Saturday, July 17, 2010

கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் சகோதரி

என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா?

“கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்”

அனுபவத்தால் அறிஞர்கள் கூறும் வார்த்தைகள் பொய்யோ மெய்யோ தெரியாது
ஆனால் என்னைப் பொறுத்தவரை ரெண்டாவது வரியில் சகோதரியையும் சேர்த்துக் கொள்வதே
எனக்கு உவப்பானது. ஆம்! “கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரி” என்றே வாழ்கிறேன். அன்பையும் பாசத்தையுமே கொண்டுவந்தால் போதுமானது.

ஆனால் சமீபகாலங்களில் என் கொள்கைக்கு பங்கம் வரும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன்.



எல்லாம் சின்னண்ணன் வீட்டு மாம்பழங்கள் செய்யும் ஜாலங்கள்.
சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது மதினி பச்சை மாங்காய்களாக ஏழெட்டு பையில் போட்டு கொண்டு போங்கள் என்றார்கள். ‘ஐயையோ! வேண்டாம்!” இது என் கொள்கைக்கு புறம்பானது என்று, கைக்குழந்தையோடு வந்த மேனகையைப் பார்த்து விஸ்வாமித்திரர் கொடுத்த போஸை நானும் கொடுத்தேன்.

வற்புறுத்திக் கொடுத்தமையால் அந்தப் பையும் என்னோடு ரயிலில் பயணித்தது.
வீடு வந்து சேர்ந்ததும் அப்பையை காற்றுப் புகாமல் இறுக்கி கட்டி வைத்து விட்டேன். ஒரு வாரம் கழித்து கம்மென்ற மணம் வந்தது பையிலிருந்து.
பிரித்துப் பார்த்தால் எல்லாம் அப்பழுக்கில்லாமல் பழுத்திருந்தது. ஒரு பழத்தை தோலுறித்து துண்டங்களாக நறுக்கி சுவைத்தால்......அப்பப்பா...! என்ன சுவை, என்ன இனிப்பு!!பங்கனப்பள்ளியும் ராஜபாளையம் சப்பட்டையும் தோத்தது போங்கள்!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு மதினி, அண்ணனைத் தவிர யாருக்கும் மாம்பழமே பிடிக்காதாம். வீட்டிலேயே மாங்கனி இருக்க வேறு எந்தக் காயை கவரப் போகிறார்களோ? என்னடா இது மாம்பழத்துக்கு வந்த சோதனை!!!!

எங்கள் வீட்டுக்கு சின்னக்கா பிள்ளைகள் வரும் போது எல்லோருக்கும் மாம்பழம் நறுக்கி கிண்ணங்களில் போட்டுத்தருவேன், அப்போது அக்கா மகள், “சித்தி எனக்கு மாம்பழம் பிடிக்காது.” என்பாள்.

சும்மா டேஸ்ட் பாரு பிடிக்கும் என்பேன். ஆனாலும் நோன்னுடுவாள். மாம்பழம் பிடிக்காத........கூட உண்டா? என்று நினைத்துக் கொள்வேன்.
உடனே, “ஐயா...ஜாலி! என்று மற்ற பிள்ளைகள் அதை எடுத்துக் கொள்வார்கள்.

இந்தப் பழத்துக்காகத்தான் முருகன் மயிலேறி உலகத்தை சுற்றி வந்தும் கிடைக்காத்தால் கோபித்துக்கொண்டு குன்றேறினானோ? அதனால்தான் வடிவேலன் வீட்டில் இன்று மயில்கள் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கின்றனவோ? பழத்தை முருகனுக்குக் கொண்டு போய் கொடுக்க? பழம் அவ்வளவு ருசி!!!!!!!!!!!

என் கொள்கை பட்பட்டென்று தெறித்து வீழ்ந்தது. கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரியாக இருந்த நான், இனி மாம்பழம் கொண்டு வந்தால்தான் சகோதரி என்றாகிப் போனேன். எப்படி இருந்த நான் இப்படியாகிப் போனேன்!!!

காரணம் சீசனில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்துக்கு நான் அடிமை. முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன் மே, ஜூன் மாதங்களில் என் மதிய உணவு தயிர் சாதமும் மாம்பழமும் மட்டுமே!!



ஒரு ரகசியம், அடுத்தவருடம் அம்மரத்துக் காய்களை அவர்கள் தேவைக்குப் போக மீதியை நான் குத்தகைக்கு எடுத்திருக்கிறேனாக்கும்! ஹுக்கும்!!!!

18 comments:

  1. முருகனின் மயிலாடுதுறையின் மாம்பழம்...தித்திக்கத்தான் செய்யும்...

    ReplyDelete
  2. மாம்பழம்தான் தினமும் தொட்டுக்க இங்கே. தின்னு தீர்த்துட்டுத்தான் நாட்டை விட்டுப்போவேன்னு ஒரு சபதம்:)

    நியூஸியில் மாம்பழம் மெக்ஸிக்கோவில் இருந்து வரும். சாம்பாரில் போட்டுக்கலாம் புளிக்கு பதிலாக.

    சண்டிகரில் ஊர் முழுக்க சாலைகளின் ரெண்டு பக்கமும் மாந்தோப்புகள்தான்.

    ReplyDelete
  3. எங்கள் ஊரில் மாம்பழம் பிரபல்யம்.. வீட்டில் மாம்பழத்திற்கு சண்டையே நடக்கும்... ஒரு மாம்பழத்தை நான்கு பகுதியாக பிரித்து பங்கு வைக்கும் வைபவமெல்லாம் அரங்கேறும்.. ;-))

    ReplyDelete
  4. நல்லா சொன்னீங்க, கோமா!!

    ReplyDelete
  5. துள்சி,

    // தின்னு தீர்த்துட்டுத்தான் நாட்டை விட்டுப்போவேன்னு ஒரு சபதம்//

    ஹையோ!!அப்ப நாங்க போகும் போது ஒன்னு கூட மிச்சமிருக்காதா?

    சண்டி ராணியே! உங்களுக்கு எவ்வளவு வேணாலும் கப்பம் கட்டுகிறேன். கொஞ்சம் விட்டு வைங்க எங்களுக்கும், சேரியா?

    ReplyDelete
  6. //சாம்பாரில் போட்டுக்கலாம் புளிக்கு பதிலாக//

    சாம்பாரில் வத்தக்குழம்பில் போட்ட காவெட்டான மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  7. தமிழ்பிரியன்,

    சாப்பிடும் போது மாம்பழம் பரிமாறினால் போதும் என்றே சொல்ல வராது. அவர்களாகவே நொந்து போய் நிறுத்தினால்தான் உண்டு.

    ReplyDelete
  8. இந்த மயில் எங்க நிக்கி? மாம்பழம் சாப்பிடக் கொடுத்துவைத்தவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

    இப்படிக்கு முழுசாகவே நாலு மாம்பழங்களை சாப்பிடக்கூடிய ஒரு பக்தை:)

    ReplyDelete
  9. வல்லி,
    அந்த மயில் அண்ணன் வீட்டில் ‘நிக்கி’

    ReplyDelete
  10. // மாம்பழம் சாப்பிடக் கொடுத்துவைத்தவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.//

    நானும் கூடிய சீக்கிரம் உங்கள் கூண்டில் அடைபடுவேன்

    ReplyDelete
  11. //இப்படிக்கு முழுசாகவே நாலு மாம்பழங்களை சாப்பிடக்கூடிய ஒரு பக்தை:)//

    ஒரே நேரத்திலா...?
    அப்படியானால் பக்தையே உம் பக்திக்கு மெச்சினோம்.
    கூட நாலும் சேர்த்து சாப்பிடும் வரம் தந்தோம்.

    ReplyDelete
  12. சரியான மாம்பழப் பைத்தியம்.
    இப்போ சீஸன் முடிந்து விட்டது. இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணுமே.
    சகாதேவன்

    ReplyDelete
  13. //அடுத்தவருடம் அம்மரத்துக் காய்களை அவர்கள் தேவைக்குப் போக மீதியை நான் குத்தகைக்கு....//
    அடுத்த வருடம் உங்கள் அண்ணன், சகோதரிக்கு கொண்டு வருவார்
    தாமரை.

    ReplyDelete
  14. சகாதேவன்,
    காத்திருப்பதும் ஒரு சுகம்தானே? ஒருவருடம்தானே...இப்படிங்கறதுக்குள்ள ஓடிடும். சேரியா?

    ReplyDelete
  15. தாமரை,
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
    அண்ணன் கொண்டுவரப்போகும் அச்சீருக்காக காத்திருப்பாள் இந்த சகோதரி!!

    ReplyDelete
  16. அன்பின் நானானி

    சகோதர ச்கோதரிகள் பாசம் மனதை நெகிழ வைக்கிறது - சுத்திப் போட்டுக்கங்க எல்லாரும்.

    நானானி மாற மாடடார் - என்றிருந்தாலும் ஒரே மாதிரிதான்.

    நாக்கிலே அப்படியே தன்ணி வடியுது - படங்களைப் பார்க்கும் போதெ - தேர்ந்தெடுத்த படங்கள்

    மயில் சூப்பர் - நிக்கட்டும் அண்ணன வூட்லயே

    அடுத்த வருஷம் அண்னன் - மதினி கொண்டு வந்து கொடுக்கும் போது - கொஞ்சம் ஒரு பையிலே போட்டு காத்துப் புகாம கட்டி - பார்சல் பிளீஸ்

    நல்வாழ்த்துகள் நானானி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  17. அன்பு சீனா,

    போட்ட போடுக்கு நல்ல பலன்!!!பின்னூட்டங்கள் மொத்தமாய் வந்து விழுந்துதுடுதுடுத்தே....ஆஹா...!!!
    இந்த வாரமும் அந்த மயிலாடுதுறைக்குப்(உபயம் கோமா)போகிறேன். மயிலுக்கு ஏதேனும் சேதி உண்டா?
    அடுத்தமுறை பார்சல் வீடு தேடி வரும், சேரியா?
    அன்புடன் - நானானி

    ReplyDelete
  18. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
    ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...