Sunday, July 10, 2011

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்

நான் அதைப் பாடவில்லை.....ஹோய்...!
வீணையில் வாசித்தேன்.

கல்லூரியில் படித்த(!?),வாழ்ந்த வருடங்களான 1966-1969 வரையிலான அம்மூன்று வருடங்களும் நான் சங்கீத சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் (என்ன ஒரு தெனாவெட்டு!!!யம்மா! அடங்கு.) பறந்த காலங்களாகும். சேரி...சேரி..என் லெவலுக்கு அது பொற்காலம்தான்.

வீணை வாசிப்பில் உச்சத்திலிருந்த காலம். கல்லூரி ஆண்டுவிழா மெனுவில்...அட!எப்பபாரு திங்கிற நெனப்புதான், ப்ரோகிராமில் என்னோட வீணைதான் முதலிடத்திலிருக்கும்.
தனியாகவோ அல்லது இரண்டு தோழிகளுடனோ வாசிப்பு அமர்க்களமாயிருக்கும்.

காரணம், எனக்கு வாய்த்த குருவும் என் பெரியமதனியும்தான். ஒவ்வொரு விழாவுக்கும் மூன்று பாடல்கள், ரெண்டு செமி-க்ளாசிக்கல் ஒன்று, ஏதாவது ஒரு சினிமா பாடல்.
முதலிரண்டை தெரிவு செய்வது வாத்தியார். மூன்றாவதை மதனிதான் தேர்வு செய்வார்கள்.
அது கட்டாயம் ஹிட்டாகும்.

கல்லூரி ஆண்டு விழாவில் வாசித்தை பெருமாள்புரம் லேடீஸ் க்ளப் ஆண்டு விழாவிலும் ஆக் ஷன் ரீ-ப்ளேவாக அதையே மறுஒலி(ளி)பரப்பு செய்வோம்.

'பாட்டும் நானே பாவமும் நானே', 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே' போன்ற பாடல்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், வாத்தியாருக்கு சினிமா பாட்டுக்கள் தெரியாது. அதுக்காக விட்டுடுவோமா?

வீட்டில் வீணை க்ளாஸ் நடக்கும் அறையில் ரெக்கார்ட் ப்ளேயரும் குறிப்பிட்ட பாட்டுள்ள ரெக்கார்டும் கொடுத்து கதவை சாத்திவிட்டு, அவரே அதைக் கேட்டு ஸ்வரப்படுத்தி எழுதிக் கொள்வார். அதை முதலில் படித்துவிட்டு, தானே வாசித்துப் பழகிக் கொண்ட்ட பிறகு எனக்கு சொல்லித்தருவார். அப்படி படுத்தியிருக்கிறேன்.

அவருக்கு என் பணிவான வணக்கங்கள்!!!அவர் பெயர் காருக்குறிச்சி நாராயணன்.

என்ன செய்கிறார் என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பேன். பாவமாயிருக்கும். ப்ளேயரில் ரெக்கார்டைப் போட்டு பாடவிட்டு வரிவரியாக ஊசியை எடுத்து எடுத்து வைத்து...ரிவைண்ட் செய்கிறாராம், ஸ்வரங்களை எழுதி முடிக்க அரை நாளுக்கும் மேலாகிவிடும்.

பின் ரெண்டு வீணைகளையும் வைத்துக் கொண்டு அப்பாட்டை வாசித்துக்காட்ட, எனக்கு அவர் ஸ்வரப்படுத்திய நோட்டை பார்க்காமலே அவர் வாசிக்க வாசிக்க அதைப் பார்த்து பார்த்து அரை மணியில் என் கைகளுக்கு வந்துவிடும். காரணம்...பாட்டுதான் மனப்பாடமாயிற்றே!!

சேரி....மேட்டருக்கு வருவோம். முந்தாநாள் டீவியில் சேனல்கள் மாத்திக்கொண்டிருக்கும் போது சட்டென ஒரு சேனலில் ஒரு படத்தின் டைட்டில் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த டைட்டில் மியூசிக்கை கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்தது. நினைவு எங்கோ பறந்தது.

படம், 'அவனா இவன்' வீணை எஸ். பாலசந்தர் தயாரித்து இயக்கி இசையமைத்து தானே ஹீரோ-கம்-வில்லனாகவும் நடித்த படம். பாடல், 'மனம் விட்டு சிரித்திட்டு கரம் தட்டு கரம் தட்டு கரம் தட்டு...' பரபரவென்று வாசிக்க தோதான ட்யூன்!!!

வழக்கம் போல் மதனி செலக்ட் பண்ணி வாத்தியார் படித்து எனக்கும் மற்றும் அவரது இரு சிஷ்யைகளுக்கும் சொல்லிக்கொடுத்து காலேஜிலும் லேடீஸ்க்ளப்பிலும் அட்டகாசமாக அனைவரது பாரட்டுகளையும் பெற்ற பாடல்!!!

ஆளுக்கொரு ஸ்தாயில் வாசித்ததெல்லாம் கொசுவத்தியாக சுத்திசுத்தி வந்து, அன்று முழுதும் பாடலின் ட்யூன் போலவே மனமும் பரபரவென்றிருந்தது.

அப்பாடலோடு பதிவிட கூகுளின் எல்லா சைட்டிலும் தேடியும் கிடைக்காததால் மொட்டையாக பதிவிட நேர்ந்தது.

யாராவது இப்பாடல் கிடைக்கும் சைட்டின் சுட்டி கொடுத்தால் சந்தோஷப்படுவேன்.
பழைய சிடியாகவும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

வீணையை பெட்டியிலிருந்து எடுத்து சுத்தம் செய்து சுதி சேத்து,
மனம் விட்டு,
"மனம் விட்டு மனம் விட்டு மனம் விட்டு மனம் விட்டு,
சிரித்திட்டு சிரித்திட்டு சிரித்திட்டு
கரம் தட்டு கரம் தட்டு கரம் தட்டு..."ன்னு
மிக நல்ல வீணையை தடவி, கல்லூரி காலத்துக்குப் போகப் போறேன்.

யாரெல்லாம் வாரீங்க..?

6 comments:

  1. வீணையெனும் இன்ப வெள்ளத்துள் பரவசமானோம்.
    மீட்டுங்கள் கேட்கக் காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  2. இது என்ன பாட்டு ? கேட்டதே இல்லையே..
    யாராச்சும் தேடிக்கொடுங்கப்பா..

    ReplyDelete
  3. மாதேவி,
    நன்றி. மனசில் பூத்ததை பதிவிலும் மலரவிட்டேன்.

    ReplyDelete
  4. கயல்,
    யாரவது தேடித்தான் கொடுக்கணும். அப்படியாப்பட்ட பாட்டு!

    நானும் சிடி கடையில் சொல்லி வைத்திருக்கிறேன். பாப்போம். ஊரில் இதன் கொலம்பியா(45)ரெக்கார்ட் உள்ளது. அங்கும் தேடணும்.

    ReplyDelete
  5. நானும் தேடுதல் வேட்டையில் இருக்கிறேன்.

    ReplyDelete
  6. யாரெலலம் வரீங்கவா,

    நான்வரேன்.

    நீங்கவீணை வாசிக்க அதை நாங்க கேட்டுபரவசமாகணும் இனிய தீபாவலீ வாழ்த்துகள் நானானி!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...