Wednesday, September 29, 2010

கரு சுமந்த கண்மணிகளுக்கு....பாகம் ஐந்து

இப்பதிவுகள் நல்ல பயனுள்ளவை என்று வந்திருக்கும் பின்னூட்டங்களிலிருந்து அறிய மிக்க மகிழ்ச்சி.

நான்காம்நாள் இரவு பச்சை என்று கொடுப்பார்கள். இந்த பச்சையும் பொடியாக கிடைக்கும்.

வெற்றிலை - ஒன்று
வேப்பங்கொழுந்து - இரண்டு
பூண்டு - ஒன்று
பச்சைப்பொடி ஒரு தேக்கரண்டி வைத்து பொடித்து கருப்பட்டிப் பொடி சேர்த்து கொடுக்கவும்.

மறுநாள்(ஐந்தாம்நாள்) தலையில் இஞ்சி சாறு தேய்த்து எண்ணைக் குளியல்.
பிரசவம் முடிந்து மூன்றாம்நாளிலிருந்து தினமும் காலை இட்லி, மிளகுப் பொடி(மிளகும் உப்பும் சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்) பசுநெய் விட்டு சாப்பிடலாம்.
இட்லி சுலபமாக ஜீரணமாகும், மிளகு உடம்பிலுள்ள கெட்டநீரை வற்ற வைக்கும், பசுநெய் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
11-மணிக்கு சாதம்.
சாதத்தோடு பச்சைக்காய்கறிகளான அவரைக்காய், புடலங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்களை பச்சை மிளகாய் சேர்க்காமல் கூட்டு வைத்து தினம் ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் சாதத்தில் விட்டு சாப்பிட ‘பத்தியக் குழம்பு’ தான் நல்லது.
பத்தியக் குழம்பு:
மிளகு - 2 தே.க.
மல்லி - 2 தே.க.
ஜீரகம் - 2 தே.க.
மஞ்சள் - 1 துண்டு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பூண்டு - 6 பல் உறித்து வதக்கி
புளிக்குப் பதில் எலுமிச்சை சாறு
50 கிராம் நல்லெண்ணை ஊற்றி தாளித்து,
மஞ்சளைத் தவிர மற்ற சாமான்களை எண்ணையில் வறுத்து, மஞ்சளை வெறுமே வறுத்து பொடிசெய்து தாளிதத்தில் கலந்து வதக்கிய பூண்டையும் சேர்த்து உப்பு சேர்த்து கொதிவந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி வைக்கவும். இக்குழம்பை இரண்டு மூன்று நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதோடு மணத்தக்காளி வத்தல், சுண்டக்காய் வத்தல், வேப்பம்பூ வத்தல் இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து கொண்டு, நாளுக்கு ஒன்றாக சூடு சாதத்தில் நெய்விட்டு இப்பொடிகளில் ஒன்றை பிசைந்து சாப்பிடலாம்.

ஆக பச்சை உடம்புக்காரிக்கு தினமும் காலை இட்லி மிளகுப் பொடி பசுநெய்.
11- மணிக்கு ஓட்ஸ் அல்லது ஹார்லிக்ஸ் ஒரு டம்ளர்.
மதியம் சூடு சாதம், வத்த்ல் பொடி, கூட்டு, பத்தியக் குழம்பு
மாலை பிரட் அல்லது பிஸ்கட், பால்
இரவு இட்லி, மிளகு பொடி நெய்
படுக்கு முன் இஞ்சி மேல் பொடி

பச்சை கொடுப்பது இரண்டு முறை போதும். பச்சை முடிந்ததும் களி வகைகள் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
என்னென்ன களிகள் என்பது பற்றி அடுத்த பதிவில். சேரியா?

19 comments:

  1. அருமையான தகவல்கள் நானானி

    ReplyDelete
  2. தென்றல்,
    நன்றி!
    இப்பதிவுகளின் லிங்க் பேரண்ட்ஸ் க்ளப்புக்கு அனுப்பியிருந்தேனே? வந்ததா?
    மீதியையும் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  3. பயனுள்ள குறிப்புகள் தொடரட்டும்.

    ReplyDelete
  4. நாங்களும் இதே பத்தியக்குழம்பு செய்து கொடுப்போம். மத்ததிலும் சில வித்தியாசங்கள் இருந்தாலும், அடிப்படையான பொருடக்ள் - நல்லெண்ணெய், கருப்பட்டி, நெய், வெற்றீலை.. எல்லாம் இதேபோலத்தான்..

    ReplyDelete
  5. இந்தப் பதிவு படித்ததும் பெண்ணுக்கு இதெல்லாம் செய்யாமல் விட்டோமே என்று வருத்தமாக இருந்ததுப்பா. அருமை நானானி இதெல்லாம் சேர்த்து வைக்கிறேன்.

    ReplyDelete
  6. பத்திய குழம்பு பிள்ளை பெற்றவர்கள் மட்டும்தான் சாப்பிடனுமா? செய்முறை பார்த்தால் எனக்கும் பசிஎடுக்குது ! :))
    ஷோபா

    ReplyDelete
  7. ராமலக்ஷ்மி,
    நன்றி!
    எல்லாம் அம்மாவின் தயவு!

    ReplyDelete
  8. ஹூஸைனம்மா,
    ரொம்ப நன்றி! ஊருக்கு ஊர், கைக்கு கை பக்குவங்கள் மாறுபட்டாலும்.அடிப்படை ஒன்றே!

    ReplyDelete
  9. மிக்க மகிழ்ச்சி, வல்லி!
    இனி வரும் காலத்துக்கு உபயோகப்படுமே!!!
    சீக்கிரமே உங்க பெண்ணுக்கு இப்பக்குவங்கள் எல்லாம் செய்து மகிழ வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  10. ஷோபா,
    அப்படி ஒன்றுமில்லை எல்லோரும் எப்போதும் சாப்பிடலாம். உங்க பின்னூட்டத்தைப் படித்ததும் எனக்கும் லேசா பசிக்கிற மாதிரி இருக்கிறது. வட பூண்டு வாங்கி வைத்திருக்கிறேன். நாளை லன்ச்சுக்கு பத்தியக் குழம்புதான். என்ன...கொஞ்சம் ஊஸ் ஊஸ்ன்னு சாப்பிடணும்.

    ReplyDelete
  11. பத்தியக் குழம்பு மட்டுமில்லை, இஞ்சி,தேன் மேல் பொடி, அடுத்த பதிவில் வரப் போகும் களி வகைகள் எல்லாமே சாதாரணமாக அப்பப்ப செய்து சாப்பிடலாம்.

    ReplyDelete
  12. அடுத்த பதிவு....களி, களி, களிகள்!!
    உண்டு களியுங்கள்!!!!!


    எந்திரனுக்கு மட்டும்தான் அடா?
    என் பதிவுக்கும்தான்!!!

    ReplyDelete
  13. பத்திய குழம்பில் அம்மா சீரகமும் வைப்பார்கள்.

    நல்ல பயனுள்ள குறிப்புகள்.

    பூண்டு களி,ஓமக்களி,சுக்கு களி எல்லாம் நீங்கள் எழுதுவதை படிக்க ஆவல்.

    ReplyDelete
  14. கோமதி அரசு,

    ரொம்ப சந்தோஷமாயிருக்கு. நீங்க சொன்னது சரி பத்தியக் குழம்புக்கு சீரகமும் 2 தே.க. சேர்க்கணும். நான் தான் தவறுதலாக விட்டுவிட்டேன். சுட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. கோமதி அரசு,
    ஜீரகம் சேர்த்து விட்டேன்.

    நல்ல வேளை, இல்லாவிட்டால் எனக்கு அஜீரகமாயிருக்குமே!!!!ஹி..ஹி..!!

    ReplyDelete
  16. இட்லி யில் நெய்யும் மிளகுப்பொடியும்
    சேத்து ஊட்டியய விட்டுருவாங்க அம்மா
    எத்தனை போச்சுன்னே தெரியாது. அந்த சமயத்தில் மட்டும் தான் நான் கன்னமெல்லாம் புசுபுசுன்னு நல்லா இருந்தேன்னு நினைவு.
    அவரக்காய் கத்திரிக்காய் புடலங்காய் அய்யோ
    டேஸ்ட் இப்ப நினைச்சாலும் நாக்குல நீர் ஊறுது ..சூடு சாதமும் இருக்கிற இடத்துக்கு சாப்பாடும் சொர்க்கம்.:)

    ReplyDelete
  17. ஓ அந்த மெயில் ஐடியில் பார்க்கறேன்.
    நன்றி நானானி.

    ReplyDelete
  18. very valuable informations for all pregnant women..thank u so much..
    urs brother venkat's daughter,kalyani

    ReplyDelete
  19. அன்பு கல்யாணி,
    இந்தத் தகவல்கள் உனக்கு மிகவும் உபயோகமாயிருக்கும். உன் அம்மாவை இதைப் பார்த்தே செய்யச் சொல். ஆச்சி இல்லையே என்று கவலைப் பட வேண்டாம்.
    சுகப் பிரசவம் ஆக அத்தையின் வாழ்த்துக்கள் - ஆசிகள்!!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...