Friday, October 15, 2010

மேக்கிங் ஆஃப் மை கொலு

திரைப்படங்களுக்கு மட்டும்தான் ‘மேகிங் ஆஃப்’ உண்டா என்ன? என் கொலுவுக்கும் அது உண்டே!!!!
என்னோட கொலுவில் பொம்மைகள் தவிர பேக் ட்ராப் வருடாவருடம் விதவிதமாயிருக்கும். எந்த வருடம் நேரமின்மையால் ஐடியா கோடவுன் ஷட்டவுன் ஆகிவிட்டது. ‘என்ன இன்னும் யோசிக்கவில்லையா?’ என்று கேள்விகள் வட்டமிட்டன.
நான் சொன்னேன்....அம்மா அவளுக்கு வேண்டியதை என்னிடமிருந்து வாங்கிவிடுவாள். ஆகவே பொறுங்கள்.

திடீரென்று கோடவுன் திறந்தது. ஐடியாவும் வந்து விழுந்தது. அண்ணன் வீட்டில் நடமாடிய மயில்கள் என் மனதை வருடிக்கொண்டேயிருந்தன.
ஸோ....மயிலே பேக் ட்ராப்பாகியது.

டிவியில் ஆர்ட் அட்டாக் என்றொரு நிகழ்ச்சி வருமே!! பேப்பர்களை கச்சா முச்சா என்று கசக்கி பெவிக்காலும் டிஷ்யூ பேப்பரும் கொண்டு வித வித மான உருவங்கள் செய்து கலரடித்து செய்வார்களே, அதைப்போல் மயிலின் உருவம் செய்து சுவற்றில் ஓட்டினேன். பின் அண்ணன் வீட்டில் மயில்கள் உதிர்த்துப் போட்ட மயிலிறகுகளையும் பத்தாததுக்கு விலைக்கு வாங்கியும் ஒட்டினேன். என்னிடமிருந்த கிரிஸ்டல் கற்களை வெள்ளை சார்ட் பேப்பரில் கண்கள் வரைந்து அதில் ஒட்டி கண்களாகப் பொருத்தினேன். பாசி வைத்த குண்டூசிகளை கொண்டைகளாக சொருகினேன். டிப் டீயோடு வரும் குச்சிகளை கால்களாக அமைத்து சேர்த்தேன். அம்புடுதேன்......மயில் அழகாக தன் தோகையை விரித்தாடியது என் கொலுவுக்கான பேக் ட்ராப்பில்.
கொலு வைக்க படிகள் அடுக்கப் பட்டன.

பச்சரசி நிரப்பி மாவிலை சொருகி தேங்காய் வைத்து பூப்போட்டு குங்குமம் இட்டு கலசம் தயார். அதை நல்ல நேரத்தில் மேல் படியின் நடுவில் பிரதிர்ஷ்டை செய்து முப்பெரும் தேவிகளை அமர செய்தாயிற்று.

பூரண கலசம்.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி....என் அம்மாவும் வந்தாச்சு.

இந்த வருடம் மைலாப்பூர் குளத்தருகே வாங்கிய புது பொம்மைகள்.

ஆஞ்சனேயர், ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீராம்.....என்று நெஞ்சைப் பிளந்து சீதா ராமரைக் காட்டும் நெஞ்சை உருக்கும் காட்சி!! இதுவும் புதுசு.

இரண்டாம் படியில் மதினி பரிசளித்த அண்ணாமையார்- உண்ணாமுலை அம்மை.

அண்ணாமலைக்கு அரோஹரா!!!!




முழுமை அடைந்த கொலு, நீரில் மிதக்கும் விளக்குகளுடன்.

ஆஹா...! பூஜைக்குத்தயார்!
ஒன்பது நாட்களும் விளக்கேற்ற ஏதுவாக எம்மாம் பெரிய தீக்குச்சி!!!



ப்ளேம்லெஸ் காண்டில்.

பேரன் கொலுவுக்காக மனமுவந்து தந்த அவனது டாய். அனிமேனி!! பக்கத்தில் அவனது பேவரைட் ‘தாமஸ் டிரைன்.

வாருங்கள்...எல்லோரும் வந்து சந்தனம் குங்குமம் எடுத்துக்கொள்ளுங்கள்!!



அதோடு ரவா கேசரி, பூம்பருப்பு சுண்டல் பிரசாதம். வேண்டிய மட்டும் எடுத்து சாப்பிடுங்கள். காரணம் அவை அக்ஷ்ய பாத்திரங்களாக்கும்!!!!



பதிவுலக அன்பர்கள், மற்றும் அனைவருக்கும் என் அன்பான நவராத்திரி தின வாழ்த்துக்கள்!!!

தசரா ஆரம்பம்..பம்..பம்..பம்..பேரின்பம்

சென்ற ஏழாம் தேதி அதிகாலை 3-30 இருக்கும். சப்பரம் வந்துவிட்டது, எந்திரி..எந்திரி..என்ற மதினியின் குரல் எழுப்பியது. கண் விழித்தேன். தூரத்தில், ‘ரண்ட ரகுண..ரண்டக ரகுண’ என்ற தவிலோசை கேட்டது. இரவு படுக்கும் முன் நாலு சப்பரங்கள் வரும் என்று நான்கு தட்டுகளில் அர்ச்சனை சாமான்கள் தயாராக வாசல் திண்ணையில் இருந்தன.
அரைகுறை தூக்கத்தில் விழித்து வாசல் பக்கம் ஏகினோம்.
தூஊஊரத்தில் அதாவது தெருக்கோடியில் சப்பரம் வருவது தெரிந்தது.



இதோ அருகில் எங்கள் வீட்டு வாசலில் அம்மன் வீதி உலா வந்து நிற்கிறாள்! கற்பூர ஆரத்தியோடு தரிசனம்!

அடுத்த சப்பரத்தில் தகதக வென தரிசனம் தருகிறாள்.

இரவு முழுவதும் தூங்காமல் சப்பரத்தின் பின்னால் அமர்ந்து தசராவை கொண்டாடும் சிறுவர்கள். எவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள்!!!



சிந்துபூந்துறை செல்வியம்மன் பூவாய் சொரிந்து ஆடி அசைந்து வருகிறாள்.



சப்பரங்களை படமெடுத்துக்கொண்டிருக்கும் போது தவில்காரவுக எனக்கு நேரே வந்து நின்று சிரித்துக்கொண்டே,’என்னையும் படமெடுங்கள்’ என்பதுபோல், ‘டண்டனக்குடி..டண்டகுனக்கடி’ என்று இரவு முழுதும் தவிலடித்த களைப்பே இல்லாமல் அடித்தார். உடனே நம்ம நாதஸ்ஸும் வந்து சேர்ந்து கொண்டார். அவர்கள் ஆசைக்கு ஒரு கிளிக்!
படம் பிரிண்ட் வருமா? என்றதுக்கு, பிரிண்ட்டெல்லாம் வராது, ஆனால் ’உலகமெல்லாம் பார்ப்பார்கள்’ என்று படத்தை ரிவைண்ட் செய்து காட்டினேன். திருப்தியாக நகர்ந்தார்கள்.






நம்ம கணினி செய்த தொல்லையால் தாமதமான பதிவுக்கு பொறுக்கவும்.
அதென்னங்க...பதிவு டைப் செய்து பின் ‘சேவ்’ செய்தால் மாட்டேங்குது? ஆட்டோ சேவ் ஃபெயிலியர்-ங்குறது. ஏன் இப்படி அடிக்கடி தொல்லை செய்கிறது.

Sunday, October 3, 2010

கரு சுமந்த கண்மணிகளுக்கு......பாகம் ஆறு

ஐந்து பாகங்களையும் படித்து பின்னூட்டமிட்ட பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!

இந்த பாகத்தில் மிகவும் சுவாரஸ்யமான களி வகைகள் பற்றிப் பார்ப்போமா?


அதற்குள், ஆர்டர்கள் வந்துவிட்டன. மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ‘அம்மா!! எனக்கு ஓமக்களியும் சுக்குக்களியும் வேண்டும். செய்து வை. நான் வீக்கெண்ட் வரும் போது “அப்படியேச்சாப்பிடுவேன்!” ‘ என்றாள். நான் வெள்ளிக்கிழமை பத்தியக் குழம்பு செய்யப் போகிறேனே என்றேன்.

சரி..களிக்கு வருவோம், களிப்போடு.

இரண்டு பச்சைகளுக்குப் பிறகு களி கொடுக்க ஆரம்பிக்கலாம். அதாவது எட்டாவது நாளிலிருந்து.

சுக்குக்களி:
சுக்கு - 100 கிராம்
சாரணவேர் - -50 கிராம்

இரண்டியும் இடித்து சலித்து பின் 100 கிராம் பொடிக்கு 200 கிராம் கருப்பட்டி பொடி அளந்து, பொடி முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் 200 கிராம் பால் விட்டு சுக்குப் பொடியை கரைத்து வடிகட்டிய கருப்பட்டியுடன் கலந்து அடுப்பில் வைத்து கிண்டவும். இறுகி வரும் போது...முக்கால் பதம் வந்ததும் 50 கிராம் தேன் ஊற்றி கிண்டி இறக்கவும்.

இதை நெல்லிக்காய் அளவு உருட்டி, இரண்டு நாட்கள் இரவு சாப்பாட்டுக்குப் பின் கொடுக்கவும்.
சுக்குக்களி சாப்பிட்ட மறுநாள் காலை இஞ்சி, மேல்பொடி,தேன் கொடுக்கவும்.

பூண்டு லேகியம்:
பூண்டு - அரைக் கப் உறித்தது

பால் விட்டு வேக வைத்து அத்துடன் இஞ்சிச்சாறு, வடிகட்டிய கருப்பட்டிசாறு சேர்த்து அடுப்பில் வைத்து கடைந்து, இறக்கி வைத்து உருட்டி கொடுக்கவும்.
மறுநாள்காலை இஞ்சி, மேல்பொடி, தேன் கொடுக்கவும்.


மல்லி லேகியம்:
மல்லிப் பொடி - 4 தே.க.
கருப்பட்டிபொடி - 8 தே.க.

இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். முக்கால் பதம் வந்ததும் தேன் விட்டு களியை கிண்டி இறக்கவும்.
மறுநாள் காலை இஞ்சி, மேல் பொடி, தேன் கலந்து கொடுக்கவும்

சீரக லேகியம்:

சீரகப் பொடி - 4 தே.க,

கருப்பட்டி - 8 தே.க.

சீரகப்பொடியை பால் விட்டு கலந்து வடிகட்டிய கருப்பட்டியுடன் சேர்த்து கிண்டி முக்கல் பதம் வந்ததும் தேன், நெய் விட்டு கிளறி இறக்கவும்.நெல்லிக்காயளவு சாப்பிடக் கொடுக்கவும்.

மறுநாள் காலை இஞ்சி, மேல்பொடி,கருப்பட்டி, தேன் கலந்து கொடுக்கவும்.

சட்டிக்காயம்:

பச்சை மருந்துப் பொடி - 4 தே.க.

பெருங்காயப் பொடி -கால் தே.க.

பூண்டு - 2 பல்

மூன்றையும் அரைத்து ஒன்றுக்கு ரெண்டு பங்கு கருப்பட்டி போட்டு மற்ற லேகியங்கள் மாதிரி கடைசியில் தேன், நல்லெண்ணை ஊற்றி கிண்டி இறக்கி ஆறியதும் உருட்டி கொடுக்கவும்.

வழக்கம்போல் மறுநாள்காலை இஞ்சி, மேல்பொடி, கருப்பட்டி, தேன் சேர்த்து குடிக்கக் கொடுக்கவும்.

வெந்தயக்களி:

பச்சரிசி - 50 கிராம்

உளுந்து - 50 கிராம்

வெந்தயம் - 50 கிராம்

மூன்றையும் ஊற வைத்து அரைத்து, அரைத்த விழுதுக்கு ரெண்டு பங்கு கருப்பட்டி பாகு காய்ச்சி, வடிகட்டி அடுப்பில் வைத்து கிண்டி, இடையிடையே நல்லெண்ணை ஊற்றி கிண்டி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி ஆறியதும் உருட்டி வைத்துக்கொண்டு இரவு உணவுக்குப் பின் சாப்பிடக் கொடுக்கவும்.

மறுநாள் இஞ்சி, மேல்பொடி, கருப்பட்டி, தேன் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.

ஓமக்களி:

ஓமம் - 4 தே.க.

கருப்பட்டி பொடி - 8 தே.க.

பால் - 1/2 கப்

தேன் -தேவைக்கேற்ப

பசு நெய் - 4-5 தே.க.

ஓமத்தை தண்ணீர் விட்டு அரைத்து அல்லது மிக்ஸியில் பொடி செய்து கொண்டு, பாலில் காரைத்து, வடிகட்டிய கருப்ப்பட்டி பாகில் கல்ந்து அடுப்பிலேற்றி கிண்டி முக்கால் பதம் வந்ததும், தேன், பசு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இரவு உணவுக்குப் பின் உருட்டி 2-3 உருண்டைகள் கொடுக்க.வும்.

மறுநாள் காலை வழக்கம் போல் இஞ்சி,மேல்பொடி, கருப்பட்டி, தேன் கலந்து கொடுக்கவும்.

இஞ்சிச்சாறு தலையில் தேய்த்து குளிக்க வைக்கவும்.

இந்த களிகள் சாப்பிடும் போது, மதிய பத்திய சாப்பட்டுக்குப் பின் வெற்றிலை, சுண்ணாம்பு, வாசனைப்பாக்கு, விரும்பினால் ரோஜா குல்கந்து சேர்த்து தாம்பூலமாக சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணம் ஆகும்.

இந்த வகைக்களிகளோடு மிளகுக் களியும் உண்டு. மிளகுப்பொடியுடன் ரெண்டு அல்லது மூன்று பங்கு வடிகட்டிய கருப்பட்டி சேர்த்து கிண்டி தேன், பசுநெய் விட்டு கிளறி கொடுப்பார்கள். அதை சாப்பிட்டவுடன் உடம்பெல்லாம் ‘தகதக’ என எரியும். கேட்டால் நல்லதுதான் உடம்பிலுள்ள கெட்ட நீரெல்லாம் வற்றும் என்பார்கள். நான் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் தற்காலப் பெண்களுக்குத் தாங்காது. ஆகவே மிளகுக்களியை விட்டுவிடலாம். யாரும் முயற்சி பண்ணவேண்டாம்.

களிகள் எல்லாம் சுபமாக முடிந்தவுடன் பிரசவலேகியம் என்று கொடுப்பார்காள்.

அக்காலத்தில் ஒரு வீட்டில் பெண் கருவுற்றிருக்கிறாள் என்று கேள்விப் பட்டதுமே ஊரிலுள்ள பெண்களெல்லாம் ஓரிடத்தில் குழுமி, பிரசவ லேகியம் தயாரிக்க நாட்டுமருந்து சாமான்கள் லிஸ்ட் போட்டு வாங்கி, இடித்து, பொடித்து, சலித்து, அரைத்து இன்னும் என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்து கருப்பட்டிப்பாகில் கிண்டோகிண்டென்று கிண்டி தயார்செய்வார்கள். மனித நேயம்........இல்லை...கர்ப்பிணிப்பெண் நேயம் மிகுந்திருந்த காலம் அது.

பிரசவ லேகியம் செய்தத் தேவையான பொருட்கள் எல்லாம் கடைகளில் கிடைத்தாலும் அதைச் செய்வது என்பது பெரி.....ய ப்ராசஸ். சாமான்கள் லிஸ்டே நீ....ளமாக இரூக்கும்.

இப்போதெல்லாம் அப்படி கூட்டாகக் கிண்டுவதெல்லாம் நடக்கிற காரியமில்லையாதலால் நல்ல நாட்டுமருந்துக் கடைகளில் ரெடிமேடாகவே கிடைக்கிறது.

அதைவாங்கி தினமூம் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு எலுமிச்சை அளவு சாப்பிடலாம். உடம்பு பழைய நிலைமைக்குத் திரும்பவும் நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கவும் குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கவும் இவ்வகை பத்தியங்கள் மிகவும் அவசியம். ஆறு மாதம் வரை சாப்பிடலாம். தாய் சாப்பிடும் உணவுதான் பாலாக குழந்தைக்குப் போகிறது. ஆகவேதான் அவள் உண்ணும் உணவில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பச்சிளம் குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற வியாதிகள் வராமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும்தான்.

அக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் பத்திய சாப்பாடு, களி, லேகியம் எல்லாம் மற்றவர்க்குத் தெரியாமல் மறைத்து மறைத்து கொண்டு போய் கொடுப்பார்கள். கண்பட்டுவிடுமாம்!!!!

"அக்கா என்ன சாப்பிடுகிறாள்?, அத்தை என்னா சாப்டுறாள்?, சித்திக்கு என்னா கொண்டு போறே? எனக்கும் வேணும்!" என்று குழந்தைகள் கேட்பதை தவிர்க்கத்தான்.

கரு சுமந்த கண்மணிகளுக்கான பத்திய வைத்தியம் இத்துடன் முடிவடைகிறது.

ரசித்துப் படித்தவர்கள் இவற்றைப் பயன் படுத்தி பலனும் பெற்றால் அதைவிட பெரும் மகிழ்ச்சி எனக்கு வேறேதுமில்லை. பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நோட்டில் எழுதியதை நெட்டில் பதிய வைத்த என் சோம்பேறி மனசுக்கும் நன்றி!!!!

இவ்வளவு வரைவாக எந்தப் பதிவும் எழுதியதில்லை. இத்தகவல்களை என் மகளுக்காக தந்து உதவிய சாந்தா மதினிக்கும் என் நன்றிகள்!!!!!














Friday, October 1, 2010

இன்று உலக முதியோர் தினமாமே.....மாமே!

இன்று காலை வெளியில் சென்றிருந்தபோது, அக்டோபர் ஒன்று உலக முதியொர் தினமாக கொண்டாடப் படுவதாக அறிந்தேன். உலகமே கொண்டாடுவது உனக்குத்தெரியாதா என்று கேட்காதீர்கள். என் மெமரியில் அது ரிஜிஸ்டர் ஆகவில்லை. அம்புடுதேன்.

இந்த நாளில் நான் முதியோர் கேட்டகிரிக்குள் அடியெடுத்து வைத்த நாள் நினைவுக்கு வந்தது. ஔவையார் மாதிரி கோலூன்றி நடப்பதைச் சொல்லவில்லை. இப்போதெல்லாம் அறுபது வயதில் ட்ரிம்மாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்களே. திருக்கடையூர் சென்று பார்த்தால், கோயில் சந்நதி, பிரகாரம் முழுவதும் அறுபதாம் கல்யாணம் விழாவாகக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்தால், சின்னச்சின்னப் பையன்களாகவும் பெண்களாகவுமிருப்பார்கள். வயதில்தான் முதுமையைச் சொல்லலாமே தவிர தோற்றத்தில் சுமார் 40-50 வயது மதிக்கத்தக்கவர்களாகத்தான் இருப்பார்கள். காலத்தின் நல்ல மாற்றம் இது.

சரி...நான் 60- வயதை எட்டிய இடம் கொஞ்சம் வித்தியாசமானது. 2005-ல் ஆகஸ்ட் 24 அன்று சிகாகோவிலிருந்து அதிகாலை நியூயார்க் செல்ல விமானம் ஏறினோம். நான், ரங்கமணி, அவர் சகோதரர் மூவரும். அவர் மனைவியிடம் ரங்கமணி,’இன்று இவளுக்குப் பிறந்தநாள்.’ என்று மட்டும் சொல்லிவிட்டு விமானம் ஏறினோம்.
நியூயார்க்கில் இறங்கி நேரே சுதந்திரதேவி சிலையைப் பார்க்கப் போனோம்.


அங்கு தனிமையில் பக்கத்தில் என் சொந்தங்கள் இல்லாமல் பிறந்தநாள் பாட்டி அமர்ந்திருகிறேன். படத்தில் 24-ம் தேதி பதிவாகியிருக்கிறாது பாருங்கள்!


லிபர்டி சிலையை சுத்தி சுத்தி வந்தோம். எனக்கு நீ...உனக்கு நான் என்றவாறு.
என்னதான் சுதந்திர சிலை அருகே இருந்தாலும் ஏதோ கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. நாங்கள் சகோதரிகள் நால்வரும் எப்படிக் கொண்டாடியிருப்போம் என்று நினைத்துப் பார்த்தோம். பெரியக்கா அறுபதாவது பிறந்தநாளை அவள் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினோம். தங்கைகள் மூவரும் சேர்ந்து அவளுக்கு தங்க வாட்ச் பரிசளித்தோம்.

பின் சின்னக்கா 60-வது பிறந்தநாளில் நாங்கள் மூவரும் அவளுக்கு தங்க மோதிரம் பரிசளித்து ஹோட்டலில் விருந்து வைத்துக் கொண்டாடினோம். அன்று நான் சுதந்திரதேவி சிலையிடம் மாட்டிக் கொண்டேன்.


ஒரு சின்ன ஆறுதல் பெரும் பெரும் தலைவர்கள் பர்சனாலிட்டிகள் ஆகியோரை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். ஆம்!!!
நாளை அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்தநாள். அந்த மாபெரும் மனிதரை சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் பெற்றேன்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்(சீனியர்) அவ்ர்களிடமும் வாழ்த்துப் பெற்றேன். நான் பின்னால் நிற்கிறேன். அவர் பார்க்காமல் முன்னால் கை நீட்டுகிறார், வாழ்த்த.

உலக மக்கள் எல்லோரது மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய மறந்த அதிபர் ஜான் கென்னடி அவர் மனைவி ஜாக்குலின் கென்னடி அவ்ர்களையும் விட்டு வைக்கவில்லை. மனசார வாழ்த்தினார்.


அட! அங்கே டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ஸ்டெஃபி க்ராஃபும் அருகே அழைத்து வாழ்த்தினார்.

அன்றிரவு நியூயார்க் தெருக்களில் வலம் வந்த போது எனக்கு “ஹாப்பி பெர்த்டே” சொன்ன ஒரே சொந்தம் கலிபோர்னியாவிலிருக்கும் அருமை மருமகள் லதா. ரொம்ப சந்தோஷமாயிருந்தது. காரணம் இந்தியாவில் இருக்கும் சகோதரிகளுக்கு நான் நியூயார்க் தெருக்களில் லோலோ என்று சுத்துவது தெரியாது. இந்த கைபேசி எண்ணும் தெரியாது. அன்று இரவு டின்னர் என்னோடது என்று சொல்லி(சிகாகோவிலிருக்கும் வரை எங்களை செலவு செய்ய விடவில்லை, ஷாப்பிங் தவிர) அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் நாங்கள் மூவரும் மட்டும் விருந்து சாப்பிட்டுவிட்டு கார்ட் பேமெண்ட் செய்து விட்டு வந்தோம்.


சிகாகோ திரும்பிய பிறகு நானே அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன். ‘உன்னை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். நல்லவேளை!!’ என்றார்கள்.
இப்படியாகத்தானே நானும் சீனியர் சிடிசன் ஆனேன்.
உலக முதியோர் தினமான இன்று என் அன்பான வாழ்த்துக்களை முதியோர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹை!!!!எனக்கு இன்னும் வயசாகவில்லை என்போரை விட்டுவிடுவோம். சேரியா?








Wednesday, September 29, 2010

கரு சுமந்த கண்மணிகளுக்கு....பாகம் ஐந்து

இப்பதிவுகள் நல்ல பயனுள்ளவை என்று வந்திருக்கும் பின்னூட்டங்களிலிருந்து அறிய மிக்க மகிழ்ச்சி.

நான்காம்நாள் இரவு பச்சை என்று கொடுப்பார்கள். இந்த பச்சையும் பொடியாக கிடைக்கும்.

வெற்றிலை - ஒன்று
வேப்பங்கொழுந்து - இரண்டு
பூண்டு - ஒன்று
பச்சைப்பொடி ஒரு தேக்கரண்டி வைத்து பொடித்து கருப்பட்டிப் பொடி சேர்த்து கொடுக்கவும்.

மறுநாள்(ஐந்தாம்நாள்) தலையில் இஞ்சி சாறு தேய்த்து எண்ணைக் குளியல்.
பிரசவம் முடிந்து மூன்றாம்நாளிலிருந்து தினமும் காலை இட்லி, மிளகுப் பொடி(மிளகும் உப்பும் சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்) பசுநெய் விட்டு சாப்பிடலாம்.
இட்லி சுலபமாக ஜீரணமாகும், மிளகு உடம்பிலுள்ள கெட்டநீரை வற்ற வைக்கும், பசுநெய் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
11-மணிக்கு சாதம்.
சாதத்தோடு பச்சைக்காய்கறிகளான அவரைக்காய், புடலங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்களை பச்சை மிளகாய் சேர்க்காமல் கூட்டு வைத்து தினம் ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் சாதத்தில் விட்டு சாப்பிட ‘பத்தியக் குழம்பு’ தான் நல்லது.
பத்தியக் குழம்பு:
மிளகு - 2 தே.க.
மல்லி - 2 தே.க.
ஜீரகம் - 2 தே.க.
மஞ்சள் - 1 துண்டு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பூண்டு - 6 பல் உறித்து வதக்கி
புளிக்குப் பதில் எலுமிச்சை சாறு
50 கிராம் நல்லெண்ணை ஊற்றி தாளித்து,
மஞ்சளைத் தவிர மற்ற சாமான்களை எண்ணையில் வறுத்து, மஞ்சளை வெறுமே வறுத்து பொடிசெய்து தாளிதத்தில் கலந்து வதக்கிய பூண்டையும் சேர்த்து உப்பு சேர்த்து கொதிவந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி வைக்கவும். இக்குழம்பை இரண்டு மூன்று நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதோடு மணத்தக்காளி வத்தல், சுண்டக்காய் வத்தல், வேப்பம்பூ வத்தல் இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து கொண்டு, நாளுக்கு ஒன்றாக சூடு சாதத்தில் நெய்விட்டு இப்பொடிகளில் ஒன்றை பிசைந்து சாப்பிடலாம்.

ஆக பச்சை உடம்புக்காரிக்கு தினமும் காலை இட்லி மிளகுப் பொடி பசுநெய்.
11- மணிக்கு ஓட்ஸ் அல்லது ஹார்லிக்ஸ் ஒரு டம்ளர்.
மதியம் சூடு சாதம், வத்த்ல் பொடி, கூட்டு, பத்தியக் குழம்பு
மாலை பிரட் அல்லது பிஸ்கட், பால்
இரவு இட்லி, மிளகு பொடி நெய்
படுக்கு முன் இஞ்சி மேல் பொடி

பச்சை கொடுப்பது இரண்டு முறை போதும். பச்சை முடிந்ததும் களி வகைகள் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
என்னென்ன களிகள் என்பது பற்றி அடுத்த பதிவில். சேரியா?

Monday, September 27, 2010

கல்யாணமாலை கொண்டாடிய ‘விவாஹபிரார்த்தனா’

சென்ற ஞாயிறு-19-9-10 அன்று மனதுக்கு இதமான நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். கல்யாணமாலை நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட பூஜை.

தங்களிடம் பதிந்திருக்கும் வரன்களுக்கும் பதியாத வரன்களுக்குமாக ஒரே இடத்தில் மகா யாகம் மற்றும் சிறப்புப் பூஜைகளை அழகாக ஏற்பாடு செய்திருந்தனர்.


சென்னை சேத்துப்பட்டிலிருக்கும் குசலாம்பாள் திருமணமண்டபத்தின் முகப்பு தோற்றம்.


மண்டபவாசலிலிருந்து பூஜை நடைபெறும் இடத்துக்குக்குச் செல்லும் நுழை வாயில்.


அந்நுழைவாயிலில் அழகாக அலங்கரிக்கப்பட்டு வீற்றிருக்கும் விக்னங்கள் களையும் விநாயகர்.


மக்களைப் பெற்றவர்கள் ஆவலோடு வருகிறார்கள்.



மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அம்மை அப்பனின் திருமணக்கோலம்


பூஜை நடைபெறும் ஹாலின் வாசலில் இரு ஆளுயர குத்துவிளக்குகளோடு கம்பீரமாய் காட்சியளிக்கும் ‘கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணி’


ஆஹா...! என்ன அழகு!!!



மண்டபத்தில் ஒரு ‘பாட்ச்’ சுமார் 800 முதல் 1000 பேர் வரை அமர்ந்து பூஜையில் குங்கும அர்ச்சனை செய்கிறார்கள்.இப்படி பாட்ச் பாட்சாக வந்திருக்கும் அனைவரும் பூஜையில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.


இன்னொரு கோணம்.


கல்யாணமாலை மோகன் அவர்கள் ஒரே நேரத்தில் பூஜையயும் ஹோமத்தையும் எல்லோரும் காணும் விதமாக இரண்டு இடங்களிலும் எல்சிடி டிவி பொருத்தியிருப்பதியும் அனைவரும் கண்டு களித்து இறைவன் அருள் பெறுமாறு அன்போடு அறிவிக்கிறார்.


மணமேடையில் எம்பெருமானும் பிராட்டியும் திருமண கோலத்தில் கைத்தலம் பற்றியபடி காட்சியளித்து அருள் பாலிக்கிறார்கள்.
திருமணஞ்சேரி உத்வாகநாதர், கோகிலாம்பாளின் சிலைகளைப் போன்ற கோலத்தில்.
இத்துடன் “சுயம்வர பார்வதி விக்ரஹமும்” பூஜையில் வைக்கப் பட்டிருந்தது.



காலை ஆறு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடை பெற்ற இவ்விழாவில் நடை பெற்ற பலவிதமான ஹோமங்கள், ஹரித்ரா கணபதி ஹோமம், குபேர மஹாலஷ்மி ஹோமம், சுதர்சன ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், நவகிரஹ ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

ஹரித்ரா கணபதி ஹோமம்:
மங்களத்தின் தொடக்கம்.

குபேர மஹாலஷ்மி ஹோமம்:
‘என் குழந்தைகளுக்கு திருமணத்தின் போது இதைச் செய்ய முடியவில்லையே’ என்ற ஏக்கம் எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது. நிறைந்த மனத்தோடு வேண்டிய எல்லாவற்றையும் செய்யுமளவு அவர்களிடம் பொருட்செல்வம் குறைவின்றி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

சுதர்சன ஹோமம்:
உடல் ஆரோக்கியத்துக்காக. எத்தனை செல்வமிருந்தாலும் உடல் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால் இல்லற வாழ்வு மகிழ்ச்சியைத்தராது.

சுயம்வர பார்வதி ஹோமம்:
எல்லாவற்றிற்க்கும் மேலாக மிகப் பொருத்தமான வரன், விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதற்காக.

நவகிரஹ ஹோமம்:
தோஷ நிவர்த்திக்காக.



பூஜை ஆரம்பிக்கு முன் தலைமைப் புரோகிதர் பொது சங்கல்பம் செய்வித்தார். அவர் ஆரம்பிக்க மக்கள் தத்தம் பிள்ளைகளின் பேர்,நட்சத்திரம் சொல்லியபின் சங்கல்பத்தை முடித்தார். அத்தோடு ‘சு’க்லாம்பரதரம் ச’சி’வர்ணம் சதுர்ப்புஜம்........’என்ற ஸ்ரீ விக்னேஸ்வர ஸ்துதியையும்,
‘மாங்கல்யம் தந்துநானேநா மவஜிவித ஹேதுநாம்.....’ ஸ்துதியையும் வரிவரியாக சொல்லி பூஜையில் கலந்து கொள்ளும் அனைவரையும் கூடவே சொல்ல வைத்தார். அதன் பின் தேவிக்கு குங்கும அர்ச்சனை ஆரம்பமாகியது. லலிதா சகஸ்ரநாமம். ஒவ்வொரு வரியையும் புரோகிதர்கள் சொல்லச் சொல்ல கூடவே திருப்பிச்சொல்லி அம்பாளின் அருளைப் பெற வைத்தார்கள்.
சமஸ்க்ரத ஸ்லோகங்கள் எல்லோருக்கும் பரிச்சயமாயிருக்க்காது எனவே ‘தெரிந்தவர்கள் கூடவே சொல்லுங்கள், தெரியாதவர்கள் புத்தகத்திலிருக்கும் வரிகளை தொடர்ந்து வாருங்கள்.’ என்றார்கள்.
நானும் அறிந்தவளில்லை. அப்பாவும் அம்மாவும் ஸ்ரீராஜராஜேஸ்வரி பூஜையில் லலிதா சகஸ்ரநாமம் சொல்லித்தான் பூஜை செய்வார்கள் என்று தெரியும். ஆனால் அன்று அதில் ஆர்வமில்லை.
ஆதிபராசக்தியின் அன்பள் ஆனபிறகு பூஜையில் நாங்கள் பாடும் ‘போற்றி மலர்கள்’ அப்படியே லலிதா சகஸ்ரநாமத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு என்று புரிந்தது. தெய்வத்தை வணங்க மொழி ஒரு தடையில்லை. மனமாற ஒரு நிமிடம் நினைத்தாலும் போதும், அந்த மாரியம்மா ஆக்கி வெச்ச சோத்த தின்ன வருவாள்




தலைமை புரோகிதர் மேடையில் பூர்ணாஹூதிக்கு, அதற்கான மந்திரங்களைச் சொல்லி, அதை எல்லோர் பார்வைக்கும் காட்டி பிரார்த்தனையை சமர்ப்பித்து, அதை ஹோமம் நடக்குமிடத்துக்கு எடுத்துச் செல்கின்றார்.



பூர்ணாஹூதி நடை பெறுகிறது





கோடி அர்ச்சனையில் வைத்த பூஜை செய்த ஸ்வர்ணகமல புஷ்பம், அதாவது வெள்ளியில் செய்து தங்கத்தில் தோய்த்த காசு. இதில் வழக்கமாக ஒரு பக்கம் ஸ்ரீலஷ்மி உருவம் பொறித்தும் மறு பக்கம் ஸ்ரீசக்கரம் பொறித்தும் இருப்பதற்கு பதிலாக ஸ்ரீசக்கரத்துக்கு பதிலாக தாமரைப்பூ பொறித்தும் இருக்கும். இது இதற்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்டது.



அனைவரின் வருகை இலவசமானாலும் இந்த சொர்ணகமலபுஷ்பம்....பேர் அழகாயில்லை? மட்டும் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். பூஜையில் வைத்ததல்லவா? பணம் கட்டி(ரூ.501)முன் பதிவு செய்து கொண்டு முன்று நாட்கள் கழித்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்கள்.

உள்ளே நுழையும் முன் வரிசையாக சாஸ்திரிகள் நின்று கொண்டு ஒவ்வொருவருக்கும் வரன்களின் பேர், நட்சத்திரம் கேட்டு தனித்தனியாக சங்கல்பம் செய்த பின் எல்லோருக்கும் வழங்கிய இப்பையில் லலிதா சகஸ்ரநாமம் புத்தகம், சில விளம்பர துண்டு பிரசுரங்கள் இருந்தன.
கலந்து கொண்ட அனைவருக்கும் அம்பாளின் அருள் பூரணமாக கிடைத்து அவர்கள் விரும்பிய வரன் அமையப் பெற கல்யாணமாலையின் வாழ்த்துக்களோடு மன நிறைவாக விடைபெற்றோம்.
அன்று, என் குடும்பத்தில் கல்யாணத்துக்கு காத்திருக்கும் ஆண், பெண் வரன்களுக்குமாக சேர்த்து சங்கல்பம் செய்து, அவர்களுக்கும் நல்ல வாழ்கைத் துணை அமைய அம்மாவை வேண்டிக் கொண்டேன். அதோடு அன்று கலந்து கொண்ட அனைவரது விருப்பமும் நிறைவேற மனமாற வாழ்த்துகிறேன்.


















Tuesday, September 21, 2010

கரு சுமந்த கண்மணிகளுக்கு....பாகம் நான்கு

சுகப் பிரசவம் ஆகி தாயும் சேயும் நலமாக, பிஞ்சுக் குழந்தை தன் செம்பஞ்சுக் கால்களையும் கைகளையும் உதைத்து ஆட்டி எதையோ பிடிப்பது போல் அசைவதைப் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நாம் நமது வேலையைப் பார்ப்போமா?


இதில் பிரசவம் காலையில் நிகழ்ந்தால், ஒரு மணிநேரம் கழித்து “பிடிகாயம்” என்று கொடுப்பார்கள். அது என்ன?


பெருங்காயம் - கால் ஸ்பூன்
மஞ்சள் - அரை ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்


மூன்றையும் வெறும் சட்டியில் எண்ணை இல்லாமல் வறுத்து பொடி செய்து, அதனுடன் அரை ஸ்பூன் கருப்பட்டி சேர்த்து பிசைந்து உருட்டி, நன்கு மென்று சாப்பிடக் கொடுக்கவும்.


ம்றுநாள் (ஒன்றாம் நாள்) அரிசிக் கஞ்சி பால் விடாமல் கொடுக்கவும்.
இரண்டாம் நாள் இரவு உணவுக்குப் பிறகு...இஞ்சி, மேல்பொடி கொடுக்க வேண்டும்.


மேல் பொடி:
சுக்கு - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 20 கிராம்
அக்கரா - 1
சித்தரத்தை - 1
நறுக்குமூலம் - 15 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
காயம் - 25 கிராம்
இவற்றில் வேர்களைத்தவிர மற்ற சாமான் களை சதைத்து லேசாக வறுத்து இடித்து பட்டாக சலித்து வைத்துக்கொள்ளவும். (நம்மைப் போன்று இதை தயாரிக்க சிரமப் படுவோர்க்காக நல்ல நாட்டு மருந்துக்கடைகளில் ரெடிமேடாக...பொடியாகவே பாக்கெட்டுகளில் கிடைக்கிறது)


இஞ்சி மேல் பொடி தயாரிக்க:
ஒரு துண்டு இஞ்சி, ஒரு துண்டு மாவிலங்குப் பட்டை இரண்டையும் தட்டி நூறு கிராம் அளவுக்கு சாறு எடுக்கவும். சிறிய மாங்காய் அளவு கருப்பட்டி தட்டி தேவையான அள்வு தண்ணீரில் நன்கு கொதிக்கவிட வேண்டும். பின் அதில் இஞ்சி சாறும் 1 1/2 ஸ்பூன் மேல் பொடி சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பின் அதை இறக்கி வடிகட்டி வைத்து ‘சொரசம்’ பண்ணிய தேன் 50 கிராம் விட்டு இளம் சூட்டில் குடிக்கக் கொடுக்க வேண்டும்.

தொடரும்

Sunday, September 19, 2010

கரு சுமந்த கண்மணிகளுக்கு....பாகம் மூன்று

ஆச்சு, பிரசவகாலம் நெருங்கும். சிலருக்கு டாக்டர் சொல்லிய தேதியிலேயே வலி வந்து விடும். சிலருக்கு குறித்த நாள் தாண்டிவிடும். சிலருக்கு வலி வர

ஊஃபி....மன்னிக்க இது பேரன் மழலை, ஊசி போட்டுத்தான் வரவழைப்பார்கள்.



எப்படியோ வலி ஆரம்பித்து டாக்டர் உதவியால் சுகப்பிரசவம் ஆகும்.

நம்ம ஊரில் அம்மாக்களின் கைப்பக்குவம் செய்ய மருத்துவர் எந்த தடையும் சொல்லமாட்டார். சொன்னாலும் திருட்டுத்தனமாக அந்த பக்குவங்களும் ஒரு பக்கம் நடக்கும்.



இண்டர்நெட்டில் பாத்து சகலமும் புரிந்து கொள்ளும் அமெரிக்காவிலோ என்ன செய்வது என்று யோசித்தேன். மறைவாக செய்யவும் விருப்பம் இல்லை.



நல்ல வேளையாக மகளுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஒரு வட இந்தியப் பெண். என்னைப் பார்த்து(மூஞ்சியிலேயே எழுதி ஒட்டியிருந்ததோ என்னவோ) உங்கள் முறைப்படி மருந்துகள் கொடுக்கலாம் என்றாள். அப்பாட என்றிருந்தது.



பிரசவம் முடிந்ததும் வெற்றிலையில் ஒரு அரிசி எடை கஸ்தூரியை வைத்து மடித்து நன்றாக மென்று தின்னக் கொடுக்கவேண்டும்.



பிறகு அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.



அடுத்து சொரசம் பண்ணிய தேன் 100 கிராம் கொடுக்கணும்.



அதென்ன “சொரசம்?”

வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் அடுப்பை அணைத்து விட்டு உடனே அதில் தேனை ஊற்றினால், ‘சொர்ர்ர்’ என்று சத்தம் கேட்கும். அதுதான் சொரசம் பண்ணிய தேன். திக்காக இருக்கும் தேன் அதன் பின் சிறிது இளகி லூசாக ஆகிவிடும். இதை வீட்டிலேயே தயார் செய்து ஒரு பாட்டிலில் ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.



தண்ணீர், தேன் எல்லாம் சரி. கஸ்தூரி அதுவும் வெற்றிலையில் வைத்து கொடுப்பது எதற்காக. கஸ்தூரி என்பது மானின் உடம்பிலிருந்து கிடைக்கும் ஒரு வஸ்து.



அக்காலத்தில் உட்ம்புக்கு நல்லது என்றதும் ஏன், எதற்கு என்ற கேள்வி கேட்காமல் அதை வாங்கி மடக் என்று வாயில் போட்டுக் கொள்வோம் .

இப்போது பதிவு எழுத அதன் காரணம் சொன்னால் நல்லருக்குமே என்று

எங்க சாந்தா மதினியிடம் போன் செய்து விபரம் கேட்டால்............”யம்மா! நானும் உன்னைப் போல்தான் என்னன்னு கேக்காமலே சாப்பிட்டவள், அம்மாவிடமோ பெரியம்மாவிடமோ கேட்காமல் போய்விட்டேனே!” என்று புலம்பினார்கள்.



சேரி...! பிரசவம் முடிந்து உடனே கஸ்தூரி ஏன் சாப்பிட வேண்டும்?

இந்தக் கேள்விக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பதில் சொல்லுங்களேன்.



தொடரும்

Friday, September 17, 2010

கரு சுமந்த கண்மணிகளுக்கு......பாகம் ரெண்டு

கர்ப்பிணியான பொண்ணுக்கு ஆசையாக அருமையாக வளைகாப்பு, சீமந்தம் செய்து பின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அதாவது பெற்ற தாயின் அரவணைப்பில். அது அனேகமாக ஏழாம் மாதமாயிருக்கும்.

தன் கைகளில் அவள் வந்தவுடன் தாய் செய்ய வேண்டியது, கருவுற்றகாலத்தில் தரும் பராமரிப்பு. ஆம் அது ஆரம்பித்துவிடும்.
முதலில் அவளுக்கு கொடுக்க வேண்டியது ‘குடினி’. இதை ஏழாம் மாத குடினி என்பார்கள்.

சுலபமாக பிரசவம் ஆக பெரிதும் உதவும் இந்தக் குடினி.
அம்மா கொண்டு வந்து, “குடி நீ...குடி நீ!” என்று நீட்டுவதால் வந்த பேரோ?
இதன் செய் முறை:
குருந்தட்டி வேர் - 50 கிராம்
சுக்கு - 25 கிராம்
சாரண வேர் - 50 கிராம்
மூன்றையும் இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து 1/12 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். 3/4 டம்ளராக ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது க்ருப்பட்டி சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும்.
இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கவும்.
அடிக்கடி பார்லி தண்ணியும் குடித்தால் மிக நல்லது.
பிரசவம் ஆகும் வரை இதைக் குடிக்கலாம்.

தொடரும்

Wednesday, September 15, 2010

கரு சுமந்த கண்மணிகளுக்கானவை- பிரசவகால பாட்டி....? இல்லை என் வைத்தியம். பாகம் ஒன்று

பிரசவம் பாக்கப் போனேன்..பேரனைக் கையிலேந்தி வந்தேன்.
முதன் முதலாக தனியே தன்னந்தனியே மகளுக்குப் பிரசவம் பாக்க ஸான்பிரான்சிஸ்கோ கிளம்பினேன்.
உள்ளூரிலிருந்தாலாவது அண்ணிகளின் அறிவுரைகளை அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம்.

என்ன செய்யலாமென்று,"திங்..திங்.." என்று திங்கினேன். கோடவுனிலிருந்து விரைந்து வந்தது ஓர் ஐடியா!!!!
அதற்காகவே திருநெல்வேலி கிளம்பினேன். அண்ணி வீட்டிற்கு நோட்டும் பேனாவுமாகப் போய் இறங்கினேன். அவர்கள் சொல்லச் சொல்ல கவனமாக எழுதிக் கொண்டேன்.
அந்த நோட்டுப் புத்தகம் இருக்கும் தைரியத்தில் ஸான்பிரான்சிஸ்கோ போய் தெம்பாக லாண்டினேன்.

அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து நான் செய்த பிரசவகால வைத்தியத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவற்றை தொடர் பதிவாக எழுதுகிறேன். படித்துப் பயன் பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.

Monday, September 13, 2010

ஐயையோ...அப்புரம் என்னாச்சு...?

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சதாப்தி சல்லுன்னு வேகமெடுத்து தண்டவாளத்தில் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. லஷ்மியும் சுப்புவும் பெரியம்மா சின்னம்மா பொண்ணுகள். பெங்களூருக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்....தத்தம் குழந்தைகளோடு, ஒருவனுக்கு மூன்று வயது மற்றவனுக்கு ஒன்றரை வயது.

எதிரெதிரே அமரும் இருக்கைகள்.

எதிரே இருந்த பெண், ‘நீங்க எங்கே இறங்கறீங்க?’

‘கண்டோன்மெண்டில்தான்.’

‘நாங்களும் அங்கேதான்.’

’ஆர்டி நகருக்குப் போக அதுதான் பக்கம்.’

‘அடடே! எங்க வீடு ஆர்டி நகருக்குப் பக்கத்தில்தான்.’

சாப்பாடு வந்தது. சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.
கையில் கொண்டு வந்திருந்த கொறிக்ஸ்களை ஒருவர்க்கொருவர் பரிமாறிக்கொண்டார்கள்.

சில நட்புகள் பசக் என்று ஒட்டிக்கொள்ளும்.
சிலவை இழுஇழு என்று இழுக்கும். மற்றவை என்ன பசை போட்டாலும் ஒட்டாது.

இந்த நட்பு ‘பசக்’ ரகம்.

எதிர் இருக்கைப் பெண் ரமா தன் நான்கு வயது பெண்ணைக்காட்டி, ’இவளுக்கு நாளை மாலை பிறந்தநாள் கொண்டாடுகிறோம். நீங்க இருவரும் குழந்தைகளோடு அவசியம் வரணும்.’ என்று இயல்பாக அழைத்தாள்.

‘கட்டாயம் வருகிறோம். உங்க மொபைல் நம்பர் கொடுங்க.’

மிஸ்டுகால்கள் மூலம் எண்களை வாங்கிக் கொண்டார்கள்.

ரயில் சுகமாக ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் இருவரும் தூங்கிவிட்டார்கள்.

‘சுப்பு! பாட்டிலில் தண்ணீர் காலி!’

‘அடுத்து நிற்கும் ஸ்டேஷனில் இறங்கி வாங்கிக் கொள்ளலாம்.

‘சரி’

வண்டி வேகம் குறைந்து நின்றது. சுப்பு,’ஏதோ ஸ்டேஷன் போல, நான் தண்ணி பாட்டில் வாங்கிட்டு வாறேன்.’ பதிலுக்குக் காத்திருக்காமல் தோளில் ஹாண்ட்பாக்கோடு இறங்கிவிட்டாள்.

சிறிது நேரமாச்சு வரவில்லை. பதட்டத்தில் லஷ்மியும் கைப்பையோடு இறங்கி விட்டாள்.

தூரத்தில் பாட்டிலோடு சுப்பு வந்துகொண்டிருக்கிறாள்.

‘சீக்கிரம் வா!’ என்று கை காட்டிக்கொண்டிருக்கும் போதே வண்டி கிளம்பிவிட்டது. சூப்பர் ஃபாஸ்ட் ஆனதால் எடுத்ததும் வேகம் பிடித்தது.

இருவரும் பதறி விட்டார்கள்.

ஐயையோ அப்புரம் என்னாச்சு?

“ஐயோ பிள்ளைகள் ரயிலில் தூங்கி கொண்டிருக்கிறார்களே!!!என்ன செய்வது?’

ஒரு கணம் சுதாரித்துக்கொண்டு ஸ்டேஷ்ன் மாஸ்டர் அறைக்கு ஓடி விபரம் சொன்னார்கள், உடம்பெல்லாம் பதற.

அவர், அட! அடுத்து கண்டோன்மெண்டில்தானே நிற்கும்!’என்றார் கூலாக.

லஷ்மிக்கு அடுத்த கணம் பொறிதட்டியது. ஸ்டேஷன் மாஸ்டர் வேஸ்ட் என்று வெளியே வந்து சற்று முன் தான் வாங்கிய ரமாவின் செல்லுக்கு அடித்தாள்.

‘ஹலோ! ரமா, நாங்க ரெண்டு பேரும் ஸ்டேஷனில் மாட்டிக் கொண்டோம்.’

ரமா,’கவலைப் படாதீர்கள் பிள்ளைகள் இன்னும் தூங்கி கொண்டுதானிருக்கிறார்கள்.’என்றாள்.

லஷ்மி,’ரமா! உடனே சங்கிலியைப் பிடிச்சு இழு. என்ன ஃபைனானாலும் நான் கட்றேன். குயிக்..குயிக்!’ என்றாள் சமயோசிதமாக.

பதறியபடியே லஷ்மியும் சுப்புவும் ப்ளாட்பாரத்தில் நிற்க, சிறிது நேரத்தில் சதாப்தி ரிவர்ஸில் வந்து கொண்டிருந்தது.


இது நிஜமல்ல கதை

இதுதான் நான் தலைப்பாக வைக்க நினைத்தது. ஆனால் சஸ்பென்ஸ் தெரிந்து விடுமே!

அதனால்தான் தலைப்பாக வைக்க வேண்டியதை “கால்ப்பாக ” வைத்து விட்டேன்.

ஆனாலும் ஒன்று, உண்மையிலேயே இது ஒரு கனவுதான். என் மகள் கண்ட கனவு. ஓடி வந்து என்னிடம் சொன்னபோது நானும் கனவென்பதையும் மறந்து பதறி நான் சொன்னதுதான் இப்போது தலைப்பாக இருக்கிறது.

சதாப்தியில்தான் தண்ணீர் பாட்டில்தான் கிடைக்குமே?
சதாப்தி பாயிண்ட் டு பாயிண்ட் அல்லவோ? என்றெல்லாம் கேள்விக்கணைகளாக பாய வேண்டாம். பிகா...ஸ் இது வெறும் திரில்லர் கனவு.

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...