Wednesday, July 1, 2009

நலங்கெட புழுதியில்....(உரையாடல்- சிறுகதை) பாகம் ஒன்று

உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக ஆரம்பித்து முடிவு தேதிக்குள் பிரசுரிக்க இயலவில்லை.ஆனாலும் என்ன? வாசித்துத்தான் பாருங்களேன். சேரியா?

நலங்கெட புழுதியில்....

'ஜெயா! மோகன ராகத்துக்கு நிஷாதம் உண்டா? உண்டு என்கிறேன் நான், இல்லை என்கிறான் என் சிநேகிதன் முரளி. நீ சொல்லு.' என்று சமையற்கட்டிற்கு ஓடிவந்தான் ஜெயாவின் கணவன் ஸ்ரீனிவாஸ்.

'கிடையாதுங்க மோகனத்துக்கு மத்தியமும் நிஷாதமும் கிடையாது. அவர் சொல்வதுதான் சரி.' என்றாள் ஜெயா மெதுவாக. உர்ர்ர்ர்ர்ரென்று முகம் வைத்துக் கொண்டு திரும்பினான்.

மற்றொருநாள் இதேபோல் ஓடிவந்தான் சமையலறைக்குள். 'ஜெயா! தாளவகைகளில் சிரமமான தாளம் எது?' வழக்கம் போல் மெல்லிய குரலில், 'அடதாளம்ங்க.' என்று நிறுத்திக் கொண்டாள்.

இது வழக்கமாக அவர்கள் வீட்டில் நடக்கும் ஒரு நாடகம். ஆம் நாடகம்தான். வரும் விருந்தினர் முன்னிலையில் தான் ஒரு சங்கீத ரசிகன் என்று காட்டிக்கொள்ள, சங்கீத சம்பந்தமான உரையாடலில் வரும் சந்தேகங்களை கிச்சனில்....கிச்சனிலேயே இருக்கும் ஜெயாவிடம் வந்து சந்தேகம் கேட்பதும் அவளும் கிசுகிசுத்த குரலில் அவன் கேள்விக்கு மட்டும் விடையளித்து விட்டு மௌனமாவதும் அடிக்கடி நடக்கும் நாடகம்.

ஏன் ஜெயாவும் விருந்தினரோடு அமர்ந்து உரையாடவில்லை? இந்த கேள்விக்கு நாம் சுமார் இருபத்தைந்து வருடங்கள் காலச்சக்கரத்தை பின்னோக்கி உருட்ட வேண்டும்.

ஜெயா சமையலறை சுவரில் சாய்ந்து மனச்சக்கரத்தை இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கி உருட்டினாள்.

'ஜெயா! இன்னிக்கி உன் கச்சேரி மேடையிலேயே நீ பாடும் போதே உன்னைப் பெண்பார்க்க வருகிறார்கள், மாப்பிள்ளையும் அவர் அப்பா அம்மாவும்.' என்று பெருமையோடு சொன்னாள் அம்மா.

'அம்மா! கச்சேரியிலா..அதுவும் பாடும் போதா....?' சிணுங்கினாள்.

'அவர்களுக்கும் நேரமில்லை...உனக்கும் நேரமில்லை. எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை'

ஜெயாவும் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்.

நாரதகான சபாவில் கச்சேரி. ஜெயா அப்போது பிரபலமான கர்நாடக சங்கீத பாடகியாக பரிமளித்துக் கொண்டிருந்த நேரம். டிசம்பர் ஜனவரி விடாத ப்ரோக்ராம்கள். அது முடிந்ததும் திருவாரூர் பயணம். அது முடிந்து சிறிது ஓய்வு. பிறகு மே மாதம் முதல் ஜூலை வரை வெளிநாட்டு கச்சேரிகள். இப்படி ஒளிர்ந்து கொண்டிருந்தது அவளது கலை.

நாரதகான சபாவில் கச்சேரி ஆரம்பித்து அரைமணி நேரமாயிற்று. கரகரப்பிரியாவில் சக்கனிராஜாவை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தாள். அப்போது கடகடவென்று சபையில் நுழைந்து முதல் வரிசையில் ரிசர்வ் செய்திருந்த ஆசனங்களில் அமர்ந்தனர் மூவர்.
அவர்கள்தான் கச்சேரியிலேயே பாடகியைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையும் அவனது பெற்றோரும்.

'நல்லா பாத்துக்கடா...சீனி! அப்புரம் வந்து நொள்ளை சொல்லக் கூடாது.'

'நொள்ளை சொல்ல என்னம்மா இருக்கு? கண்ணுக்கு லட்சணமா இருக்கா? அப்புரமென்ன?'

'அவ சங்கீத ஞானம் எப்படி?'

'அதப் பத்தி எனக்கென்னம்மா? அழ..காருக்கா. அது போதும்.'

இந்த உரையாடலை ஜெயாவும் அவளது பெற்றோரும் கேட்டிருந்தால்...அவளது தலையெழுத்தே மாறியிருக்கும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள்?

பையன் நல்லாயிருக்கான், நல்ல வேலை, கை நிறைய சம்பளம், நல்ல குடும்பம், ஜெயா அதிர்ஷ்டக்காரி என்று தீர்மானித்து திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.

தொடரும்

33 comments:

  1. அது ஏன் “புளுதியில்”?

    தொடக்கம் அமர்க்களமா இருக்கு. அடுத்த பாகம் சீக்கிரம் கொடுங்க.

    ReplyDelete
  2. நான் கெஸ் பண்ணீட்டேனே .ஆனா சொல்ல மாட்டேனே

    ReplyDelete
  3. வாங்க...வாங்க..ராஜா! மொதொ மொதோ வந்துருக்கீங்க.

    //அது ஏன் “புளுதியில்”?//
    ஆமாம்! புழுதியில்தான். முழுசும் படிச்சிட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  4. ஸ்ருதி சேர்ந்து சூப்பரா கச்சேரி களை கட்டத் தொடங்கி விட்டது......

    ReplyDelete
  5. தலைப்பையும் ஆரம்பத்தையும் வைத்து தாராளமா யூகித்து விடலாம்தான். ஆனா எப்படி என்பது சஸ்பென்ஸ்தானே? அனானி!!

    ReplyDelete
  6. மங்களம் பாடும் போது பாப்போம் கோமா!

    ReplyDelete
  7. அன்பு நானானி, கதையில் தலைப்பு “நலங்கெட புழுதியில்”, ஆனால் “நலங்கெட புளுதியில்” என்று இருக்கிறதே, அதை தான் ஏன் என்று கேட்டேன்.

    முதன்முறையாக வரவில்லை, முதன்முறையாக பின்னூட்டம் இட்டிருக்கிறேன் :-)

    ReplyDelete
  8. வந்துட்டாங்கையா...வந்துட்டாங்கையா...! துள்சிக்கு அண்ணாச்சி!
    தவறுதான். ஆனைக்கு அடி சறுக்குமென்றால் எனக்கு ஒரு அங்குலமாவது சறுக்காதா?

    தவற்றை தைரியமாக ஏற்றுக் கொள்வேன். சரி செய்கிறேன்.

    அடிக்கடி வந்து போவது எனக்கெப்படித் தெரியும்? பின்னூட்டமிட்டால்தானே தெரியும்?

    ReplyDelete
  9. தவற்றை தைரியமாக ஏற்றுக் கொள்வேன். சரி செய்கிறேன்.....

    ’தவற்றை’ இல்லை ... ’தவறை.’ என்று திருத்திக்கொள்ளவும்

    ReplyDelete
  10. மங்களம் பாடும் போது பாப்போம் கோமா....
    ஏன் மங்களம் பாடும் போது ...அதற்கிடையே என்னவெல்லாமோ வருமே ,அப்போ பார்க்கக் கூடாதா....

    ReplyDelete
  11. சரிங் பதவிசா கதை சொல்லுங்க

    ReplyDelete
  12. யப்பாஆஆஆஆ! இதுக்குன்னே இருப்பீகளோ? வரிசை கட்டி!
    கொஞ்சம் கேப் விட்டதில் என்னடி நானானி உனக்கு வந்த சோதனை!!

    ReplyDelete
  13. இடையில் என்னென்னவோ வரும்தான். ஆனால் கதைக்கு க்ளைமேக்ஸ் தானே முக்கியம்?

    ReplyDelete
  14. 'ச ரி க ப த சா' என்ன ராகம் சகாதேவன்?

    ReplyDelete
  15. உங்களூக்காக, உரையாடல் போட்டியின் தேதியை தள்ளீப் போட்டால் தேவலாம்

    ReplyDelete
  16. மோகன ராகத்திற்கு மத்யமமும், நிஷாதமும் கிடையாது என்று உங்கள் ஜெயா சொன்னாளே. அதான் மோகனத்தில் பின்னூட்டினேன். தப்பா?
    சகாதேவன்

    ReplyDelete
  17. //'ச ரி க ப த சா' என்ன ராகம் //

    ஆரோகனம் :))

    இன்னும் கதையைப் படிக்கவில்லை, படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  18. அடுத்த பகுதி எப்போ??

    ReplyDelete
  19. போட்டியில் கலந்து கொள்வது ஒரு பக்கம். மனதில் உருளுவதை பதிவில் உருட்டி விடவேண்டும் என்பதே முக்கியம்.

    ReplyDelete
  20. ஹ்ஹஹ்ஹா...இது மோகனப் புன்னகை.
    சுருதி சுத்தம்! சகாதேவன்!

    ReplyDelete
  21. ஸா த ப க ரி ஸா. இது அவரோகணம்.
    ரெண்டையும் படிச்சிட்டு வாருங்கள், சதங்கா!

    ReplyDelete
  22. சீக்கரமே...! சின்ன அம்மணி!!
    ரொம்பநாளா காணோமே?

    ReplyDelete
  23. சரிதானே. நான் பயந்து விட்டேன்
    நானும் கொஞ்சநாள் வீணையில் கீதம் வரை படி(வாசி)ச்சிருக்கேன்.
    சகாதேவன்

    ReplyDelete
  24. //விருந்தினர் முன்னிலையில் தான் ஒரு சங்கீத ரசிகன் என்று காட்டிக்கொள்ள//

    நிஜமான வரிகள்.

    //சங்கீத சம்பந்தமான உரையாடலில் வரும் சந்தேகங்களை கிச்சனில்//

    போட்டிக்கான கதைனு சொல்லிட்டு, போட்டி பத்தி சூசகமா சொல்லியிருக்கீங்க. அற்புதம்.

    //ஏன் ஜெயாவும் விருந்தினரோடு அமர்ந்து உரையாடவில்லை? இந்த கேள்விக்கு நாம் சுமார் இருபத்தைந்து வருடங்கள் காலச்சக்கரத்தை பின்னோக்கி உருட்ட வேண்டும்.//

    கல்கியின் டச் தெரிகிறது உங்கள் வரிகளில். க்ரேட்.

    அடுத்த பாகம் எப்போ ?

    ReplyDelete
  25. நானானிம்மா,

    Not for Publishing ...

    சில பதிவுகள் இங்க வந்து பாருங்க நேரம் இருக்கும் போது.

    http://vazhakkampol.blogspot.com/

    உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா உங்க மின்னஞ்சல் முகவரி தர்றீங்களா ? 'செக், கிக்' எல்லாம் கேட்டு மெயில் பண்ணி தொந்தரவு பண்ண மாட்டேன் :)) பதிவ 'செக்' பண்ணுங்கனு தான் வரும் :))

    எனது முகவரி

    sathanga@gmail.com

    ReplyDelete
  26. சதங்காவைத் தொடர்ந்து நானும் ஆவலுடன் கேட்கிறேன், “அடுத்த பாகம் எப்போ?”

    ReplyDelete
  27. //நானும் கொஞ்சநாள் வீணையில் கீதம் வரை படி(வாசி)ச்சிருக்கேன்//

    அடடே! போதுமே சகா!
    ஆனா 'படி-யா? வாசியா-?'

    ReplyDelete
  28. //கல்கியின் டச் தெரிகிறது உங்கள் வரிகளில். க்ரேட்.//

    ஒரு ஐஸ் மழை தலையில் பொழிகிறது. ஆனாலும் இது கொஞ்சம் ஓவராத் தெரியலை சதங்கா? இருந்தாலும் ரொம்ப சந்தோசம்!!!

    ReplyDelete
  29. // “அடுத்த பாகம் எப்போ?”//

    ராமலக்ஷ்மி!!!முன்று பாகங்களும் பொலபொல வென்று வந்து விழுந்து விட்டது..காணீர்!!!

    ReplyDelete
  30. வல்லி!
    கேளுங்க...கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!!!பதில் சொல்ல காத்திருக்கேன்.

    ReplyDelete
  31. //வந்துட்டாங்கையா...வந்துட்டாங்கையா...! துள்சிக்கு அண்ணாச்சி!
    தவறுதான். ஆனைக்கு அடி சறுக்குமென்றால் எனக்கு ஒரு அங்குலமாவது சறுக்காதா?//

    இல்லை, நான் துள்சியக்காவுக்கு தம்பி :-).

    இனி படிக்கும்போது பின்னூட்டமும் போடுறேன்.

    ReplyDelete
  32. ம்ம் நல்ல உரையாடல் ... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...