Sunday, December 6, 2009

பசுமை நிறைந்த நினைவுகளே



ஓடோடி வாருங்கள் பழைய தோழிகளே!!!

நம் மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய ரெவ். மதர் அலெக்ஸ் அவர்களுக்கு 100-வது பிறந்தநாள்!

அதன் கொண்டாட்டங்கள் வரும் 10-12-09 அன்று ஜெமினி அருகில் உள்ள “சிறுமலர் கான்வெண்டில்(LITTLE FLOWER CONVENT) சிறப்பாக நடைபெற உள்ளது.

எனக்குத் தெரியாதே!’
தெரிந்திருந்தால் வந்திருப்பேனே!’
மிஸ் பண்ணீட்டேனே!’

என்று பிறகு யாரும் ஆவலாதி சொல்லக்கூடாது. ஆமாம்.

பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேஷியஸ் கான்வெண்டடில் மதர் அலெக்ஸின் அன்பிலும் அரவணைப்பிலும் படித்த அப்பள்ளியின் பழைய மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு
அவரின் ஆசி பெற்று செல்ல வேண்டுமென்பதே இவ்வழைப்பின் நோக்கம்.

நாங்கள் சகோதரிகள் நால்வரும் ஒரு சகோதரனும் மதரின் செல்லங்கள். எங்களைக் கண்டால்
அவரது சந்தோஷம் சொல்லி மாளாது.
குறிப்பாக நான் மதர் அலெக்ஸின் செல்லங்களுக்கெல்லாம் செல்லம். கண்டிப்பும் கருணையும் கலந்த அவரோடு சரிக்கு சமமாகப் பேசி, குறும்புகள் பல செய்து உறவாடியது எல்லாம் என்றும் ரசித்து அனுபவிக்கக் கூடியவை.

நான் சிறுசிறு தவறுகள் செய்யும் போதெல்லாம் அப்பப்ப நெழுசலெடுத்தவர். அதே நேரம் தனியாக என்னை அழைத்து அவருக்கு பரிமாறிய கேக்கை அன்போடு வாயில் ஊட்டி விட்டது எல்லாம் மறக்க முடியாதது.

இன்றுவரை டிசம்பர் 10-ஆம் தேதி மதரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கூறி ஆசி பெற்று
செல்வோம். சென்ற டிசம்பரில் போன போது என்னையே கைகளைப்பிடித்து இழுத்து அருகில் அமரச் செய்து கொஞ்சிக் குலாவியதைக் கண்ட என் தங்கையின் நண்பிகள்,

“ஆஹா! கல்யாணி அக்காவைப் பாத்ததும் மதர் நம்மையெல்லாம் மறந்திட்டாங்களே!!!!” என்று செல்லமாய் அங்கலாய்த்தார்கள்.

மதர் அலெக்ஸைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வயதிலும் சிறிது தளர்வோடு நடமாடி, கலகலப்பாக உரையாடி, வயதுக்கான மறதியோடு பெயரை மாற்றி மாற்றி கூப்பிட்டு, “மதர் நான் அவளில்லை....இவளில்லை!” என்று போராடி யார் யார் யாரென்று சொல்லி, சுவாரஸ்யமாக கழிந்த அந்நேரங்கள் இனிமையானவை.

மதர் அலெக்ஸின் தலைமையில்தான் எங்கள் கான்வெண்டில் “மாரல்க்ளாஸ்” என்று ஒரு பிரீயட் உண்டு. இப்போதைய பள்ளிகளில் அதெல்லாம் உண்டா? தெரியவில்லை. எங்களுக்கு மதரே அக்கிளாஸ் எடுப்பார்கள். நல்ல ஒழுக்கம், நல்ல நடை, செய்யக்கூடியவை கூடாதவைபற்றியெல்லாம் அழகாக பாடமெடுப்பார்கள். நாங்கள் என்று ஓரளவுக்கு நல்ல பேர் எடுத்திருக்கிறேமென்றால் அதற்கு அவரது போதனைகளும் காரணம்.

அம்மாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் நாங்கள் மதிக்கும் அம்மா அலெக்ஸ் அவரது நூறாவது பிறந்த நாளை கொண்டாடி அவர் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ என் அம்மாவையும் ஏசுபிரானையும் பிரார்த்திக்கிறேன்.ஆகவே பள்ளியின் பழைய மாணவ மாணவிகளே!!!அனைவரும் ஒன்று கூடுவோம். வாழ்த்துவோம், ஆசி பெறுவோம், நாமும் நம் மலரும் நினைவுகளில் திளைப்போம்.

17 comments:

  1. அன்பின் நானானி

    கொடுத்து வைத்தவர் நீங்கள் - மனதுக்குப் பிடித்த ஆசிரியையின் நூறாவது பிறந்த நாள் நல்விழாவில் கலந்து ஒள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

    மதர் அலெக்ஸூக்கு வணக்கங்களுடன் கூடிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. My mother and aunts would love to read this blog. They admire her very much. HAPPY BIRTHDAY, Mother Alex. you are a legend......

    ReplyDelete
  3. பசுமை நிறைந்த நினைவுகளே. மதர் அலெக்ஸுக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து ஆசிகளைப் பெற்று வர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. அன்பு சீனா,
    உண்மைதான். போன முறை பார்க்கச் சென்ற போது, சிறு குழந்தை போல் கண்களில் நீ வழிய வழியனுப்பியது, கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

    ReplyDelete
  5. சித்ரா,
    உங்கள் வாழ்த்துக்களை மதரிடம் சேர்ப்பித்து விடுகிறேன். சேரியா?
    உங்கள் அம்மா, அத்தைகள் எந்த வருடம் படித்தார்கள்?
    வாழ்த்துக்ககு நன்றி!

    ReplyDelete
  6. ராமலக்ஷ்மி,
    கட்டாயம் உங்கள் வாழ்த்தை தெரிவிக்கிறேன். சேரியா?

    ReplyDelete
  7. என்னுடைய வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க நானானி

    ReplyDelete
  8. மதர் அலெக்ஸ் அவர்களுக்கு பிறந்த நாள் வழ்த்துக்கள். வணக்கங்கள்.

    அவர்கள் ஆசி எல்லோருக்கும் பூரணமாய்
    கிடைக்கட்டும்.

    ReplyDelete
  9. புதுகைத்தென்றல்,

    அப்படியே ஆகட்டும். தென்றலின் வாழ்த்துக்கள் தவறாமல் தெரியப்படுத்தப்படும்.

    ReplyDelete
  10. கோமதி அரசு,
    //அவர்கள் ஆசி எல்லோருக்கும் பூரணமாய்
    கிடைக்கட்டும்.//

    நல்லது.

    ReplyDelete
  11. மதர் : அங்கே என்ன கூட்டம்?
    மாணவி: யாரோ கீழே விழுந்துட்டாங்களாம்
    மதர்: யார் முருகனா?

    நான் இப்படியும் பிரபலம். பார்க்கில் பூ பரித்து பிடிபட்டதாலும் ஃபேமஸ்.
    என்னால் வர முடியவில்லை.
    நாளை உங்கள் பதிவில் நிறைய போட்டோ பார்க்கலாம்

    ReplyDelete
  12. சகாதேவன்,
    மறக்க முடியாத ‘மலர் கண்காட்சி’ உங்களது.

    இன்று மாலை ஊருக்குப் போகிறேன். இந்த விழாவுக்காகவே என் பயணத்தை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறேன். வந்து பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  13. @ சகாதேவன்,

    உங்களைப் போலவே எல்லோரும் ஆவலாகக் காத்திருக்கிறோம்.

    //நாளை உங்கள் பதிவில் நிறைய போட்டோ பார்க்கலாம்//

    நேரிலே சொல்லக் கேட்கும் வாய்ப்பும் உங்களுக்குக் கிட்டலாம்:)!

    ReplyDelete
  14. மேடம் அப்படியே என் வாழ்த்தையும் சேர்த்து சொல்லுங்க.

    //ஆவலாதி//

    வார்த்தையை கேட்டு எம்புட்டு நாளாச்சு.

    ReplyDelete
  15. ..//ஆவலாதி
    நெழுசலெடுத்தவர். //

    நெல்லத் தமிழோ
    மதர் அலெக்ஸ் அம்மாவுக்கு வணக்கங்கள்.இன்னும் 100 ஆண்டு வாழட்டும்

    ReplyDelete
  16. ஆடுமாடு,

    'ஆவலாதி' ஒற்றை நெல்லை வார்த்தையே உங்களை உலுக்கிடுச்சே! இன்னும் முழுதும் நெல்லைத் தமிழிலிலேயே பதிவெழுதினல்..?

    ReplyDelete
  17. கண்மணி,

    ..//ஆவலாதி
    நெழுசலெடுத்தவர். //

    ஆம்! நெல்லைக்கே உரிய ரசனையான வார்த்தை பிரயோககங்கள்.

    ரசிச்சதுக்கு நன்றி!

    வரட்டுமால?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...