Thursday, July 2, 2009

நலங்கெட புழுதியில்....உரையாடல் சிறுகதை பாகம் மூன்று.

ஆம்! ஜெயா அறைக்குள் என்ன செய்கிறாள் என்பது யாருக்குமே தெரியாது.

ஹிந்தோள ராகத்தில் பஞ்சமத்தை சேர்த்தாற்போல் அபசுரமாக ஒலித்த அவள் வாழ்கையில் அவளாக இருந்த நேரங்கள் அவள் தன் அறையில் அழித்த காலங்கள்தான்.



முதுமை வரவர அதற்குத்தேவையான நோய்களும் அவளை அண்ட ஆரம்பித்தன. ஆஹா! இவைகளாவது தன்னிடம் வருகிறதே என்று அற்ப சந்தோஷமடைந்தாள் ஜெயா.



ஸ்ரீனிவாசன் அந்த குறையெல்லாம் வைக்கவில்லை. முறையான வைத்திய பரிசோதனைகள் நடத்தி, தேவையான மருந்துகள் வாங்கிக்கொடுத்து கவனித்துக்கொண்டான்.

ஆனால் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்த அந்த இதயம் ஒரு நாள் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. குழந்தைகள் ராஜுவும் சித்ராவும் ஆடித்தான் போனார்கள். இழப்பிலேதானே அருமை தெரியும்!

எந்த உறுத்தலும் இல்லாமல் மகன் ராஜுவைக் கொண்டு அவள் கடைசி காரியங்களை செய்து முடித்தான்.

ஒரு வாரம் கழித்து ராஜுவையும் சித்ராவையும் அழைத்துக்கொண்டு ஜெயாவின் அறையைத் திறந்தான். படுசுத்தமாக நேர்த்தியாக அது அது இருக்கவேண்டிய இடத்தில் இருந்தது அவளது அறை.

பெரிய மேஜை, மேஜை விளக்கு, எழுதும் பாட், பேனாக்கள், கத்தை கத்தையாக எழுதாத பேப்பர்கள். மேஜை ட்ராயரைத்திறந்தார்கள்.....அங்கே அழகாக தொகுக்கப்பட்டு , ஐந்தாறு பைல்கள் இருந்தன.

தாயின் ரத்தமும் ஓடியதால் ராஜுவுக்கும் சித்ராவுக்கும் இயல்பிலேயே சங்கீத ஞானம் இழைந்து ஓடியது.

பைல்கள் ஒவ்வொன்றாக படித்துப் பார்த்தார்கள். வா...வ்!!! அத்தனையும் பொக்கிஷங்கள்!! பலவகையான ராகங்களைக் கலந்து எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை, அமிர்தவர்ஷிணி ராகத்துக்கு மழை பெய்யுமா? அது எப்படி? என்ற விளக்க உரை. சங்கீத மும்மூர்த்திகளையும் அவர்களது கீர்த்தனைகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட மற்றொரு ஆராய்ச்சிக் கட்டுரை...இப்படி அள்ள அள்ள குறையாத அட்க்ஷய பாத்திரம் போல் வந்து கொண்டேயிருந்தது. பிள்ளைகள் மனமெல்லாம் பொங்கிப் பூரித்தது, அம்மாவின் திறமைகளை கண்கூடாக கண்டபோது. இறுதியாக ஒரு டைரி! தனது அவல வாழ்கையையும் அணுஅணுவாக ரசித்து எழுதியிருந்தாள்.

படித்துவிட்டு முகமும் கண்களும் சிவக்க தாயின் தெய்வீகத்தை தரிசிக்க விடாமல் மறைத்த தந்தையை ஏறிட்டார்கள். அவற்றின் உஷ்ணம் தாளாமல் தலையை குனிந்து கொண்டான். இனி அவன் தலை நிமிரவே முடியாது.

வாழும் போது தாயின் அருமை பெருமை தெரிய மாட்டாமல் வளர்ந்த தங்கள் விதியை நொந்து கொண்டு குமுறி அழ ஆரம்பித்தார்கள். தேற்ற வந்த தந்தையை வெறுப்போடு உதறித் தள்ளினார்கள்.

இனி ஜெயாவின் அறை ஸ்ரீனிவாசனுக்குத்தான்.



உடலால் புழுதியில் கிடந்த தாயின் நினைவுகளை தூசிதட்டி எடுத்து கோபுரத்தில் ஏற்றி வைத்து கும்பாபிஷேகமும் நடத்தி கண்களில் கண்ணீர் வழிய அம்மாவின் ஆத்மாவுக்கு அமைதியையும் தந்து அஞ்சலி செய்தார்கள்.

18 comments:

  1. உருக்கம்.

    அருமையான கதை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. Very touching mam.... entha mathiri aangal thane enga athigama erukanga....

    romba arumaya sonnenga.... we will know the value of someone or something, only when we lose it..

    குயிலைப் பிடித்தான் கூட்டிலும் அடைத்தான் ஆனால் பாட மட்டும் சொல்லவில்லை.... SUPERB!!!

    ReplyDelete
  3. இடையில் என்னவெல்லாமோ வந்தாலும்
    க்ளைமாக்ஸ் உருக்கி விட்டது.தியேட்டரில் லைட் போடுமுன் கண்ணீரைத்துடக்கணும்மாதிரி ஃபீல் பண்ணினேன்.

    ReplyDelete
  4. இது போல் எத்தனை வீணைகள் புழுதியில் வீசப் பட்டுக்
    கிடக்கின்றனவோ...கலையைத் தந்த கலைவாணி இதையெல்லாம் கவனிக்க மாட்டாளா....

    ReplyDelete
  5. பாருங்களேன் நல்ல கருத்தை விதைத்த கற்பனைக் கடவுள் கணினியை முடக்கி விட்டானே....இதற்கு யாரை நோக...

    ReplyDelete
  6. //இனி அவன் தலை நிமிரவே முடியாது.//

    :(

    ReplyDelete
  7. ராமலக்ஷ்மி!
    நீங்களே பாராட்டினால் நல்லாத்தானிருக்குன்னு அர்த்தம். சந்தோசம்!

    ReplyDelete
  8. வர்தினி!
    அருமையா சொன்னதுக்கு
    அருமையா பாராட்டியிருக்கீங்க. நன்றி!

    ReplyDelete
  9. எழுதிய எனக்கே தாங்கவில்லை.
    சுபமாய் முடித்திருந்தால் இந்த எஃபக்ட் கிடைத்திருக்காதுதானே?

    ReplyDelete
  10. நம் கண்களுக்குத் தெரியாமல் எத்தனையோ மண்ணோடு மண்ணாகிப் போனதுவோ?

    ReplyDelete
  11. இதற்கு கலைவாணீயை கேட்டு என்ன பயன்? விதியைத்தான் நோகணும்.

    ReplyDelete
  12. கோமா! இதுவும் விதியின் சதிதான்.
    எதுஎது எப்போ நேரணும்ன்னு ஒரு கணக்கிருக்கே!!

    ReplyDelete
  13. இந்த ஸ்ரீனிவாசனைப் போல் இன்னும் எத்தனையோ. நானானி,
    ஒளிந்திருந்த வீணையின் கதையை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். நானாக இருந்தால் அந்தக் கணவன் காதில் எப்போதும் சங்கீதம் ஒலிக்க வேண்டும் என்று தண்டனை கொடுப்பேன்.

    ReplyDelete
  14. சரியான தண்டனைதான். வல்லி!
    அவன் மனதில் கொழுந்திவிட்டெறிந்த பொறாமைத் தீயை எப்படி அணைப்பது? இனி அணைத்தாலும் என்ன பிரயோஜனம்?

    நிறைய கணவன்மார்கள் எங்கே தன் மனைவி தன்னை தூக்கிப் போட்டு ஏறி மிதித்து தன்னை விட பெரிய ஆளாகிவிடுவாளோ? என்ற பயத்தில்தான் இது போல் நடந்து கொள்கிறார்கள்.

    ReplyDelete
  15. சொல்லடி சிவசக்தி,
    சுடர் விடும் அறிவுடன் என்னைப் படைத்துவிட்டு, உண்மை வேண்டியபடி சொல்லும் திறன் இருந்தும் நிலச்சுமையென வாழவைத்து இந்த மானிலம் பயனுற வாழவிடாமல், என் வல்லமையை புழுதியில் எறிந்து விட்டாயே.
    இப்படித்தானே ஜெயா இத்தனை வருஷங்களாக தன்னறையிலேயே பாடியிருப்பாள். கதைக்கேற்ற அருமையான தலைப்பு.
    உங்களுக்கு ஒரு ஆறுதல் பரிசு நிச்சயம்

    சகாதேவன்

    ReplyDelete
  16. சகாதேவன்!

    // கதைக்கேற்ற அருமையான தலைப்பு.
    உங்களுக்கு ஒரு ஆறுதல் பரிசு நிச்சயம்//

    இவ்வரிகளே நிஜமான பரிசு!

    நாந்தான் போட்டியிலேயே கலந்துக்கலையே!
    ஏன்?
    நா கலந்துக்கிட்டா ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துடுவாங்களே!!
    ஹா..ஹா..ஹி..ஹி..!!

    ReplyDelete
  17. //உருக்கம்.

    அருமையான கதை. பாராட்டுக்கள்!
    //

    அதே ! அதே !!

    //நாந்தான் போட்டியிலேயே கலந்துக்கலையே!
    ஏன்?
    நா கலந்துக்கிட்டா ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துடுவாங்களே!!
    ஹா..ஹா..ஹி..ஹி..!!//

    இதுக்கும் அதே, அதே போட மனசு வரவில்லை :)))

    ReplyDelete
  18. பாராட்டுக்கு நன்றி! சதங்கா!

    //இதுக்கும் அதே, அதே போட மனசு வரவில்லை :)))//

    அது ஏன் அப்படி?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...