Tuesday, July 3, 2007

நயாகரா....என் நெஞ்சினிலே...! - மீள் பதிவு

>
குற்றால அருவியையும் பாத்திருக்கேன்..பாபநாச அருவியையும் பாத்திருக்கேன்...மணிமுத்தாறு அருவியையும் பாத்திருக்கேன்..திற்பரப்பு அருவியையும் பாத்திருக்கேன்...ஒக்கனேக்கல் அருவியையும் ஜோக் அருவியையும் பார்த்திருக்கேன் என்வீட்டில் நானே செஞ்ச fountain falls-ம் பார்த்தேயிருக்கேன்...பாத்தாலும் பாத்தேன் நயாகரா....நான் வொன்னப் போலப் பாக்கல...கேட்டாலும் கேட்டேன் உன் ஓசை போல
கேக்கல.

சென்ற முறை அமெரிக்க விஜயத்தின் போது ஒரு ஐந்தாறு மாகாணங்கள் + கனடா வரை சுற்றியிருப்போம். அதில் நிறைய சுற்றியது, ரங்கமணியின்
சகோதரர் குடும்பத்தோடுதான். நயாகரா, சுதந்திரதேவி சிலை, ஹவுஸ் ஆன் தி ராக், மில் வாக்கி மியூசியம் முக்கியமான்வை.
நயாகரா போவது முடிவாகியதும் முதல்வேலையாக எங்கள் இருவருக்கும் கனடியன் விசா வாங்கிவிட்டார்கள். குறிப்பிட்ட நாளில்
அதிகாலை விமானம் பிடித்து எருமைமாட்டில்.....மன்னிக்கவும் baffello-வில் இறங்கினோம். முன் ஏற்பாட்டின் படி வாடகைக் கார்
சகோதரர் பேர் , பார்க்கிங் லாட் எண் முதலியவை போர்டில் குறிப்பிடபட்டிருந்தன. கவுண்டரில் சாவி வாங்கிக்கொண்டு காரை அடைந்தோம். புத்தம்புது போர்ட் கார்!

நேரே கனடியன் பார்டரை அடைந்து விசா ஸ்டாம்பிங் செய்து வாங்கிக்கொண்டு அருவிக்கரையை......ஐயய்யோ!! கரையிலெல்லாம்
இல்லை.. அருவியின் உச்சியிலிருந்து விழும் அழகைப் பார்க்கலாம். வெறும் வார்த்தையில் சொல்லிவிட்டேன்! கோயிலுக்குப்போய்விட்டு
சுவாமி தரிசனம் திவ்வியமாயிருந்தது என்போமே... அதைப்போல் ஒரு 'ப்ரம்மாண்ட தரிசனம்.....திவ்யம்!!!

படகு சவாரியில் அருவியின் அடிவாரம் வரை அழைத்துப்போகிறார்கள்.அருகே செல்லச்செல்ல.... முருகா..! தேவர்கள் பூமாரி தான்
பொழிவார்கள். எங்களுக்கு நீர்மாரி பொழிந்தார்கள்!!!! அப்பப்பா!!...என்ன சுகம் என்ன சுகம்!!!

அன்று முழுதும் கனடியன் பக்கத்தை முழுசாக அளந்தோம். பார்க்கப் பார்க்க பரவசம்! ஓரோர் இடத்தில் அமர்ந்து கொண்டு நானும்
என் சகோதரியும்....ஓர்ப்படி?...யும் அருவியின் அழகையும் அதன் பேரோசையையும் கண்கொட்டாமல் காதும் மூடாமல் ரசித்துக்கொண்டேயிருந்தோம் எங்களை மறந்து. ரங்கமணிகள் வந்து ,'என்ன? அடுத்த இடம் போக வேண்டாமா..?' என்றதும்தான்
நகர்வோம் மனமில்லாமல்.

என் காமிரா கவரை படமெடுக்கும் சுவாரஸ்யத்தில் ஓரிடத்தில் மறந்து வைத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். திடீரென்று நினைவு
வந்ததும் ஓடினோம். அமெரிக்காவில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்கும் யாரும் தொடமாட்டார்கள் என்று கேள்விப்
பட்டிருக்கேன். அந்த நம்பிக்கையில் போனோம். ஆனால் அது கனடா! அங்கு அப்படி கேள்விப்படவில்லை. எனவே கவர் அங்கு இல்லை!
பலவகையான மக்கள் கூடுமிடம் அல்லவா? கவர் தொலைந்த வருத்தமிருந்தாலும் நயகராவின் பேரழகு அதை மறக்கடித்தது!!!

கொண்டுபோயிருந்த சாப்பாடு வகைகளை அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கா....லி செய்துவிட்டு behind the falls பார்க்கச்சென்றோம்
வார்த்தையி சொல்லவொண்ணா திகிலடிக்கும் காட்சி!! போகும் வழியிலெல்லாம் அருவியில் சாகசம் செய்தவர்கள்....அதில் உயிரிழந்தவர்கள் பற்றி சுவற்றில் விவரித்திருந்தார்கள். படிக்கப்படிக்க உடம்பெல்லாம் சிலிர்த்தது!! சாகசம் செய்யபோனவர்கள் எல்லாம் அநியாயமாக உயிரை
விட்டிருக்கிறார்கள்.....ஆனால் தவறி விழுந்த சிறுவனொருவன் உயிரோடு
மீட்கப்பட்டிருக்கிறான்!!!! விதியின் சேட்டையைப் பாருங்கள்!!!!

இரவு அருவியின் மேல் ஒளிக்காட்சி! வண்ணவண்ண கோலங்களில் மிளிர்ந்தது நயகரா!! கண்கள் கொள்ளுமட்டும்
அள்ளிஅள்ளி விழுங்கி விட்டு புக் செய்திருந்த விடுதிக்குத்திரும்பினோம்.

நானும் என் ஓர்ப்படியும் ஒரே மாதிரி வேறு வேறு கலரில் புடவைகள் எடுத்திருந்தோம். ஆனால் என்று ஒன்றாக உடுத்துவது என்று
பேசிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையில் அவரவர் அறைகளிலிருந்து ரெடியாகி வெளிவந்தோம். இருவரும் அதே புடவைகளைத்தான் உடுத்தியிருந்தோம். 'ஆஹா! என்ன ஒற்றுமை!' என்று ரங்கமணிகள் கலாய்த்தார்கள்.
>



அன்று கனடாவிலிருந்து அமெரிக்கப்பக்கம் அருவி பார்க்கச்சென்றோம். காலை உணவை அங்குள்ள பார்க் பக்கம் போய் சாப்பிட்டோம்
காரை பார்க் செய்த இடத்தில் எங்கள் காரைத்தவிர வேறு காரேயில்லை. ஆனால் வேறொருவகையான பார்க்கிங் அங்கு இருந்தது!
ஆம்...! மீதியிடத்திலெல்லாம் கடல் புறாக்கள் கூட்டம்கூட்டமாக பார்க் செய்திருந்தன. அமைதியாக அமர்ந்திருந்த அவைகளை நாங்கள்
அவற்றின் குறுக்கே ஓடி ஓடி கலைத்து சிறிதுநேரம் குழந்தைகளாக மாறி விளையாடினோம்!!! மறக்கமுடியாத நிகழ்வு!
புறாக்களை தொந்திரவு செய்ததற்கு பரிகாரமாக மீதியிருந்த 'கடலை, மற்ற கொறிக்ஸ் எல்லாத்தையும் நொறுக்கி அவைகளுக்கு
வாரியிறைத்தோம். பறந்து பறந்து அவை கொத்தித்தின்ற அழகே அழகு...!!!!!




அதன் பிறகு அவள் என்னை கூட்டிச்சென்ற இடம்தான் என்னைப்பொறுத்தவரை முக்கியமானது. 'நிறைய பேருக்கு இது தெரியாது
அடிக்கடி வருவதால் தனக்குத்தெரியும்' என்று அழைத்துச்சென்ற இடம்! நயாகரா......அருவியல்ல... ஆற்றின் கரையோரம்!!!!!
ரொம்ப நெருங்கிவிடாதபடி சிறு சிறு பாறைகள் தடுப்பு போல் அமைந்திருந்தயிடத்தில் அப்பாறைகளில் அமர்ந்து கொண்டு ஆற்று
நீரை அள்ளிஅள்ளிப் பருகினோம். கால்களை நனைத்தோம்...புனிதநீராக தலையில் தெளித்துக்கொண்டோம். இரண்டடி தள்ளி ஆறு
கூர்மையான கத்தி போல் ஓடுகிறது. கையை விட்டால் துண்டாக நறுக்கிவிடும்....காரணம் சில அடி தூரத்தில் ஆறு..அருவியாக
இறங்குகிறது!!!!

காணக்கிடைக்காத காட்சிகளெல்லாம் காணவைத்த ரங்கமணியின் சகோதரர் குடும்பத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!!!

கடைசியில் பார்த்தால் இவ்வளவு காட்சிகளையும் நான் என் காமிராக் கண்கொண்டு தான் பார்த்திருக்கிறேன்!!
என் மகன் சொன்னமாதிரி....அடித்து முழக்கியிருக்கித்தானிருக்கிறேன்!!!!!!!!!!!!!!

Monday, July 2, 2007

இப்பமே...இப்பமே...!

'அம்மா!..எனக்கு இப்பமே வேணும்!' பிடித்தாள் அடம்,பிரியா. என்ன வேணுமாம் அவளுக்கு? செடியிலிருந்து அப்பவே பறித்த பிஞ்சுவெண்டைக்காய்...நறுக்..நறுக் கென்று கடித்து சாப்பிட. அம்மா வேலைக்
காரனை தோட்டத்துக்கு அனுப்பி பறித்துவரச்சொன்னாள். சுமார் அரைக்கிலோ
வெண்டைக்காயும் நறுக்..நறுக்கென்று மென்று தின்றாள். கணக்கு நன்றாக
வருமாமே......யார் கண்டது?
அடம் பிரியா..ஆமாம்! பிரியாவுக்கு 'அடம் பிரியா' என்று அவள் அண்ணன்மார்
பிரியமாக வைத்த பெயர்தான் 'அடம் பிரியா!'
இரண்டு நாள் கழிந்திருக்கும். 'அம்மா.......ஆ..ஆ!' ஆரம்பிச்சுட்டாயா...ஆரம்பிச்சுட்டாயா...என்றவாறே அம்மா அருகில் வந்தாள்.
ஹோம்வொர்க் செய்கையிலேயே உள்ளே பல்பு எரிந்திருக்கிறது. 'எனக்கு
காட்பெரீஸ் சாக்லெட் வேணும்...இப்பமே!' கேட்ட நேரம் இரவு ஒன்பது மணி!
'கடையெல்லாம் பூட்டியிருப்பார்களே..பிரியா! காலையில் வாங்கிக்கொள்ளலாம். கண்ணுல்ல?' எட்டு வயது குந்தாணியை...ஆமாம்
அம்மாவுக்கு கோபம் வந்தால் அப்படித்தான் திட்டுவாள், இடுப்பில் தூக்கி
வைக்காத குறையாக கொஞ்சினாள். ' ஹுஹூம்..இப்பமே வேணும்...' அழவாரம்பித்தாள். 'அம்மா! அடத்துக்கு இடம் கொடுக்காதே!' அவள் அண்ணன்
அடுத்த அறையிலிருந்து கூவினான். நோ யூஸ்! பணத்தை கொடுத்து
வேலைக்காரனை ஏதாவது மெடிக்கல் ஸ்டோர் திறந்திருக்கும் அங்கே போய்
வாங்கிவரச்சொன்னாள். 'அம்மா...! நாலு ஃபைவ் ஸ்டார்!'....... ஹுக்கும்! இதுகொண்ணும் கொறச்சலில்லை.

பிரியா பள்ளியிறுதித்தேர்வு எழுதி முடித்தாள். ரிசல்ட் வந்தது.....கணக்கில்
நூற்றுக்கு நூறு! துள்ளிக்குதித்தாள். 'ரொம்பத்தான் குதிக்காதே! நீ மொசுக்குன
வெண்டைக்காய்க்கு இது கூட வாங்கலேனா எப்படி...?' இது அண்ணனோட
பின்னோட்டம். அம்மாவுக்கு சந்தோஷம்! 'உனக்கு என்னடா வேணும் செல்லம்!' அதானே! சும்மாவே ஆடும்...நீ வேப்பிலை வேற அடி!' அண்ணனின்
முணுமுணுப்பு. 'அம்மா! அம்மா! என் friend சிங்கப்பூரிலிருந்து ஒரு வாட்ச்
வாங்கியிருக்கிறாள். எனக்கும் அதுமாதிரி வேணும்.' நேரம் பார்த்து அடித்தாள்.
அவளிடம் இன்னொரு செட்டும் இருக்குதாம்.உனக்கு வேணுமா என்று கேட்டாள்.
சிங்கப்பூர் வாட்சா? ரொம்ப விலை இருக்குமே! 'அம்மா.......அதில் டிரெஸுக்கு
மாட்சாக ஸ்ட்ராப் கலர்கலராக இருக்கும் மாத்திமாத்தி போட்டுக்கலாம்.அம்மா..,ப்ளீ.........ஸ்!' கொஞ்சினாள்.
'சரி...சரி வாங்கிக்கோ.' 'என் செல்ல அம்மா! நாளைக்கே அவளிடம் சொல்லி
வாங்கிக்கிறேன்!' ' ஏன் இப்ப மட்டும்....இப்பமே!!! இல்லையோ? அண்ணன்
கலாய்த்தான்.
இப்படியே பிரியாவின் ஆசைகளெல்லாம் 'இப்பமே..இப்பமே..என்று
நிறைவேறிக்கொண்டிருந்தது.

ஆயிற்று! ஒரு நல்ல நாளில் பிரியாவுக்கும் ராமுவுக்கும் திருமணம் நடந்தேறியது. புதுக்குடித்தனம் போட்டாச்சு. ஒரு மாதம் கழிந்திருக்கும்.
ஒரு சண்டே மதியம் ,'ராம்! ஈவ்னிங் பீச்சுக்குப் போவோமா? ஆசையாயிருக்கு.'
சாரிம்மா! உனக்கு இன்னிக்கு சண்டே, ஆனா எனக்கு இன்னிக்கு ரெஸ்டே!
ரொம்ப டயர்டா இருக்கு இன்னொருநாள் போலாம்டா செல்லம்!'
இன்னொருநாள் புதுப்படத்துக்கு ரெண்டு டிக்கெட் ஓஸியில் கிடைத்தது.
காலையில் ராமிடம் அதைக்காட்டி ,'போலாங்க! சாங்காலாம் சீக்ரமா வாங்க!'
'ஓகே....'என்று டாட்டா காட்டிவிட்டு ஆபீஸ் போய்விட்டான்.
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரெடியாகி காத்திருந்தாள்.
மணி அஞ்சாச்சு...ஆறாச்சு...ஏழும் ஆச்சு. ஏழரை மணிக்கு வந்துசேர்ந்தான்.
இவள் அலங்கரித்து நிற்பதைப் பார்த்ததும்தான் சினிமா ப்ரோக்ராமே..ராமுக்கு
வந்தது. 'வேலை மும்முரத்தில் மறந்துட்டேண்டா! இன்னொரு லீவு நாளில்
போவோம்டா ப்ளீஸ்! சிரிடா!' வெறென்ன செய்வது இப்படி குழைபவனிடம்?
சிரித்தாள் சோகையாக. வாழ்கை என்பது 'இப்பமே' என்பதில் இல்லை...எப்பவும் சிரித்து சந்தோஷமாக இருப்பதில்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட சிரிப்பு அது!!!!

அடம் பிரியா கொஞ்சம் திரும்பிப்பார்த்தாள்.....அவளது அடமும் 'இப்பமே' யும்
பறந்தே........போச்சு...எப்பமே!!!!!!!!!!!!!!!!!!

Saturday, June 30, 2007

சீனியர் சிட்டிசனுக்கானது

ஒரு வயதுக்குமேல் தவிர்க்கவேண்டியவை என்கிற பட்டியலில், புளி, காரம்,தேங்காய்
உப்பு(இது குறைக்கவேண்டியது),எண்ணை இவையெல்லாம் வந்துவிடும்.
இவை கட்டாயமாக்கப்படுவத்ற்கு முன் நாமே தவிர்த்துவிட்டால்...?
நல்லதுதானே?

அப்படி தவிர்க்கப்பட்ட, குறைக்கப்பட்ட ஒரு குறிப்புத்தானிது!!! என்று
குறிப்பிட விரும்புகிறேன்.

ஏதாவது ஒரு கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து அரிந்தது. பசலைகீரை நன்றாக
இருக்கும். வெங்காயம், தக்காளி பொடியாக அரிந்தது. இஞ்சிபூண்டு நசுக்கியது
கடாய் அல்லது மண்பாத்திரம் அடுப்பில் வைத்து சிறிது எண்ணை விட்டு
காய்ந்த்தும் வெங்காயம்,தக்காளி இஞ்சிபூண்டு வதக்கி பின் அரிந்த கீரையும்
போட்டு சிறிது சுண்ணாம்பு சேர்த்து வதக்கி அளவாக நீர்விட்டு வேகவிடவும்
கீரை வெந்ததும் அளவாக உப்பு சேர்த்து இரண்டு தே.கரண்டி பொட்டுக்கடலை
மாவு அரைகப் பால் விட்டு கலக்கி கீரையில் ஊற்றி கலக்கி சிறிது கெட்டியானதும்
இறக்கவும். எந்தக் கெடுதலுமில்லாத இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும். சூடான சாதம், சப்பாத்திக்கு நன்றாக சேரும்.
சாப்பிட்டுப்பார்த்து பின்னோட்டமிடுங்களேன்!

சுண்ணாப்பு சேர்ப்பது அதன் சத்துக்காகவும் கீரையின் பச்சை நிறம் மாறாமலிருக்கவும்,

Friday, June 29, 2007

அவசர...அவசர...அவசர சமையல் குறிப்புகள்

இந்த அவசர யுகத்தில் சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்யக்கூடிய

இரண்டு குறிப்புகள் இங்கே தர ஆஆஆசைப்படுகிறேன். சீக்கிரம்...வாங்க.

சமையலறையை புதிதாக எட்டிப்பார்ப்பவர்களுக்கும் கடோத்கஜன்

போன்று சுயசமையல் செய்பவர்களுக்கும் ஏற்றது.

முட்டை குழம்பு: நான்கு பேருக்கு. நாலு
பல்லாரி வெங்காயம் பொடியாக நறுக்கவும். நாலைந்து தக்காளி, அதையும்
பொடியாக நறுக்கவும் அல்லது அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும்
இஞ்சி பூண்டு நசுக்கிக் கொள்ளவும். நாலு பச்சை மிளகாய் சாப்பிக்கொள்ளவும். கடாய் அல்லது குழம்புப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி தேவையான அளவு
எண்ணை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,
இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். அதோடு கையில் கிடைத்த பொடிகள் எல்லாம் போடவும்.....பயப்படவேண்டாம்,,, மிளகாய்தூள் காரத்துக்கு ஏற்ப.
மஞ்சள்தூள் ஒரு கரண்டி, தனியாதூள் ஐந்து தே.கரண்டி, ஜீராத்தூள் ஒரு
தே.கரண்டி, விரும்பினால் கரம் மசாலாத்தூள் ஒரு தே.கரண்டி, தேவையயன
உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் மூன்று கப் தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிடவும். வேகவைத்த காரட், காலிப்பூ, மஷ்ரூம் இவையும் சேர்க்கலாம். இறுதியாக நான்கு முட்டைகளையும் ஒன்றன்பின்
ஒன்றாக மெதுவாக உடைத்து நான்கு பக்கங்களிலும் ஊற்றவும். கலக்காமல்
அப்படியே வேகவிடவும். கொத்தமல்லி, புதினா தூவி ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து பாத்திரத்தை மூடி அடுப்பை அணைக்கவும். முட்டைகள் உடையாமல் கலக்கி பரிமாறவும்.
குழப்பு நீர்த்து இருந்தால் பொட்டுக்கடலை மாவு கரைத்து ஊற்றலாம்.
தேங்காய் பாலும் விடலாம். சூடான சாதத்தோடு சந்தோஷமாக சேரும்.
என்ன இப்படி மூச்சு விடாமல், SPB மாதிரி சொல்லிவிடீகள்? என்கிறீர்களா?
பின்ன அவசர சமையல் குறிப்பு அல்வா?

Tuesday, June 26, 2007

எட்டுக்கு எட்டி எட்டினேன்...ஆஹா! அந்தப்பழம் இனித்தது!

வல்லியம்மா முதலாவதாக என்னை எட்டிட அழைத்தமைக்கு நன்றி!
ஆனால் எட்டாவதாக பதிகிறோமே என்று ஒரு குறுகுறுப்பு.


எட்டு போட்டு காட்டாமலேயே லைசென்ஸ் வாங்கியவள். யோசித்து யோசித்து எட்டிவிட்டேன் எட்டு. ஒவ்வொருவர் வாழ்கையிலும் மறக்கமுடியாத எத்தனையோ எட்டுகள் உண்டு. நல்லவைகளும் அல்லாதவைகளும் கலந்ததுதானே வாழ்கை!! தத்துவம்...?





ஒரு பெண்ணுக்கு தாயின் அருகாமை தேவையான 15-வது வயதில்


அவர்களை இழந்தது....அதற்காக அழக்கூடத்தெரியாமல் மிரளமிரள விழித்தது


மறக்க முடியாதது.





படிப்பில் சுமார்தான். ஆனால் பள்ளியிறுதித்தேர்வில் எதிர்பாராத க்ளைமாக்ஸ்!!! கணக்குப் பரீட்சை! கணக்குகள் போடப்போட விடைகள்


அல்வாத்துண்டுகள் மாதிரி (மண் வாசனை ஹி..ஹி..) சரியாக சரியாக வந்து விழுந்தன. அப்போதே தெரிந்து விட்டது...நூற்றுக்கு நூறு!





பள்ளியிலும் காலேஜிலும் எல்லா விழாக்களிலும் என்னோட வீணை


ப்ரோக்ராம்தான் முதலில் இருக்கும். அதோடு உல்லாசப்பயணங்களிலும்


காமிராவும் கையுமாக அலைவேன். காலேஜை விட்டு வெளிவரும்போது


ஜூனியர்ஸ் கொடுக்கும் பார்ட்டியில் சீனியர்ஸுக்கு பேர் வைத்து அழைத்து


சிறு பரிசு கொடுப்பார்கள். அதில் எனக்கு 'sound of music' என்று வைப்பதா?


இல்லை, 'college photographer', என்று வைப்பதா என்று குழம்பினார்கள்!!!





வீணையை தொடுவதற்கே புண்ணியம் செய்திருக்கவேண்டுமென்


பார்கள். நான் கொஞ்சம் தடவுவதற்கும் பாக்கியம் செய்திருக்கிறேன்.


திருமணத்துக்கு பிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து


எங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் நடந்த ஆராதனை விழாவில் நானும்


வாசிக்க வேண்டும் என்று அண்ணியின் ஆசை. கைவிட்டுப்போச்சே முடியுமா


சபையில் அல்லவா வாசிக்கவேண்டும் என்று தயக்கம். அங்கு வாசிப்பவர்களைப் போய் பார்..உன்னால் முடியும் என்றார்கள். பார்த்தேன்.


நம்பிக்கை வந்தது. நான்கு நாள் சாதகம். ஐந்தாவது நாள் தியாகப்ரம்மத்தை வணங்கி மேடையேறினேன். நான் வாசித்த,'சக்கனிராஜ..., நின்னுவினா..' இரண்டுக்கும் சபையில் எழுந்த கைத்தாளமும் இறுதியில் தட்னாங்க பாருங்க! மெய்சிலிர்த்துப்போனேன்.


தன்யளானேன்!





எங்கள் வாழ்கையோடு கலந்துவிட்ட ஒரு ஜீவனில்லாத ஜீவன். எங்கள்


குடும்பத்தில் நடக்கும் நல்லது அல்லது எல்லாவற்றிலும் அதற்கு பங்கு உண்டு. என் தந்தை அதில் கம்பீரமாக ஏறி அமர்ந்து போவதே ஓர் அழகு!


புரியவில்லையா? எங்கள் எல்லோரது அன்புக்குப் பாத்திரமான தந்தையின்


கார் தான் அது 1947 மாடல் செவர்லெட். பச்சை கலரில் சிங்குச்சா...என்று


கப்பல் போல் மிதக்கும். 79 வயதில் தந்தை காலமாகும் வரை பழுதில்லாமல்


உழைத்து இறுதியில் தந்தையில் உடலை மருத்துவமனையிலிருந்து வீடு


கொண்டு வந்து சேர்த்து தானும் தன் ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொண்டது. இது பற்றி தனி பதிவே போட இருக்கிறேன். எங்கள்


குடும்பத்தின் மறக்கமுடியாத ஓர் உறுப்பினர்.





இரண்டாவதாகப் பிறந்த மகன் அவனுக்கு இரண்டரை வயதாகும்


போது பாண்டிபஜார் பிளாட்பாரத்தில் வளையல் வாங்கிக்கொண்டிருக்கும்


போது நழுவி தளர் நடை போட்டு சிறிது தூரம் சிறிது நேரம் காணாமல்


போய்விட்டான். பதறி ஆளுக்கொரு திசையில் தேடினோம். நான் சென்ற


திசையில் எதிரில் ஒரு நல்ல உள்ளத்தின் கைகளில் மகன்! பதறி வரும்


என்னைப் பார்த்து,'இவன் உங்கள் குழந்தையா?' என்று கேட்க, நான் பதில்


சொல்லவேண்டிய அவசியமின்றி என்னிடம் தாவி வந்தான் குழந்தை.


உடலும் மனமும் அதிர வாரியணைத்த அந்த கணம்!!! அம்மம்மா! மற்க்கமுடியுமா? அந்த நல்லவருக்கு நன்றி!





என் மகள் முதன்முறையாக அமெரிக்கா சென்ற போது அவளை


வழியனுப்பிவிட்டுத் திரும்பும்போது....சும்மா விளையாட்டாக நாமும் இது


போல் ஏர்போர்டில் ட்ராலியை தள்ளிக்கொண்டு போகமுடியுமா? என்று


நினைத்துக்கொண்டே வீடுபோய் சேர்ந்தேன். நம்பமாட்டீர்கள்!! சரியாக


இரண்டு மாதம் கழித்து ஏர்போர்ட்டில் ட்ராலியை தள்ளிக்கொண்டு கலிபோர்னியாவிலிருக்கும் மகள் வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். காரணம் என்


மகன். எங்களை வற்புறுத்தி அனுப்பிவைத்தான். இல்லாவிட்டால் நாங்கள் எங்கே கிளம்ப..? அது மட்டுமா? அக்காவுக்கு போன் செய்து,'அம்மா வரா..


ஆயா வேலைகல்ல! நல்ல ரெஸ்ட் கொடுத்து ஊரெல்லாம் சுற்றிக்காண்பி!'


என்று உத்தரவு வேற! ரெண்டாவது முறை ஆயா வேலைக்கும் போனேன்!


இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்ற பாக்கியசாலிதானே..?





நான் ஈன்ற போது பெரிதுவந்தேன். அதையும் விட பெரீ......தும் உவந்தேன்


மகள் ஈன்றபோது. ஒரு ஜனனத்தின் தரிசனம் கண்டேன்!!


பேரனைக் கைகளில் வாங்கிய போது இமயத்தின் உச்சியிலிருந்தேன்!!!





எட்டு போட்டுவிட்டேன். கொஞ்சம் பெரிய எட்டோ? அதாவது காபிடல்


எட்டோ? எதுவாகினும் சரி! இனி நான் அழைக்கவேண்டியவர்கள் யயர் யார்?

எனக்கு எத்தனை பேரைத்தெரியும்? தெரிந்த சிலபேர் எட்டிவிட்டடர்கள்.

ஓஓஓகே! நான் பின்னோட்டமிட்டவர்களும் எனக்கு இட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களில்......



1) அரவிந்தன்

2) ஜெஸிலா

3) மங்கை

4) டுபுக்கு

5) பாலபாரதி

6) பொன்ஸ்

7) குட்டிபிசாசு

8) கடோத்கஜன்


உங்கள் எட்டு பேரையும் அன்போடு எட்டிட குங்குமம் நீட்டி அழைக்கிறேன்.
ஏற்கனவே பதிந்திருந்தால்....க்ரெடிட் கார்ட் பேமெண்ட் ரிமைண்ட்ர் போல்
ஜஸ்ட் இக்னோர் இட்!


விளையாட்டின் விதிகள்:

1) ஆடுபவர் தன்னைப்பற்றிய எட்டு தகவல்களை எழுதவேண்டும்.
அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2) தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.
அவர்களுக்கு இந்த அழைப்பைபற்றி அறியத் தர வேண்டும்.

3) தொடர்பவர்கள் இதேபோல் எட்டு தகவல்களையும் விதிகளையும் எழுதி
வேறு எட்டு பேரை அழைக்கவேண்டும்.

நன்றி!!!!



Wednesday, June 20, 2007

வா வாத்யாரே வூட்டாண்டே- நீ வராவிட்டால் நான் விடமாட்டேன்

'ஏம்மா! எம்மா நேரமா கூவிக்கினேகீரேன். தொடப்பம் எத்து கொடும்மா..நா பெருக்கிபோட்டு அடுத்த வூடு போகத்தாவல...?'
முனியம்மா எதற்கு இப்படி தாவுகிறாள்...கத்துகிறாள் என்று எண்ணியபடியே,'என்ன முனியம்மா! நீ என்ன
ரயிலா குயிலா கூவுவதற்கு? தொடப்பமா? அப்படியென்றால்?'என்று கேட்டாள் பட்டம்மாள்.
சிங்காரச் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கும் டீச்சர்!
'யம்மா உனோட படா பேஜாராப்போச்சு.....எத்தினி தபா யே பேரு மினிம்மா..மினிம்மான்னு சொல்லிக்கீறன்..வூடு கூட்டி பெருக்கிறதில அத்தான்.'
'ஓ! வாரியலா..?' என்றபடியே பெருக்குமாறை எடுத்துக்கொடுத்தாள்
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்த இந்த ஒரு வாரமாக முனியம்மாவோடு ஒரே மொழிப்போர்தான். நெல்லைத்தமிழுக்கும் சென்னைத்தமிழுக்கும்
கடும் போட்டி.
தமிழாசிரியரான பட்டம்மாள் சுத்தத் தமிழிலேயே பேசவேண்டும். என்ற கொள்கை உடையவள்.முக்கியமாக வகுப்பில் தன் மாணவர்கள் நல்லதமிழில்தான் பேச வேண்டும்
அப்போதுதான் தமிழறிவு வளரும் என்பதில் பிடிவாதமாக இருப்பவள்.அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறாள். ஆனால் இந்த முனியம்மாவிடம்தான் படாத பாடு படுகிறாள்
பட்டம்மாள்! இவள் பேசும் செந்தமிழும் சரி நெல்லைத்தமிழும் சரி அவளுக்குப்புரியவில்லை. அவள் பேசும் சிங்காரச் சென்னைத் தமிலும் இவளுக்குப் பிரிலை.
ஒரு நாள்...போர்களத்தின்..உச்சக்கட்டம்..குளியலறை வழுக்குகிறது ப்ளிச்சிங் பெளடர் போட்டு கழுவு என்று தெரியாமல் சொல்லிவிட்டாள். அவ்வளவு தான்...
'இன்னாம்மா பாத்ரூம்பு இம்மா கலீஜா போட்டு வெச்சிருகே.. அப்பப்போ கழுவத்தாவல?
கலீஜா? அப்படி எதைப் போட்டு வைத்தோம்?...குளியலறையை எட்டிப் பார்த்தாள்.
முனியம்மாவைப் பார்த்து 'கலீஜ் எங்கே? என்றாள் அப்பாவியாக! கலீஜ் என்றால் ஒரே அழுக்கும் குப்பையுமாக என்று அர்த்தம் என்று முனியம்மாவின் விளக்கத்திலிருந்து புரிந்து கொண்டாள்.
'இத்தெல்லாம் என்னாலே ஆவறதில்ல...நா போய் ஏ வூட்டுக்காரர இட்டாரேன்,
அவரு க்ரீட்டா செய்வார்.' என்றவாறு வூட்டுக்காரர இட்டாரப் போய்விட்டாள்.
'இட்டார..?' புரியவில்லை பட்டம்மாளுக்கு. 'இட்டார் பெரியோர்..இடாதார்...'என்பதுபோல்
முனியம்மாவும் ஏதாவது வெண்பா இயற்றுகிறாளா....? தமிழாசிரியை அல்லவா! நினைப்பு அப்படி போச்சு. பக்கத்துவீட்டு மீனாவிடம் அர்த்தம்
கேட்டாள். 'இட்டார என்றால்...கூட்டிவர என்று அர்த்தம்! ஓ! அவள் புருஷனை கூட்டிவரப்
போய்யிருக்கிறாளா?
வந்த முனியம்மாவின் கணவன் மாரி வெகு நேர்த்தியாக வேலையை முடித்தான்.
முனியம்மா பட்டம்மாவிடம் வந்து ,'எம்மா! அதுங்கிட்ட ஒரு ஐம்பது ரூபா கொடு. ஒரு
குவார்ட்டர் வாங்கி ஊத்திக்கினு வூட்டாண்ட போய் கம்முனு படுத்துக்கும். ஐம்பது ரூபா கொடு
என்று மட்டும் சொல்லியிருந்தால் கொடுத்திருப்பாள். ஆனால் மது அருந்த என்றதால்
கொடுக்க மறுத்து விட்டாள். மாரி..காளியானான்,'டாய்! மினிம்மா! மருவாதையா செஞ்ச
வேலைக்கு கூலியை வாங்கி குடு! இல்லேனா தாராந்துபூடுவே..ஆக்காங்!என்று மில்லி
அடிக்காமலே துள்ளி ஆடவாரம்பித்தான். பயந்து போன பட்டம்மாள் ஐம்பது ரூபாயை
முனியம்மாவிடம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்து மூச்சு வாங்கினாள்
இதே தலைவலியோடு பள்ளிக்குச் சென்றாள். வகுப்பில் நுழைந்ததும் வழக்கம்
போல் மாண்வர்கள்,' காலை வணக்கம்! அம்மா! நேற்று நீங்கள் சொன்ன கட்டுரையை
எழுதிவிட்டோம். படித்துவிட்டு மதிப்பெண்கள் போடுங்கள்!'என்றார்கள்.
'ஆமா! நானே ஒரே கலீஜா கீறேன். இத்தெல்லாம் ஆவறதில்லை. எங்கீட்டே ஏன்
இட்டாரீங்க? மருவாதையா அல்லாரும் ஒரு குவார்ட்டர் வாங்கி ஊத்திக்கினு வூட்டாண்ட
போய் கம்முனு படுங்க! இல்லினா தாராந்துபூடுவீங்க!' என்றாள் தன்னை மறந்து. அன்று
அவள் கற்றுக்கொண்ட பாடங்களை மாணவர்களிடம் ஒப்பித்தாள்.
மாணவர்கள் இதற்கு என்ன மதிப்பெண்கள் போடுவதென்று திகைத்து நின்றார்கள்!!!

Saturday, June 16, 2007

ரயில் சட்னி!

வகை வகையான் சட்னிகளுக்குள் இது எங்கள் செல்லச் சட்னி!

சட்டுனு புரியலையா?

வட இந்தியாவில் நீண்ட பிரயாணங்களுக்காக சுக்கா சப்பாத்தி செய்து

அடுக்கி எடுத்துப்போவார்களே......அது போல் குறுகிய பிரயாணத்துக்காக

எங்கள் இல்லத்தில் தயார் செய்யப்படும் ஒரு சட்னி!

அநேகமாக எங்கள் பிரயாணமெல்லாம் திருநெல்வேலி-சென்னை அல்லது உல்டா! மாலையில் புறப்படும் ரயில் மறுநாள் காலை சென்னை

அல்லது திருநெல்வேலி சென்றடையும். அந்த ஓரிரவு சாப்பாட்டுக்குத்தான்

இந்தப்பாடு!

வயிற்றுக்கு ஒரு கேடும் செய்யாத ஓர் உணவு நம்ம இட்லிதாங்க.

தாமிரபரணித் தண்ணிரில் ஊற வைத்த அரிசி உளுத்தம் பருப்பில் அரைபட்ட

அந்த மல்லிப்பூ போன்ற இட்லி.....அதிலும் தட்டையான் இட்லித்தட்டில்

துணி போட்டு ஊற்றி எடுத்து சுடச்சுட தட்டில் விழும் போது எத்தனை

உள்ளே போச்சுன்னு கணக்கே தெரியாது. அதிலும் இட்லிப்போடி, தேங்காய்

சட்னி, மேலே கொஞ்சம் சீனி தூவிய கெட்டித்தயிர்...இவ்வளவும்

இருந்தால் போதும்....ம்ம்ம்...ம்ம்ம்ம்...உலகத்தையே எழுதிக்கொடுத்து விடலாம்.

ஹாங்? எப்படி?.....யார் வீட்டு சொத்து?

சரி..சரி..பாதை மாறுகிறேனோ? நாம்ப நம்ம ரயில் சட்னிக்கு வருவோம்.

ரயிலை துருவிப்போட்டு அரைக்கும் சட்னியெல்லாம் இல்லைங்க..

பயப்படாதீங்க!

தாளிதம்-கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, (விருப்பப்பட்டால் பொட்டுக்கடலை, வேர்கடலை சேத்துக்கலாம்), காரத்துக்கு தேவையான அளவு காய்ந்த மிளகாய், உப்பு, காயம், புளி,கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்து துருவிய தேங்காயையும் அதோடு சேர்த்து மிதமாக வறுத்து மிக்ஸியில் குறைவாக தண்ணீர் விட்டு அரைக்கவேண்டும்

எங்கூ____ரில் அம்மியில்தான் அரைப்பாக ,அதன் சுவையே....தனி.

தேங்காயையும் வறுத்து அரைப்பதால் நீண்டநேரம் கெடாமலிருக்கும்.

பிரயாணத்துக்கும் ஏற்றது. அநேகமாக ரயில் பயணம்தான்.

இட்லியின் இரு பக்கமும் ஜோதிகா மாதிரி நல்லெண்ணெய் ஊ__ற்றி

சாரி!..தடவி சட்னியை அதில் சாண்ட்விச் மாதிரி பரப்பி ரெண்டு ரெண்டு

இட்லிகளாக தேவையான.....ஆங்!....எத்தனை என்று சொன்னால்...கண்ணு படப்

போகுதுங்க! ...சாண்ட்விச் களாக வாழையிலையில் சுற்றி பேப்பர் பாக் செய்து

கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு ரயிலேறினால் இரவு 8-30 க்கு பிரித்து

மேய்ந்துவிட்டு, பாட்டிலிலுள்ள தாமிரபரணித் தண்ணீரையும் குடித்துவிட்டுப்

படுத்தால் சுகமாக தூக்கம் வரும்.

அண்ணி பாக் செய்யும் போதே... அப்படியே....எனக்கு மறுநாள் காலைக்கும் சேர்த்து இட்லியும் சட்னியும் தனித்தனியாக ஒரு பார்சல் லவட்டீடு வந்துடுவேன். அத்தோடு மட்டுமல்ல கூட ரெண்டு மூன்று பாட்டிலில் தாமிரபரணி ஆற்றுத்தண்ணீரும் என்னோடு ஓடி வரும்.

இப்போதெல்லாம் அலுமினீய பாக் தான். தண்ணீரும் தாமிரச்சுவை

இழந்து சப்பென்றிருக்கும். யாரைத்தான் நோவதோ?

ஒரு முறை எங்களுக்கு ரயிலில் டிக்கெட் கிடைக்காததால் ஆம்னி

பஸ்ஸில் கிளம்புகிறோம். இட்லி-சட்னி பாக்கிங் மும்முரமாக நடந்து

கொண்டிருக்கிறது. அங்கு வந்த அண்ணனின் ஐந்து வயது பேரன் விக்ரம்," அம்மம்மா!

அவங்கதான் ரயிலில் போகவில்லையே? பின் ஏன் ரயில் சட்னி செய்தீர்கள்?"

என்றான் சட்டென்று.

அந்த அருமையான உடனடி நகைச்சுவையை ரசித்து சிரிக்கக்கூட

இயலாமல் பிரமித்து நின்றோம்!!

பஸ்ஸில் போகிறார்களே.... பஸ் சட்னிதானே கொண்டுபோகவேண்டும்?

இந்தக்காலக் குழந்தைகள் எத்துணை தெளிவாக சிந்திக்கிறார்கள்!!!!!!

நாம் தான் ரொம்பத்....தெளி.....வாக குழம்பிக்கொண்டிருக்கிறோம்!

Saturday, May 19, 2007

மங்கல மங்கையர் குங்குமம்


Image and video hosting by TinyPic


குங்குமச் சிமிழை நீட்டியதும் மோதிரவிரலை நுழைத்து அள்ளிஇட்டுக்கொள்கிறோமே.....அதைச் செய்வது எப்படி?

நினைவு தெரிந்து கடையில் குங்குமம் வாங்கியதில்லை. HOME MADE-தான்.

அப்பாவே செய்வார்.

சிறுவயது முதலே குங்குமம்தான் இட்டுக்கொள்ளவேண்டும் என்பது எங்கள்
தந்தையின் ஆசை! குங்குமம் காலியாகிவிட்டால்,'அப்பா! ' என்று போய் நிற்போம். அவரும் அவரது கோ-டவுனிலிருந்து.....பெரீரீ...ய ஹார்லிக்ஸ்
பாட்டிலிலிருந்து நிரப்பிக் கொடுப்பார்.


எங்கள் வீட்டுக் குங்குமம் மிகவும் பிரசித்தி! அப்படிப்பட்ட குங்குமம் செய்யும்
முறையை..பின்னாளில்... திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பிறகு அப்பாவிடம் போய்,'எனக்கு கற்றுக்கொடுங்கள்.' என்றேன். 'வந்தாயா! வா!'
என்று அதன் அருமை தெரிந்து வந்த மகளுக்கு ஆவலோடு கற்பித்தார்.


தேவையானவை:

1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் --ஒரு கிலோ
2) எலுமிச்சம் பழச்சாறு---------------------------------1 1/2 லிட்டர்
3)வெங்காரம்-------------170 கிராம்
4)சீனாக்காரம்------------65-70 கிராம்
5)நல்லெண்ணை--------100 கிராம்
6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர்----------வாசனைக்கு தேவையான சில துளிகள்


கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும் .

அத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்


நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி தனியே வைக்கவும். தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும்.

கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும்
சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே
இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு மாறியிருக்கும்.


பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில் காயவைக்கவேண்டும்.
இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும் நிறைய
பொறுமையும் பிடிக்கும் வேலையிது!


நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல், உலக்கை
கொண்டு கைப்பிடி கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக
இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லிய வெள்ளைத்துணியால்
கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்' செய்ய
வேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.


this process goes on & on till you get little கப்பி.
fine powder -ஆக கிடைத்த மஞ்சள் பொடியை....இனிமேல் 'குங்குமம்' என்றே
அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி
கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை தேவை.


இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக் கேட்பவர்க்கும்
கொடுக்கலாம்.


எல்லோரும் மஞ்சள் குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
பழைய பாட்டொன்றொடு முடிக்கிறேன்.

"கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை பின்னிவிட்டு

உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே நல்லதையா!"

பெட்டகத்தை திற்ந்து விடையை அள்ளித் தருக-2

சென்ற பதிவில் கேட்ட கேள்விகளுக்கு..ஒரே ஒரு கேள்விக்குத் தவிர மற்றவற்றுக்கு பதிலில்லை.
இதோ புதிய கேள்விகள்!!

1) M.G.R., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் எது?

2) சிவாஜியுடன் அதிகப் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை யார்?

3) ஜெமினிகணேசன் கிறிஸ்தவ பாதிரியாராக 'தோன்றிய' படம் எது?

4) 'மாமன்மார் மூவர் தம்பி, நல்ல வாழ்வளிக்க வருவார்' - என்ற பாடல் வரியில் வரும் மாமன் மூவர் பெயர்கள் என்ன?

5) பாலச்சந்தர் டைரக் ஷனில் சிவாஜி நடித்த இரண்டு படங்கள் எவை?

6) ஒளவையார் பிள்ளையாரிடம், 'நான் உனக்கு நான்கு தருவேன்..நீ எனக்கு
மூன்று தா!' எனக்கேட்ட நான்கும் மூன்றும் என்ன என்ன என்ன என்ன?

Saturday, May 5, 2007

குகைக்குள் ஓர் உல்லாச நடைப் பயணம்

என் அமெரிக்க பயணத்தில் சுற்றிப்பார்த்த இடங்களில் மிகவும் மெய்சிலிர்க்கவைத்த இயற்கையின் அற்புதங்களில் ஒன்றுதான்... மிசோரி மாநிலத்தில் stanton என்னுமிடத்தில்
இயற்கையாகவே அமைந்த,.....சுயம்பு என்று சொல்லலாமா?
MERAMEC CAVERNS!


நாங்கள் தங்கியிருந்த strawberry glen-னிலிருந்து 3-4 மணிநேரப் பயணம். அங்கெல்லாம்
தூரத்தை நேரத்தைத்தான் கணக்கிட்டு சொல்கிறார்கள். 4-மணி நேரம், 10-மணிநேரப்பயணம்
என்று. நாம் 50-கி.மீ, 400-கி.மீ என்கிறோம்.ஸ்டீரிங்கை அப்படி ஜென்டிலாகப்
பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.அப்பப்போ லேசாக இடதோ வலதோ திருப்பிக்கொண்டால்
போதும். ஆனால் செம ஸ்பீடு!
மதியம் சாப்பாடு..இட்லி, ரயில் சட்னி(இது பற்றி பிறகு சொல்கிறேன்), எலுமிச்சை சாதம்,
த்யிர்சாதம்,வகை வகையான சிப்ஸ் மற்றும் இடையில் கொறிக்கத்தேவையான 'கொறிக்ஸ்'
எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு சரியாக 12-மணிக்குப் போய் சேர்ந்தோம்.எல்லோருக்கும்
பசி! துள்ளியோடும் மிஸோரி ஆற்றங்கரையில் உள்ளது குகை.வெளியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டையால் ஆன டைனிங் டேபிள்,பெஞ்சு-நாடுமுழுதும்
பிக்னிக் ஸ்பாட்கள் இதே ஸ்டைலில்தான்!-ஒன்றில் அமர்ந்து கொண்டுவந்தவற்றை காலி
செய்தோம்.
குகையினுள் டூர் செல்வத்ற்கு டிக்கெட் வாங்குமிடத்தில் சொன்னார்கள்...மெல்லிய இருட்டில் நிற்காமல்
ஒரு மணிநேர டூர்...முடியுமா? என்றார்கள். முதலில் சிறிது தயங்கினேன். உள்ளிருந்த
adventurous பூதம் சிலிர்த்தேழுந்து, 'சென்று பார்!' என்றது

1935-ல்தான் இது பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல்
முக்கியமான பிக்னிக் ஸ்பாட்டாக திகழ்திறது.ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கு ஒரு குழுவாக ஒரு கைட் தலைமையில் டூர் கிளம்புகிறது. எங்கள் கைட் முதலிலேயே
'செய்-செய்யாதே'- எல்லாம் தெளிவாக சொல்லிவிட்டார். குழுவோடு சேர்ந்துதான் செல்லவேண்டும்...மெய்மறந்து எங்காவது நின்றுவிட்டால்..மந்தையிலிருந்து பிரிந்த
ஆடு மாதிரி முழிக்கவேண்டியதுதான்! முன்னேயும் போகத்தெரியாது,பின்னேயும்
போகமுடியாது.

குகையின் வாசலுக்கு வந்தாச்சு..கோடைகேற்ற மிதமான குளிர்! குகையோடு சம்பந்தப்ப்ட்ட
ஒரு முக்கியமான நபரைப் பற்றி கைட் எங்களுக்கு விவரித்தார். 'JESSI JAMES!'( THE CAVERNS ALSO KNOWN AS JESSI JAMES HIDEOUT),அந்நாளின் பிரபல கொள்ளைக்காரன்!
தன் கூட்டத்தோடு 'அலிபாபாவும் நாற்பது திருடர்கள்' மாதிரி இங்குதான் த்ங்கியிருந்தானாம்.
நம் வீரப்பனுக்கு காடெல்லாம் அத்துப்படி..இவனுக்கு குகையின் ரகசிய வழிகளெல்லாம் அத்துப்படி!அவன் உபயோகித்த, கத்தி, கப்படா, துப்பாக்கி கோடரி போன்ற ஆயுதங்கள்
மற்றும் பாத்திர பண்டங்கள் எல்லாம் காட்சிக்கு வைத்திருக்கிதறார்கள் காத்திருக்கும்
நேரத்தில் அவற்றைப் பார்க்கலாம்.

சரி!..டூர் கிளம்பியாச்சு! ஊ..ஊ..சிக்கு..சிக்கு..என்று ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு உள்ளே செல்லவாரம்பித்தோம். சில இடங்களில் மெல்லிய வெளிச்சம்,
சில இடங்களில் கும்மிருட்டு. கைடின் டார்ச் வெளிச்சத்தில் முன்னேறினோம்.
குறிப்பிட்ட இடம் அதாவது ஸ்டேஷன் வந்ததும் ரயில் நின்றது. கைட் எங்கோ துளாவி
ஸ்விட்சைப் போட்டார்.பளீரென்ற வெளிச்சம்!!வாவ்...!உலக அழகி கிரீடத்தை தலையில் சூட்டினாற் போல அத்தனை பேர் முகத்திலும் ஆச்சரியம்!!அந்த அற்புதத்தைக் காண
கோடிக்கண்கள் வேண்டும்!!!


குகையின் உள்ளே மேலிருந்து சொட்டுச் சொட்டாக வழிந்து இறுகி தோரணம் தொங்குவது போல் கிறிஸ்டல்ஸ் உற்பத்தியாகி வண்ண வண்ணமாக ஜொலித்தது!!கண்கள் இமைப்பது
மறந்தன..பாளம்பாளமாக கண்கள் கொள்ளுமட்டும் அள்ளி விழுங்கின.

இவ்வாறு நாலைந்து இடங்களில் விதவிதமான கிறிஸ்டல் காட்சிகள்!!
சில இடங்களில் அதன் வழியாக நீர் வழிந்தோடியது பார்க்க பரவசம்! மெதுவாக தொட்டுப்பார்க்கப்போனேன்...கைடுக்கு கழுகுக்கண்கள்..'தொடவேண்டாம்! தொட்டால்
அவற்றின் வளர்ச்சி நின்றுவிடும்' என்றார். சுமார் 10,000 வருட வளர்ச்சியாம்!
அம்மாடியோவ்!!!

மற்றொரிடத்தில் இருட்டிலேயே சுமார் ஐம்பது படிகள் மேலேறினோம். ரங்கமணி
சுவாரசியத்தில் என்ஜினுக்கு அடுத்த போகியாக சென்றுவிட்டார். என் மகள் வந்து
என் கையைப் பிடித்துக்கொண்டாள். மூச்சுவாங்க ஏறினேன். சிரமத்தின் பலன்
அங்கு கண்டேன். எங்கு பார்த்தாலும் கிறிஸ்டல் உற்பத்திதான் அதன் அழகு!!


சில இடங்களில் முஸோரி ஆறு சலசலத்து ஓடுகிறது. இயற்கை ஏசி செய்த குகை,
சுத்தமான் குடிநீர்! கொள்ளையடித்து குகைக்குள் வந்து சமைத்து சாப்பிட்டு, தூங்கி
சுகபோக வாழ்கை வாழ்ந்திருக்கிறான் ஜெஸ்ஸி ஜேம்ஸ்! அவன் பிடிபட்டானா?
சுட்டுக்கொன்றார்களா? இயற்கை மரணமா என்பதெல்லாம் விளங்காத புதிராக உள்ளது

பிரமிப்பு மாறாமல் டூரின் இறுதிக் கட்டத்துக்கு வந்தோம். இருட்டில் தடவித் தடவி
தியேட்டர் காலரி இருக்கைகள் அமைந்த இடத்தில் போய் அமர்ந்தோம்(கால் வலிக்கு இதம்).
அந்த இடத்தின் பெயர், "THE GREAT CURTAIN" !!ஓஹோ!தியேட்டரி திரை விலகி காட்சி
தெரியும் போல...என்று காத்திருந்தோம். கைட் லைடைப் போட்டார் பாருங்கள்!!

எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி,
ஆதிபராசக்தியின் பிரம்மாண்டத்தை தரிசித்தேன். மயிர்க்கால்கள் குத்திட மெய்சிலிர்த்து
நின்றேன்!! திரையொன்றும்..விலகவில்லை...காட்சியே திரைதான்.
என்னா...த்த சொல்ல..வார்த்தைகளே இல்லை. தியேட்டரில் படம் போடுமுன்
திரை இறக்கியிருப்பார்களே அது போல் கிரிஸ்டல்கள் கலர்கலராக வழிந்து அற்புதமாகக்
காட்சியளித்தது!!அத்திரையின் மேல் இசையோடு ஒரு லைட் ஷோ காண்பித்தார்கள்.
அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது போல் அற்புதத்துக்கு மேலும் அற்புதம் சேர்த்தது!!
முடிவில் லைட் ஷோவின் நடுவில் இன்னொரு லைட் ஷோவாக அமெரிக்க தேசிய கொடி
பட்டொளி வீசிப்பறந்தது. ஒரே கைதட்டல்..அவ்ளோ தேசபக்தி.

இந்த THE GREAT CURTAIN இடத்தை முக்கியமான விழாக்களுக்கும் திருமணங்களுக்கும்
முன்பதிவு செய்து கொள்வார்களாம். திருமணம்..விழாக்கள்..கற்பனை செய்து பாருங்கள்!

டக்கென்று விளக்குகள் யாவும் அணைந்தன. கைட் டூரின் முடிவை அறிவித்தார். ஏதேனும்
கேட்கவேண்டுமென்றால் கேட்கலாம் என்றார். கண்கள் தான் அள்ளி அள்ளி விழுங்கினவே
தவிர வாயடைத்துப்போயிருதோம்!!பிரமிப்பிலிருந்து மீளாமலே வெளியே வந்தோம்.

வெளியே வந்தால்..கிரிஸ்டல் கிளியராக..கிரிஸ்டல்ஸ் பார்த்து வந்த பாதிப்பு..ஹா..ஹா!
முஸோரி ஆறு ஓடுகிறது.சுற்றுலாப் பயணிகள் அதில் நீந்திக்குளிக்கவும் வாட்டர் ஸ்கூட்டரில் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டுப் பாயவுமாக அனுபவிக்கிறார்கள். வாழ்கையை அனுபவிக்க
அமெரிக்கர்களைப் பார்த்துப் படிக்கவேண்டும்.

முதலில் தயங்கினோமே..போனது எவ்வளவு நல்லதாயிற்று!!அந்த கண் கொள்ளாக் காட்சிகள்
எல்லாம் காண கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன். என்னை அழைத்துப்போன அண்ணன்
மகள்,மருமகன் மற்றும் பயணத்தை சுவாரஸ்யமாககிய அவர்களின் ரெண்டு சுட்டிகளுக்கும்
என் நன்....வேண்டாம்..வேண்டாம்..என் அன்பு.

St.Louis சென்றால் meramec caverns செல்லத் தவறாதீர்கள்.இயற்கையின் அற்புதத்தை
அதன் உள்ளேயே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

Friday, May 4, 2007

,பெட்டகத்தைதிறந்து விடையை அள்ளித்தருக

புத்தம் புதிய படங்களிலிருந்து நிறைய பதிவர்கள் க்விஸ்கிறார்கள். ஆனால் நமக்கு தோது
'தங்கமான பழசு' தான்.

இங்கே சில புதிர்கள்...விடைகள் உங்கள் கையில்.

வாழ்கை படத்தில் வைஜயந்திமாலா பாடிய பாடல்களுக்கு அவரே பின்னணி பாடியுள்ளதாக
ரெக்கார்டுகளில் உள்ளது. ஆனால் உண்மையில் பாடியது வேறோருவர். அவர் யார்?

மாமியார் மெச்சிய மருமகள் படத்தில்'இலவு காத்த கிளி போல் எந்தன் ஆசை நிராசை
ஆச்சே...'என்ற இந்த பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? பாடியவர் யார்?

ஒருவர் இசையமைப்பில் மற்றொரு இசையமைப்பாளர் பாடுவது இப்போது சர்வசாதாரணம்.
ஆனால் அக்காலத்தில் மிகப் பிரபலமான இசையமைப்பாளரின் இசையில் மற்றொரு மிகப்
பிரபலமான இசையமைப்பாளர் பாடியுள்ளார். அதுவும் கதாநாயகனுக்காக அல்ல.
ஒரு குதிரைக்கு!!!! குதிரை பாடுவதுபோல் அமைந்த அந்த பாடலுக்கு பின்னணிப்
பாடியுள்ளார். அந்த பிரபல இசையமைப்பாளர்கள் யார் யார்? பாடலின் பல்லவி என்ன?

ஒளவையார் படத்தில்,'கன்னிப்பருவம் போதும்போதும்' என்று விநாயகரிடம் முதுமையை
வேண்டிய அந்த குமாரி ஒளவை...யார் (க்ளு கொடுத்துவிடேனோ?)
செய்யுளின் ஈற்றடியை முடிக்கமுடியாமல் திணறிய புலவரின் வெண்பாவை...
'நின்று தளரா வளர்தெங்கு தாளுண்டநீரைத்-
தலையாலே தான் தருதலால்!' என்று நிறைவு செய்த அந்த பால ஒளவை..யார்?

விடைகள்...நீங்களேதான் சொல்லுங்களேன்...!முடியவில்லை என்றால் பார்க்கலாம்.
நிறைய தில்லாலங்கடிகள் இருக்கிறார்கள்.

இத்தோடு விடமாட்டேன்! இன்னும் வரும்.

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...