Sunday, March 24, 2019

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!!

தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம்.



விருத்தனாக வந்து வள்ளியிடம் தேனும் தினைமாவும் உருட்டி உருட்டி தின்று விக்கலெடுத்தானல்லவா...முருகன்? அந்த தினை!!



சோளம் , கம்பு, கேழ்வரகு இவற்றிலெல்லாம் கூழ், களி, சோறு எல்லாம் செஞ்சு சாப்பிட்டாச்சு. மிஞ்சியது தினை....அதை சும்மா விடலாமா?



திருநெல்வேலியில் நாட்டுமருந்து கடையில் தினைமாவு என்று ஒரு பாகெட்டில் பாத்தேன்.

இது எப்படி நம் கண்களில் இதுவரை படாமல் போயிற்று? உடனே ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டேன். 'என்ன செய்யப் போகிறாய்? ஜம்பமாக வாங்கிக் கொண்டாய்?' என்றது மனது. 'ஏதாவது செய்வேன் பொறுத்திருந்து பார்!' என்று அடக்கினேன். 'என்னண்ணே போ!'என்று சுருண்டது.

பச்சரிசி மாவு...தினைமாவு சம அளவில் எடுத்து தண்ணீர் கலந்து தோசைமாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊத்திக் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை , கொத்தமல்லி, உப்பு சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள மாவை கடாயில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். மாவு வெந்து சுருண்டு வந்ததும் இறக்கி வைத்து, ஆறியதும் சிறிது எண்ணெய் விட்டு கையில் ஒட்டாத பதத்தில் பிசைய வேண்டும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.



மென்மையான கொழுக்கட்டைகள்....இட்லிப் பொடி அல்லது தேங்காய்சட்னியோடு சினேகமாக கைகோத்துப் போகும்.



முக்கியமா இன்னொன்று!!!யாரும், "வாயில் என்ன?" என்று கேட்குமுன் விழுங்கிவிடுங்கள்!!!சேரியா?

Saturday, July 16, 2016

வாசல் திறந்தது


9-west.blogspot  இன்று முதல் திறக்கிறது. எவ்வளவு நாளாய் அடைபட்டுக் கிடந்த வாசல் இன்று திறக்கிறது.  சிலு சிலு அரசமரக் காற்று உள்ளே வீசுகிறது. மனசுக்குள்  அக்காற்று புகுந்து சிலிர்க்க வைக்கிறது. நினைவுகள் எங்கெங்கோ பறக்கிறது.
பதிவுலக அன்பர்களை அன்போடு வரவேற்கிறேன்.
இது வரை பூட்டியிருந்த வாசல்


இப்போது திறந்தது




ஆஹா...நிலை வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாயிற்று.


வீட்டுக்குக்குள் சென்றதும் என் முதல் வேலை பூஜை அறையின் ஸ்லைடிங் டோரைத் திறந்து அங்கு வீற்றிருந்து ஆட்சி செய்யும் அம்பாள் ஶ்ரீராஜராஜேஸ்வரியை வணங்கி ஆசி பெறுவதுதான்.

மனசு நிறைவாக அப்பா அமர்ந்து கோலோச்சிய நாற்காலியில் வந்தமர்ந்தாயிற்று
உடன் அண்ணன் வடிவேல் முருகன் அமர வந்த போது ,பெரியவருக்கு மரியாதை நிமித்தம் எழுந்து அப்பாவின் ஆசனத்தை தந்தும் ஆயிற்று.
அதில் அமர்ந்து கொண்டு பழைய கதைகளையெல்லாம் அசை போட்டோம்.
அப்பா இருக்கும் வரை இந்த நாற்காலியில் அவருக்கு சமமாக நாங்கள் யாரும் அமர்ந்த்தேயில்லை. காரணம் மூத்தோர் காட்டிய வழி.
பின்னால் தங்கை கோமாதான்..அதென்ன? அப்பாதானே என்று அப்பாவோடு அமர்ந்து உரையாடி பழைய சம்பிரதாயத்தை உடைத்தாள்.  அப்பாவுக்கும் அது மனதுக்கு இதமாக இருந்திருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
மரியாதை கொடுத்து எல்லோரு நம்மை ஒதுக்கிறார்களே என்று அவ்ர் மனது ஆதங்கப் ப்ட்டிருக்கும். 
.

   
காலையில் எழுந்ததும் ப்ரஷில் பேஸ்டை பிதுக்கிக் கொண்டு நான் வரும் இடம் இதுதான். அருவியாய் கொட்டும் இந்த குழாயைத் திருப்பிக்கொண்டு, தண்ணீர் சத்தத்தின் ஓசையை இசையாக காதில் வாங்கிக் கொண்டு பற்களை சுத்தம் செய்வேன். தண்ணீர் வெகு தாராளமாக கிடைத்த காலத்தில் நீர் சேமிப்பு பற்றி அறிந்திருக்கவில்லை, அதுக்கான அவசியமும் வயதும் இல்லை. 


இரவானதும் எங்க வீட்டு வேலையாள் வேலாயுதம் எனக்கான படுக்கையை விரித்து வைத்திருக்கும் இடம் இதுதான்.இந்த பட்டாலையில்தான் அப்பா, செம்பா, நான் கோமா நால்வரும் உறங்குவோம்
அன்று
மதியம் நானும் முருகனும் சித்தப்பா வீட்டுக்கு போகும் போது எதிர் திண்ணையில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். யாரோ என் நான் கவனிக்க வில்லை. வரும்போது முருகன், அந்த முதியவர் யாரெனத் திரிகிறதா/ எனக்கேட்டார். தெரியலையே என்றேன். அவர்தான் நம் வேலாயுதம்! என்றார்.
அடடா! முதலிலேயே ஏன் சொல்லவில்லை..அப்போதே பார்த்திருக்கலாமே! என்று உடனே திரும்பி அவரிடம் சென்றோம்,'வேலாயுதம்!என்னைத்தெரிகிறதா? ' தெரியுதம்மா! கல்யாணியம்மாதானே!' என்றதும் எனக்கு சந்தோஷமாயிருந்தது. இருவருக்குமே காலம் கோலத்தை மாற்றியிருந்தது. 'முருகமொதலாளியை அடிக்கடி பார்ப்பேன். உங்களை இப்பதான் பார்க்கிறேன்.நல்லயிருக்கேளாம்மா?'
நீ எப்படியிருக்கிறாய்? நல்லயிருக்கேம்மா..இரு குறையுமில்லை பிள்ளைகள் நல்ல பாத்துக்கிறாங்க. பொழுது போக இப்படி திண்ணையி உக்காந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். என்றான்(ர்). இது பெரிய கொடுப்பினையல்லவா என்று சிலாகித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
  
இத்தனைக்கும் காரணமான நிகழ்வு அன்பு மணிஅண்ணனின் பத்தாம்நாள் காரியங்கள் எல்லாம் நடை பெற்ற அனறு.
இனி அப்பெரிய வீட்டில் அண்ணி தனியே இருக்க முடியாதென்பதால் , மருமகளோடு சென்னைக்கு செல்வதென்று முடிவாகியது.
மனசுக்குள் பெரும்பாரம் அடைத்தது,  தூங்கா நகரம் என்பது போல் ,அடையாத கதவாக இருந்த  வீடு இனி பூட்டியேயிருக்கும் என்பதை நினைத்தபோது.
ஆகவேதான் நினைவுப் பெட்டகத்துள் பூட்டி வைக்க இடம் இடமாக நின்று படமெடுத்துக் கொண்டேன். சில படங்கள் மட்டும் பதிவுக்கு மற்றவை என்  மனப் பதிவுக்கு.

Sunday, April 15, 2012

ஏப்ரல் 2012 பிட்டுக்கு

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன். அனைவருக்கும் வணக்கம்...வந்தனம்.
'பிட்'ன் தலைப்பைப் பார்த்ததும்....ஆசை...ஆசை...யாரை விட்டது!
அதா வந்துட்டேன்.

இரண்டு கோடுகளுக்கு நடுவே செல்லாமல் குறுக்கே செல்லும் மயில்.



இறுதி வரை இணையாமல் செல்லும் இக்கோடுகள் சில இடங்களில் இப்படியும் இணையும் போலும்!



"ஹௌஸ் ஆன் தி ராக்" அமெரிக்காவில் விஸ்கான்சின் என்னும் இடத்தில் உள்ளது. இப்பாதை 'இன்ஃபினிட்டி' என்று இவ்விரு கோடுகளும் ஓர் புள்ளியில் சேரும். அதற்கு மேல் செல்ல முடியாது.



டிஸ்னிலேண்டில் ஒரு தொங்கு பாலம்.



எங்க வீட்டு முடுக்கு.


பாத்துட்டு தெரிவு செய்யுங்கள் நண்பர்களே!!!

Sunday, September 4, 2011

குரு நாள் வணக்கம் ஒரு நாள் மட்டுமல்ல என்றென்றும் ஒரு மீள் பதிவு

மூடிக்கொண்டே பள்ளிக்குச்சென்ற நம் அறிவுக் கண்ணை திறந்து வைப்பவர் ஆசான், ஆசிரியர்,குரு. ஏணியாய் நம்ம ஏற்றி விட்டவர்களை நன்றியோடு நினைவு கூற ஒரு நாள் மட்டும் போதாது. வாழ்நாள் பூரா நினைத்து, மதித்து போற்றப்பட வேண்டியவர்கள்.



அந்த வகையில் நான் படித்துவந்த பாதையை திரும்பிப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் என் ஆசான்,ஆசிரியர், குரு ஆகியோரை, மறைந்த, ஆசிரியராய் வாழகையைத் தொடங்கி நாட்டுக்கே தலைவராய் உயர்ந்த, நம் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்நன்னாளில்

நானும் நினைவுகூற விரும்புகிறேன்.



எடுத்த எடுப்பில் நினைவுக்கு வருபவர்...என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய என் பள்ளித் தலைமை ஆசிரியர் சிஸ்டர் மேரி அலெக்ஸ். இவரைப்பற்றி நான் ஏற்கவே இரு பதிவுகள் இட்டிருக்கிறேன்.



ஐந்து வயதில் இன்றைய எல்கேஜிக்கு சமமான ‘பேபிக் கிளாஸ்’ சிஸ்டர், பேர் ஞாபகமில்லை. எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கற்றுக் கொடுத்தவர். எப்படி...?

‘அணில், ஆடு, இலை, ஈ’ என்று உயிர் எழுத்துக்களை படங்களைக்காட்டி சின்னச்சின்ன வார்த்தைகளால் காட்டியவர். எண்களை ’ஒன்று, இரண்டு, மூன்று’ என்று எழுதப்பட்ட சிறு அட்டைகளை அடுக்கி அதன் அருகே காய்ந்த ஒரு வகைக் காய்களின் விதைகளை கொடுத்து அதன் அதன் அருகே அமைக்கவும் எளிதாக புரியும் படியும் எங்கள் மண்டையில் விதைத்தவர். இது பற்றியும் பதிந்திருக்கிறேன்.



மேலே வகுப்புகள் போகப் போக ஆசிரியர்களாக என்னைக் கடந்தவர்கள்...மிஸர்ஸ்.சுந்தரநாதன், சகுந்தலா, அம்மணிடீச்சர், தமிழ் ஐயா, டைப்ரைட்டிங் டீச்சர் ஆக்ன்ஸ், செகரடேரியல் கோர்ஸ் வரதாச்சாரி, வசந்தா, பிச்சம்மாள், தையல் சொல்லிக்கொடுத்த சிஸ்டர் அஷீலா, பள்ளியிலேயே வீணையை தடவ கற்றுக்கொடுத்த எப்போதும் காவிப் புடவையே அணிந்திருக்கும் ஆவுடையம்மாள்.



கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் காரணமான எங்கள் பிரின்ஸிபால் திருமதி டேவிட், ஆங்கிலம் கற்பித்த ஆங்கிலேய லேடி(பேர்?). கட்டுரைகள் எழுதும் போது புத்தகத்தில் உள்ளதை அப்படியே மக்கப் செய்து எழுதுவதைவிட அவரவர் சொந்த நடையில் எழுதினால் மொழியறிவு வளரும் என்று, மாதிரிக்கு நான் எழுதிய கட்டுரையை வகுப்பில் படித்து என்னை புல்லரிக்கச்செய்தவர்.

பொருளாதார வகுப்பெடுத்த துறைத் தலைவர் மிஸர்ஸ் அகெஸ்டஸ்.

முதலாம் வருடம் மட்டும், ‘வாம்மா, மின்னல்!!’ என்பதுபோல் வந்து தனது சரளமான ஆங்கிலப் பேச்சால் எக்கனாமிக்ஸ் வகுப்பெடுத்து எங்களையெல்லாம் பிரமிக்கவும் மிரளவும் வைத்த மிஸ் ராணி பிள்ளை.



நல்ல தமிழ் மீது ஓர் ஆர்வம் உண்டாகச் செய்த மிஸர்ஸ் ஜான், விமலா, உமாமகேஸ்வரி.

அவர்கள் வகுப்பில் பாடம் எடுக்கும் முறையில் யாருக்கும் தமிழார்வம் வரும். குறிப்பாக பள்ளியில் கசந்த ’தேமா, புளிமா’ என்று குழப்பிய தமிழ் இலக்கணம், கல்லூரியில் புளிக்காமல் இனித்ததற்கு இவர்களே காரணம்.



தமிழ் கட்டுரைகள் அனடேஷனோடு எழுத சொல்லிக்கொடுத்த என் பெரிய மதினி.அத்தோடு சமையலில் ‘அனா, ஆவன்னா’ மட்டும் சொல்லிக்கொடுத்தும் அதே மதனிதான். பின் ’ஔவன்னா அஃன்னா’ வரை நான்...நானே முயன்று தேறியது பெரிய கதை.



என்.சி.சியில் ட்ரில் வாங்கிய இன்ஸ்ட்ரக்டர்கள். என்.சி.சியில் இருந்தால் கேம்ஸ் கிளாசுக்கு வரக்கூடாது என்ற விதியை என் ஆர்வத்தைப் பார்த்து தளர்த்தி சேர்த்துக்கொண்ட கேம்ஸ் மிஸ்.



ஒரு புது வீணையை ஒரு நல்ல நாளில் எங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து வாங்கிக்கச்சொல்லி நல்ல நாளில் வந்ததால் தவிர்க்க முடியாமல் ஏற்கனவே என்னிடமிருந்த இரு வீணைகளோடு மூன்றாவதாக இணைத்து பள்ளியில் விட்ட பாடத்தை மறுபடி ஆரம்பித்த வீணை வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி. அதுவும் எப்படி..? மறுபடி சரளி வரிசையிலிருந்து...ஏன்? அப்போதுதான் அவர் பாணிக்கு கை வருமாம்.



அவரும் பாதியில் விட்டுச் சென்றவுடன் வந்தார் இன்னொரு வாத்தியார். காருக்குறிச்சி நாராயணன். இவரும் அவர் பாணிக்கு கையை மாற்றினார். இன்று ஓரளவுக்கு நான் வீணை வாசிக்கிறேன் என்றால் அதற்கு இவர்தான் காரணம்.



எனக்கு புகைப்படக் கலையயும் கார் ட்ரைவிங்கும் கற்றுக் கொடுத்த என் அன்பு அண்ணாச்சி.

குங்குமம் செய்ய ஒவ்வொரு படியாக சொல்லிக்கொடுத்த அருமை அப்பா.



நாற்பது வயதில் மைலாப்பூர் ராதாகிருணா ரோடில், ஆஹா! கட்டுரையின் தலைவர் வந்துவிட்டாரே! என்ன பொருத்தம்!! உள்ள ‘இண்டீரியர் எக்ஸ்டீரியர்’ இன்ஸ்ட்டிடியூட்டில்

டிசைனர் கோர்ஸில் கற்பித்த ஆசிரியர்கள்.

பின் திநகர் ஜிஎன் செட்டி ரோட்டில் உள்ள ‘கம்ப்யூட்டர் பாயிண்டில்’ வகுப்பெடுத்த இளைஞர்,இளஞிகள்.

பேசிக் மொழியில் ப்ராஜெக்ட் ப்ரோக்ராம் எழுத வேண்டும். கொஞ்சம் திணறியபோது ஓடிவந்து உதவி செய்து, ‘அம்மைக்கே பாடம் சொன்ன’ என் சின்னக்கா மகன் பிஎஸ்.



கணவரிடமும் பிள்ளைகளிடமும் ஏன்? பேரப்பிள்ளைகளிடமும் படித்த பாடங்கள் ஏராளம்.



நல்ல அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொடுத்த என் வாழ்கை. நாம் இடறி விழும் போதும் நிமிர்ந்து நிற்கும் போதும் வாழ்கை நமக்கு எவ்வளவு பாடங்களை கற்றுக்கொடுக்கிறது!!!



கடைசியில் முக்கியமானவரைப் பற்றி சொல்லாவிட்டால் பதிவு முழுமையடையாது. யார் அவர்? பதிவுலகின் டீச்சர் என்று எல்லோராலும் மதிக்கப் படும் நம் அன்புக்குறிய துளசி டீச்சர்தான். பதிவு எழுத ஆரம்பித்தபோது தயங்கித் தயங்கி ரொம்ப ஃபார்மலாக எழுதிக்கொண்டிருந்த என்னை கொஞ்சம் ரசனையோடும் நகைச்சுவையோடும் எழுதலாம் என்று அறிமுகப்படுத்தியவர்



இப்படி நான் பல வகைப் பாடங்களை கற்கக் காரணமான அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!!

இதில் பூவுலகில் வாழ்வோருக்கு என் வாழ்த்துக்கள்!!புகழுலகில் இருப்போருக்கு என் அஞ்சலிகள்!!!







இரண்டு நாட்கள் கழித்து வெளியிடுவதற்கு பொறுக்கவும். கணினியில் ப்ளாக்கர் செய்த கோளாறால் “ஸேவ்” செய்ய முடியவில்லை.



போன பதிவு இரண்டு நாட்கள் கழித்து வெளியாகியது. ஆனால் இம்முறை 'ஆசிரியர் தினத்தன்றே வெளியாக வேண்டி மீள் பதிவாக வருகிறது. பழைய படங்களை இப்போதும் ஆர்வத்தோடு பார்ப்பதில்லையா? அது போல்தான் இதுவும். நம் வாழ்நாள் முழுவதும் நினைத்து போற்ற வேண்டிய ஆசிரியர்களை மறுமுறை நினைத்துப்பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

செப்டெம்பர் போட்டிக்கு தற்செயலாய் எழுத்துக்கள்/எண்கள்

தலைப்பெல்லாம் நல்லாத்தானிருக்கு. ஆனால்.....கைவசம் தற்செயலாய் இருப்பைகளைத் தருகிறேன். சேரியா?





இது 'A'





சிலந்தி 'வெப்'பில் கிடைத்த "X'





இதுவும் அதே! இரண்டில் எது நல்லாருக்கு?







அழகான ''V'





ஹை...! இது 'I'






இதில்...'V' இருக்கு, 'W' தெரியுது, 'M' மும் இருக்குது.




இப்போதைக்கு இவைகள்தான். முடிந்தால் அடுத்ததும் வரும். சேரியா?























































































Saturday, August 13, 2011

சென்னையின் சேமிப்பு, தென்தமிழ் நாட்டுக்கு நிம்மதி பெருமூச்சு

நல்ல கொள்ளைக்காரன் பணமுதலைகளிடமிருந்து கருப்புப் பணத்தைத் திருடி ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாகிறான்.

சென்னைவாழ் மக்களாகிய நாமும் ஏன் நம்மிடமுள்ள கருப்பு மின்சாரத்தை சேமித்து தென் தமிழ்நாட்டுக்கு வாரி வழங்கக்கூடாது?



சென்னையில் மட்டும் செலவழிக்கப்படும் மின்சாரத்தில் பத்து சதவீதம் மட்டுமே சேமித்தால் அதைக் கொண்டு தெற்கே பல நகரங்களில் தினசரி ரெண்டு மணிநேரம், நாலு மணிநேரம் என்று மின்வெட்டால் அவதிப்படும் நம் சக குடும்பங்களின் அவதிகளை போக்கமுடியும்.



எப்படீன்னு பாக்கலாமா? முதலில் நம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம். சேரியா?

மின்சாரத்தேவையை நூறு சதவீதம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதில் அது தவறும் போது எடுத்துச் சொல்லியும் கண்டுக்காத போது, சப்பைக்கட்டு கட்டும் போது. மக்களாகிய நாமே, “நமக்கு நாமே!” என்று சில வழி முறைகளைப் பின் பற்றி சகமக்களுக்கும் உதவலாமே!!



’கருப்பு மின்சாரம்’ என்று நான் சொல்வது, தேவையில்லாமல் செலவாகும் மின்சாரம், ஆடம்பரத்துக்கு அநியாயமாகப் போகும் மின்சாரம், திருட்டுத்தனமாய் உறிஞ்சப் படும் மின்சாரம் போன்றவைகள்தான்.

குளிர்சாதன வசதி என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலைமாறி அத்தியாவசியமானது என்ற குறியீட்டுக்குள் வந்துவிட்டது.

காரணம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததுதான்.



அதிலும் வீட்டுக்கு ஒன்று என்றிருந்தது இப்போது அறைக்கு ஒன்று என்றாகி விட்டது.



தேவை முடிந்தவுடன், மின்விளக்கு, மின்விசிறி, கேய்சர் மற்றும் பல மின் உபகரணங்களை

உடனுக்குடன் அணைத்து விடுவதும் பெரும் அளவில் மின் சேமிப்புக்கு வழி செய்யும். கொஞ்சம் கவனம் மட்டுமே தேவை.



மின் உற்பத்தியை அதிகரிக்காமல் சிக்கலாக்கிவிட்டது போல், மின் கம்பத்திலும் ஏகப்பட்ட சிக்கல்கள்! திருட்டுத்தனமாய் ஸ்ட்ரா போட்டு உறிஞ்ச வசதியான அமைப்பு.

இப்படியே விட்டுவிட்டால் அபாயம்தான்.

தேவையான முறையில் சிக்கனமாகவும் அளவாகவும் உபயோகித்தால் மின் செலவும் மட்டுப்படும். நம் குடும்ப பட்ஜெட்டில் அதற்கான தொகையும் கட்டுப் படும்.



சொன்னதெல்லாம் சரிதானே? ஹலோ! அங்கே தேவையில்லாமல் ஓடும் மின் விசிறியையும் எரியும் விளக்கையும் தயவு செய்து அணைத்து விடுங்களேன்!!!





Sunday, July 17, 2011

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்

எங்கெல்லாமோ தேடியும் எனக்குக் கிடைக்காத அப்பாடல், ஒரு ஜீனியஸ் சுட்டிப் பையனிடமிருந்து கிடைத்து.....கிடைத்தே விட்டது.

திருநெல்வேலியில் பழைய பாடல்கள் இசைத்தட்டுக் கடையில் கிடைக்குமா பார் என்று அண்ணன் மகனிடம் சொல்லியிருந்தேன். அவன் மாலையில் பள்ளியிலிருந்து , ப்ளஸ் 1 படிக்கும் அவன் மகன் ஜீனியஸ் விக்ரம்.....அவன் அப்படித்தான் தன்னை சொல்லிக் கொள்வான். அதில் உண்மையும் இருக்கும்.

அதை நிரூபிக்கும் விதமாக டாடி சொன்னதும் உடனே கணினி முன் அமர்ந்து சில வினாடிகளில் கண்டுபிடித்து எனக்கும் தகவல் சொல்லிவிட்டான். சந்தோஷத்தில், 'டேய்! நிஜமாவே நீ ஜீனியஸ்தாண்டா!!' என்றேன் உற்சாகத்தோடு.

அதைக் கொண்டு மருமகன் உதவியோடு நீங்கள் எல்லோரும் கேட்கும் விதமாக லிங்க் கொடுத்திருக்கிறேன்.

பாடலை 'மனம் விட்டு சிரித்திட்டு' என்று கேட்டு விட்டு கருத்து சொல்லுங்கள்.


லிங்க் இதோ

avana ivan

Thursday, July 14, 2011

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

மறுபடி பிறந்து வரச் சொல்லடி
விருப்பமில்லயானல்...
இங்கிருப்பர் எவரேரையும்
அவனைப் போல் மாற்றி வைக்கச் சொல்லடி

'பாக்கலாம்' என்ற உங்க வழக்கமான வார்த்தையைச்
சொல்லி தப்பிக்கப் பாக்காதீங்க.
எங்களுக்குத் தெரியும், மாத்திவைப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்!!

கண்ணுக்கெட்டிய தூரம் சுத்தமான தலைவனையே காணோம்.
அப்படி இருக்கலாமென நினைப்பவரையும் இருக்க விடுவதில்லை.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? என்ன செய்யப் போகிறது?
ஒரு வேளை நீ மறுபடி பிறந்து வந்தாயானாலும்
இங்கிருக்கும் சாக்கடைச் சேற்றில் உன்னையும் புரட்டி எடுத்துவிடுவார்கள்.

அந்தச் சேற்றில் பிறந்து அதை சுத்தப் படுத்தவாவது வா!!!!

இன்று நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயங்களை செய்து காட்டியவன் நீ.

ஆம், பெற்ற தாயை ஒரு நாளுக்கு மேல் உன்னோடு தங்க வைத்ததில்லை
விருதுப்பட்டிக்கு விரசாக அனுப்பி வைப்பாய், விருது ஏதும் வாங்காத தலைவனாய்.

கருமம் மட்டுமே கண்ணாய்...வேறு நினைப்பேதும் காணாய், கர்மவீரர் எனும் பேர் பெற்றாய்.

நீ மறைந்தவுடன் உன் கணக்கில் இருந்தது வெறும் அறுபத்தைந்து ரூபாய் மட்டுமே!

இன்றைய நிலைமையில் வேதனைச் சிரிப்புத்தான் வருகிறது.

அறுபத்துரெண்டில் இந்தோ-சைனா போர் வெடித்ததும், அன்றைய பிரதமர் நேரு நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

எதிரியை வீழ்த்த ராணுவச் செலவுகளுக்கு குடிமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய வேண்டும்.

உதவி என்றால் பணமாகவும் தங்கமாகவும் தேவை என்று சொன்னவுடனே, மக்கள் பொங்கியெழுந்து பணமழையாகவும் தங்கம்..நகைகளாகவும் தங்கக்காசுகளாகவும் வாரி வழங்கி விட்டார்கள். தேசபக்தி நிரம்பி வழிந்த காலமல்லவா?

அவ்வகையில் கர்மவீரர் காமராஜர் தமிழ் நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்து பெரும் நிதி திரட்டி(புறங்கையை நக்காமல்), விள்ளாமல் விரியாமல் பிரதமரிடம் கொண்டு சேர்த்தார்.

எங்கள் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வெண்டுக்கு வருகை தந்து பள்ளியின் நன்கொடையையும் மற்றும் மாணவ மாணவிகளின் தனிப்பட்ட, தேசத்துக்கான பங்களிப்பையும் அன்போடு பெற்று சென்றது மறக்க முடியாதது.

என் தந்தை, அப்போது படித்துக்கொண்டிருந்த எங்கள் நால்வரது கைகளிலும் ஆளுக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்தார்.
மறக்க முடியாது நிகழ்வு.

பொற்சாசை அக்கருப்பு வைரக்கரங்களிடம் சேர்ப்பிக்கும் நான்.



அடுத்து என் தங்கை கோமா.


பின் அண்ணாச்சி மகன்.


கடைசியாக சின்னண்ணன் மகள்.



ஜூலை பதினைந்தாம் நாள். ஈடு இணையில்லாத்தலைவன் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான இன்று அன்னாரது நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இப்பதிவு பிறந்தது.


இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்க மாட்டார்களா என்ற மக்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைவேற அவரிடமே வேண்டுவோம்.

'படிக்காதமேதையான' பெரும்தலைவர் காமராஜர் பிறந்தநாளை "கல்வி எழுச்சி" நாளாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

Sunday, July 10, 2011

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்

நான் அதைப் பாடவில்லை.....ஹோய்...!
வீணையில் வாசித்தேன்.

கல்லூரியில் படித்த(!?),வாழ்ந்த வருடங்களான 1966-1969 வரையிலான அம்மூன்று வருடங்களும் நான் சங்கீத சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் (என்ன ஒரு தெனாவெட்டு!!!யம்மா! அடங்கு.) பறந்த காலங்களாகும். சேரி...சேரி..என் லெவலுக்கு அது பொற்காலம்தான்.

வீணை வாசிப்பில் உச்சத்திலிருந்த காலம். கல்லூரி ஆண்டுவிழா மெனுவில்...அட!எப்பபாரு திங்கிற நெனப்புதான், ப்ரோகிராமில் என்னோட வீணைதான் முதலிடத்திலிருக்கும்.
தனியாகவோ அல்லது இரண்டு தோழிகளுடனோ வாசிப்பு அமர்க்களமாயிருக்கும்.

காரணம், எனக்கு வாய்த்த குருவும் என் பெரியமதனியும்தான். ஒவ்வொரு விழாவுக்கும் மூன்று பாடல்கள், ரெண்டு செமி-க்ளாசிக்கல் ஒன்று, ஏதாவது ஒரு சினிமா பாடல்.
முதலிரண்டை தெரிவு செய்வது வாத்தியார். மூன்றாவதை மதனிதான் தேர்வு செய்வார்கள்.
அது கட்டாயம் ஹிட்டாகும்.

கல்லூரி ஆண்டு விழாவில் வாசித்தை பெருமாள்புரம் லேடீஸ் க்ளப் ஆண்டு விழாவிலும் ஆக் ஷன் ரீ-ப்ளேவாக அதையே மறுஒலி(ளி)பரப்பு செய்வோம்.

'பாட்டும் நானே பாவமும் நானே', 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே' போன்ற பாடல்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், வாத்தியாருக்கு சினிமா பாட்டுக்கள் தெரியாது. அதுக்காக விட்டுடுவோமா?

வீட்டில் வீணை க்ளாஸ் நடக்கும் அறையில் ரெக்கார்ட் ப்ளேயரும் குறிப்பிட்ட பாட்டுள்ள ரெக்கார்டும் கொடுத்து கதவை சாத்திவிட்டு, அவரே அதைக் கேட்டு ஸ்வரப்படுத்தி எழுதிக் கொள்வார். அதை முதலில் படித்துவிட்டு, தானே வாசித்துப் பழகிக் கொண்ட்ட பிறகு எனக்கு சொல்லித்தருவார். அப்படி படுத்தியிருக்கிறேன்.

அவருக்கு என் பணிவான வணக்கங்கள்!!!அவர் பெயர் காருக்குறிச்சி நாராயணன்.

என்ன செய்கிறார் என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பேன். பாவமாயிருக்கும். ப்ளேயரில் ரெக்கார்டைப் போட்டு பாடவிட்டு வரிவரியாக ஊசியை எடுத்து எடுத்து வைத்து...ரிவைண்ட் செய்கிறாராம், ஸ்வரங்களை எழுதி முடிக்க அரை நாளுக்கும் மேலாகிவிடும்.

பின் ரெண்டு வீணைகளையும் வைத்துக் கொண்டு அப்பாட்டை வாசித்துக்காட்ட, எனக்கு அவர் ஸ்வரப்படுத்திய நோட்டை பார்க்காமலே அவர் வாசிக்க வாசிக்க அதைப் பார்த்து பார்த்து அரை மணியில் என் கைகளுக்கு வந்துவிடும். காரணம்...பாட்டுதான் மனப்பாடமாயிற்றே!!

சேரி....மேட்டருக்கு வருவோம். முந்தாநாள் டீவியில் சேனல்கள் மாத்திக்கொண்டிருக்கும் போது சட்டென ஒரு சேனலில் ஒரு படத்தின் டைட்டில் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த டைட்டில் மியூசிக்கை கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்தது. நினைவு எங்கோ பறந்தது.

படம், 'அவனா இவன்' வீணை எஸ். பாலசந்தர் தயாரித்து இயக்கி இசையமைத்து தானே ஹீரோ-கம்-வில்லனாகவும் நடித்த படம். பாடல், 'மனம் விட்டு சிரித்திட்டு கரம் தட்டு கரம் தட்டு கரம் தட்டு...' பரபரவென்று வாசிக்க தோதான ட்யூன்!!!

வழக்கம் போல் மதனி செலக்ட் பண்ணி வாத்தியார் படித்து எனக்கும் மற்றும் அவரது இரு சிஷ்யைகளுக்கும் சொல்லிக்கொடுத்து காலேஜிலும் லேடீஸ்க்ளப்பிலும் அட்டகாசமாக அனைவரது பாரட்டுகளையும் பெற்ற பாடல்!!!

ஆளுக்கொரு ஸ்தாயில் வாசித்ததெல்லாம் கொசுவத்தியாக சுத்திசுத்தி வந்து, அன்று முழுதும் பாடலின் ட்யூன் போலவே மனமும் பரபரவென்றிருந்தது.

அப்பாடலோடு பதிவிட கூகுளின் எல்லா சைட்டிலும் தேடியும் கிடைக்காததால் மொட்டையாக பதிவிட நேர்ந்தது.

யாராவது இப்பாடல் கிடைக்கும் சைட்டின் சுட்டி கொடுத்தால் சந்தோஷப்படுவேன்.
பழைய சிடியாகவும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

வீணையை பெட்டியிலிருந்து எடுத்து சுத்தம் செய்து சுதி சேத்து,
மனம் விட்டு,
"மனம் விட்டு மனம் விட்டு மனம் விட்டு மனம் விட்டு,
சிரித்திட்டு சிரித்திட்டு சிரித்திட்டு
கரம் தட்டு கரம் தட்டு கரம் தட்டு..."ன்னு
மிக நல்ல வீணையை தடவி, கல்லூரி காலத்துக்குப் போகப் போறேன்.

யாரெல்லாம் வாரீங்க..?

படத்துக்குள்ளிருந்து படம் ஜூலை 2011 பிட்டுக்காக

ஜூலை புகைப்பட போட்டிக்கான விதிகள் முதலில் கொஞ்சம் இடக்குமடக்காக இருந்தது. ராமலஷ்மியிடம் விவரம் கேட்டு புரிந்ததும்...கிளம்பீட்டேன்யா..கிளம்பீட்டேன்!!!

படத்தில் பலூன் இருக்கணுமாமே!! இங்கே இருக்குதே!!


துள்ளுவதோ இளமை...வீதியின் மேலே ஆனந்தத்தின் அந்தரத்தில் இளைஞன், காலில் செருப்புகளோடு.


சுட்ட இனிப்பு சோளம்.....என்ன சுவை...என்ன ரசிப்பு...என்ன லயிப்பு!!!

மரம்

வீதி....அவன்யூ?

மற்றொரு வீதி

Friday, June 24, 2011

நொங்கு பச்சை புலாவ் சமையல் குறிப்பு

நுங்கு உபயோகித்து மற்றொரு சமையல் குறிப்பு.

பச்சை புலாவ் பற்றி முன்பே குறிப்பு தந்திருக்கிறேன். இருந்தாலும் மறுபடி ஒரு செய்முறை விளக்கம் தருகிறேன். அரை மணி நேரம் ஊற வைத்த பிரியாணி அரிசி, கொத்தமல்லி, புதினா அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை ஜூஸ், பட்டாணி, தோலுறித்து நறுக்கிய நுங்கு துண்டுகள்.

பாத்திரத்தில் எண்ணை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு, பட்டாணி சேர்த்து வதக்கி, அத்துடன் பிரியாணி அரிசி, பச்சை விழுது சேர்த்து நன்கு வதக்கி அளவான தண்ணீர்(விரும்பினால் சிறிது தேங்காய் பால்) விட்டு கலக்கி மூடி வைக்கவும். முக்கால் பதம் வந்ததும் ,


நுங்கு சேர்த்து கலக்கி, லைம்ஜூஸ் விட்டு கலக்கி, ஸ்டவை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். பொல பொலன்னு வந்ததும்.......

நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து உதிர உதிர பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி மேஜைக்கு கொண்டு சேர்க்கவும்.

இதுக்கு தொட்டுக் கொள்ள மாம்பழ ரைத்தா. கட்டித்தயிரில் சீவிய மாம்பழம், சிறிது மிளகாய்பொடி, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்த மாம்பழப் பச்சடி சூப்பரயிருக்கும்.


புல்லா...ஒரு கட்டு கட்டியாச்சா? அப்புரம்?

வெத்தலை போட வேண்டியதுதான். அதிலும் ஒரு சமாச்சாரம் சொல்லவா?

நுங்கை துண்டுகளாக நறுக்குமுன் அதன் மேல் தோலை உரித்து எடுத்திருப்போமில்லையா? அதை தூரப் போட வேண்டாம். அதன் தோல் ஒருவித துவர்ப்பு ருசியுடனிருக்கும்.

அதை வெற்றிலையோடு 'பாக்குக்குப்' பதிலாக வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மடித்து வாயில் அதக்கி மென்றால் பாக்கைவிட கூடுதலாகவே சிவக்கும். (சர்க்கரை வியாதிக்கு அருமையான மருந்தும் கூட).

என்ன..? பாக்கு பொட்டலம் தட்டை விட்டு கீழே இறங்கிடுச்சு?
கோச்சுக்கிச்சாம்!!!!!!!!
கோச்சுக்காதடா செல்லம்.....நுங்கு சீசன் முடிந்தததும் நீதான் கதி!!!!!

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...