReplyDelete
  33. வருக..வருக..!தமிழ்பிரியன்! பிரயாணமெல்லாம் நல்லபடியாக இருந்ததா? ஊருக்குப் போனால் நீங்க ஒரு விஐபி...அறுக்கத்தானே செய்வாங்க?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...